Sunday, December 20, 2009

மீன‌ம்பாக்க‌ம் கிடைக்காத‌தால் திரிசூல‌ம்


நெடுநேர ரயில் பயணங்களின் அயர்ச்சியை துரத்தியடிப்பதற்காகவும் நேரத்தை கொல்வதற்காகவும் ஒன்றிரண்டு புத்தகங்களை துணைக்கு அழைத்துச் செல்வதும்,வழிநெடுகிலும் சுவாரஸியமான மனிதர்கள் நிறைய
வாசிக்கக் கிடைப்பதால் அவை பெரும்பாலும் பையிலேயே உறங்கி விடுவதும் வாடிக்கையாகி விட்ட‌து.

விமானம்,கூபேக்களின் குளிர்ச்சியை விட,மத்தியதர வர்க்கத்தின் இரண்டாம் வகுப்பு வெம்மை இத‌மாக‌ இருந்திருக்கிற‌து.சிறுவயதில் வெவ்வேறு ஊர் எல்லைக‌ளின் ச‌ந்திப்பை நெருங்கும் போது ச‌ன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து பெயர் பலகை வாசித்து இன்ன‌ ஊர் என்று அம்மாவுக்கு தெரியப்படுத்துவதில் மெக்க‌ல்ல‌னின் ப‌ர‌வ‌ச‌ம் அட‌ங்கியிருந்த‌து.இப்போதெல்லாம் ச‌த்த‌மாக‌ வாய் விட்டு சொல்ல‌ முடியாவிட்டாலும் என‌க்குள்ளே மெள‌ன‌மாக இது குல்பர்கா இது அரக்கோணம் என அறிவித்து கொள்கிறேன்.

பின்னோக்கி ந‌க‌ரும் உல‌க‌ம்,ம‌னித‌ர்க‌ள்,தொழிற்சாலைகள்,வயல் வரப்புகள்,கரும்புக்காடுகள்,சவுக்கு மரங்கள்,சூரியகாந்திப் பூக்கள்,ப‌ச்சை ஆடை ம‌லைக்குன்றுக‌ள்,தூர தேசத்து ப‌றவைக‌ள்,சிறிய‌ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள்,மெல்லிய‌ ஒலியெழுப்பி தூர‌த்தில் க‌ட‌ந்து செல்லும் விமான‌ங்க‌ள்,ம‌லைக‌ளுக்குள் ஒளிந்து க‌ண்ணாமூச்சி ஆட்ட‌ம் ஆடும் மேக‌ங்கள்,வானவில்,மழைத்துளி அனைத்தையும் நீல நிற பின்னணியில் த‌ன் உள்ளங்கையில் வைத்திருக்கும் விஸ்தார‌மான‌ வானம்,எல்லாவ‌ற்றையும் ர‌சிப்ப‌த‌ற்கு சுடச்சுட‌ தேநீர் என்று ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ள் த‌ரும் அனுபவ‌ங்கள் பேசி பேசித் தீராது.

நாட்களை விழுங்கும் எக்ஸ்பிர‌ஸ் ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ளை விட‌,சென்னையின் அரை ம‌ணி நேர‌ மின்சார‌ ர‌யில் ப‌ய‌ண‌ நினைவுக‌ள் இன்னும் ப‌சுமையாக‌ இருக்கின்ற‌ன‌.சென்னை க‌ட‌ற்க‌ரையிலிருந்து வேளச்சேரி ம‌ற்றும் தாம்ப‌ர‌ம் மார்க்க‌ம் நான் அதிக‌ம் புழ‌ங்கிய‌ இட‌ம். புத்த‌க‌ங்க‌ளும் ஹெட்செட்டுக‌ளும் ஐபாடுக‌ளும் அதிக‌ம் ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌ நாட்க‌ளில்,நிறைய‌ ம‌னித‌ர்க‌ள் வாசிக்க‌ கிடைத்தார்க‌ள்.க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள்,அலுவ‌ல‌க‌ ஊழிய‌ர்க‌ள்,பெண்க‌ள்,குழ‌ந்தைக‌ள்,பிச்சைக்கார‌ர்க‌ள் என‌ எல்லா த‌ர‌ப்பு ம‌க்க‌ளோடும் தோளோடு தோள் உர‌சி ப‌ய‌ண‌ப்ப‌ட்டிருக்கிறேன்.ச‌ர்வ‌கால‌மும் செய்தித்தாளை பிரித்து வைத்து கொண்டு,ஆளும் அர‌சையே குறை கூறிக் கொண்டு வ‌ரும் சாமான்ய‌ர்க‌ளை ச‌ந்தித்திருக்கிறேன்.ஒருநாள் கிரிக்கெட் போட்டி ந‌ட‌க்கும் நாட்க‌ளில் ம‌ட்டும் சேப்பாக்க‌ம் ச‌ந்திப்பில் மைதான‌த்தில் நிர‌ம்பியிருக்கும் ப‌ர‌ப‌ர‌ப்பை சன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.க‌ல்லூரி நாட்க‌ளில் ந‌ண்ப‌ர்க‌ளோடு ரயில் பெட்டியின் வாச‌லில் நின்று,முக‌த்தில் மோதும் காற்றை சுவாசித்திருக்கிறேன்.ம‌ழையை ர‌சித்திருக்கிறேன்.கூவ‌ங்க‌ளை க‌ட‌ந்திருக்கிறேன்.

இப்போதும் ந‌ண்ப‌ர்க‌ளோடு அலைபேசியில் பேசும் போது பின்ன‌ணியில் ஒலிக்கும் எல‌க்ட்ரிக் ட்ரெயின் ஓசையை ஏக்க‌ங்க‌ளோடு உள்வாங்கிக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய‌..நீங்க‌ளும் எழுதுலாமே.இய‌ந்திர‌ம‌ய‌மான‌ ந‌க‌ர‌ வாழ்வினூடே அன்றாட‌ம் நீங்க‌ள் அனுபவிக்கும் சுவார‌ஸிய‌ங்க‌ளைப் ப‌ற்றி !!

**************

Monday, December 7, 2009

நெருப்பாலான‌ ஜின்கள்


நன்னாவைச் சுற்றி அமர்ந்திருந்த நண்டு,ச்சுண்டுகளின் ஈரக்குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

டெக்சஸிலிருந்து, கமுதி சுந்தரபுரத்திலிருக்கும் நன்னி வீட்டிற்கு வ‌ருடாவ‌ருட‌ம் பள்ளி விடுமுறைக்கு தவறாமல் இடப்பெயர்ச்சி செய்யும் இவ்வாண்டுக‌ளுக்கு ந‌ன்னாவிட‌ம் க‌தை கேட்கா விட்டால் விடுமுறைப் ப‌ய‌ன் நிறைவேறாது.ப‌க‌லில் ந‌ரிக்க‌தை.ம‌திய‌ம் நாகூர் ஆண்ட‌கையின் க‌ராம‌த்துக‌ள் ப‌ற்றிய‌ க‌தை.இர‌வில் முஹிய‌த்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் குத்ற‌த்துக‌ளும் பாம்புக‌ளுமாக‌ சில‌ ம‌யிர்கூச்செறிய‌ச் செய்யும் க‌தைக‌ள்.வேளா வேளைக்கு நேரத்திற்கு தக்கன‌ க‌தைக‌ள்.ந‌ன்னாவும் அச‌ராம‌ல் ப‌ன்னீர் புகையிலையை மென்று கொண்டே எச்சில் தெறிக்க‌ க‌தை சொல்வார்.கால் க‌ழுவ‌ க‌க்கூஸூக்கு போவாம‌, கால வெள்ள‌னயே இந்த ப‌க்கிய‌ளுக்கு க‌த‌ சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டீயலா? என்று ந‌ன்னி தான் செல்ல‌மாக க‌டிந்து வைப்பாள்.பிற‌கு நாஸ்டாவுக்கு இட்லி அவிக்க‌ போய் விடுவாள்.

இன்றிரவு மின்சார‌த் த‌டை என்ப‌தால் 'ரவைக்குச் சாப்பாட்டுக்குப் பொறவு' ஜின்க‌ள் க‌தை சொல்ல‌ப் போவ‌தாக ந‌ன்னா அறிவித்தார். ஜின்க‌ள் என்றாலே பிஞ்சுக‌ளுக்கு முக‌ம் வெளிறி தானாக க‌ண்க‌ளில் மிர‌ட்சி வந்து அப்பிக் கொள்ளும். சற்றுமுன்னர் கரைந்து உருகி விழுங்கப்பட்ட குல்பி மலாய் மீண்டும் உறைந்து அடிவயிற்றில் ஒலி எழுப்பும்.

நம்ம சுந்தரபுரம் பள்ளிவாசல்ல மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து' இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு நாளைக்கு சொல்றேன்.ஒங்களமாரி சின்ன புள்ளைஹளுக்கு நெதம் நம்ம ஊருணிக்கு பக்கத்துல இருக்க‌ மதரஸாவுல கொர்வான்(குர்‍‍ஆன்) ஓதிக் கொடுப்பாராம்.

"ஊருணிண்டா நேத்து ஈவ்னிங் போயி குளிச்சமே அந்த டேர்ட்டி லேக்கா நன்னா?"

முதல் கேள்விக்கணை அதிகாரப்பூர்வமாக நன்னாவை நோக்கி வீசி எறியப்பட்டது. இப்படி பல அம்புகள் அவ்வப்பொழுது கதைக்கு நடுவே நன்னாவை நோக்கி ஏவப்படும். ஆமாண்டி எம்மவ பவுசியா பெத்த மவளே!! பேத்தியை அள்ளி மடியில் வைத்துக் கொண்டார். எஞ்சியிருந்த மீதங்கள் தம் குட்டி உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆவல் பொங்க மீதக்கதையை எதிர் நோக்கி காத்திருந்தன‌.

அப்ப ஆலிம் பட்டத்துக்காக நாலைஞ்சி பெரிய புள்ளைஹளும் அவருகிட்ட ஓதிச்சிங்களாம். ஒரு நா வெள்ளிக்கெழம ரவ்வு, பேய் மழ பேஞ்சி ஊரெல்லாம் வெள்ளக்காடாயி, இங்க மாதிரி அங்கனயும் கரெண்ட்டு கட்டாயிருச்சாம். சத்தம் போட்டு ஓதிக்கிட்டிருந்த புள்ளைஹ அம்புட்டும் இருட்டுல கொர்வான் தாள பாக்க முடியாம ஓதுறத நிறுத்திச்சுங்களாம்.

லைட்டெல்லாம் அமந்தவொடன ஒருத்தரு மொவத்த ஒருத்தர் பாக்க முடியாம‌ பள்ளியாச முழுசும் ஒரே இருட்டுக்கசம். கடைசி பெஞ்சில யஸ்ஸர்னல் கொர்வான் ஓதிக்கிருந்த நெட்டப்பயல பாத்து அசர்த்து "அடேய் ரஹ்மான்..உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுத்துக்கிட்டு வாறையா? ன்னு கேட்டாராம்.

"இருட்டுக்கீண்டு கடக்குல்ல...யாருக்கும் தெரியவாப்போவுதுண்டு உக்காந்த மேனியே உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுக்க ரஹ்மான் பெரிய‌ கைய நீட்டினாப்ளயாம். மூணு நாலு அடிக்கு கை நீண்டு துளாவி வெளக்க எடுத்துக்குடுக்கவும் அசர்த்துக்கு பக்குனு ஆயிருச்சாம். அவரு கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு பாருங்க..!! அட அல்லாவு நாயனே ! நாம இத்தன நாளு ஜின்னுக்கா ஓதிக்குடுத்துட்டு இருந்தோம்னு அசந்து வேர்த்து விறுவிறுத்து போச்சாம்.



நன்னா எச்சிப்பணிக்கையில் புளிச் என்று துப்பிக் கொண்டார்.கோடியில் அமர்ந்திருந்த பேரன்மாரு ரெண்டு பேரும் ஓடிவந்து நன்னாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். மற்ற‌ பிள்ளைகள் அருகிலிருந்த இடைவெளிகளை நிரப்பி நெருங்கி அமர்ந்தனர். கேட்டா கொசு கடிக்குதாம். குளிருதாம்.அப்புறம் என்ன ஆச்சாம் நன்னா..?

அதுக்கு பொறவு ஒருநா மதியம் பள்ளிவாசல் கொள்ளப்புறம் இருக்க‌ கிணத்தடில குளிச்சிக்கிட்ருக்கும் போது உக்காந்த மேனிக்க‌ கைய நீட்டி சோப்ப எடுத்திச்சாம் அந்த ஜின்னு.இதையும் அசர்த்து பாத்தாராம். இதுக்கு மேல தாங்காதுனு மக்யா நாளு கூப்பிட்டு பேசிட்டாராம்.

"ய‌ப்பா ர‌ஹ்மான். நீ ஜின்னுன்ற‌ விச‌ய‌ம் என‌க்கு தெரிஞ்சி போச்சி.நானா இருக்க‌க்க‌ண்டு ப‌ய‌ப்ப‌ட‌ல.இதுவே ம‌த‌ர‌ஸாவுல‌ உள்ள‌ ம‌த்த‌ சின்ன‌ புள்ளைஹ‌ பாத்துச்சி‌ண்டா ப‌ய‌ந்து ஜூர‌ம் வ‌ந்துரும். நீ இன்னிக்கே அஞ்சு ம‌ணி ப‌ஸ்ஸ‌ பிடிச்சி உங்க‌ ஊர‌ப்பக்க‌ம் பாத்து கிள‌ம்பிரு ராசா"

போ மாட்டேன்னு அழுது அடம்பிடிச்சி அசர்த்துக்கிட்ட கெஞ்சி கேட்டுச்சாம் அந்த ஜின்னு. அசர்த்து கறாரா பேசிட்டாராம். பொறவு வேற வழியில்லாம பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புள்ளையள பாத்து அலுதுகிட்டே மதரஸாவிட்டு போச்சுதாம் .

ஜின்னு நல்லதா கெட்டதா நன்னா ?

அது நம்ம மாரி மனுசரு கைலதேம் இருக்கு !! ஒழுங்கா சுத்தபத்தமா இருந்தம்னா ஜின் நம்மள அண்டாது. நடுநிசிக்கு மேல குளிப்பு இல்லாம பள்ளியில தூங்கிட்டிருந்த புள்ளைஹள குளத்துல தூக்கி வீசுன ஜின்களும் இருந்துச்சி.வெளக்கு வெக்கிற நேரம் தனியா வர்ற வயசு புள்ளையகிட்ட சில்மிசம் பண்ண ஜின்களும் இருக்கத்தான் செஞ்சிச்சி.

இது போவ ஜின்கள வசியப்படுத்தவும் செய்யலாம்.நல்லா ஓதிப்படிச்ச அசர்த்து மாருங்க ஒன்னா உக்காந்து ரவ்வு பூரா கொர்வான் ஓதினா மசிஞ்சிரும்.ஆனா நடுப்பற வந்து பேய் மாதிரி பயமுறுத்தும்.எம்புட்டு ப‌ய‌முறுத்துனாலும் அசையாம‌ ஓதிக்கிட்டே இருக்க‌ணும். லேசா அச‌ஞ்சோம்..போச்சி..அம்புட்டு தான் ச்சோலி. பயந்துட்டம்னா ஒரே அடியா அடிச்சிரும்.அதோட ம‌ய்ய‌த்து தே.

"வசியப்படுத்திட்டா என்ன ஆவும் நன்னா"?"

வசியப்படுத்திட்டா நீ சொல்றதெல்லாம் செய்யும்.கேக்குறதெல்லாம் எடுத்துட்டு வந்து தரும்.

"குல்பி ஐஸ்? "

குல்பி பானையே எடுத்துட்டு வந்து தரும்.

"ஹைய்!"

சரி சரி! காத்துல‌ குத்துவிளக்கு அமரப்போவுது. அடேய் நைனார் மவனே..உள்ள போய் அந்த சிம்னி விளக்க எடுத்துட்டு வர்றியா ? "

மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.

*********************

மனிதர்களைப் போல‌வே ஜின்களுக்கும் ஒரு தனி அமானுஷ்ய உலகமிருக்கிறது என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.குர் ஆனில் 35 இடங்களில் ஜின்களைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.மனித இனத்தை படைப்பதற்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், ஆதம் நபிக்கு முன்னர் ஜின்கள் இருந்ததாக குறிப்புகள் தெளிவாக இல்லை. இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் தானிருக்கின்ற‌ன‌.

வழக்குச் சொற்கள்: க‌ராமத், குத்ற‌த்து‍‍‍---பராக்கிர‌ம‌ங்க‌ள்; அச‌ர்த்து---இஸ்லாமிய‌ க‌ல்வி க‌ற்ற‌ மார்க்க‌ அறிஞ‌ர் ( ஹ‌ழ்ர‌த்); ந‌ன்னா,ந‌ன்னி‍‍--தாத்தா பாட்டி; ம‌த‌ர‌ஸா--இஸ்லாமிய பாட‌சாலை;ம‌ய்ய‌த்து--பிண‌ம்.

****

நன்றி: உயிரோசை
இணைய இதழ் (08 டிசம்பர் 2009)


------------------------------------

Monday, November 23, 2009

ஆதியின் ஹாலிடேஸ் சிறுகதைக்கான‌ முடிவு

ஆதிமூலகிருஷ்ணனின் ஹாலிடேஸ் கதைக்கான என்னுடைய முடிவு:

************

மூவருக்கும் தூக்கிச்சட்டியை கிணற்றுத் திண்டின் மீது வைத்து விட்டு அகிலா வேப்பமரத்தடி சாலையில் மறைந்து போனாள்.

அகிலாவின் இளமை பூசிய ஸ்தனங்களும் கருத்த உதடுகளும்
இளநீரில் கலந்த கள்ளை விட விஜய்க்கு அசாத்திய‌ கிளர்ச்சியை உண்டு பண்ணின.சசிகுமார்,ஹிமான் என்று தடாலடியாக அவனுக்கு இரண்டு அந்தரங்க எதிரிகள் உருவாக அக்கிளர்ச்சி காரணமாக‌ இருந்தது.

கறிச்சோறு தொண்டைக்குழிக்குள் இறங்கும் வரை மூவரும் நண்பர்களாகவே சிரித்து பேசினர்.நண்பர்களாகவே தென்னை மரத்தடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.அகிலாவை பார்த்த கணம்,அகிலா என்று சத்தம் போட்டு கூப்பிட இருவருக்குமே தைரியம் போதவில்லை தான்.

ஆனால் விஜயை போல சசி இல்லை.அகிலாவின் செழித்த பெண்மை குறித்தான பிரக்ஞையே வளராத காலகட்டங்களிலிருந்து அவளோடு பழகியவன் என்பதால் விஜய்க்கு சசி மேல் லேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.

திடீரென்று இரு நண்பர்களிடையே பூமி பிளவுற்று இரு வேறு உலகில் நின்று கொண்டிருந்தனர்.ஹிமான் உண்ட களைப்பில், ஏற்கெனவே உறங்கி விட்டிருந்தான்.விஜய்,சசி இருவரும் கண்களை மட்டும் மூடியிருந்தனர்.மர நிழலினூடே குத்திட்ட சூரிய கற்றைகள் கண்கள் கூச இருவருமே சிறிது நேரத்திற்கு பிறகு,அகிலா குறித்த‌ சிந்தனைகளோடு உறங்கிப் போயினர்.

திடீரென்று தென்னைக்குரும்பை ஒன்று மரத்திலிருந்து கயிற்றுக்கட்டிலின் வெகு அருகாமையில் விழ, இருவருக்குமே விழிப்பு தட்டியது.அதே நேரம் பம்பு செட்டின் அருகே ஒரு பெண்ணின் அரவம் காற்றைக்கிழித்து வந்தது.

பர‌பரப்போடு ஓடிச்சென்று இருவரும் பம்பு செட்டின் அறையை அடைந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி !!

"தும் முஜே ச்சோட்கே கஹாங் கயா தே சொனாலி !!! சொனாலி !! கஹாங் கயா தே சொனாலி !!!" அகிலாவை வலுக்கட்டாயமாக கட்டியணைக்க முயன்று கண்களில் நீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தான் ஹிமான்.


**************

Sunday, November 15, 2009

வலைச்சர வாரம்

அன்பு நண்பர் சீனாவின் அன்புக்கட்டளையை ஏற்று,இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதவிருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன்.

இணைந்திருங்கள் !!!

இன்றைய வலைச்சர அறிமுகப்பதிவு

**********

Sunday, November 1, 2009

இன்னுமொரு நாடகம்-2 (சிறுகதை)

முத‌ல் பாக‌ம்


*******************பாகம்-2**************************************

ஒரு சாக்பீஸ் துண்டை இரண்டாக பிளந்து அவளிடம் தருவேனாம். அவ‌ள் அதை இன்னும் சிறுசிறு துண்டுகளாக்கி என்னிடம் தருவாளாம்.நான் அந்த சிறு துண்டுகளை மேலும் நறுக்கி அவள் உள்ளங்கையில் திணிப்பேனாம்.இப்படி விரல்கள் மாற்றி மாற்றி அவள் கைகளில் சாக்பீஸ் துண்டு பொடியாகி, மேலும் சிறிதாக்க முடியாமல் தோல்வியின் பொய்க்கோபத்தில் மிச்சமிருக்கும் சுண்ணாம்பு பொடிகளை என் கன்னத்தில் அப்பி விட்டு ஓடிவிடுவாள். ஒத்திகை என்ற பேரில் இன்னொரு ரகசிய நாடகம் திரைமறைவில் எங்களுக்காக பிரத்யேகமாக‌ அரங்கேறிக் கொண்டிருந்தது.அவளுடனான‌ பொற்கணங்களை இழக்கிறோமோ என்ற வருத்தத்தை விட,என் அந்தரங்க‌ எதிரியான (குளோரியா மேரியைப் பொறுத்தமட்டில்) ஹேமந்த் பாபுவுடன் நடிக்க போகிறாளே என்ற ஆற்றாமை தான் பிய்த்து தின்றது.

ம‌றுநாள் ச‌னிக்கிழ‌மை காலை 10 ம‌ணிக்கு தொட‌ங்கவிருந்த‌ ஒத்திகை,மேரி வ‌ராத‌தால் தாம‌த‌மான‌து.சிறிது நேர‌ம் க‌ழித்து,சி செக்ஷன் சும‌தி வ‌ந்து கிரேஸி மிஸ் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.அத‌ன் பிற‌கு,சுமார் மூஞ்சி சும‌தியே ஜூலிய‌ட்டாக ந‌டிப்ப‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.ஹேம‌ந்த் பாபு ஏமாந்த‌ பாபுவானான்.அற்ப‌ ச‌ந்தோஷ‌த்தில் நான் மெலிதாக‌ சிரித்த‌து மேரிக்கு கூட‌ கேட்டிருக்கும்.

ஒரு வார‌ம் மேரி ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை.இருப்பு கொள்ளாம‌ல் சைக்கிளின் முன் க‌ம்பியில் அந்தோணி சாமியை கிட‌த்திக் கொண்டு நாலைந்து நாட்க‌ள் அவ‌ள் வீட்டின‌ருகே அலைந்து திரிந்தேன்.ஒரு வழியாக‌ நான்காவ‌து நாள் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைத்து கொண்டு, வாச‌லில் க‌றிகாய் வாங்கிக் கொண்டிருந்த‌ அவ‌ள் அம்மாவிட‌ம் மேரி வ‌ராத‌தை ப‌ற்றி விசாரித்தேன்.கார‌ணத்திற்கு அவ‌ள் என்னிட‌ம் வாங்கியிருந்த‌ புவியிய‌ல் நோட்டை துணைக்கு அழைத்தேன்.மேரிக்கு மேலுக்கு முடிய‌லை என்றும் இர‌ண்டொரு நாளில் ப‌ள்ளிக்கு வ‌ந்து விடுவ‌தாக‌வும் ஆன்ட்டி சொன்னார்க‌ள்.பிற‌கு என்ன‌ நினைத்தார்க‌ளோ.ஒரு நிமிஷ‌ம் இருப்பா மேரியை கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு க‌ன‌த்த உருவம் மேரிரீய்ய் என்று கூவிக்கொண்டே வீட்டிற்குள் ம‌றைந்த‌து.ஒரு வேளை நான் அணிந்திருந்த‌ குவிஆடி சைஸை பார்த்து ந‌ம்பியிருக்க‌க்கூடும் என்று சிரித்த அந்தோணி சாமியை வாச‌லிலேயே இருத்தி விட்டு, நான் ம‌ட்டும் வ‌ராண்டாவிலிருந்த‌ சேரில் காத்திருந்தேன்.சிறிது நேர‌த்தில் பான்ஸ் ப‌வுட‌ருட‌ன் க‌ல‌ந்த ம‌ல்லிகை ம‌ண‌ம் குபீரென்று அவ்விடத்தை நிறைத்தது.ஒரு தாவ‌ணிப் பெண். ம‌ங்கிய‌ வெளிச்ச‌த்தில் நான் க‌ண்ட அந்த உருவம் வாழ்நாளில் ம‌ற‌க்க‌வே முடியாது.கதைகளில் வரும் கடற்கன்னியை போல் மாறிவிட்டிருந்தாள். ம‌ஞ்ச‌ள் பூசிய‌ முக‌ம்,புதிதாய் வெட்க‌ம்,லேசான‌ த‌ய‌க்க‌ம்,குறுகிய‌ இடைவெளி விட்டு ந‌டை, விம்மிப்பூரித்த‌...ச‌ரி வேண்டாம். ஒரு பெண்மையின் ப‌ரிபூர‌ண‌ ஸ்ப‌ரிச‌த்தை வெகு அருகாமையில் அதுவும் அந்த‌ ம‌ல்லிகைப்பூ வாடை அருகில் வ‌ர‌ வர க‌ண்க‌ள் சுர‌ந்து விட்ட‌து.நான் இதுவ‌ரை பார்த்திராத‌ மேரி.

ஒரு வார்த்தையோ அல்லது ஒரு தொடுதலோ இருவரிடையே இருந்த ஒரு மெல்லிய‌ திரையைக் கிழித்தெறிய போதுமானதாக இருந்திருக்கும்.நான் தான் முதலில் ஆரம்பித்தேன்.

'உன‌க்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு அம்மா சொன்னாங்களே'.

'நாந்தான் புவியிய‌ல் புக்க போன‌ வார‌மே கொடுத்துட்டேனே.ஏன் எங்க அம்மாகிட்ட பொய் சொன்ன !!'.

அந்த‌ வ‌ருட‌ம் முழுதும் நாள் த‌வ‌றாம‌ல் இதே கேள்வியை என்னிட‌ம் கேட்டுக் கொண்டேயிருந்தாள். தொல்லை தாங்க‌ முடியாம‌ல் ஒருநாள் Mercy twice blessed நாட‌க‌ம் முடிந்து கொட்டும் ம‌ழையின் பின்ன‌ணி இசையில் அவ‌ளிட‌ம் உண்மையை ஒப்புக்கொண்டேன்.

அப்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் ம‌றுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்ன‌கைத்த‌து செய‌ற்கையாக‌ இருந்த‌து.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாட‌த்தில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் என்று அடுத்த‌டுத்த‌ நாடக‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ம‌றுத்து விட்டாள்.அத‌ன் பிறகு ஒரேயொரு முறை சூசைய‌ப்ப‌ர் ந‌வ‌நாள் விழாவின் போது கையில் செம்பருத்தி பூக்களை வைத்துக் கொண்டு "அசிஷ்ட‌ மரியாயே.ச‌ர்வேசுவே மாதாவே" என்று மைக்கில் ஜெபித்ததும், மச்சி உன் ஆளுக்கு செம கண்ணுடா! என்று மாப்பிள்ளை பெஞ்சு சிலாகித்ததும் மட்டும் நினைவில் இருக்கிறது.

கடைசியாக போட்ட வேடம் எமன் தான்.அதன் பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக நாடகங்களில் நடிப்பதை அறவே நிறுத்திக் கொண்டேன்.அட்டைக்கத்திகளும் வாடகை மீசை தாடி போலிப்பூச்சுகளும் சலிப்புத்தட்ட ஆரம்பித்தன.நாங்கள் எழுதிய எல்லா நாடகங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஒருவித யதார்த்தமின்மையும், தட்டையான பொய் வசனங்களும் பின்னாளில் எங்களைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தன.நாடகங்கள் குறித்த கனவுகள் யாவும் நீர்த்துப் போய்,மலைப்பாம்பின் பிடியைப் போல வெறுமையின் அசுரத் தழுவல் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க், பன்னிரெண்டாம் வகுப்பில் புதிய நண்பர்கள்,மொட்டை மாடி கச்சேரிகள் என நேரத்தை வீணாக்கி, ஊர்சுற்றி குறைந்த மதிப்பெண் பெற்று,பாலிடெக்னிக்கில் சேர்ந்து, அங்கும் கட் அடித்து பஸ்ஸில் தொங்கி,லேட்ரல் என்ட்ரி ம‌கேஸ்வ‌ரிக்கு SMS அனுப்பி அனுப்பி நோக்கியாவின் கீ-மேட் த‌ட‌ம் அழித்து, பிராக்டிக‌ல் எக்ஸாம் காலைய‌ன்று ரெகார்ட் ச‌ப்மிட் ப‌ண்ணி,ஒருவ‌ழியாக‌ கேம்ப‌ஸில் வேலை கிடைத்து பெங்களூர்,ஹைதராபாத் கொச்சின் என்று பந்தாடப்பட்டு கடைசியில் லோனாவாலாவில் செட்டில் ஆகி, தசராவுக்கு கிடைத்த ஏழு நாள் விடுமுறையில் இப்போது தான் ஊருக்கு வருகிறேன்.

அரசு மானியம் பெறும் பள்ளி என்பதால் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு எங்கள் பள்ளியில் தான் அமைத்திருந்தார்கள்.வெள்ளனயே அந்தோணி சாமி வந்து பல்சரில் என்னை அலேக்கி விட்டான்.பல நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்ததால் கிடைத்த பலவந்த உபசரிப்பில் ஏழெட்டு இட்லிகள் நெய்யோடு உள்ளே போய் எதுக்களித்தன.லுங்கியில் சென்றதால் எழுந்த‌ த‌ர்ம‌ ச‌ங்க‌ட‌த்தில் கிரேஸி மிஸ் இருந்த அறையை கண்டுங்காணாதது போல கடந்து சென்று,வேறொரு பூத்துக்குள் நுழைந்து கொண்டேன்.வாக்காளர் சீட்டில் இருந்த என் பெய‌ரைத் தேடி கையெழுத்து போட‌ முனைந்த‌ போது, ஹேய்ய்..அப்துல் !! என்று தோளில் ஒரு மென்மையான‌ கை. திரும்பினால் லிட்டில் ஃபிள‌வர் மிஸ்.எப்ப‌டிடா இருக்க‌..ஆளே மாறிட்டான்ல மிஸ்...என்ன‌டா ப‌ண்ற‌..எத்தன‌ வ‌ருஷ‌மாச்சுல‌ருந்து ஆரம்பித்து அம‌லோற்ப‌ம் பிரின்ஸி ரிடைய‌ர்ட் ஆன‌து வ‌ரை சொல்லி முடித்தார்க‌ள்.

வித‌விதமான‌ வ‌ண்ண‌ங்க‌ளில் எடுக்க‌ப்ப‌ட்ட எங்க‌ள் நாட‌க‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் புது பிரின்ஸியின் அறையில் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன.க‌ண்க‌ள் விரிய‌ பார்த்துக் கொண்டிருந்தோம். க‌ட‌வுள் உன்ன‌ எப்ப‌டி ஆசிர்வ‌திச்சிருக்கார் பாரு !! நீ ந‌ல்லா வ‌ருவ‌ன்னு அப்ப‌வே தெரியும். என்ற‌ அவ‌ர்க‌ளின் அன்பின் வார்த்தைக‌ளில் நெகிழ்ந்து நின்ற‌ போது தான் அந்த‌ அறையின் இட‌து ஓர‌த்தில் அந்த‌ புவியிய‌ல் புத்த‌க‌ம் த‌ட்டுப்பட்ட‌து.க‌டைசி ப‌க்க‌த்தில் லிப்ஸ்டிக் கறைகளோடு ம‌ங்க‌லாக‌ எழுத‌ப்பட்டிருந்த‌ என் பெய‌ர், மேரியின் கையெழுத்து தான் என்று அந்தோணி சாமி அடித்துச் சொன்னான்.


(முற்றும்)

*******************************

Wednesday, October 21, 2009

இன்னுமொரு நாடகம் (சிறுகதை)

மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்ட‌து.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று ப‌ய‌முறுத்திய‌து. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊச‌லாடிக் கொண்டிருந்த‌து.அடிவ‌யிற்றை முட்டிய‌ ஒன் பாத்ரூமை அட‌க்கிக் கொண்டு "பாபிலோனிய‌ ம‌ன்ன‌ர் த‌ரியூ..பராக் ப‌ராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்ப‌ட்ட‌ கால‌ர் மைக்கில் சொல்ல‌ வேண்டும்.பாபிலோனிய‌ ம‌ன்ன‌ருக்கு எப்ப‌டி த‌மிழ் தெரியும் என்ற லாஜிக்கெல்லாம் யோசிக்க‌ நேர‌மில்லை.கொடுக்கப்பட்ட‌ வாயிற்காப்போன் வேட‌த்தைச் ச‌ரியாக‌ செய்ய‌ வேண்டுமென்ப‌து த‌ற்காலிக‌ க‌வலை. ஒன்ப‌தாம் வகுப்பு மாண‌வ‌ர்க‌ளுக்கு நாட‌க‌ங்க‌ளில் இது போன்ற‌ ஒப்புக்குச்ச‌ப்பான் வேட‌ங்க‌ள் தான் கொடுக்க‌ப்ப‌டும்.ம‌ன்ன‌ராக‌ வேண்டுமென்றால் ஃப்ள‌ஸ் டூவில் க‌ம்பியூட்ட‌ர் ச‌யின்ஸ் எடுத்திருக்க‌ வேண்டும்.

படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்.இப்போது செய்து கொண்டிருக்கும் வாயிற்காப்போன் வேடமாவ‌து ப‌ர‌வாயில்லை.க‌ட‌ந்த‌ ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேட‌ம் த‌ந்தார்க‌ள்.அடுத்த‌ முறை த‌மிழ் ம‌ன்ற‌ விழாவின் போது சாக்ர‌ட்டீஸூக்கு விஷ‌ம் வைக்கும் மெலீட்ட‌ஸ் கேர‌க்ட‌ர் த‌ருவ‌தாக லிட்டில் ஃபிள‌வ‌ர் மிஸ் ப்ரா'மிஸ்' ப‌ண்ணியிருந்தது கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருந்த‌து.

ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்க‌லில் மிள‌கு போல‌ ஒதுக்கி வைப்பார்கள்.முரட்டு சைஸ்,மூணு பவர் மூக்கு கண்ணாடியும்,முக்கா கால் பேண்ட்டுமாக அலையும் முதல் ரேங்க் மாணவர்கள் எப்போதும் த‌னித் தீவாக‌த்தானிருக்க‌ வேண்டும்.எந்த‌ கேங்கிலும் சேர்த்து கொள்ள‌ மாட்டார்க‌ள்.ம‌ச்சி..இவன் தான் க‌ண‌க்கு மிஸ் ஜோஸ்பினோட‌ spy டா..அவ‌ன் இருக்கும் போது பாத்து பேசுங்க‌..என்று அபாண்ட‌மாக‌ ச‌ந்தேகிப்பார்க‌ள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.

புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியின் நாடக மேடைகளில்,கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்.குருட்டு பெற்றோரை கூடையில் சுமக்கும் சிரவணனாகவும்,ச‌மூக‌விய‌ல் டீச்ச‌ர் காந்திம‌தியின் இஸ்திரி போட்ட‌ சேலையை அங்கியாக‌ உருமாற்றி, பைபிள் கேரக்டர் யாக்கோபுவாகவும்,இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலிய‌ன் வாலாபாக் ப‌டுகொலைக்கு கார‌ண‌மான‌ ஜென‌ர‌ல் ட‌யரை ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு பின் சுட்டு கொன்ற‌ உத‌ம் சிங்'காக‌வும், கடைசி நேரத்தில் என் ஆத‌ர்ச‌ காஸ்ட்யூம் ஸ்பான்ஸர் இருதயராஜ் காலை வாற, வேட்டி கிடைக்காமல் பள்ளிக்கூடத்து பக்கத்து வீட்டுக்காரன் ஜான்பீட்டர் லுங்கியை கட்டிக் கொண்டு ஆசிரியராகவும்,( ம‌ச்சான் லுங்கில‌ நீ ந‌ம்ம‌ பேட்ட‌ ர‌வுடி கணக்கா மெர்சிலா இருந்த‌..என்று மாப்பிள்ளை பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது வேறு விஷயம் ) அழுக்கு ஜட்டியை ச‌ர்ஃப் எக்ஸ‌லில் ஊற வைத்ததைப் போலவும்,க‌ருப்ப‌ட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார‌ ஜாக்ச‌ன் துரையாக‌வும், இப்ப‌டி நிறைய "ஆக‌வும்" நான் ந‌டித்ததைப் ப‌ற்றி ஒரு நெடுந்தொட‌ரே எடுக்க‌லாம்.

எங்கள் தமிழ் மீடியமும், சேட்டு பிள்ளைக‌ள் நிறைந்த‌ கான்வென்ட்டும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்திருந்தன.இரண்டு பள்ளிகளும் ஒரே குழுமத்தை சேர்ந்தவை என்பதால் ஆண்டு விழா உட்பட எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகத்தான் நடக்கும். எந்த விழாவாக இருந்தாலும், கான்வென்ட் தரப்பிலிருந்து குறைந்தது நான்கைந்து மேற்கத்திய நடனங்கள் தயாராகி விடும். பிரிட்டினி பியர்ஸ்,ஜெலோ என்று மெட்ரிகுலேசன் குட்டைப்பாவாடை குருவிகள் ஒருபுறம் சிறகடிக்க..பூலித்தேவன்..ஊமைத்துரை,பாரதியார் என எங்கள் தமிழ் மீடிய நாடகப்பட்டறை காத்து வாங்கும்.அத்தி பூத்தாற் போல‌ கைத‌ட்ட‌ல்க‌ள் அள்ளும் எங்க‌ள் நாட‌க‌ குழுவின் ந‌ட்ச‌த்திர‌ நாய‌க‌ன் சுப்புர‌ம‌ணி, 11ம் வகுப்பு சேர வேறு ப‌ள்ளிக்கு சென்று விட்டதாலும், ஒலிபெருக்கிகளும் மைக்குகளும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டதாலும், ஏறத்தாழ நாங்கள் போட்ட அனைத்து நாடகங்களும் ஃபிளாப் ஆனது. சகாக்கள் ரொம்பவும் சோர்ந்து போயினர்.

ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓர‌ள‌வு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது.ரோமியோவாக‌ நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும். ஆஹா..ராவெல்லாம் தூக்கம் வராமல்..ரத்தத்திலகம் சிவாஜி ஒத்ஸெல்லோ ஸ்டைலில் போர்வைக்குள் வசன ஒத்திகை நடந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சம்மர் சால்ட் அடித்தன.மேரியின் விரல்களை தொடுவதே ஒரு சம்போகம் தான்.எங்களுக்குள் மெளன தீட்சண்யமாக ஒரு உறவு அரங்கேறி கொண்டிருந்ததை நான் ம‌ட்டுமே ந‌ம்பினேன்.ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.

( மீதி விரைவில்..)

************************************************

Monday, October 19, 2009

முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று




எழுத்துல‌கில் வெகு அபூர்வ‌மாக‌த்தான் நிக‌ழ்கின்றன‌ இது போன்ற‌ ப‌டைப்புக‌ள்.கவிஞ‌ர் ச‌ல்மாவின் க‌விதைக‌ள் பெரும்பாலும் பெண்க‌ளின் வாழ்விய‌ல் போராட்ட‌ங்க‌ளையும் அவ‌ல‌ங்க‌ளையும் உண‌ர்வுப்பூர்வ‌மாக எடுத்துரைக்கும்.அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளுள் ஒன்று அதிகாலையில் பார்த்த மாத்திரத்திலென் முகத்திலறைந்தது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீள வில்லை.


இரண்டாம் ஜாமத்துக் கதை
****************************

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய

இரவுகளில்

பழகிய நிர்வாணத்திற்கிடையில்

அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்

என் அழகின் களங்கமின்மையை



பெருத்த உடலும்

பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்

ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்

சொல்கிறாய்

இன்றும் இனியும்

எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்



நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டிருக்கும் என் குரல்

தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்

என் உடலைப் போலல்ல

உன்னுடையது

பறைசாற்றிக்கொள்வதில்

வெளிப்படையாக இருப்பதில்



இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்



நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்

இந்தப் பிரசவக் கோடுகளும்

எளிதில் செப்பனிட முடிவதில்லை

வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை



உன்னைக் காட்டிலும்

மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது

இயற்கை எனக்கு

உன்னிலிருந்துதானே தொடங்கிற்று

எனது தோல்வியின் முதலாவது நிலை



முதல் ஜாமத்தைக் காட்டிலும்

விபமுதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்



சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டிலமர்ந்து

உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது


************************

Wednesday, September 23, 2009

சிறுகதை பட்டறையும், நான் ரசித்த சிறுகதைகளும்

சிறுக‌தை ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லையே என்ற வ‌ருத்த‌ம் நேற்றோடு த‌ணிந்த‌து.ப‌த்ரி அவ‌ர்க‌ள் அவ‌ர‌து வ‌லையில் சிறுக‌தை ப‌ட்ட‌றையின் ஆடியோ/வீடியோ இர‌ண்டையும் ப‌திவு செய்து சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

இங்கே சொடுக்குக‌ !

அதிலும் குறிப்பாக‌ பா.ராக‌வ‌னின் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கான செஷன், ஸ்லைடு ஷோவோடு தெளிவாக‌ வ‌ந்திருக்கிற‌து.(வீடியோ கிடையாது)

அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளில் எழுத‌ நினைக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌ன‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.குறிப்பாக‌ "உங்க‌ளுக்கு பிடித்த‌ சிறுக‌தைக‌ளை அல‌சி ஆராய்ந்து ஏன் உங்க‌ளுக்கு அந்த‌ க‌தைக‌ள் பிடித்திருந்த‌து என‌ க‌ட்டுடைத்து பாருங்க‌ள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறே செய்து பார்க்க‌லாம் என‌வும் தோன்றிய‌து.அத‌ன்ப‌டி நான் மிகவும் ர‌சித்த,என்னை மிக‌வும் பாதித்த‌ சிறுக‌தைக‌ளை ப‌ட்டிய‌லிட்டிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் இவைக‌ளையும் வாசித்து பார்க்க‌வும்.மேலும் நீங்க‌ள் இந்த‌ சிறுக‌தைக‌ளை ஏற்கென‌வே ப‌டித்திருந்தாலும் பின்னூட்ட‌த்தில் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.

1) செவ்வாழை அண்ணாதுரை
2) ந‌க‌ர‌ம் சுஜாதா
3) தீவுக‌ள் க‌ரையேறுகின்ற‌ன‌ சுஜாதா
4) பாட்டையா மேலாண்மை பொன்னுச்சாமி
5) பாய‌ம்மா பிர‌ப‌ஞ்ச‌ன்
6) புய‌ல் அகில‌ன்
7) பொம்மை ஜெய‌காந்தன்
8) க‌த‌வு கி.ரா
9) இன்னும் கிளிக‌ள் மாத‌வ‌ராஜ்
10) ஐந்தில் நான்கு நாஞ்சில் நாட‌ன்
11) குற‌ட்டை ஒலி டாக்ட‌ர் மு.வ‌ர‌த‌ராச‌னார்
12) கால்க‌ள் சுஜாதா
13) இந்த‌ ந‌க‌ரிலும் ப‌ற‌வைக‌ள் இருக்கின்ற‌ன‌ எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
14) ந‌ட‌ந்து செல்லும் நீருற்று எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
15) சிவப்பா உய‌ர‌மா மீசை வ‌ச்சுக்காம‌ ஆத‌வ‌ன்
16) ஒரு அறையில் இர‌ண்டு நாற்காலிக‌ள் ஆத‌வ‌ன்
17) பீங்கான் நாரைக‌ள் எஸ்.ராமகிருஷ்ண‌ன்
18) ம‌ண்குட‌ம் மாத‌வ‌ராஜ்
19) த‌வ‌ம் அய்க்க‌ண்
20) ப‌ல்லி மெல‌ட்டூர் ந‌ட‌ராச‌ன்
21) ஸார் நாம‌ போயாக‌ணும் ச‌த்ய‌ராஜ்குமார்

இந்த‌ க‌தைக‌ளை நான் ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ள் வேறுவேறாக‌ இருப்ப‌தால் எந்த‌ குறிப்புக‌ளுமின்றி
நினைவில் வைத்தே எழுதுகிறேன்.ஆசிரிய‌ர்-க‌தைக‌ள் பெய‌ர்க‌ள் த‌வறெனில் பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌லாம்.

கி.ரா,ஆத‌வ‌ன்,ஜெய‌காந்த‌ன்,சுஜாதா இவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் ஏறத்தாழ‌ அனைத்துமே குறிப்பிட‌த்த‌க்க‌வை.அவைக‌ளை த‌னித்த‌னியாக‌ அல‌ச‌வும் திட்ட‌மிட்டிருக்கிறேன்.இணைந்திருங்க‌ள்.

***********

Monday, September 14, 2009

கறுப்பு தினம்



நம்பர் ஃபிளைட்ல அடுத்த மாசம் பதினோராம் தேதி உனக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிருக்கு.நீ வெர்ஜினியால பத்தாம் தேதி இருக்கணும்.இந்த நம்பர MS Word-ல காப்பி பேஸ்ட் பண்ணி, Wingdings Font ஸ்டைல்ல‌ மாத்திப்பாரு..நாம முடிக்க வேண்டிய ஆபரேஷனோட சீக்ரெட் கோட் இந்த நம்பர்ல ஒளிஞ்சிருக்கு.

ஹட்டா
(வஸ்ஸ...)


என்னுடைய ப்ளாக்பெர்ரியில் ஹட்டாவின் குறுந்தகவல் அதிர்ந்தது.ஹட்டா இஸ் ரியலி எ ஜீனியஸ் !


****************************

தடிமனான‌ திரைச்சீலைகளுக்குள் எங்களுடைய இரவு கிடத்தப்பட்டு,அறை முழுதும் நிசப்தம் பரவியிருந்தது.நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை.ஹட்டா மட்டும் வழக்கம் போல தன்னுடைய மடிக்கணினியில் மைக்ரோசாஃப்ட் ஃப்ளைட் சிமுலேட்டர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஹட்டாவை நான் ஆப்கனில் பயிற்சியின் போது தான் முதன் முதலாக‌ சந்தித்தேன்.ஹம்பர்கில் எம்.எஸ் படித்தவன்.எகிப்திய‌ர்க‌ளுக்கே உரித்தான‌ ர‌த்த‌ச் சிவ‌ப்பு நிறம். அமைதியான முகம். இன்னும் ஒருமாதத்தில் நாங்கள் நிறைவேற்றப்போகும் இந்த மிஷனுக்காக குழுத்தலைவர் காலித்,என்னையும் அட்டாவையும் தேர்ந்தெடுத்து,போலி ஆவணங்கள் தயார் செய்து பி1/பி2 டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தார். நான்கைந்து மாதங்கள் அலைந்து திரிந்து, கடைசியாக தெற்கு ஃப்ளோரிடாவில் இருக்கும் ஹஃப்மேன் ஏவியேஷனில் "பைலட் ப்ரோகிராம்" சேர்ந்தோம்.மூன்று மாதங்களில் விமானத்தின் நுணுக்கங்களையும் செயல்திறனையும் திறம்பட கற்றுத் தேர்ந்தோம்.நவம்பரில் "இண்ஸ்ட்ருமன்ட் ரேட்டிங்" பாஸ் செய்து விட்டோம்.

************

ஹட்டா வார்த்தைகளை அதிகம் செலவழிக்க மாட்டான்.எப்போதாவது மனம் உடைந்து அவன் உதிர்க்கும் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்.

ஒருமுறை ஆப்கன் பயிற்சியின் போது,ஒரு மாலைநேரம் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்.வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லாத அந்த சிறுவர்களைப் பார்க்க ஏக்கமாக இருந்தது.

அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களில் அஜ்மல் என்ற சிறுவனும் இருந்தான்.அஜ்மலுக்கு அப்போது 12 வயது தான் இருக்கும்.பயிற்சியின் போது எங்களுக்கு சாப்பாடு வாங்கி வருவது, கடைக்கு போவது போன்ற உதவிகள் செய்வான். சிறுவர்களாக இருந்தால் முதல் மூன்று வருடங்களுக்கு எடுபிடி வேலைகள் தான் கொடுக்கப்படும். அதன் பிறகு தான் மற்ற எல்லாம்.7 வருடங்கள் தீவிர பயிற்சிக்கு பிறகு ஸ்லீப்பர்களாக இந்திய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். அஜ்மல் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன்.

அன்று அஜ்மல் மட்டும் சோப்பு நீரை ஒரு குடுவைக்குள் நிரப்பி, காற்றில் முட்டை விட்டு கொண்டிருந்தான்.பெரிதாக ஊதப்பட்ட் ஒரு நீர்க்குமிழி, பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி பொத்தென்று உடைந்து ம‌றைந்த‌து.ஹட்டா, இமை கொட்டாமல் சிறுவனையும் மரத்தில் மோதும் நீர்க்குமிழிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து,ச‌ரியாக‌ மூன்று மாத‌த்தில் எங்க‌ளுடைய‌ மிஷ‌னுக்கான‌ 'பிளாட்' அட்டாவால் தீர்மானிக்க‌ப்பட்ட‌து.

********************************

டேம்பா பகுதி அபார்ட்மென்ட் ஒன்றில் எங்கள் வாழ்வின் கடைசி இருபது நாட்க‌ள் ஒரு ச‌வ‌ ஊர்வ‌ல‌ம் போல‌ ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌ன. இந்த‌ தீராத‌ ப‌ய‌மும் ந‌டுக்க‌மும் எங்க‌ளுக்கு அற‌வே பிடிக்க‌வில்லை.

ந‌ள்ளிர‌வுக‌ளில் ஹட்டா போர்வைக்குள் க‌தறி அழுவது ம‌ட்டும் மெலிதாக‌ கேட்கும். இந்த ஆப‌ரேஷ‌னிலிருந்து பின் வாங்கி விட‌லாமா என்று கூட‌த் தோன்றும். ஆறேழு வ‌ருட‌ உழைப்பு,திட்ட‌ம் எல்லாம் பாழாகினாலும் ப‌ரவாயில்லை.எல்லாவ‌ற்றையும் துர‌ எறிந்து விட்டு,ஊருக்கே திரும்பி ப‌ழைய‌ வாழ்க்கையை ஆர‌ம்பிக்க‌லாம். என‌க்காக‌ அவ‌ள் காத்து கொண்டிருப்பாள் என்றெல்லாம் ம‌ன‌துக்குள் பேசி ச‌ண்டை போட்டு மீண்டும் ஃப்ளைட் சிமுலேட்ட‌ர்க‌ளை இய‌க்க‌ ஆர‌ம்பித்து விடுவோம்.லாஸ் வேகாஸ் சென்று லாப் டான்ஸ் பார்த்தோம். ஸ்காட்ச்சிலும் ஷாம்பைனில் மூழ்கித் திளைத்தோம்.

*************************

நான் வெர்ஜினீயாவிலிருந்தும், ஹ‌ட்டா பாஸ்ட‌னிலிருந்தும் கிள‌ம்பி விட்டோம்.எதிர் எதிர் திசையில் நியூயார்க்கில் வானில் ச‌ந்திப்ப‌தாய் திட்ட‌ம். முத‌ல் க‌ட்டிட‌ம் ஹ‌ட்டாவின் இல‌க்கு. இர‌ண்டாவ‌து க‌ட்டிட‌ம் என்னுடைய‌து.

ச‌ரியாக ஏழு வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து, அஜ்மல் (எ) அமீர் க‌ச‌வ், சோப்பு நீரில் முட்டை விட்ட‌ அதே சிறுவன் த‌ன் ச‌க‌ கிரிக்கெட் கூட்டாளிக‌ளுட‌ன் உல‌ர்ந்த‌ பேரித்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை பையில் வைத்து கொண்டு,கராச்சி துறைமுக‌த்திலிருந்து மும்பையை நோக்கி கிள‌ம்புவான்.

***********************

Sunday, August 30, 2009

நத்தை (பாகம்-2)

"தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும்.அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.."

*******************

கீழ‌க்க‌ர‌ கார‌வுஹளாம்.மாப்ளக்கார‌ன் ல‌ண்ட‌ன்ல‌ க‌ம்யூட்ட‌ர் என்ஜினியரா இருக்காப்ள‌யாம்.ந‌ல்லா வெச்சிருக்கிருவாஹ‌ போல.தெருவீட்டில் ச‌ஹ்ரானி மாமா,உரத்த குரலில் வாப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த‌ வெற்றிலைக் குதப்பல் அடுப்பங்கரை முட்டும் பட்டுத் தெறித்தது.இப்ப‌த்தான‌ ப‌ள்ளிக்கூட‌ம் முடிச்சிருக்கா.டீச்ச‌ர் டிரெயினிங் வேற‌ ப‌டிக்க‌ணுன்டு திரியிறா.அதுக்கு விருதுந‌க‌ர்ல‌ ஹாஸ்ட‌ல்ல‌ த‌ங்கி ப‌டிக்கணுமாம்ல‌.பொம்ப‌ள‌ புள்ள‌ய‌ காலேஜிதேன்.ரெண்டு வ‌ருசம் அதுவரைக்கிம் பொறுத்து கிருவாக‌லா? அதெல்லாம் பேசிக்கிர‌லாம் ம‌ச்சான்.ஒத்துக்கிருவாஹ..ப‌டிக்கிற புள்ள‌ய‌ நாம ஏன் த‌டுக்க‌..! ச‌ஹ்ரானி மாமா பேச‌ ஆர‌ம்பித்து விட்டார் என்றால் பாறையையும்,வேக‌ வைத்து கிழ‌ங்காக்கி மசித்து விடுவார்.அந்த‌ க‌ம்பியூட்ட‌ர் என்ஜினிய‌ர் வீட்டையும் சேர்த்து.

அப்ப ஊனாமூனாவ என்னளா பண்ணப் போற! ச்செவப்பி கேட்க கேட்க,மெஹரு கண்களில் தாரை தாரையாக‌ பெருகி கொண்டிருந்தது.சினிமால வர மாதிரி இழுத்துக்கிட்டா ஓடமுடியும்.ஓடுறது ஒருபக்கம் இருக்கட்டும்.அதுக்கு இந்த அழுக்கு குத்து என்ன மனசுல நெனச்சிருக்கோன்னு யாருக்கு தெரியும்.சரி இன்னும் ரெண்டு வருசம் இருக்குல்ல..நீ அழுவாத‌! ப்பாப்பம்..ஒந்தலையில என்ன எளுதிருக்கிண்டு...நீ அலட்டிக்காம போயி படிக்கிற வளியப்பாரு..!

கமுதி,முதுகுளத்தூர்,சிக்கலூர் சனம் முழுவதும் அவ‌ள் வீட்டில் நிரம்பி வழிய,அடுத்த‌ வார‌மே பூ வைக்கும் வைப‌வ‌ம் ந‌ட‌ந்தேறிய‌து.எம்.எஸ் வீட்டு நிகழ்ச்சின்னா சும்மாவா..பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.இந்த சின்ன நிகழ்ச்சிக்கே, சுந்தரபுரத்து தெரு முழுதையும்,கீழக்கரை டாட்டா சுமோக்கள் நிறைத்திருந்தன.ஆட்டுக்கிடா ஆனமும் முந்திரி போட்ட நெய்ச்சோறும் சட்டி சட்டியாக இறங்கின.நண்டு,சுண்டு முதல் அந்த கீழக்கரை குடும்பத்து பெரியவர்கள் மீது வரை வீசிய‌ அத்தர் வாடை அவளுக்கு குமட்டத் தொடங்கியது.காட்டுமல்லி மணமும் பட்டுப்புடவைகளும்,தரைதொடுமளவு தங்க நகைகளும் ஒப்பவில்லை.வந்தவர் கண்கள் எல்லாம் அவள் மீது படிந்திருந்தாலும்,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.

வந்த சனம் முழுதும் வெற்றிலைகளையும் தேங்காய்களையும் சேலையில் முடிந்து கொண்டு,அவள் நெற்றியைத் தடவி "கொடுத்து வச்ச மவராசி"க்களை வாரி வழங்கி விட்டு நகரத் துவங்கியிருந்தது.வாப்பாவும் அம்மாவும் பூரிப்புடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். சஹ்ரானி மாமா சமையல்,பந்தல்,சேர்க்காரனுக்கு செட்டில் பண்ணிக் கொண்டிருந்தார்.கனமான சீமைச் சில்க்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு,மீண்டும் பழைய பூப்போட்ட கத்தரிப்பூ தாவணிக்கே மாறினாள்.என்னமோ அந்த தாவணியை உடுத்தும் சமயம் மட்டும் அவனை பார்த்து விடுவதாய் ஒரு குருட்டு நம்பிக்கை.சில நேரங்களில் அது நடந்தும் இருக்கிறது.

மதியந்தே இந்த கொள்ள கூக்கறையில சரியா சோறுண்டுருக்க மாட்ட.இப்பவாவது ஒலுங்கா தின்னுளா! அம்மா கத்தியது காதில் விழவேயில்லை.மனம் என்னவோ சொரட்டுபுள் திண்ணையையும்,கேபிள்காரனையுமே சில்லுவண்டாய் சுற்றிக் கொண்டிருந்தது.மேனி முழுதும் படர்ந்திருந்த அவன் சாயம் அடைமழையே நனைத்தாலும் வெளுக்கப்போவதில்லை என்ப‌து ம‌ட்டும் ச‌த்திய‌ம்.

ஊர் முழுதும் நிசப்தத்தை போர்த்திக் கொண்டு நள்ளிரவு முழுமையடைந்திருந்தது.கொலுசுகளை கழற்றி வைத்தாள்.கொள்ளைப்புற கதவை சத்தமில்லாமல் திறந்தாள்.பாவாடையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.கிணற்றுத் திண்டில் கால்வைத்து ஏறி,சுவர்களை பற்றிக் கொண்டு பின் தெருவில் குதித்தாள்.சுண்ணாம்பு வீடுக‌ளைத் தாங்கிய‌ சொர‌ட்டுபுள் தெரு வெறிச் சோடிப் போயிருந்தது.விறுவிறுன்று அவன் வழக்கமாக தூங்கும் ப‌ழ‌ந்திண்ணையை நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினாள்.

கொசுவ‌த்தி சாம்ப‌ல் த‌ரையில் உதிர‌,லேசான‌ குற‌ட்டைச் ச‌த்த‌த்துட‌ன் அவ‌ன் உற‌க்க‌த்தில் ஆழ்ந்திருந்தான்.உத‌டுக‌ள் துடிதுடிக்க‌ அவன் முகத்தைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் அவளுக்கு அழுகை வெடிக்க ஆரம்பித்தது.என்ன‌ எங்கியாவ‌து க‌ண் காணாத‌ எட‌த்துக்கு கூட்டிட்டு போயேண்டா!!! ஓவென்று க‌த‌ற‌த் துவ‌ங்கினாள்.இடி இடித்தாற் போல் அலறிக் கொண்டு எழுந்தான் ஊனாமூனா.க‌ண்களாலேயே விழுங்குப‌வ‌ள் போல‌ அவ‌ன் முக‌த்தையே அவ‌ள் வெறித்துக் கொண்டிருக்க,திண்ணைச்சுவற்றில் சாய்த்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த ஆயிரம் சுள்ளிக்குச்சிக‌ள் அவ‌ள் மேல் ச‌ரிந்து விழ‌..அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

***************முற்றும்***************

Monday, August 17, 2009

நத்தை

"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."

--------------------------------
ஊள‌மூக்கு உம்முனாமூஞ்சிக்கு இன்று தான் பிறந்த‌ நாளென்று நாடார்வீட்டு ச்செவ‌ப்பி மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்பு சொன்ன‌து எப்ப‌டி ம‌ற‌க்கும் அவ‌ளுக்கு.அத‌ற்காக‌ ப‌த்து வெளாம்ப‌ழ‌ம‌ல்ல‌வா ப‌றிகொடுக்க‌ வேண்டியிருந்த‌து.ஆளைப்பார்ப்ப‌தே ராம‌நாத‌புர‌த்தில் ம‌ழைபெய்வ‌தைப் போல‌ அரிதாக இருக்க‌,வெறும் ஞாப‌க‌ம் ம‌ட்டுமே வைத்து கொள்வ‌தில் என்ன‌ ப‌ய‌ன்.அதுவும் பார்க்கும் போதெல்லாம்,எண்ணெய் வ‌ழிய‌,எள்ளும் கொள்ளும் வெடிக்க‌,சுண்ட‌ வைத்த‌ வெஞ்ச‌ன‌க்கிண்ண‌ம் போல்,முக‌த்தை உர்ரென்று வைத்து
அலைந்து கொண்டிருக்கும் அந்த‌ உயிரின‌ம்.எது எப்ப‌டியிருந்தாலும் இன்று அவ‌னைப் பார்த்தே தீர‌ வேண்டுமென்று ஊருணியில் துணிவெளுக்கும் கல்லின் மீது அடித்து சத்தியம் செய்து கொண்டாள்.

அந்த ஊனாமூனா கேபிள்கார‌னின் திருமுக‌த்தை த‌ரிசிப்ப‌த‌ற்கு,அவ‌ள் பின்னும் சூழ்ச்சிவ‌லைகள் இருவ‌கைப்ப‌டும்.ம‌திய‌நேர‌மாக‌ இருந்தால் அம்மா சீரிய‌ல் பார்க்கும் நேர‌ம் பார்த்து,மெதுவாக‌ கொள்ளைப்புற‌ம் சென்று உமி நிர‌ம்பியிருக்கும் சவுக்கு கூடையின் மேல் எடை போடாம‌ல் ஏறி,பூஸ்ட‌ரில் செருகியிருக்கும் கேபிள் வ‌ய‌ரை பிடுங்கி விட்டால், உள்ளிருந்து திட்ட‌ப்ப‌டி அம்மாவின் குர‌ல் வ‌ரும், "பேதில‌ போயிருவாய்ங்க‌..ந‌ல்ல‌து பொல்ல‌து பாக்க‌ விட‌மாட்டாய்ங்க..எப்பப் பாரு கேபிள் கரெண்டு கட்டு! ஏளா மெஹ‌ரு..அந்த‌ கேபிள்கார‌ய்ங்க‌ளுக்கு போன‌ போடுளா"..!!இது ஒரு வ‌கை.ஐந்தாம் தேதி த‌ர‌வேண்டிய‌ கேபிள் ப‌ண‌த்தை, எட்டு ப‌த்து ப‌தினைந்து வ‌ரை வேண்டுமென்றே இழுத்த‌டித்து அடிக்க‌டி வீட்டுக்கு வரவைத்து முக‌ம் பார்ப்ப‌து இன்னொரு வ‌கை.

ஏற்கென‌வே ப‌ல‌முறை இந்த‌ பிர‌ம்மாஸ்திர‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு தீர்ந்து விட்ட‌ன‌.ம‌திய‌ம் பள்ளிவாசல் தெரு வ‌ழியாக அவன் வ‌ரும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்.திண்ணையில் ப‌ர்மா கிழ‌வி க‌ண்ண‌ய‌ரும் நேர‌மாக பார்த்து க‌த‌விடுக்கில் ஒளிந்து கொண்டாள்.எல்லாம் ஓரிரு நொடிகள் குறுகுறுப்பு ப‌ர‌வ‌ச‌ பார்வைக‌ளுக்காக‌த் தானன்றி,அந்த பட்டிக்காட்டில் வேறென்ன வேறென்ன சாதித்து விடமுடியும்.நெற்றி விய‌ர்வை நீர்த்திவ‌லைக‌ள் பூத்து ஒவ்வொன்றாக‌ உதிர‌ தொட‌ங்கும் வேளையில்,ச‌ட்டென்று ச‌ருகில் தீப்பிடித்த‌தை போல் ஒரு ச‌ல‌ன‌ம்.துருப்பிடித்த அந்த‌ பெரிய‌ கேரிய‌ர் சைக்கிள் பெல்லின் கர்ர்முர்ர் சத்தம் நான்கு தெருக்க‌ளுக்கு அப்பால் இருந்து ஒலித்தாலும்,ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து.

தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய், அவ‌ளும் அவ‌ள் காத‌லும் க‌த‌விடுக்கில் அவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து..!ந‌ம்ப‌ முடிய‌வில்லை.ஏழெட்டு மாத‌ங்களுக்கு முன்பிருந்த‌ நிலைமை இப்போது த‌லைகீழ். ப‌ள்ளி தோழிக‌ளிட‌ம் ஜான்சிராணி தொனியில் காத‌ல் எதிர்ப்பு வ‌ச‌ன‌ங்க‌ள் பேசிய‌தும்,பெண்ணிய‌ம் பற்றி கொட்டை எழுத்துகளில் க‌ட்டுரை எழுதிய‌தும் இந்த‌ வாயில்லா பூச்சியிட‌ம் தோற்க‌த்தானா? அப்ப‌டியென்ன அவ‌ன் மீது அப்ப‌டியொரு ஈர்ப்பு.பார்த்த‌வுட‌ன் வ‌சீக‌ரிக்கும் முக‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை.ப‌டிப்பு வாச‌னையும் கிடையாது.பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல்.

மாலை இருட்டும் வரை கால்கடுக்க நின்றது தான் மிச்சம்.கடைசி வரை அத்தெருவுக்குள் அவன் வரவே இல்லை.கோபத்தில் உதடுகள் துடித்தன.கண்கள் நிறைந்து விட்டன.என்ன தெரியும் அவனுக்கு.செக்குமாடு மாதிரி இர‌வு வ‌ரை சைக்கிள் மிதித்து,வீடு வீடாய் கேபிள் கனெக்ச‌ன் மட்டுந்தான் கொடுக்க‌த் தெரியும். கடந்த ஆறுமாதங்களாக இந்த கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது.ஒவ்வொரு நாளும் இப்படித்தான் எதிர்பார்த்தபடியே ஏமாற்றுவான்.

தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.

( வரவேற்பை பொறுத்து மீதி.......)

*******************************

Tuesday, July 21, 2009

பாஸ்வேர்டு தேவ‌தைக‌ள்

*********

கால‌வ‌ழுவ‌மைதி

பையில் பத்து ரூபாயும்
பஸ் பாஸூம்
கொண்டாட கொஞ்ச‌ம் சுதந்திரமும்
வாய்க்கும் காலநிலையில்
அறிமுகமாவாள்;
நண்டு வளையில்
உலகம் காட்டுவாள்;
பொம்மைக‌ளோடு
ச‌ண்டையிட‌ க‌ற்றுத் த‌ருவாள்;
அரைநாள் பேசாவிட்டால்
ஒம்பேச்சுக்கா என்பாள்

குயவனின் சக்கரச் சுழலில்
உருப்பெறுமுன் சரிந்து விழும்
களிமண்ணாய் ஒருநாள்
சடுதியில் மரித்து உடைந்து போவாள்

அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.



*******

இட‌வ‌ழுவ‌மைதி

நேற்று எதிர்பார்க்க‌வில்லை
எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று.
ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்வேன்
அந்த‌ "இன்று" ம‌ட்டும் வானாளில்
வ‌ர‌வே கூடாதென்று.

எதிர்பார்த்த‌ப‌டியே
ஏமாற்றாமல் ஒருநாள்
வ்ந்து தொலைத்த‌து அந்த‌ "இன்று"
மின்சார‌ ர‌யிலில்.

"வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா?"
"வெயில்ல‌ அலைஞ்சி ரொம்ப‌ க‌ருப்பாயிட்ட‌ல்ல‌?"
"அம்மா ந‌ல்லா இருக்காங்க‌ளா?"
"அக்கா கொழ‌ந்த‌ இப்ப‌ வ‌ள‌ந்துருப்பால்ல?"
"இப்பவும் க‌விதைல்லாம் எழுதுறியா?"
"எப்ப‌டிடா இருக்க‌?"
"ச‌ந்தோஷ‌மா இருக்கியா?"
"என்ன‌ ம‌றந்துட்டியா?"
"இல்ல‌ இப்ப‌வும் நினைச்சிப்பியா?"

கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!


**********

Tuesday, July 14, 2009

சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது

ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில் க‌ட்டுரை போட்டிக‌ளில் தொடர்ந்து மூன்று ஆண்டுக‌ள் முதல் பரிசு வாங்கியவன் என்ற ஒரே அற்ப‌ த‌குதியை மட்டுமே ஆதாரமாக வைத்து,வ‌லைத‌ள‌த்தில் எழுத‌ வ‌ந்த‌ என‌க்கு கிடைக்கும் சிறிய‌,பெரிய‌ அங்கீகார‌ங்க‌ள் உண்மையிலே அவ‌ற்றிற்கு நான் த‌குதியான‌வனா என்ற‌ சிந்த‌னையை அவ்வப்பொழுது தூண்டுவதுண்டு.அது ஒருபுறமிருக்க..

அண்ணன் செந்த‌ழ‌ல் ர‌வி மூலமாக,நான் விரும்பி வாசிக்கும் பதிவர் அமித்து அம்மா என்னையும் சுவார‌சிய‌ ப‌திவ‌ர் ப‌ட்டிய‌லில் சேர்த்து,என் ப‌திவுக‌ளுக்கும் வாகைப்பூ சூட்டியிருக்கிறார்.பெருமையாக‌ உண‌ர்கிறேன்.

அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி !!!!

என‌வே இந்த‌ ச‌ங்கிலித்தொட‌ர் ச‌ம்பிர‌தாய‌த்தை க‌ர்ம‌சிர‌த்தையோடு நிறைவேற்றும் சீரிய‌ ப‌ணி என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.தொட‌ர்ப‌திவு என்ற‌வுட‌ன்,ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைத்து,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக,இந்த‌ விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.


இவ‌ர்க‌ளுக்கு விருது வ‌ழ‌ங்க‌ நான் த‌குதியான‌வ‌னா என்ற‌ கேள்வி உள்ளுக்குள்
பீடிகை போட‌த்தான் செய்கிற‌து.எது எப்ப‌டியாக‌ இருந்தாலும் இவ‌ர்கள் தான் என் எழுத்துக‌ளை சுத்திக‌ரித்து கொண்டிருப்பவர்கள்.ம‌றைமுக‌மாக‌ என‌க்கு பாட‌ம் ந‌ட‌த்தி கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.யாரெல்லாம் ?

பீமோர்க‌னின் "வ‌ழிப்போக்க‌ன்"

என்னை அடித்து துவைத்த‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.அவ‌ருடைய
"ச‌முத்திர‌த்தில் மீன்க‌ளை வ‌ரைப‌வ‌ன்" ப‌திவின் அனைத்து வ‌ரிக‌ளும் என‌க்கு ம‌ன‌ன‌ம்.த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ரை அதிக‌ம் தெரியாது என்றாலும், இவ‌ர் எழுத்துக்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன்.

ஆடுமாடு

ம‌ண்வாச‌னை மிக்க சிறுக‌தைக‌ளை ம‌ட்டுமே எழுதுகிறார்.

சுவார‌சிய‌மான‌ எழுத்துக‌ளை வாசிக்கும்போது,என்னைய‌றியாம‌ல் ந‌க‌ங்க‌ளால் என் உத‌டுக‌ளை கிள்ளுவ‌துண்டு.அந்த‌ வ‌கையில் உதட்டில் இர‌த்த‌ம் வ‌ரும‌ளவு,ப‌டிக்க‌ வைத்து புண்ணாக்கிய‌வ‌ர் ஆடுமாடு.அவ‌ர் ப‌திவுகளுக்கு பின்னூட்ட‌மிடும் அளவுக்காவ‌து நான் த‌குதிய‌டைய‌ வேண்டும் என்று முய‌ற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

லேகாவின் "யாழிசை ஓர் இல‌க்கிய‌ ப‌ய‌ணம்"

எஸ்.ரா.வின் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ டாப்டென் வ‌லைப்பூக்க‌ளில் யாழிசையும் ஒன்று.த‌மிழின் குறிப்பிட‌த்தக்க ப‌டைப்புக‌ளை அறிமுக‌ம் செய்து வைத்து,த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌குக்கு ச‌த்த‌மில்லாம‌ல் ஒரு சேவையை செய்து வ‌ருகிறார் லேகா.ந‌ல்ல‌ படைப்புக‌ளுக்கான‌ தேட‌ல்க‌ளுக்கு லேகாவின் வ‌லைப்பூ ஒரு முற்றுப்புள்ளி.நேர‌ம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் ப‌திவ‌ர் இவ‌ர்.இவ‌ருடைய‌ ப‌ர‌ந்த‌ வாசிப்பை க‌ண்டு விய‌ந்திருக்கிறேன்.

ஆதிமூல‌கிருஷ்ண‌னின் "புல‌ம்ப‌ல்க‌ள்"

இவ‌ருடைய‌ ர‌க‌ளையான‌ த‌ங்க‌ம‌ணி ந‌கைச்சுவை ப‌திவுகள் அதிகம் பேச‌ப்ப‌ட்டாலும்,இவ‌ருடைய‌ குறுங்க‌தைகளைத் தான் நான் அதிக‌ம் ர‌சித்திருக்கிறேன்."நீ நான் அவ‌ள்" என்ற‌ ப‌திவை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்க‌ள்.துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள், சிறுக‌தை, மொக்கை என‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் சுண்டி இழுக்கும் டிபிக்க‌ல் ம‌சாலா+த‌ர‌ம் வாய்ந்த‌ வலைப்பூ இவ‌ருடைய‌து.ந‌ர்சிம்,ப‌ரிச‌ல் வ‌ரிசையில் இன்னுமொரு MR.CONSISTENT !

அக‌நாழிகை பொன்.வாசுதேவன்

வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளில் அதிக‌ம் தொட‌ர்புடைய‌வ‌ர் என ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்+பதிவர்.க‌தை சொல்லிக‌ளுக்கு கே.ர‌விஷ‌ங்கர் ஒரு ஆசிரிய‌ர் என்றால்,க‌விதை எழுதிக‌ளுக்கு வாசு அவ‌ர்க‌ள் ஒரு ஆசிரிய‌ர்.ப‌ல‌ ந‌ல்ல‌ த‌மிழ் வார்த்தைக‌ளை க‌ற்ப‌த‌ற்காக‌வே அவ‌ர் வ‌லைத‌ள‌த்துக்கு நான் அடிக்கடி செல்வ‌துண்டு.இவ‌ருடைய‌ "போடா ஒம்போது" க‌ட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்க‌வும்.முழுக்க‌ முழுக்க‌ அக்மார்க் த‌ர‌ம் வாய்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.

அனுஜ‌ன்யா

'க‌விதை எழுதி'க‌ளுக்கு ஒரு மான‌சீக‌ குரு.கீற்று,உயிரோசை,நவீன‌ விருட்ச‌ம் மின்னித‌ழ்க‌ளில் தொட‌ந்து இவ‌ருடைய‌ க‌விதைக‌ள் பிர‌சுர‌மாகின்ற‌ன‌.
இவ‌ருடைய‌ "ரொட்டியும் மீன்க‌ளும்" க‌விதையை ப‌டித்து உறைந்து போனேன்.நீ சிகரெட் பிடிப்பியா என்று என் பெற்றோர்கள் சந்தேகிக்குமளவுக்கு நான் உதடு கிழித்து புண்ணாக்கியதற்கு இவருடைய‌ எழுத்துக‌ளும் ஒரு காரணம்.உரைந‌டையை எப்ப‌டி சுவார‌ஸிய‌மாக‌ கையாள்வ‌து எனக் க‌ற்று கொள்ள விரும்பும் புதிய‌வ‌ர்க‌ளுக்கு நான் முத‌லில் ப‌ரிந்துரைக்கும் வ‌லைப்ப‌க்கம் அனுஜன்யா அவ‌ர்க‌ளுடைய‌தாயிருக்கும்.

சாஸ்திர‌ ச‌ம்பிர‌தாய‌ப்ப‌டி,ஆறுபேரும் த‌ங்க‌ள் அபிமான‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு இவ்விருதை ப‌கிர்ந்த‌ளிக்க‌ வேண்டுமாம்.


**************

Wednesday, July 8, 2009

உயர்ரக மந்திகள்


"இன்னிக்கும் ச‌ரியா க‌ழுவ‌ல.நேத்து சட்ட காலர்ல அழுக்கு அப்படியே இருந்துது.இன்னிக்கும் எல்லா த‌ட்டுல‌யும் கொழ‌ம்பு கற‌ ஒட்டிண்ருக்கு.ஒருநாள்,ரெண்டு நாள்னா பொறுத்துக்கலாம்.தினமுமா? இந்த‌ மாச‌ கூலிய கொடுத்துட்டு ச‌னிய‌ன‌ இதோட‌ த‌ல‌ முழுகிட‌ வேண்டிய‌து தான்" க‌ண‌வ‌னிட‌ம் பொரும ஆரம்பித்தாள் பார்வ‌தி.

"பாவம்டி அவ! அன்னிக்கே பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிட்ருந்தா.இந்த‌ நேர‌த்துல போயி அவ‌ள‌ நிப்பாட்ட‌ணும் நினைக்கிற‌து ச‌ரியாப்ப‌ட‌ல‌.உக்காத்தி வ‌ச்சி பேசிப்பாரு!! அவ‌ளுக்கு தேவையான‌த‌ செஞ்சி கொடு!!" அன‌ந்த‌ன் சொன்னதும் பார்வ‌திக்கு கொஞ்ச‌ம் விட்டுதான் பிடிக்க‌லாமென்று தோன்றிய‌து.

அன‌ந்த‌ன் பார்வ‌தி த‌ம்ப‌தியின‌ர் ஆர‌ஞ்ச் க‌வுண்டி அபார்ட்மென்டிற்கு குடிவ‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாய் வேலைக்காரி லீலா தான் அவ‌ர்க‌ளுக்கு எல்லாம்...க‌ண‌வ‌ன் உட‌னிருந்த‌ வ‌ரை ஜாம்ஜாமென்று வாழ்ந்து கொண்டிருந்த‌வ‌ள் அவ‌னை விட்டு பிரிந்த‌தும்,நூல‌றுந்த‌ ப‌ட்ட‌ம் போல‌ ஆனாள்.வ‌யிற்று பிழைப்புக்காக‌வும் வீட்டு வாட‌கைக்காக‌வும் ம‌ட்டுமில்லாம‌ல் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்து ந‌ல்ல‌ நிலைக்கு கொண்டு வ‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌ம் அவ‌ளிட‌ம் அதிக‌ம் இருந்த‌து.

"மாச‌ சம்பளத்த‌ கூட்டி கொடுத்தா எந்த‌ வேலையையும் மொகஞ்சுழிக்காம‌ செய்வா!"

பி-பிளாக் கச்சபேஸ் சொன்னபோது தான் அனந்தனுக்கு லேசாக‌ பின்ம‌ண்டையில் ச‌ப‌ல‌ம் த‌ட்டிய‌து.நேற்று ஸ்டூல் மேல் ஏறி,ப‌ர‌ணிலிருந்த‌ எலிப்பொறியை எட்டி எடுக்கும்போது, க‌றுத்த‌ தேக‌த்தில் திமிரி கொண்டிருந்த‌ அவ‌ள் அழ‌கு அன‌ந்த‌னை நிலைகுலைய‌ வைத்த‌து.இது போன்று ப‌ல‌த‌ருண‌ங்க‌ள் அன‌ந்த‌னை உசுப்பி விட‌ ஆர‌ம்பித்த‌து.வேண்டுமென்றே தான் இப்ப‌டி உடைய‌ணிகிறாளா..இல்லை செய்யும் வேலையை போன்றே துணியுடுத்துவ‌திலும் அச‌ட்டை தானா?

ப‌ல‌நாள் ப‌சிக்கு இன்று தீனி போட்டுவிட‌ வேண்டுமென முடிவு செய்தான்.வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல‌ பார்வ‌தி கதாகாலட்சேபத்துக்கு சென்றிருப்பாள்.இந்த‌ வாய்ப்பை நழுவ விட்டால் திரும்ப‌ கிடைக்காது.பெர்ச‌ன‌ல் வொர்க் என‌ மேனேஜ‌ரிட‌ம் சொல்லிவிட்டு மதியம் 2 ம‌ணிக்கே கிள‌ம்பினான்.ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்த‌து.

காலிங் பெல்லை அழுத்த‌ க‌த‌வை திறந்தது எதிர்பார்த்தபடி லீலாவே தான்.

"உட‌ம்பு ஏதும் ச‌ரியில்லீங்க‌ளாய்யா !! சீக்கிர‌ம் வ‌ந்துட்டீங்க‌" ....

"ஆமா லேசா த‌லைவ‌லி அதான்..." க‌த‌வை தாளிட்டான் அன‌ந்த‌ன்.

"இருங்க‌ய்யா நான் காபி போட்டு த‌ர்றேன்" ....லீலாவின் விய‌ர்வை வாடை அனந்தனை கிறங்கடித்தது

"உன் பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ காசு வேணும்னு சொன்ன‌ல்ல.அந்த‌ க‌றுப்பு பாலிதீன் பைக்குள்ள‌ வ‌ச்சிருக்கேன் எடுத்துக்க‌..

எனக்கு உன்ன‌ ரொம்ப‌ பிடிச்சிருக்கு லீலா..ஒரே ஒருமுறை...இன்னிக்கு ம‌ட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.உன் பைய‌ன‌ கான்வெண்ட் ஸ்கூல்ல‌ ப‌டிக்க‌ வைக்க‌ப்போறியா...இல்ல கார்ப்ப‌ரேஷ‌ன் ஸ்கூல் போதுமா?.."

பின்புற‌மிருந்து லீலாவை க‌ட்டிய‌ணைக்க‌ முய‌ன்ற‌வ‌னை ப‌டாரென்று த‌ள்ளி விட்டு,முந்தானையை சரிசெய்து கொண்டு சுவற்றில் சரிந்தாள் லீலா.அவ‌ள் கண்கள் நிறைந்திருந்தன.

அரை நிமிட சுழற்சியை சட்டென நிறைவு செய்தது கடிகாரம்.

பெறும் கதறலுக்கு பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு "வேணாம்யா...இந்த‌ அபார்ட்மென்ட் க‌ட்ட‌ற‌ நேர‌ம் இங்க‌ எல‌க்ட்ரீசிய‌ன் வேலைக்கு வ‌ந்த‌ புருசன் ஒரு சித்தாள் பொம்ப‌ள‌ கூட இருந்த‌ தொட‌ர்பால‌ தான், நான் இப்ப‌ ப‌த்து பாத்திர‌ம் தேய்க்க‌ வந்துருக்கேன்.எம்புள்ளைங்க‌ இன்னிக்கு அர‌வ‌யிறு காவ‌யிறு க‌ஞ்சிக்கும் க‌ஷ்ட‌ப்ப‌டுது.அந்த‌ நெல‌ம‌‌ பார்வ‌தி அம்மாவுக்கும் வ‌ர‌க்கூடாது.கிழிஞ்ச‌ சேலையோட‌ வ‌ந்த‌ நான் இன்னிக்கு க‌ட்டிட்ருக்க‌து அவ‌ங்க‌ளோட‌ சேலையத்தான்.என்கிட்ட‌ மிச்ச‌மிருக்கறது இது ஒன்னுதான்யா..என்ன‌ விட்ருங்க‌..நாளையிலிருந்து நான் வ‌ர‌ மாட்டேன்." க‌ண்ணீரை துடைத்து கொண்டு வெளியேறினாள்.

"காய‌வ‌ச்ச‌ துணியெல்லாம் மழையில நனைஞ்சிண்டுருக்கு..பாருங்க‌!!
இன்னிக்கும் துணிய‌ எடுக்காம‌ போயிட்டாளா?" த‌லையை துவ‌ட்டி கொண்டே வ‌ந்த பார்வ‌தியிட‌ம், "ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."


*******************************

Sunday, July 5, 2009

மேகங்கள் திரட்டுவது நீ !


பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.

விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து விடும்
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.

வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.


************

பி.கு: பூனேவில் ம‌ழைக்கால‌ம் என்ப‌தால்
எந்த‌ ச‌ம்ப‌ந்தமோ காரணமோ இன்றி ( குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )
ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.

**********************

Thursday, July 2, 2009

கறையான்கள் அரித்த மீதிக்கதவுகள்



கட‌ந்து செல்லும் ம‌னித‌ர்க‌ளின் சூட்டை நுக‌ரும் திற‌ந்த‌ க‌த‌வுக‌ளைக் காட்டிலும்,மூடிய க‌த‌வுக‌ள் கொஞ்ச‌ம் அனுபவ‌சாலிக‌ள்.அந்த‌ இடைவெளி ச‌ர்விலிய‌ன்ஸ் கேமிரா பொருத்த‌ப்ப‌ட்ட‌ அபார்ட்மென்ட் க‌த‌வுக‌ளுக்கும், திறந்த‌வெளி கிராம‌த்து திண்ணை வீட்டு க‌த‌வுக‌ளுக்குமான அனுப‌வ‌ இடைவெளி.அடைமழை காலங்களில் விடுமுறை அறிவித்து பூட்டப்படும் பள்ளிக்கூடத்து கதவுகள் திடீர் மகிழ்ச்சியையும்,எதிர்பார்த்து சென்ற நண்பன் வீட்டு பூட்டிய கதவுகள் ஏமாற்றத்தையும் தரவல்லவை.

மூடிய வீட்டின் க‌த‌வுக‌ளை பார்க்கும் போது ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ள் அலாதியான‌வை..உள்ளே காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,கம்பளங்கள் விரிக்கப்பட்டு,மர வேலைப்பாடுகளோடும் அழகூட்டப்பட்டிருமா அல்லது விரிசல்கள் படர்ந்து உள்ளே பாம்பு,பூரான்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்குமா? ஒளிந்திருப்பது ஆடம்பரமா? ஏழ்மையா? உள்ளிருக்கும் அறைக‌ள் முழுவதும் சில‌ந்தி வ‌லை பின்ன‌ப்ப‌ட்டு பாழ‌டைந்த‌ தோற்ற‌ம் உருவாகியிருக்குமா? நிரந்தரமாக பூட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளின் பின் வாழும் சுவ‌ர்க‌ளின் நிலைமை என்ன‌வாகி போயிருக்கும்? த‌ங்க‌ளுக்குள் பேசி கொண்டு அச்சுவர்கள் ச‌க‌ஜ‌பாவ‌ங்க‌ளை க‌ற்று கொண்டிருக்குமா? அல்லது தம்மோடு ஒன்றிப்போயிருக்கும் ப‌ல்லிக‌ளின் இச்சைக‌ளை பார்த்து முக‌ம் சுளிக்க‌ தொட‌ங்கியிருக்குமா? என்றெல்லாம் ஆர்வமிகுதியில் நிறைய கேள்விகள் எழுவதுண்டு.

'பூட்டிய வீட்டை பார்த்தால் உனக்கு என்ன தோன்றும்' என்று அலைபேசியில் தோழியிடம் கேட்டால் 'ம்ம்ம்...பயம்ம்மாயிருக்கும்' என்று மிரட்சியோடு பதில் சொல்வாள்.பூட்டிய வீட்டிற்கும் அவளுக்குமான சம்பந்தம் நிறைய பேய்க்கனவுகளில் தோன்றியதாக‌ குற்றம் சாட்டுவாள்.பார்த்து பார்த்து மரத்தையும் வர்ணப்பூச்சுகளையும் தேர்வு செய்து அரிதின் முயன்று இழைத்த கதவுகளை,ஏதோ ஒரு காலசூழ்நிலை கறையான்களுக்கு உணவாகவும்,குழந்தைகளை பயமுறுத்த காட்சி பொருளாகவும் ஆக்கி விடுகிறது.

வண்ணவிளக்குகளின் வெளிச்சத்தில் சிரித்து கொண்டிருக்கும் தோரணங்கள் கட்டப்பட்ட‌ கல்யாண‌ வீடுகளை விட,முட்செடிகளால் சூழப்பட்ட‌ இருளில் பூட்டப்பட்ட கதவுகளின் ஈர்ப்பு அதிகம்.நிரந்தரமாக பூட்டப்படும் கதவுகளை விட,தற்காலிக பூட்டப்படுதல்கள் தான் கள்வர்களின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இரவுகளில் 'அந்த மாதிரி' இத்யாதிகள்லாம் நடக்குதாம்' என்பன போன்ற அவதூறு குற்றச்சாட்டுகளில் ஆரம்பித்து,'அந்த‌ வீட்டுல‌ தான் ஒரு பொண்ணு தூக்கு போட்டு தொங்குச்சாம்' ரீதியிலான‌ திகில் க‌தைக‌ள் வ‌ரை அனைத்து வ‌சைக‌ளையும் பூட்டிய‌ வீட்டின் காதுக‌ளாக‌ அந்த‌ க‌த‌வுக‌ள் கேட்டு கொண்டுதானிருக்கின்ற‌ன‌.

தேக்கு,ரோஸ்வுட் என்று இழைத்து இழைத்து க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளை க‌ன‌த்த‌ பூட்டுக‌ள் எப்போதுமே அல‌ங்க‌ரிப்ப‌தில்லை.கதவுகளை வடிவமைக்கும் போது,பூட்டுகளை பற்றி யாரும் ஏன் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை என்று கூட‌ சில‌நேர‌ங்க‌ளில் நினைக்க‌த் தோன்றும்.

மூடிய‌ க‌த‌வுக‌ள் எங்கோ ஓரிட‌த்தில் யாரோ ஒருவ‌ரின் சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை மெள‌ன‌மாக‌ அறிவித்து கொண்டிருக்கின்ற‌ன‌.இரவோடு இரவாக காலிசெய்த காதலி வீட்டு கதவுகள் பிரிவின் உச்சத்தை உரக்க சொல்லி கொண்டிருக்கின்றன.மனிதர்கள் இல்லா வெற்றிடத்தை அஃறிணை பொருட்கள் நிரப்ப முயன்று தோற்றிருக்கலாம்.மின்விசிறிகள் அணைக்கப்பட்டு,சில நினைவுகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கலாம்.திறக்கப்படாமலே இருக்கும் பல கதவுகள் பின்னாளில் தத்தம் முகவரிகளை மறந்து போகலாம். சாலையில் போவோர் வருவோரையும்,பாராமுகமாய் செல்லும் தபால்காரரின் சைக்கிள் பெல்லையும் ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கலாம்.இரவுக்கும் பகலுக்குமான சுழற்சி,பூட்டிய வீடுகளுக்கு எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.கிழிக்கப்படாத திகதிகள்,உலகம் தற்காலிமாக எந்த ஒரு சலனமுமற்று நின்று போனதாக உள்ளிருக்கும் பொருட்க‌ள் நினைக்கக் கூடும்.

பூட்டிய கதவுகளுக்கும் தனிமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.ஏதோ ஒரு மொழி நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் சிறை வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.இருள் க‌ப்பிய‌ அந்த‌ சுவ‌ர்க‌ளின் மேல் வெறுமையின் கிறுக்க‌ல்க‌ள் ப‌ட‌ர்ந்திருக்க‌லாம்.பொருள் பொதிந்த‌ மெள‌ன‌ங்களையும் சோகங்களையும் சும‌ந்து கொண்டு வெளியே சிரித்துகொண்டுதானிருக்கின்ற‌ன‌ பூட்டிய‌ வீட்டின் க‌த‌வுக‌ள்.

**********************

Tuesday, June 23, 2009

கொள்ளை-காரி



வழமையாய் சன்னல் தேடி வரும்
அடர்வெளிர் நிற பறவையொன்று
அதன் வெண்மையை இழந்திருந்தது;
மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட
டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;
கார்மேகங்களும் மெல்லிய மழைத்தூறல்களும்
வருகைப் பதிவேட்டில் காணாமற்போயிருந்தன;
சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை
இன்று பெருமளவு குறைந்திருந்தது;
சிறுகுழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக
செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன;
இரவோடு இரவாக பாணிபூரி
கடைகள் மாயமாகி போயின;
மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக
மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;
சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.


23-6-2009 கீற்று மின்னித‌ழில் பிர‌சுர‌மான‌து.

****************

Wednesday, June 17, 2009

அபுஅஃப்ஸருக்கு பெண்குழந்தை



பின்னூட்ட சுனாமி,கும்மி பினாமி,சிறுகதைப்புயல்,கவி காளமேகம்,நட்பிலக்கணம் இளைய தளபதி அண்ணன் மாலிக் என்கிற பிரபல பதிவராகிய‌
ந‌ம் அபுஅஃப்ஸருக்கு,இன்று மதியம் 2.30 மணியளவில் பெண்குழந்தை பிறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.தாயும் சேயும் பூரண நலத்துடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார்.

மீண்டுமொருமுறை "அபு" வாகியிருக்கும் மாலிக் அவர்களை வாழ்த்தி, குழந்தை செல்வங்களோடு வளமான வாழ்வு வாழ இறைவனை இறைஞ்சுவோமாக.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, வாழ்த்தும் அனைத்தும் நல்ல உள்ளங்களுக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி ஒன்றில் மாபெரும் விருந்தை அபு ஏற்பாடு செய்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, June 10, 2009

ஜூன்-10 சில‌ ஞாப‌க‌ குறிப்புக‌ள்


வேலை கிடைத்து பெங்களூருக்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மாலை நீ அனுப்பிய "ஹேப்பி ஜெர்னி" குறுந்தகவலில் ஆரம்பித்தது நமக்கே நமக்கான வாழ்க்கை.கடல்கடந்து ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் இருந்தாலும் நிச்சயம் உனக்கு இன்று என் நினைவு வரும்.நாம் இருவரும் முதன்முறையாக வார்த்தைகளை பரிமாறி கொண்ட நாள் இன்று..

ஜூன் 10


கல்லூரி முடிந்த கோடைகால விடுமுறை நாளிரவொன்றில்,தூரத்து சொந்தமென்று உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.சிவப்பு நிற சுடிதாரில் எங்கள் அசாதாரண பார்வைக்கு 90 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தாய்.இரண்டு நாட்கள் நம் உறவினர்கள்,கலகலப்பு,கலாய்ப்புகள் என என் வீட்டில் நீ தங்கியிருந்த பொழுதுகளில் உன் துபாய் தனிமை காணாமல் போனதாக என் அம்மாவிடம் சொன்னதாக நினைவிருக்கிறது. என்னிடம் கடைசி வரை பேசவேயில்லை.கிளம்பும் சமயம் லேசாக‌ புன்ன‌கைத்து ம‌ட்டும் வைத்தாய்.

"போய் க‌ண்ணாடில‌ உங்க‌ ஃபேஸ‌ பாருங்க‌ பாஸூ..அந்த‌ பொண்ணு ரேஞ்சே வேற‌..அதெல்லாம் உங்க‌ள‌ போயி.." என்ற‌ நண்ப‌னிட‌ம் "க‌ண்டிப்பா இவ‌ வீட்டில‌ இன்னிக்கு போயி என்ன‌ ப‌த்தி அட்லீஸ்ட் 0.00002% ஆவ‌து யோசிப்பாடா" என்று ச‌வால் விட்டேன்.அத‌ற்கு முன்பே குறுந்த‌க‌வலில் நாம் மேக‌ங்க‌ளை திர‌ட்ட‌ ஆர‌ம்பித்திருந்தோம்.சொல்லுங்க‌'லிருந்து ஆர‌ம்பித்து 'சொல்லுடா'வ‌ரை ம‌ழை தூர‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

வெளிநாட்டில் இருக்கும் அம்மாவை பிரிந்திருந்ததால்,சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்.நேரடியாக உன் காதலை நான் அக்கணம் நிராகரித்தாலும்,"உன்னோட சிம்பிளிசிட்டி பிடிச்சிருக்குடா","இப்பல்லாம் நாள் ஃபுல்லா உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிறேன்" "உன் குரல கேக்கணும் போல இருந்துது" இந்த வார்த்தைகளை கேட்கும் தருணமெல்லாம் என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.

உனக்கு பிடித்த ஜெலோவின் "If you had my love" எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது.பரப்பான காலைப் பொழுதொன்றில் அலுவலக பேருந்தில் ஐபாடை காதிலிருந்து எடுக்காமல்,குறுந்தகவலில் நான் உன்னை ஏற்று கொண்ட போது,எவ்வித ஆடம்பரமும் சலனமும் இல்லாமல் "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் என்னைத் தழுவி கொண்டாய்.நீ என் சொந்தம் என்று முடிவான அந்த தினம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் உணர்ந்தோம்.சரியாக நான்கு நாட்கள் கழித்து உன் பிறந்த நாள் முன்னிரவில்,நான் அழைக்காமல் மறந்து விடுவேனோ என்று நீ தவித்த தவிப்பை, ரிசீவரை பிடிங்கி, உன் பக்கத்து வீட்டு தோழி என்னிடம் முறையிட்ட போது,நான் அடைந்த மகிழ்ச்சியை உன்னிடம் சொல்ல வார்த்தைகளற்று போனேன்.

மீனம்பாக்கம் ரயில் நிலையம் நினைவிருக்கிறதா?? பல லட்சம் தேவதைகளின் அழகை கண்களில் கடத்தி வந்த‌ ஒரு பெண்ணை முதன் முதலாக நான் சந்தித்தது அங்கு தான். வெகுநேரம் பேசாமல் கைக‌ளை ம‌ட்டும் பிடித்து கொண்டு அம‌ர்ந்திருப்போமே!!.சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இமைக்கும் நேரத்தில் நீ தந்த முதல் முத்தம்,இன்றும் மின்னல் வெட்டியதை போல் கண்முன் வந்து போகிறது.அன்று நீ என் கன்னங்களை ஈரமாக்கிய நினைவுகள்,இன்று என் கண்களை மட்டும் ஈரமாக்குகிறது.இப்போதெல்லாம் பல்லாவரம் ஸ்டேஷன் கடக்கும் போது மட்டும் கண்களை இறுக மூடிக்கொள்வதும்,பிறகு மனசு கேட்காமல் சன்னல் கம்பிகளினூடே எட்டி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

நள்ளிரவு மொட்டைமாடி அலைபேசி பேச்சுகளுக்கு பிற‌கு உன் அருகாமையை அதிகம் பெற்றது அடையாறு பூங்காவில்.உன் மடியில் கண்ணயர முயலும் போது,தலைமுடியை கலைத்து விட்டு "இப்பதான்டா நீ அழகா இருக்க" என்று என்னையும் சேர்த்து கலைத்தாய்."மான்கள் குறுக்கிடும் பார்த்து செல்லவும்" அறிவுப் பலகையை பார்த்து விட்டு நான் மான்களை பார்த்தே ஆக‌ வேண்டும் என்று நீ அடம் பிடிக்க அடையாறிலிருந்து கிண்டி வரை உன் கைகோர்த்து நடந்தது எப்படி மறக்க முடியும்?!!அந்த மாலைப்பொழுதுகள் தான் எவ்வளவு அழகு !!

காதலிக்க ஆரம்பிக்குமுன்னே எதிர்ப்புகளை சந்தித்தது நாமாக தானிருப்போம்.கேலி பேசிய சுற்றத்தாரின் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நீ என் மீது வைத்த உறுதியான ந‌ம்பிக்கையும் காத‌லும்.எதிர்த்தவர்கள் தர்க்கம் செய்ய திராணியற்று போயினர்.அந்த பிரச்சினைகளுக்கு பிறகு நாம் சந்திப்பது ஆபூர்வமாகிப் போனது.ஒரே ஒரு மின்னஞ்சல் கணக்கை மட்டும் உருவாக்கி இருவரும் பயன்படுத்த தொடங்கியது அப்போது தான்.இப்போது நீ அதை பயன்படுத்துவதில்லை என நினைக்கிறேன்.உனக்காக நான் எழுதிய (முதல்) மழை கவிதை தனியாக ஒரு ஃபோல்டரில் அழிக்கப்படாமல் இருக்கிறது.மை டியர் ஹஸ்பெண்ட் என்று ஆரம்பிக்கும் அனைத்து ரோஜாப்பூ மின்னஞ்சல்களையும்,உன் உம்மாக்களையும் என்ன காரணத்திற்காகவோ தினமும் படித்து கொண்டிருக்கிறேன்.நீ அழுது எழுதிய அந்த கடைசி பத்து கடிதங்களையும் சேர்த்து தான்.

அதே கிண்டி ரயில் நிலையம் நாம் கடைசியாக சந்தித்த இடம் நினைவிருக்கிற‌தா?.அதோடு பிரியப்போகிறோம் என்று தெரிந்தோ தெரியாமல் என் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டு "நீ எனக்கு வேணுன்டா" என்று நீ அழுதது இன்னும் நினைவுக‌ளை விட்டு அக‌ல‌ ம‌றுக்கிற‌து.

அத‌ன்பிற‌கு,நாம் வேறோடு பிடுங்க‌ப்ப‌ட்டு,வெவ்வேறு தேச‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌ட்டோம்.நீ இப்போது எங்கே எப்ப‌டி இருக்கிறாய் என்ற தகவல் தெரியாமலும் உன் குரலை கேட்காமலும் நாட்கள் நரகமாய் நகர்கின்றன.சிக‌ப்பு க‌ற்க‌ள் ப‌தித்த‌ உன் வ‌ளைய‌லும்,உன் புகைப்ப‌ட‌மும் இன்னும் என்னிட‌ம் ப‌த்திர‌மாக‌ இருக்கின்ற‌ன‌.இப்போதெல்லாம் முன்பேவா பாட‌ல் வ‌ரும் போதெல்லாம் தொலைக்காட்சியை அணைத்து விடுகிறேன்.

எவ்வளவு முயன்றாலும் இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை.என்றோ ஒருநாள் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இக்கடிதம் உன் கண்ணில் படக்கூடும்.அப்போது நாம் வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உன் மனதில் எழும்.அந்த ஒரு நிமிடம் நீ சிந்த‌ப்போகும் ஒற்றை க‌ண்ணீர்த்துளி நிச்சயம் சொல்லும் இன்னும் உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த பழைய காதல் ஒட்டி கொண்டிருப்பதாய்.

"நான் போத்தீஸ்ல‌ இருக்கேன்.என்ன‌ க‌ல‌ர் சுடிதார் எடுக்க‌ட்டும்..சீக்கிர‌ம் சொல்டா" என்று என்னை தொந்த‌ர‌வு செய்ய‌வும்,"உன்ன நான் யாருக்கும் தரமாட்டேன்.நீ எனக்கு மட்டுந்தான்" என்று உரிமையோடு ச‌ண்டை போட‌வும்,எனக்காக அழவும் இங்க யாரும் கிடையாது.நீ என் த‌லைமுடிய க‌லைக்கணும்.ஒரேயொருமுறை உன் கூட‌ சண்ட போடணும்.நீ என்ன பொறுக்கின்னு கூப்புடறத கேக்கணும்.ஒரேயொரு முறை உன் கைய பிடிச்சிக்கணும்.இதெல்லாம் திரும்பவும் நடக்குமா?"..


*******************************

Wednesday, May 27, 2009

யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!

ந‌ம்மைப் புர‌ட்டி போட்டு,க‌ச‌க்கி க‌ந்த‌லாக்கும் வாழ்வு தான் தின‌ம் தின‌ம்.

நேற்றைய நற்பொழுதுகள் மறக்கப்பட்டு, நாளைய‌ க‌ன‌வுக‌ள் சிதைக்க‌ப்ப‌டும் எதிர்பாராமையை எதிர்கொள்ளும் ச‌வால்களுமே அதிக‌ம்.ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து.நிற‌ம்,தோற்ற‌ம்,உய‌ரம் போன்ற‌ அளவைகள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மை காத‌லிக்க‌ குறைந்த பட்ச தகுதிகளாக‌ நாமே நிர்ண‌யித்து கொள்த‌லில் ஏமாற்றங்கள் ம‌ட்டுமே மிஞ்சுகின்ற‌ன‌.திருமணத்திற்கு பிறகு தோன்றும் காதலை "பெற்றவை"களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.அங்கே பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன.எல்லா அடைப்புக‌ளையும் மீறி, நமக்கே தெரியாம‌ல் என்றோ ஒருநாள் நமக்கு ஆதரவாக காதல் பிறந்திருக்கும்..நாமும் பல தருணங்களில் காதலிக்கப்பட்டிருப்போம்.காத‌லிக்க‌ப்ப‌ட்டு கொண்டிருக்கிறோம்.

எங்கே எப்போது ??? ......இருக்க‌லாம்......

பேருந்து நிழ‌ற்குடையிலும் டீக்க‌டையிலும் ஒதுங்கி நிற்போர் கண்கள் விரிய‌, சுஜாதாவையும் செல்போனையும் பாலிதீனில் வைத்து நீர்புகா வ‌ண்ண‌ம் இறுக‌ க‌ட்டி கொண்டு,குடையை மடக்கி வைத்து விட்டு,கொட்டும் ம‌ழையில் அம்மா சொல்லியும் கேட்காமல் சேற்றில் ந‌ட‌ந்த‌ "சொத‌க்" "சொத‌க்" க‌ண‌ங்க‌ளிலா...

வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...

ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....

மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!

அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடுதிரும்பும் மாலைப் பொழுதுகளில், முகத்தில் புழுதி வாரியிறைப்பதையும் பொருட்படுத்தாது,சட்டை கைகளை மடக்கி வைத்து விட்டு, சாலையோர‌ சிறுவர்களுடன் கால்பந்து ஆடி களித்தோமே....! அப்போது மளிகை கடையோடு கூடிய அந்த மாடி வீட்டு மயிலொருத்தி சன்னலோரத்தில் நின்று,ஓரக்கண்ணால உங்களை சைட்டிருக்கலாமே !!! அந்த அந்தி நேர பொழுது சாயுதல்களிலா.......

சாலையில் சிதறி கிடக்கும் பூக்களையும் சிதறாமல் விரிக்கப்பட்டிருக்கும் கோலங்களையும் மிதித்து விடுவோமோ என்ற பிரக்ஞையில், தாவி தாவி நடக்கும் மார்கழி மாத பனித்துளி முகத்தில் சொட்டும் வைகறைகளிலா...!!

உறவு வீட்டு திருமணமொன்றில், ஓடியாடி வேலைபார்த்து,வந்த சுற்றங்களுக்கெல்லாம் உணவு பரிமாறி,கடைசியில் இருக்கும் மிச்சமீதியை பரிமாறக் கூட ஆள் இன்றி,க‌ளைப்புட‌ன் விய‌ர்வை வ‌ழிய‌ அம‌ர்ந்து,ந‌ம‌க்காக‌ நாமே கிழிந்த இலை விரித்து சாப்பிட முயலும்போது,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

இருக்கலாம்....

பல தருணங்களில் நாம் கவனித்திருக்க மாட்டோம் நம்மை யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று.

வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.

வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!

*******************

Sunday, May 17, 2009

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்



பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில்,பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல்,ஷேர் ஆட்டோக்க‌ளை நாடும் கணவான்கள்,குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன் மற்றும் வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.

ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும் நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.

இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மி(மு)னிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.

இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ தவுலத்தாக‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.

ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.

இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்?

அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் மட்டுமே.

சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு,
கழிப்பறையில் அமர்ந்த வண்ணம் கனநேரத்தில் யோசித்து எழுதிய இக்கவுஜையை அர்ப்பணிக்கிறேன்.

தட தட சத்தமும்
வியர்வை கலந்த டீசல் வாடையும்
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"


மத்தியதர வர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.

******************************************************************

Monday, May 11, 2009

சில்லறை சித்தாந்தம் !


எப்போது ஆரம்பிக்கும் என்று
அவனுக்கு தெரியவே தெரியாது.

விவரம் தெரிந்த நாளிலிருந்தோ
பொம்மைகளினூடோ
புத்தகப் பையிலோ
பக்கத்து வீட்டு பெண்ணிலோ
வளையல் துண்டுகளிலோ
அலுவலகத்திலோ
படுக்கையிலோ
கனவிலோ
ஏதேனுமொன்றை
தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.

அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.



Wednesday, May 6, 2009

இஸ்லாத்திலும் சாதிகளை புகுத்தாதீர் !!

முஸ்லிம் அல்லாத‌ சகோதரர்கள் மட்டுமின்றி, இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினாலும் இவ்விஷயத்திற்கு நல்லதொரு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மட்டுமே இப்பதிவை எழுதுகிறேன்.

இதை ஒரு பிரச்சார மற்றும் ஒருதலை பட்சமான பதிவு என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.மற்றபடி, "இது ஒரு நல்ல ஆஃபர். அனைவரும் வாங்கி பயனடைவீர்" என்று அறிவிக்க என் வலைப்பூ விளம்பர தளம் அல்ல.

**********************************************************************

ஓரிறை,ஓர் வேத‌ம் என‌ ஏக‌த்துவ‌த்தை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஏன் ஹ‌ன‌பி,ஷாபி(இந்தியாவில்), ச‌ன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக‌ பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ பிரிவினைக‌ளை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா ?? இஸ்லாத்தில் சாதீய‌ம் என்ற‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌தா ??

இதற்கு பதில் "நிச்ச‌ய‌மாக‌ இல்லை" என்ப‌தே.மேலும் இந்த‌ நெறிமுறைக‌ளின் வீரிய‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்.

இத‌ற்கான‌ ஆணித்த‌ர‌மான‌ விடை குர்ஆனில் இருக்கிறது.

"நிச்ச‌ய‌மாக‌ எவ‌ர் த‌ம்முடைய‌ மார்க்க‌த்தை ( த‌ம் விருப்ப‌ப்ப‌டி ப‌ல‌வாறாக‌ப் பிரித்து) ப‌ல‌ குழுக்க‌ளாக‌ பிரிந்து விட்ட‌ன‌ரோ அவ‌ர்க‌ளுட‌ன் (ந‌பியே !) உம‌க்கு எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌முமில்லை;அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்."

6:159 ஸூர‌த்துல் அன் ஆம்.

மேலும் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ன‌து ச‌ந்த‌தியின‌ர் 72 பிரிவுக‌ளாக‌ பிரிந்து பிள‌வுப‌டுவார்க‌ள் என‌ க‌ணித்துள்ளார்.அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌ நெருப்பில் விழ‌க் க‌ட‌வ‌து என‌வும் ச‌பித்துள்ளார்க‌ள்.இவைகள் மட்டுமின்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.

இந்த மத்ஹபுகள் குறித்து ஒரே பதிவில் எழுதுவதென்பது இயலாத காரியம்.
சுருங்கக் கூறின், இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நீட்சியான ஃபிக்ஹு என்னும் சட்டத்தை நான்கு பிரிவுகளாக நான்கு இமாம்கள் உருவாக்கினர்.இமாம் ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி இந்த நான்கும் சன்னி பள்ளியின் கீழடங்கும் சட்டங்கள்..இந்த மத்ஹபுகளை பின்பற்றுவர்கள் நாளடைவில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வழக்கம் போல, குழுமனப்பான்மைக்கே உரிய நடவடிக்கைகளில் இரங்க ஆரம்பித்து விட்டனர்.

சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.

இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன..மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து.

ஆக‌வே,இஸ்லாம் என்ற‌ ஒரு மார்க்க‌த்தில் பிரிவினைக‌ளும் ஏற்ற‌த்தாழ்வுக‌ளும் இல்லை.சாதிக‌ளோ குழுக்க‌ளோ இல்லை.

யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து ம‌ஸ்ஜிதில் தொழ‌லாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.

குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்தான் தொழுகை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ற உய‌ர்சாதிய‌ கோட்பாடுக‌ள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட‌ யாராக இருந்தாலும் ( விஷ‌ய‌ம் தெரிந்திருக்கும் ப‌ட்ச‌த்தில் ) ம‌றுக‌ண‌மே தொழுகை ந‌ட‌த்த‌லாம்.

மேற்கூறிய ச‌ன்னி,ஷியா,மாலிகி போன்ற‌வை வெறும் கொள்கைக‌ளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களே அன்றி அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது.

மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைக‌ள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.

ஒலிம்பிக்கில் த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் வாங்கிய‌ போது க‌ருப்ப‌ர் என்ற நிற‌வெறியின் கார‌ண‌மாக அமெரிக்க அரசால் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்ட குத்துச்சண்டை வீரர் கேஸிய‌ஸ் கிளே, ஓக்லஹாமா ந‌தியில் த‌ன‌து ப‌த‌க்க‌த்தை தூக்கி வீசிவிட்டு பிற்கால‌த்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு கார‌ண‌ங்க‌ள் இல்லாம‌லில்லை.


*****************************

Tuesday, April 28, 2009

இளமை விகடனில் எனது சிறுகதை


நேற்று காலை நான் பதிவிட்ட "உச்சத்தை தொட்ட தினம்" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.

படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.நன்றி விகடன் !!!!

பதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள்.
குறையொன்றுமில்லை.

Sunday, April 5, 2009

அந்த முதல் சந்திப்பு பாகம்-2



பாக‌ம்-1 ப‌டிக்க இங்கே சொடுக்குக !!!!

மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.

முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.

ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!

நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.

வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.

"வ‌ந்து ரொம்ப‌ நேர‌ம் ஆச்சா ??" நான்.

"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌" அவள்.

விடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின் தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....

அன்று சனிக்கிழமை மதிய நேரமாக‌ இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.

அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.

காத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.

ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.

கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.

முதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்த‌தை நினைவூட்டினேன்.

"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.."

"ப்ளீஸ்..ப்ளீஸ்..என‌க்காக‌ ஒருமுறை"

"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."


வடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த செய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."


( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)

Tuesday, March 17, 2009

சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ??

"இந்துக்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.மற்ற அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்"என்று தேர்தல் களத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வருண்காந்தி.

இதற்கு பா.ஜ.க வே அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

அவ‌ர‌து பேச்சுக்க‌ள் அட‌ங்கிய‌ வீடியோ சிடி ந‌ம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வ‌சூலில் சாத‌னை ப‌டைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,இந்த‌ செய்தி மிகைப்ப‌டுத்தப் ப‌ட்டிருக்கிறது என்றும் நான் அதில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே இல்லையே எனவும் பல‌ காமெடி ஜ‌கா வாங்கியிருக்கிறார் வ‌ருண்.

தேர்த‌ல் விதிமுறைக‌ளை மீறிய‌த‌ற்காக‌, அவ‌ர் மீது கிரிமின‌ல் வழ‌க்கு தொட‌ர‌, தேர்த‌ல் ஆணைய‌ம்,உத்திர‌ பிர‌தேச தேர்த‌ல் ஆணைய‌த்திட‌ம் ப‌ரிந்துரைத்திருக்கிற‌து.

அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.

இன்னும் என்னென்ன‌ கூத்துக்க‌ள் ந‌ட‌க்க‌விருக்கின்ற‌ன‌வோ !!!! பொறுத்திருந்து பார்ப்போம்.

வ‌ருணிட‌ம் ஒரே ஒரு கேள்வி: ச‌ரிங்க‌ண்ணா...இந்துக்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ம‌ய‌த்தனைவ‌ரையும் இந்தியாவை விட்டு வெளியேற்றி விட‌லாம்.

அப்ப‌டியானால், அக‌ர‌ ( ஆங்கில )வ‌ரிசைப்ப‌டி, முத‌லில் அப்துல் கலாமையும், பிற‌கு அல்லா ர‌க்கா ர‌ஹ்மானையும் வெளியேற்றுவீர்க‌ளா ??

சொல்லுங்க‌ எச‌மான்..சொல்லுங்க‌...

Wednesday, March 4, 2009

கண்டினியுட்டி இல்லா கவிதை......

முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..

உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் ப‌த்திர‌மாக‌
ப‌த‌ப்படுத்திக் கொள்ள‌
மீண்டும் மீண்டும் முய‌ன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.

கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்
அந்த ஒற்றை இரவில்...

அவ‌ள் அழுகை
ச‌த்த‌மாக சிரிக்கத் தொட‌ங்கிய‌து
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.

'எங்கிருந்தாலும் வாழ்க' வென‌
விய‌ங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க‌ இல‌க்க‌ண‌ம் ம‌ற‌ந்துபோன‌து
இருவரின் மொழியிலும்.

பெருங்கூச்சலிட்ட நிசப்த‌
சாரீரங்களை கொண்ட‌
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.



*******************************

Friday, February 20, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

"தமிழ் கோனாறுகளோ காயிலாங்கடையில்....

மனப்பாடம் செய்த செய்யுட்களோ மறதிக்கிரையாய்...

அகநானூறும் புறநானூறும் அவுட் ஆஃப் ஃபோகஸில்..."


இந்த வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர்பதிவுக்கு நம்ம ரம்யா டீச்சர் அழைத்ததிலிருந்து,இப்படித்தான் ஆயிட்டேன்.சரி டீச்சர் செய்ய சொன்னா அது ஹோம் வொர்க் மாதிரி..செஞ்சே ஆகணுமா இல்லையா...??



உலக பொருளாதார பெருமந்தத்தின் விளைவாக,பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சராசரி குடிமகனும் தன்னுடைய அடிப்படை செலவீனங்களை குறைத்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.எனவே நாம் உபயோகிக்கும் வார்த்தைகளையும் சற்றே குறைத்து கொள்வதில் யாதொரு தவறுமில்லை என்று ( நான் மட்டுமே ) கருதியதால்,நீங்கள் தமிழை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள ஓரெழுத்து தமிழ் சொற்களை மட்டும் இங்கே பார்வைக்கு வைக்கலாம் என முடிவு செய்தேன்.

ஓரெழுத்து சொற்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரியது என்பது என்னுடைய‌ அனுமானம்.( இது போன்ற ஓரெழுத்து வார்த்தைகளைக் கொண்ட பிற மொழிகள் உங்களுக்கு தெரிந்திருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் )

-பசு ( '' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )

-பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

சோ-மதில்,அரண்

-இறைச்சி, உணவு

-அழகு, ஐந்து, ஐயம் ( "ஐயா..எனக்கொரு டவுட்டு" என்பதற்கு பதிலாக "ஐயா எனக்கொரு " என இனிமேல் கேட்கலாமா ?? )

-சென்று தாக்குதல்

மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ -மேலே, ஆகாயம், உயர்வு

மூ -மூப்பு (முதுமை), மூன்று

மே -மேல், மேன்மை

மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு

மோ -முகர்தல்

கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம் ("உன் பேச்சு கா" என்று நாம் சொல்வதின் பொருள் விளங்குகிறதா ? )

கூ - பூமி , கூவு

கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)

இன்னும் எண்ணற்ற ஓரெழுத்து தமிழ் சொற்கள் கைவசமிருக்கின்றன..தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )

விதிப்படி 3 பேரை கொக்கி போட வேண்டும்.எனவே மூவரை கொக்கி போட்டு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.மூவருக்கும் ஏழு திங்கள் ( ஒன் வீக் ) கெடு விதிக்கப்படுகிறது.கொடுத்த கால அவகாசத்திற்குள் கடமையைச் செய்ய தவறினால் "பிம்பிலிக்கி பிலாபி" போன்ற பல அரிய தமிழ் சொற்களை வைத்து,ஒரு செய்யுள் இயற்றச் சொல்லி துன்புறுத்தப்படுவார்கள் என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

1.அன்புடன் வாலு என்கிற டொக்டர் வால்ஸ்

2. நசரேயன் என்கிற சாக்ரட்டீஸ் ( பதிவு போட்டா பின்னூட்டத்தில ஓவரா கேள்வி கேக்குறதினால இந்த 'வலையுலக சாக்ரட்டீஸ்' பட்டம்.இந்த பட்டத்த நம்ம நிஜமா நல்லவரோட சேர்ந்து சண்ட போடாம ஓரமா போயி பிச்சிக்கிங்க.. )

3.தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.

டிஸ்கி: ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட பலரால் தொடர்பதிவுக்கு அழைக்கப்பட்டு, இன்னும் கொடுத்த ஹோம்வொர்கை நிறைவு செய்யாமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருக்கும் சான்றோர் பெருமக்கள்.

* அபுஅஃப்ஸர்
* வால்பையன்
* ஜமால் காக்கா


( பள்ளிக் காலங்களில் நாந்தான் ரெப்பு என்கிற பராக்கிரமத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.)

Tuesday, February 17, 2009

அந்த முதல் சந்திப்பு

"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"


எல்லா காதலர்களின் முதல் சந்திப்புமே இது போன்ற ஏக்கப் பிரகடனங்களில் தான் ஆரம்பிக்கும்.நாங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.

இடம்:ஆள் அரவம் அதிகம் இல்லா ஒரு ரயில் நிலையம்.
நேரம்: மதியம் 1.30 முதல் கெஞ்சல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை.

அவசரம் அவசரமாய் எல்லாம் ஒன்றுமில்லை.மதியம் பன்னிரெண்டை தொடுமுன் கடிகார முட்களை மானுவலாக திருப்பாத குறை தான்.

கருஞ்சாம்பல் நிற ஜீன்ஸ்,பிராண்டட் சட்டை,ரீபோக் ஷுஸ்,ப்ரில் கீரீம்,ஆக்ஸ் ஸ்பிரே மற்றும் சில புன்னகைகள் என்னை ஒரு புதிய பரிமாணத்தில் ஆயத்தமாக்கி கொண்டிருந்தன. போருக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.

ஒரு வழியாக படியாத தலைமுடியை படிய வைத்து சீவி கிளம்பியாகிவிட்டது.வேண்டுமென்றே முதல் ரெண்டு ரயில்களைத் தவற விட்டு,மூன்றாவது ரயிலில் அமர்ந்தவனுக்கு நேற்று அலைபேசியில் அவளிடம் பரிமாறிய குறுந்தகவல்கள் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வந்தன.

"நான் தான் முகத்தை மறைத்திருப்பேனே..என்னை எப்படி கண்டு பிடிப்ப ??"

"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""

அதற்குள் அலைபேசி அதிர.. அவளாகத் தானிருக்கும்..அவளே தான்..

"எங்கடா இருக்க ??"

"பழவந்தாங்கல் கிட்ட வந்துட்டேன்..இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.நீ எங்க இருக்க?"

"நான் மீனம்பாக்கம் வந்து 15 வருஷம் ஆச்சுடா..சீக்கிரம் வா..நான் இங்க ஒரு போன் பூத் பக்கத்தில நிக்கிறேன்."


"சரி..அங்கயே வெயிட் பண்ணு...வந்துட்றேன்."

இந்த பத்து நிமிட இடைவெளியில் நான் அவளோடு...அந்த அற்புத கணங்களை எப்படி செலவிடப் போகிறேன் என ஒரு சராசரி காதலனாய் மனதுக்குள் சில ஒத்திகைகள் நடந்தேறின.

நிச்சயம் அவள் கண்களைப் பார்த்து தான் பேச வேண்டும்.அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அவள் புன்னகைக்கும் போது,

"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"

என்ற ஒரு அரிய கேள்வியெழுப்பி அவளின் முதல் செல்ல அடிகளையும் மற்றும் எனக்கே எனக்கான சில'முதல்'களையும் பரிசில் பெற வேண்டுமெனத் தீர்மானித்து கொண்டேன்.

இப்படி கைவசம் இருந்த பலப்பல பிட்டுகளின் பட்டியல் நீண்டது.

இரண்டு முறை அவளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவள் "அவளாக" இருந்த போது.....இப்போது அந்த அவள் "என்னவள்" ஆகிவிட்டாள் அல்லவா?.
மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் நடுக்கமும் கூடிய ஒரு புதுவித படபடப்பு தொற்றி கொண்டது.இருவரும் காதலைச் சொன்னபிறகு நிகழப் போகும் முதல் சந்திப்பு என்பதால் ஒரு கூடுதல் குறுகுறுப்பு.

வாங்கி வைத்திருந்த மினரல் வாட்டரால் முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் ஒருமுறை தலை வாரிக் கொண்டேன்.

மீனம்பாக்கமும் வந்தாகிவிட்டது.படபடப்பு அதிகரித்தது.முகத்தில் வழிவது தண்ணீரா வியர்வையா என்றெல்லாம் பட்டிமன்றம் வைக்காமல்,கண்கள் மட்டும் பிரத்யேகமாக எனக்காக மட்டும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட என்னவளைத் தேட ஆரம்பித்தன.

( அடுத்த பாகம் விரைவில்.... )

******************************************************************************

Thursday, February 5, 2009

கவிதை எழுதுவது எப்படி ??

முன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் ப‌டித்து முடித்த‌வுட‌ன் காரி உமிழ‌க் கூடாது.

கடந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப் பேற்றிருந்த நம் அதிரை ஜமால் அவர்கள்,வலையுலகின் தலைசிறந்த கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருந்தார்.அந்த கவிப்பேரரசுகளின் படைப்புகளை படித்து விட்டு,எல்லோருக்கும் ஏற்படுவதைப் போல், நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என உள்ளுக்குள் இருந்த பட்சி பீதியை கிளப்பியது.

"பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி
"................எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்...

ஆனா ஒரு க‌ண்டிச‌ன்...

இந்த‌ க‌விதைய‌ எழுதி முடிக்க‌ற‌ வ‌ரைக்கும் ந‌ம்ம‌ புதியவ‌ன்,ச‌ர‌வ‌ண‌க்குமார்..அய்ய‌னார் இந்த‌ மாதிரி பெரிய‌வா ஆத்துப்ப‌க்க‌ம் த‌ல‌ வெச்சி ப‌டுக்க‌ப் ப‌டாது.மீறி ப‌டுத்தால் இவர்களின் பாதிப்பு ந‌ம்மையும் தொற்றிக் கொள்வ‌தோடு ம‌ட்டுமின்றி,ந‌ம் மூளையும் செக‌ண்ட் ஹேண்ட் மூளையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று குத்த வைத்திருந்த அதே பட்சி குறி சொல்லிற்று.

எல்லாவ‌ற்றையும் ம‌ன‌த்தில் இறுத்திக் கொண்டு,மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்....

எதைப் பற்றி எழுதுவது ??? மனம் கொஞ்ச நேரம் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது....ஆஆ..காதல்......

கழுத கெட்டா குட்டிச் சுவர்..அட டைட்டில் இதயே வச்சிர்லாம் போல..வேணாம்..கவிதைனா படிப்பவர்கள் மனதைப் பிழிய வேண்டும்.
ஆகவே முதல் முத்தம்..பிரிவு சோகம்..இப்படி எழுதினால் எமோஷனல் வொர்க் அவுட் ஆக கூடும் என்பதால் நம் கற்பனை வண்டிக்கு கிருஸ்னாயில் ஊற்றி, டாப்கியரில் தூக்கினோம்.

கண்ணீர்.......oooo

அழுகை......(ஆஹா...)

பிரிவு.......

வலி.........(ஆஹா...)

வ‌ருது ..வ‌ருது....விடாத‌...( அதே ப‌ட்சி என்க‌ரேஜ் செய்ய ஆர‌ம்பித்த‌து )

வான‌ம்...

நீல‌ம்...ம்ம்ம்ம்ம்...

நாற்ற‌ம்....
....
...( கொட‌ல‌ பொற‌ட்டுதுடா சாமி...!!!!!!!)
என்னாச்சு....யாருப்பா அது...எங்கோ பெருச்சாளி செத்த‌ வாடை மூக்கினுள் உட்புகுந்து மூளையை க‌டித்து குத‌ற‌ ஆர‌ம்பிக்க‌..அலுவல‌க‌த்தில் ஒரு க‌ண‌வான் த‌ன் காலுறையை க‌ழ‌ற்றி வைத்ததால் ஏற்ப‌ட்ட‌ விஷ‌வாயு தான் அது என்று தெரிவிக்க‌ப் ப‌ட்டு அதிருப்தி வெளியிடப்ப‌ட்ட‌து.

நமது வால்பையனின் ஒரு பதிவில் "பெருச்சாளி" என்ற பெயரில் அனானியாக‌ சென்று பின்னூட்டியது நினைவுக்கு வர, அவர் இட்ட சாபம் தான் பிற்பகலில் விளைகிறது என மனம் நொந்து கொண்டு....

மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்...

"அவள் அழுகையும்
கண்ணீரும்
அந்த எலிச்செத்த நாற்றத்தில்
மறைந்து போனது"


அப்படினு அடுத்த லைன் எழுத, பக்கத்தில் அமர்ந்திருந்த பட்சியின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

சரி...முடிஞ்சி போன பத்தி எதுக்கு பேசுவானேன்..கொஞ்சம் கமர்ஷியலா யோசிங்க பாஸ்...எப்படி...நம்ம தர்மு சிவராமு எழுதியிருந்தாரே !!!

"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு
"

இப்படி சிவராமு யோசிக்கலாம்..நாம் யோசித்தால் கமர்ஷியல் எந்த கோணத்தில் போகும் என்று உமக்கு தெரியாதா ?? ஆரம்பிக்கும்போதே ரிஸ்க் எடுப்பது உசிதமல்ல‌ என்று அந்த சூனியக்கார பட்சிக்கு விடையளித்தேன்."வேண்டுமென்றால் ஒரு க‌ண்காட்சி க‌விதை எழுத‌லாம்."

க‌ண்காட்சி க‌விதையென்ப‌து புதுக்க‌விதையில் ஒரு வ‌கை.இங்கு க‌விதையின் க‌ருத்திய‌லோடு அத‌ன் உருவ‌மும் முக்கிய‌த்துவ‌ம் பெறுகிற‌து.க‌விதையில் கூற‌வ‌ரும் பொருளும் உருவ‌மும் இறுகிச் செறிந்திருக்க‌ வேண்டும்.பொருளையும் உருவ‌த்தையும்
பிரிக்க‌ முடியாத‌ப‌டி பிணைந்திருக்க‌ வேண்டும்.

எடுத்துக் காட்டாக எஸ்.வைத்தீஸ்வரனின் "ஆசை" என்ற கவிதையைச் சொல்லலாம்.

"முதுகு வளர‌
நீ
ண்
டு
விட்ட‌
கூந்தலுக்கு
மேலும் வளரத்
துடிதுடிப்பென்ன..
"

ஆகவே, உள்ளடக்கத்தின் ஆதிக்கம் உருவத்தில் புலப்பட வேண்டும்.வெகு சமீபத்தில் நம் தேவா எழுதிய‌ கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது! கண்காட்சி வகை கவிதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.

என்று நாம் அதன் சாராம்சங்களை விளக்க,(ப‌ட்சியின் புற‌த்திலிருந்து ஒரு ஆங்கில ப‌ட‌த்தின் ட்ரெயிலர் ஓடிக்கொண்டிருந்த‌து..க்க்க்கொர்,...ர்ர்ர்ர்ர்....தூங்கிட்டானா ??)

ஆஹா..இது நமக்கு ஒத்துவரக்கூடும் என நானும் பட்சியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி,மீண்டும் நம் கற்பனை வண்டியின் ஆக்ஸிலரேஷனைத் திருக்கினோம்.டைரியை க‌க்கத்தில் இறுக்கிக் கொண்டு,ரத்த வெறியோடு யோசித்துக் கொண்டே சென்று என்னைய‌றியாம‌ல் லேடிஸ் ரெஸ்ட் ரூமின் க‌த‌வைத் திற‌ந்து வைத்தேன்.

SORRY FOR THE BREAK !!!!!!!!!!!!!

ந‌ல்ல‌ வேளை.அங்கே ஜீன்ஸ் போட்ட‌ பைங்கிளி ஒன்று ம‌ட்டும் க‌ண்ணாடி முன்பு சோப்பு போட்டு முக‌ம் க‌ழுவிக் கொண்டிருந்த‌ ப‌டியால்,ம‌யிரிழையில் நாம் உயிர் த‌ப்பினோம்.( எங்க‌ அந்த‌ ப‌ட்சி ப‌ய‌ புள்ள....எஸ் ஆயிட்டானா...)அதோடு அபசகுனம் கருதி அந்த கண்காட்சி கவிதை முயற்சியும் கைவிடப்பட்டது.

ச‌ரி..க‌டைசியாக‌ யாருக்கும் புரியாம‌ல்,உண‌ர்த்தும் முறையில் வித்தியாசம் காண்பித்து..நிறைய‌ காம்பிளக்ஸ் குறிப்புகளைச்செருகி, ஒரு ப‌டிம‌க் க‌விதையெழுத‌லாம் என இறுதி முடிவு நானே எடுத்தேன்.ச‌ர‌வ‌ண‌குமார்,அய்ய‌னார் இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டிம‌க் க‌விதையெழுதுவ‌தில் கை தேர்ந்த‌வ‌ர்க‌ள் என்பதை க‌ருத்தில் கொள்ள‌வேண்டும்.என‌வே,அவர்க‌ளின் பாதிப்பு வ‌ர‌க்கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

ஸ்டார்ட் மீமீசிக்...

"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் நான் எழுதிய இந்த படிமக்கவிதையை, வலைதளம் ஆரம்பித்து "தவம்" என்று பெயரிட்டு பதிவிட்ட போது.. கிடைத்த ஒரே ஒரு பின்னூட்டத்தை எண்ணி, கண்ணில் ஒரு துளிநீர் எட்டிப் பார்த்து, அப்பீட் ஆனது....அந்த ஒற்றைப் பின்னூட்டமிட்ட அந்த புண்ணியவானைத் தான் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ச‌ரி க‌விதையெழுதுவ‌து எப்ப‌டி ??

அது தெரிஞ்சிருந்தாத்தான் ஒரு கவிதைய போட்டிருப்ப‌ம்ல‌..இவ்ளோ பெரிய‌ விள‌க்க‌ம் எதுக்குன்ன‌ ??(போங்க‌..போங்க‌.போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌..!!!!! )