மழைக்கு ஒதுங்கியவை...

Friday, September 18, 2015

நீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்



சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க வேண்டும். நம்மோடு சேர்ந்து 116 பேர் காத்து நிற்பார்கள். அவ்வளவு தாமதமாக, நிச்சயமற்ற கால இடைவெளியில் தான் அப்பேருந்து புகையைக் கக்கிய படி வந்து செல்லும். பாரிமுனையிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் இன்னொரு பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றடைவேன். வாகன நெரிசல், கூட்டம், புழுக்கம் என எல்லா அசெளகரியங்களையும் கடந்தும், அந்தப் பயணங்கள் ஒரு நாளும் சலிப்பைத் தந்ததேயில்லை. காரணம் நண்பர்கள். இரண்டு இருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருப்போம். ஒருவர் காலின் மீது ஒருவர் நின்றிருப்போம். பஸ் பாஸைத் தவிர பையில் பணம் என்ற ஒரு வஸ்து அறவே இருக்காது. ஆனால் பேச்சுக்கும் சிரிப்புக்கும் கும்மாளத்துக்கும் குறைவிருக்காது. கல்லூரி வாழ்க்கையின் மூன்று ஆண்டுகளும் தொடர்ந்து நண்பர்களோடு தான் அந்த பேருந்து நாட்களைக் கடந்திருக்கிறேன்.

பயணங்கள் எப்போதும் அசதியானது தான். எதிர்பாராமைகளை தொடர்ந்து சந்திக்க வேண்டும். புதிய அனுபவங்கள் ஒவ்வொரு நிறுத்தத்திலும் காத்திருக்கும். எல்லா இடர்களையும் மீறி, தற்காலிக எல்லைகளை அடையும் போது , பயணத்தின் உண்மையான ருசி புலப்படும். நீண்ட பயணங்களைக் கடந்து, ஏகாந்தமான காற்றை அனுபவிக்கும் போது, அது ஒரு சுகமான இளைப்பாறுதலாக இருக்கும். அப்படியான ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த இளைப்பாறுதலை இன்று உணர்கிறேன். உன்னதமான கணங்களையும், திருப்பங்களையும், உடல் சுகவீனங்களையும், உற்சாகமான நாட்களையும் ஒருங்கே கடந்து வந்திருக்கிறோம். இவ்வளவு தூரம் மலையேறி வந்திருக்கிறோமா என்று பார்க்கும் போது, ஐந்தாண்டு கால பள்ளத்தாக்கு, கீழே பசுமையாக நம் கண் முன் விரிந்து படர்ந்திருக்கிறது. மலைச் சரிவுகளில் பேருந்தில் இருந்து இறங்கி, ஒன்றுக்கு ஒதுங்கும் போது, வெறுங்காலில் சுருக்கென்று குத்தும் பனிக்குளிரின் ஈரத்தைப் போல, உன்னுடனான நாட்களும் இப்படியான எதிர்பாராமைகளின் அன்பால் என்னை நனைத்த படியே இருக்கின்றன. உன் கை பிடித்து ஏறி வந்த இந்த நெடும்பயணம் ஒரு நாளும் சலிப்படைய வைத்ததில்லை.

திருமண நாளுக்கு நான்கைந்து நாட்கள் மீதமிருந்த போது, காலம் அவ்வளவு பொறுமையான ஆசாமியாக இருந்தது. போய் ஒரு டீ குடித்து விட்டு வருகிறேன் என்கிற அளவுக்கு சாவகாசம். அடுத்த டீ குடித்து முடிப்பதற்குள் ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஐந்து பெருக்கல் 365 ஏ கால் நாட்கள், ஒவ்வொரு நாளும் புதியது தான். புதியது என்ற உண்மையை உணரும் முன் அடுத்த நாளை வேகமாக நம் காலடியில் வந்து போட்டு விடுகிறது இந்த நகரம். இப்படியாக சிறுகச் சிறுகச் சேமித்த நாட்களையும் செலவழித்த நாட்களையும் கணக்குப் போட்டால் எஞ்சியிருப்பது நீ மட்டுமே. உன்னைக் கொண்டு என் நாட்களை நிரப்பிக் கொள்வது மட்டும் தான் எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. வேறு பொருட்களைச் சேமிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இரவும் பகலுமாக நாம் சேர்ந்து சேமித்தது அழகான நினைவுகளைத் தான். பெரும்பாலும் கசப்பான அனுபவங்களை ஓரிரு நாட்களில் மறந்து விடுவோம்.

மகப்பேறு மருத்துவமனையில் ஊசி வலியில் நீ அழுத போது, "எதற்கெடுத்தாலும் அழக் கூடாது. அது தவறான கருத்து" என்று கருத்துச் சொன்ன தாதிப் பெண், "ஆட்சியே மாறிரிச்சி...40 ரூவாயா...." வென‌ அருப்புக் கோட்டை சினிமா கட்டணத்தை வியந்து வாய் பிளந்த கிராமத்துத் தொழிலாளி, தூத்துக்குடி செல்லும் ரயிலில் சன்னலோரம் அமர்ந்து இரவு முழுதும் பென்சில் பாக்ஸை திறந்து திறந்து பார்த்தபடியே வந்த கண்ணாடி போட்ட சிறுமி, காலாண்டு விடுமுறையைக் கொண்டாட புத்தகப்பைகளோடு ரயிலேறிய பள்ளிக்குழந்தைகள், சீலம் பேக்கரி ஜோதிகா, "நம்ம புருசன்" செஞ்சது என்று பிரியாணி கொடுத்த பக்கத்து வீட்டு பெங்காலி ருக்சு அம்மா...பழம் வாங்கும் போதெல்லாம் குழந்தையின் கையில் ஒரு கொத்து திராட்சையைத் திணிக்கும் முத்தமிழ் நகர் பழக்கடைக் காரர், எந்த உடல் உபாதையைச் சொன்னாலும் ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சையளிக்கும் பேருந்து நிலைய அக்குபஞ்சர் மருத்துவர், தாமதமான இரவில் சோம்பேறியாக பஞ்சர் போட்டு, முடியும் தருவாயில் பசிக்குதுக்கா..போய் சாப்ட்டு வந்துர்றேன் என கரச்சலைக் கொடுத்த வேளச்சேரி ஒல்லிக்குச்சி சிறுவன்... என நம்மிருவருக்கும் பொதுவானவர்கள் நிறைய பேர் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் வாழ்வை இப்படியான வெள்ளந்தி மனிதர்கள் தான் அழகாக்குகிறார்கள். அன்பு நம்மிருவரையும் சுற்றி ஒரு திடப்பொருள் போல உறைந்து கிடக்கிறது அல்லது ஒரு சிற்றோடையைப் போல முட்களையும் கற்களையும் சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

உன்னைக் கை பிடிக்கும் முன் பேசும் போது நம் கனவுகளைப் பற்றி பேசிக் கொள்வோம். தெருவோரக் கடைகளில் சாப்பிடுவது முதற்கொண்டு, ஒன்றாக கவிதை புத்தகம் வாசிப்பது வரை எண்ணற்ற கனவுகள் நம்மிடையே இருந்தன. எல்லா கனவுகளையும் ஏறத்தாழ நனவாக்கி இருக்கிறோம். தண்டவாளத்தை கடக்க விடாமல் ஒரு நீண்ட கூட்ஸ் ரயில் நிதானமாக போய்க் கொண்டிருக்கும். அதன் கடைசிப் பெட்டி எப்போது வரும் என்று காத்துக் கொண்டே இருப்பது போலத் தான் கனவுகள் நனவாகும் தருணமும். இன்றளவும் கனவுகள் சுரந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் கடைசிப் பெட்டியை நாம் இருவரும் எதிர்பார்க்காமல் இருக்கிறோம். அது தான் நம் இருவருக்கும் பிடித்திருக்கிறது.


Thursday, September 18, 2014

நீர்த்திவலைகளில் பூத்திருக்கும் வானம்




எல்லாவற்றையும் எழுத முடிவதில்லை.

ஆண்டாண்டு காலம் எழுதித் தீர்த்த வெண் தாள்கள், செல்லரித்த‌து போக, எதுவும் மிச்சமிருக்கவில்லை.கால் கடுக்க நடந்தும்,மணிக்கணக்கில் உறங்கியும், தொலை தூரம் இலக்கில்லாமல் பயணம் செய்தும் உடல் அசதியில் எல்லாவற்றையும் புதைக்க முற்பட்டதெல்லாம் ஒரு கொடுங்கனவாக இருக்கிறது. செய்ய ஏதுமில்லாமல் கிடப்பில் போடப்பட்ட பழைய கோப்புகளைப் போல, தனிமை உடல் முழுதும் நிரம்பி மூழ்கடித்தது. யாரைப் பற்றியும் யோசிக்கத் தேவையில்லை. என்னைப்பற்றியும் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். இப்படியான ஒரு மனநிலை வாய்க்கும் போது உலகம் ஒரு மாயவெளி ஆகி, எல்லா நிலக்காட்சிகளிலும் ஒரு வித கருப்பு வெள்ளை படர ஆரம்பித்து விடும். தீவிர நிறக்குருடு நோய்க்கு ஆளாக நேரிடும். அடுத்து என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் இருக்காது. சாலையில் அடிபட்டு இறந்து கிடக்கும் பெயர் தெரியாத பறவையாக, எனக்குள் இருந்த ஒன்று, நிராதரவாகிப் போனது நினைவுக்கு வந்து உலுக்கி எடுக்கும். இறந்து போன என்னுடைய பழைய இரும்புப் பெட்டியில் இருந்த மிச்ச சொச்சங்கள் அவை.

இப்போது அந்த இரும்புப் பெட்டியை தூர எறிந்து விட்டேன். அல்லது கை மறதியாய் ஓரிடத்தில் வைத்து விட்டு மறந்து விட்டேன். நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. தூர எறிந்ததும் கை மறதியாய் வைத்ததும், எது உண்மையில் நடந்தது? நினைவில் இல்லை. ஆனால் இன்று அந்த பெட்டி என்னிடம் இல்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். வெற்றுத் தாள்களாக இருந்தவற்றுள் பல ஆயிரம் பக்கங்கள் இன்று பூர்த்தியாகி இருக்கின்றன. நம்ப முடியாத அழகு, அப்பக்கங்களுக்கு கூடியிருக்கிறது. செம்பருத்தி பூக்களும், மரிக்கொழுந்தும் மண் வாசனையும், வண்ணத்துப் பூச்சிகளும் வெள்ளரிப் பிஞ்சுகளும் கத்தரியும் அவரையும், சோற்றுக் கற்றாழைகளும் ரோஜாப்பூ இதழ்களும் என நான்கு ஆண்டுகள், அவ்வெற்றுத் தாள்களில் வண்ணம் நிரம்பியிருக்கிறது. இவ்வனைத்தையும் இரவு பகலாக, உன் ஈரக்கைகளால் வரைந்திருக்கிறாய்.

வாழ்க்கைக்கல்வி என்றொரு பாடம் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது. மற்ற பாடங்களை விட நான் அதிகம் விரும்பியது அந்த வாழ்க்கைக்கல்வியைத் தான். சாகுல் மாமா கல்யாணப் பத்திரிக்கையை குறுக்கு வாக்கில் வெட்டி, கப்பல் செய்து ஒட்டியது, வெண்டைக்காயை பிரில் இங்கில் தோய்த்து, நெக்லஸ் வரைந்தது, ஸ்கெட்ச் பேனாக்களில், அப்பா அம்மா, குழந்தை குடும்பம் வரைந்து பத்துக்கு பத்து, வீ குட் வாங்கியது, சாக்லேட் பேப்பர்களில் ஆட்கள் செய்தது என வாழ்க்கைக்கல்வி புத்தகம் முழுதும் ஒரே கொண்டாட்டமாகத் தானிருக்கும். உன்னைக் கை பிடித்த நான்கு ஆண்டுகளை ஒரு வாழ்க்கைக் கல்வி புத்தகமாக ஆக்கியிருக்கிறாய்.

--------

எண்ணெய் படிய வழித்து சீவப்பட்ட தலையாயிருக்கும் என எப்போதோ பார்த்த உன் முகத்தை நினைவூட்டினாள் அக்கா. உன்னை விட சற்று உயரம் என திகிலூட்டினார் மாமா. பொண்ணுச் செவப்பா இருக்கும்னு பாட்டியின் ஊகம். ஒரு பழுப்பு நிறக்கவரில், 165 செ.மீ உயரக்குறிப்புளடங்கிய பயோடேட்டாவோடு, உன் ரெண்டு நிழற்படங்கள் வந்து சேர்ந்ததும், ஒரு விதத்தில் எல்லா ஊகங்களும் சரியென்று ஆனது.

மாம்பழக்காலமொன்றில் தான் நாம் பேசத்துவங்கினோம். சூரியனுக்கு கீழுள்ள எதையும் நாம் விட்டு வைக்கவில்லை. உன் வீட்டு கொள்ளைப்புறக் கதவின் இழுவை ஒலியோடு ஆரம்பிக்கும், உன் அலைபேசி குரலைச் சுற்றியே, ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. சாம்பல் நிறப் பூனையொன்று , எங்கள் வீட்டுக் அடுப்படியிலும் கொள்ளைப்புற மதில் சுவரிலும், போர்டிகோ தோட்டத்திலும் புதிதாகக் குடியிருக்க ஆரம்பித்தது. நிறைய குரோட்டன்ஸ் இலைகள் பல வடிவங்களில் படர ஆரம்பித்தன. ஒன்றிரண்டு பட்ரோஸ்கள் துளிர் விட ஆரம்பித்தன. வேப்பம்பழங்கள் தரையெங்கும் உதிர்ந்து, குழந்தைகளின் கால்விரல்களால் நசுங்கி மகிழ்ந்தன. மொட்டை மாடியிலிருந்து, கை நீட்டினால் இளநீர் பறிக்கக் கிடைக்கும் தென்னை மரத்தில், குஞ்சு பொறித்த காங்கள், தலைகளைக் கொத்தின. வண்ணநிலவனின் பிலோமியும், தமிழ்ச்செல்வனின் மாரியும் உனக்கும் அறிமுகமானார்கள். மாம்பழக்காலம் முடிந்து, நீ என் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது மழைக்காலமாகியிருந்தது. அடுப்படி வரை வந்த பூனைக்கு, வாசற்படி வரை வர, தைரியம் கிடைத்தது. உன் விரல்களிலிருந்த தோசைத் துண்டுகளை, லாவலகமாகப் பெற்றுக் கொண்டன அந்த காகங்கள். தினம் தினம் ஒரு பூவை பிரசவித்தது அந்த வெள்ளை ரோஜாச் செடி. இப்படியாகத் தான் நீயும் என்னில் கிளை பரப்பத் தொடங்கினாய். ராம்சஸிடமிருந்து அடிமைகளை விடுவித்த மோசஸைப் போல, கொடுங்கனவுகளிலிருந்து என்னை விடுவித்தாய். என் எல்லா ரணங்களுக்கும் வலிகளுக்கும் ஒரு அற்புத சஞ்சீவி மருந்தொன்று உன்னிடமிருந்தது. நான் விடுபட ஆரம்பித்தேன்.

முத்து நகர் எக்ஸ்பிரஸில் முதன் முறையாக நாமிருவரும் ஒன்றாக பயணம் செய்தோம். இரவோடு இரவாக நீ என் மடியில் சாய்ந்தவாறு, சன்னலோரத்தில் விடியும் இருளை, அணைத்தவாறு வந்தது பசுமையாக இருக்கிறது. நான் நீ, உன் அக்கா மகள், அண்ணன், அப்பாவோடு விருது நகர் ரயில் நிலையத்திலிருந்து, அருப்புக் கோட்டை நோக்கி, ஒரு சிறிய ஆம்னி ஊர்தியில், இரு மருங்கிலும் முட்புதர்களடங்கிய சாலையில் செல்லச் செல்ல, தூக்கம் கலைந்தது. சிவன் கோயில்ட்ட வந்துட்டோம்மா..என உன் அண்ணன், வீட்டில் ஆரத்தி தட்டோடு காத்திருக்கும் உன் அம்மாவிடம் அலைபேசியில் தெரிவித்த போது, உன் கண்கள் விரியத் தொடங்கியது. திருமணமாகி ஐந்து நாட்கள் சென்னை நகரப் புழுக்கத்தைத் தொலைத்து, உன் வீட்டு தூண்களைச் செல்லமாக, கட்டிக் கொண்டு சுற்றி வந்த போது, அந்த தூண்களைக் காட்டிலும் நீ தான் அழகாக இருந்தாய். நீ வேறு. உன் மண்ணில் வாழும் நீ வேறு.

நகரங்கள் எப்போதும் நகரங்கள் தான். அவசரமாக நாட்கள், அவசரமாக வேலை, அவசரமாக ரயில்கள், அவசரமாக ஹார்ன் அடிக்கும் வாகனங்கள், அவசரமாகக் காற்று, அவசரமாக மனிதர்கள். ஆடு மாடுகளோடு, நொண்டி கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகளோடு, வான்கோழிகளோடு, மரப்பாச்சி பொம்மைகளோடு, உப்புமா கேசரி விற்கப்படும் தேநீர் கடைகளோடு, ஆமை வடைக்கு மாவு அரைத்துக் கொடுக்கும் வீடுகளோடு, நெற்றி சுருக்கி இன்னாரென அடையாளங் காண முயலும் திண்ணைக் கிழவிகளோடு, நின்று நிதானித்து அடையும் இரவோடு, சேவல் கூவி விடியும் பகலோடு….

இந்த அவசர நகரங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை.

இப்படியான நகரத்தில் உன்னைக் கடத்தி வந்து விட்ட, குற்ற உணர்ச்சியை, நான் எப்படி கடந்து போகிறேன். மரங்களே பார்க்காத, ஒரு தெரு நாய்க்குக் கூட இடமளிக்காத அபார்ட்மென்டுக்கு குடி வந்து விட்டோம். மொட்டை வெயிலில் பூக்கள் வாடி வதங்குகின்றன. கார்ட்டூன் சேனல்கள் நம் பிள்ளைக்கு கதை சொல்லுகின்றன. குப்பைகள் அடர்ந்த கடற்கரைகளிலும், வெளிச்சம் மங்கிய உணவகங்களிலும், ஷாப்பிங் மால்களிலும் எஞ்சிய வாழ்வின் களிப்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீ மாற வில்லை. நான்கு வருட நகர இருப்பு, உன்னை மட்டும் அப்படியே தான் வைத்திருக்கிறது.

ஈரக்கைகளால் அனைத்தையும் தொடுகிறாய் என நான் திட்டுவதால், கோபித்துக் கொள்கிறாய். எதைத் தொட்டாலும் ஈரம். மடிக்கணினியில் ஈரம், மதிய உணவு டப்பாவில் ஈரம், மடித்து வைத்த துணிகளில் ஈரம், புத்தகங்களில் ஈரம் என உன் ஈரக்கைகள் நிறைக்காத பொருட்களே இல்லை. அந்த ஈரம் தான் நம்மை இதுவரை அழைத்து வந்திருக்கிறது. அந்த ஈரம் தான் என்னை நானாக வைத்திருக்க உதவுகிறது. அந்த ஈரம் தான் என் ஆணாதிக்க பாறைகளைக் கரைத்து, கூழாங்கற்களாக்குகிறது. அந்த ஈரம் தான் உனக்கும் எனக்குமான இடைவெளிகளைக் குறைக்கிறது. அந்த ஈரம் தான் நம் பிரியங்களை சேமித்து வைத்திருக்கிறது.

இவ்வளவு தான் நீ.
இவ்வளவு தான் நாம்.



Thursday, February 14, 2013

அப்ஃசல் குருவும் கஷ்மீரும் - வஞ்சிக்கப்பட்ட வரலாறு




வருகின்ற‌ நாடாளுமன்ற‌ தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரசு அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வீச, பா.ஜ.க வுக்கு எவ்வித அருகதையும் இல்லை. இருகட்சிகளுமே கழுத்தளவு ஊழல் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் கட்சிகள் என்பதால் ஊழலை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக பா.ஜ.க பயன்படுத்த முடியாது. எனவே தேசப்பாதுகாப்பு என்ற ஒரு கருத்தியலை எடுத்துக் கொண்டால் மட்டுமே காங்கிரசை கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பா.ஜ.க வின் திட்டத்தை, காங்கிரசு முறியடிக்க இந்த வைகறைக் கொலைகள் அவசியமாயிருக்கின்றன. இந்து தீவிரவாதிகள் என வாய் மலர்ந்ததற்காக எங்கே வாக்கு வங்கியை தவற விட்டு விடுவோமோ என்ற பதை பதைப்புடன் இப்படுகொலை முழுக்க முழுக்க சர்வ ரகசியமாக, உரிய நேரத்தில் காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புள்ளியிலிருந்து தான் அஃப்சல் குரு படுகொலையை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியலமைப்பு, ஆனால் அஃப்சல் குருவின் வழக்கில் நடந்ததோ இதற்கு நேரெதிர்.

சரணடைந்த போராளியான அஃப்சல் குரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். சரணடைந்த போராளிகளுக்கு எந்த அரசு வேலையும் கிடைக்காது. அஃப்சல் குருவுக்கு ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளும் அளவுக்குக் கூட வசதியில்லை.குற்றம் சாட்டப் பட்ட நால்வரில் தண்டனை வழங்கப்பட சாத்தியம் உள்ளவராக இருந்த போதிலும் அஃப்சலுக்கு மட்டுமே வழக்கறிஞர் யாருமில்லை. தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு அவர் சிறப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.எட்டு வழக்கறிஞர்களின் பெயர்களடங்கிய பட்டியலொன்றையும் அவர் அளித்திருந்தார். எனினும் தாங்கள் தேசத்துரோகிகள் என அழைக்கப்பட நேருமோ என்கிற அச்சத்தின் விளைவாக அவ்வழக்கறிஞர்கள் அவருக்காக வாதிடுவதற்கு மறுத்துவிட்டனர்.ராம்ஜெத் மலானி மட்டும் கிலானிக்காக வாதிட முன் வந்த போது, சிவசேனா இந்து வெறியர்கள் அவரது மும்பை அலுவலகத்தை சூறையாடியது நினைவிருக்கலாம்.

இறுதியாக 2002 ஜூலை 12 ஆம் தேதி அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒரு இளம் வழக்குரைஞரை சட்ட உதவுனராக ( amicus curiae) நியமித்தும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அஃப்சலுக்கு உரிமை அளித்தும் ஆணை ஒன்றை இட்டார். கிரிமினல் விசாரணை என்பது குற்றவியல் சட்ட அறிவைக் கோரும் ஒரு விஷயம் என்பதையும் ஒரு சாதாரண மனிதன் சட்ட உதவியின்றி குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்பதையும் எல்லோரும் அறிவர். அஃப்சல் சட்ட உதவி பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். எஸ்.ஏ.ஆர் கீலானியைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட அகில இந்திய குழுவிற்கும், உச்சநீதி மன்றத்தால் அவருக்காக வாதாடிய வழக்கறிஞருக்கும் அவர் எழுதிய கடிதங்களை வாசித்தால் சட்டபூர்வமாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் அவரது முயற்சிகள் எவ்வளவு குரூரமாக மறுக்கப்பட்டன என்பது புரியும்.

தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பிலும் முகம்மது அஃப்சல் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படையாக கூறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் பொடா சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்தும் அஃப்சலை அது விடுதலை செய்துள்ளது. பொடா சட்டம் 3(2) பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட தண்டனை விலக்கப்பட்டுள்ளது. அவர் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தவிர வேறு நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்பதால் பொடா சட்டம் 3(5) பிரிவின் கீழான தண்டனையும் விலக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்குமூலத்தின் படியும் கூட அவர் எந்த ஒரு பயங்கரவாதக் கும்பல் அல்லது அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பது சந்தேகத்துக்குரியதே என்பதையும் நாங்கள் சொல்ல முடியும்” என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.காவல்துறை சார்பாக 80 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அஃப்சலுக்கு ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டவில்லை. உண்மைகள் இப்படி இருந்தும் கூட காவல் துறையும் ஊடகங்களும் தொடர்ந்து அஃப்சல் குருவின் மரணத்தை ஒரு “தீவிரவாதியின்” மரணமாகத் தான் கொண்டாடி மகிழ்கின்றன. இது அடிப்படை இசுலாமிய வெறுப்பும் இந்துத்துவ பாசிச வெறியும் அறுவடை செய்த மரண தண்டனை. உலகளாவிய பச்சைக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு, அடிவருடி இந்திய அரசு நிறைய துரும்புகளைக் கிள்ளிப் போட வேண்டியிருக்கிறது.‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” என்று கூறி அஃப்சல் குருவிற்கு மரண தண்டனை அளித்தது உச்ச நீதிமன்றம். நாட்டையே உலுக்கிய நிகழ்ச்சியின் விசாரணையும், தண்டனை வழங்கிய விதமும் எவ்வளவு கேலிக்கூத்தான வகையில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

அஃப்சல் குரு தூக்கில் இடப்பட்டது அவரது குடும்பத்திற்கு கூட தெரிவிக்கவில்லை, அதுமட்டுமின்றி அவரது உடலையும், சனநாயகத்தையும் சேர்த்து திகார் சிறையினுள்ளே புதைத்துவிட்டது இந்திய அரசு. அஃப்சல் குரு தூக்கிலிட்ட அன்றிலிருந்து இன்று வரை கஷ்மீர் முழுக்க ஊரடங்கு உத்தரவு, அஃப்சல் குரு குடும்பம் உள்ளிட்ட கஷ்மீர் மக்கள் யாருக்கும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட உரிமையில்லை, ஆனால் நாம் சொல்கின்றோம் இந்தியா சனநாயக நாடென்று, தன் தந்தையின் இறந்த உடலை கூட பார்க்கமுடியாத சனநாயக நாட்டில் வாழ்கின்றது அஃப்சல் குருவின் குழந்தை. அஞ்சலி செலுத்துவதற்காக ஒன்று கூடிய மக்களின் மேல் எந்த வித சனநாயக வழிகளையும் பின்பற்றாமல் நடந்தேறிய துப்பாக்கி சூட்டில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். மருத்துவர்கள் கூட தங்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இராணுவ படையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

இந்த கூட்டு மனசாட்சியில் கஷ்மீரிய மக்களுக்கு இடமில்லையா? அல்லது சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஒரு உயிரின் முடிவில் தான் சமனமடைகிறதா? அஃப்சல் குரு என்ற இளைஞனுக்கு நிகழ்ந்த இந்த கொடூரம் இன்று ஒவ்வொரு அப்பாவி கஷ்மீரி இளைஞனுக்கும் அவன் சொந்த மண்ணிலேயே நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை அழகு கொஞ்சும் கஷ்மீரில் இன்று எட்டு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள், அதாவது ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவ வீரன். இராணுவ படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற வரம்பிலா அதிகாரத்துடன் அம்மக்களை ஆண்டு வருகின்றனர். இராணுவம் யாரை வேண்டுமென்றாலும் கொலை செய்யலாம், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கலாம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காது, அதற்கு பதிலாக பதவி உயர்வுகளும், பரிசுகளும் சன்மானமாக கிடைக்கின்றன. கடந்த 2010 சூலையில் இந்த இந்திய இராணுவத்தினரால் 113 சிறுவர், சிறுமியர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், இவர்களை சுட்டுக்கொன்றவர்களின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை, 6000த்திற்கும் அதிகமான மனித புதைகுழிகளை கஷ்மீர் அரசு அமைத்த மனித உரிமை ஆணையம் கண்டுபிடித்து சட்டசபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, இதன் மேலும் எந்த ஒரு விசாரணையும் இல்லை. கஷ்மீரை ஆள்வது சனநாயகமல்ல, இராணுவமே. மணிப்பூரின் ஐரோம் சர்மிளா முதற்கொண்டு தற்போது அமைக்கப்பட்ட வர்மா கமிசன் வரை எல்லோரும் பரிந்துரைக்கும் முதல் வாக்கியம் இராணுவ படை சிறப்பு அதிகார சட்டத்தை இரத்து செய்யச் சொல்கின்றது, ஆனால் அரசு அதை காதில் கூட வாங்க மறுக்கின்றது.

பூக்களின் தேசம் இன்று ராணுவ கூடாரங்கள் சூழ்ந்த விதவைகளின் தேசமாக மாறிப் போயிருக்கிறது.கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் கஷ்மீரிக‌ள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். தொடர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆண்டின் பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு.

கஷ்மீர் பிரச்சினைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், இந்திய ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கின்றன. இவ்விவகாரத்தில் அமெரிக்காவோ ஐ.நாவோ வேறு எந்த மூன்றாம் தரப்போ தலையிடுவதை நிராகரிப்பது தான் அதன் முதல் நிலை.காரணம், எச்சூழ்நிலையிலும் அது கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசை ஏற்கச் செய்து விடவும் கஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வாய்ப்பளித்து விடக்கூடும்.ஆகவே தான் கஷ்மீர் ஒரு சர்வதேச பிரச்சினையாவதை எப்போதும் கடுமையாகவே எதிர்த்து வந்திருக்கிறது இந்திய அரசு. அதே நேரம் எல்லைக்கப்பாலிருந்து பயங்கரவாதிகளை ஏவிவிடுவதால் பாகிஸ்தானைப் பயங்கரவாத நாடாக அறிவித்து, பொருளாதாரத் தடைகள் விதித்து ஒடுக்க வேண்டும் என்று தொடர்ந்து உலக நாடுகளை வற்புறுத்தியே வந்திருக்கிறது. இது தான் கஷ்மீர் மக்கள் தொடர்ந்து இந்திய அரச பயங்கரவாதத்தின் மூலம் வஞ்சிக்கப்படும் வரலாறு.

கஷ்மீர் மண்ணும் மலையும் காடுகளும் இயற்கை வளங்களும் கஷ்மீரிய மக்களுக்கே சொந்தம். அதைக் கேட்பது அவர்கள் உரிமை. அஃப்சல் குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமும் கஷ்மீரிய தெருக்களில் கட்டவிழ்க்கப்படும் இந்திய அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலமுமாகத் தான் அம்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் துணை நிற்கிறோம் என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்த முடியும். கஷ்மீர் நிலப்பரப்பை மட்டும் நேசித்து கஷ்மீர் மக்களை இராணுவப் பிடியில் வைக்கச் சொல்லும் இந்தியாவின் பெரும்பான்மை ’நாட்டுப் பற்றாளர்கள்’ போல் அல்லாமல் கஷ்மீர் மக்களை நேசிக்கும் நாட்டுப் பற்றாளர்கள் கஷ்மீரிகளோடு இருக்கின்றார்கள் என்பதை உரக்கச் சொல்வதே நம் முன் இருக்கும் கடமை.


கீற்றுவில் வெளிவந்தது

---------

Monday, August 13, 2012

ஆகஸ்டு 6 உலக அணுசக்தி எதிர்ப்பு தினம்

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல உடனடியாக செத்து மடிந்தனர். ஹிரோஷிமா நகரமே தரை மட்டமானது. ஹிரோஷிமா குண்டு வீச்சைத் தொடர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் அணுக்கதிர் வீச்சின் கோர முகத்தால் பல லட்சம் மக்கள் புற்றுநோயினாலும் இன்னும் பல கொடிய தோல் வியாதிகளினாலும் மரணித்தனர்.
சமகாலத்தில் வல்லரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் பெரியண்ணன் நாடுகளனைத்தும் இடுப்பிலே அணுகுண்டைக் கட்டிக் கொண்டு பேட்டை ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பை விட அதிகமாகிப் போன யுரேனியத்தை விற்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தை அவர்களுக்கு தேவையாயிருக்கிறது. அணுக்கொள்முதல்,அணு வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெருமுதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும் அதற்கு உறுதுணையாக‌ அடிவருடி உதவவும் ஒரு அதிகார வர்க்கமே காத்திருக்கிறது. கிடைத்த‌ எலும்புத் துண்டுகளுக்கு ராஜ விசுவாசமாக‌ நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் போல அணு உலைகளை நிறுவி அம்முதலாளிகளுக்கு காணிக்கையாக்க திட்டமிடுகின்றது அரசு இயந்திரம். அணுகுண்டுகள் அணு உலைகளாக வேடமணிந்து திரண்டெழுந்து மேடையேறுகின்றன.
ஹிரோஷிமா நாகசாகியின் நினைவுகளை இன்றைய தலைமுறை மறந்திருந்தால் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுதல் சமூக மனிதர்களின் கடமையாயிருக்கிறது. அணுகுண்டும் அணு உலையும் வெடித்தால் ஒன்றே என்ற உண்மையை செர்னோபிலும் ஃபுகுஷிமாவும் ஏற்கனவே தலையில் அடித்து சத்தியம் செய்து விட்டன. உலகெங்கும் அணு உலைகளுக்கெதிரான கருத்தியல் தோன்ற ஆரம்பித்து விட்டது.அணுசக்தியை முற்றிலுமாக கைவிட பல நாடுகள் உறுதி மேற்கொண்டு விட்டன. ஜப்பானில் அணு உலைகளை மூட அரசு உத்தரவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடுகின்றனர். சூரிய ஒளியையும் காற்றையும் நம்பி மின்சாரம் தயாரிக்க பெருமளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றியும் கிட்டுகிறது. இந்திய அரசின் சிற்றறிவுக் கிட்டங்கி மட்டும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது ஒரு சமுதாயத்தை பலியிட்டு இன்னொரு சமுதாயத்தை வாழ வைக்க தலைப்படுகிறது.
அதற்காகத் தான் களமிறங்கினோம். மக்களிடம் பேச நினைத்தோம். ஆகஸ்டு 5, 6 சென்னையின் வெவ்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு கிடக்கும் எந்திர மனிதர்களுக்கு அணுசக்தியின் தீங்குகளைச் சொல்வோமென்று உறுதி பூண்டோம்.
ஆகஸ்டு 5 ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் ரயில் நிலையம், கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் சேவ் தமிழ்சின் 11 தோழர்களும், வேளச்சேரி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 தோழர்களுமாக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டது.ஹிரோஷிமா நினைவு தினமான ஆகஸ்டு 6 காலை மாலை இருவேளைகளிலும் இருகுழுக்களாக பிரிந்து களப்பணியில் இறங்கினோம். தகவல் தொழில் நுட்ப மையமான டைடல் பூங்காவில் 8 தோழர்களும், சோழிங்க நல்லூர் நாற்கர சந்திப்பில் 6 தோழர்களுமாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். மாத முதல் ஞாயிற்றுக்கிழமை.சம்பள வாரம்.பிரம்மச்சர்ய ஐ.டி ஊழியர்களின் தலைமையகமான வேளச்சேரி நடையும் கையுமாகவே இருந்தது.வார இறுதியின் உச்சகட்ட பரபரப்பில் சிலர் துண்டறிக்கைகளை வாங்கி ஆர்வமுடன் பார்த்தனர்.சற்றே இளைப்பாறிக் களைத்த சில முகங்கள் நம்மை அலட்சியப்படுத்திக் கடந்தன. மெட்ரோ ர‌யில் ப‌ணிக்காக‌வும் க‌ட்ட‌ட‌ வேலைக‌ளுக்காக‌வும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன‌ வ‌ட‌ மாநிலத் தொழிலாள‌ர்க‌ள், தாமாகவே முன்வந்து அந்த துண்டறிக்கைகளைப் பெற்றனர். சில கலாமிஸ்ட்டுகள் தாம் வாங்கிய மஞ்சள் சிட்டை ராக்கெட்டாக்கி சேற்றில் விட்டு தம்மை ஒரு ப்ரோ நியூக்ளியராக பறை சாற்றினர். அணுகுண்டு வீச்சிலும் அணு உலை வெடிப்பிலும் நிராதரவாகிப் போன பச்சிளம் குழந்தைகளை, எண்ணிப்பார்க்கவோ அதைப்பற்றி பேசவோ யாரேனும் வருவார்களா என்ற‌ காத்திருப்பு நம் தோழர்களின் கண்களில் நிரந்தரமாக குடியிருந்தது. வெவ்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த தோழர்கள் அனைவரும் இரவு 7.30 மணிக்கு மேல் வேளச்சேரியில் ஒன்றிணைந்தோம். அடுத்த நாள் பரப்புரைகளுக்கான‌ திட்டமிடுதல்கள், விவாதங்கள், தேநீர் என சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு பிறகு கலைந்தது.
புதிய வியூகமும் புதிய மனநிலையுமாக புத்துணர்ச்சியுடன் மறுநாள் திங்கள் காலை,டைடல் பூங்காவிலும் சோழிங்க நல்லூர் பிரதான சிக்னல் அருகிலும் இரு வெவ்வேறு குழுக்களாக‌ முகாமிட்டோம். ஷாப்பிங் மால்கள், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச், பில்லா2 என வார இறுதியில் கிறங்கிக் கிடக்கும் ஐ.டி நடுத்தரவர்க்கத்தை, பேருந்துகளும் பறக்கும் ரயில்களும் திங்கட் கிழமை காலை மொத்தமாக வந்து ராஜிவ் காந்தி சாலையில் கொட்டுகின்றன‌. அவசரமாக விரையும் அந்த வேக மனிதர்களை இரண்டு நொடிகள் நிறுத்தி வைப்பதற்கு பிரத்யேக முகமூடிகளும் வித்தியாசமான பதாகைகளும் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மாலையை போல் வெறுமை சூழாமல், பலர் தாமாகவே முன்வந்து துண்டறிக்கைகளை வாங்கி கொண்டனர்.பள்ளி செல்லும் குழந்தைகள் பதாகைகளை விட ஸ்கீரீம் முகமூடிகளை ஆர்வத்தோடு பார்த்தனர். திருவான்மியூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. டைடல் சிக்னல் அருகே கவன ஈர்ப்பு மிகுதியாக இருந்தது. நமது தோழர் ஒருவர் அணு வெடிப்பால் மரணித்ததைப் போல சாலையில் படுத்து நடித்தது நல்ல கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தது.வழக்கம் போல ஹிரோஷிமா பற்றியோ அணு உலைகளைப் பற்றியோ யாரும் பேச முன்வரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.
முதலாளித்துவ அரசுகள் கட்டமைத்த அணு எதிர்ப்பு போராட்டங்களுக்கெதிரான பொதுபுத்தி, ஊடங்களின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் என முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒரு பொருளை ஊதி ஊதி மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் சிரத்தை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்நெருப்புக்கான சிறு பொறிகளைத் தூண்டுவே இத்தகைய முகாம்களின் நோக்கமாக நாம் கருத வேண்டியிருக்கிறது. அணுசக்தி என்பது மனித சமுதாயத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வினை. அவ்வினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்தை தெளிய வைக்க வேண்டிய அவசியம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.
**********************

Thursday, March 22, 2012

எம் மக்களின் மன உறுதியையும் காற்றையும் கடலையும் உங்களால் அடைக்க முடியுமா?

அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் இன்று காலை 9 மணிக்கு, நெல்லை பாளையங்கோட்டை திடலில், பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ், தமிழக இளைஞர் எழுச்சி பாசறை, SDPI, மே 17 இயக்கம், த.தே.பொ.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் வன்னிஅரசு, தோழர் தியாகு, பண்ரூட்டி வேல்முருகன் ஆகிய தலைவர்களின் தலைமையில் "மக்களின் அச்சத்தைப் போக்கி அணு உலையை திறக்கக்கூடாது என்ற தமிழக அரசு இன்று மக்களை அச்சுறுத்தி திறப்பது நியாயமா? கூடங்குள அணு உலையை திறக்காதே! கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்!" என்கிற கோரிக்கை முழக்கத்துடன் 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் இடிந்தகரை நோக்கி படையெடுத்தபோது, போலிசாரால் கைது செய்யப்பட்டனர். விண்ணதிர வைக்கும் முழக்கங்களுடன் காற்று அங்கு வேறு மாதிரியாக இருந்தது. ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்டவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட ரோஸ் மஹால் நிரம்பி வழிந்தததால் மென்மேலும் தோழர்களை அடைத்து வைக்க முடியாமல் காவல் துறையினர் விழி பிதுங்கினர்.

மாலை ஐந்து மணிக்கு விடுவிக்கப்பட்ட தோழர்கள் இன்று ஒரு எதிர்பாராத திருப்பத்தை சந்திக்க நேர்ந்தது. இன்றைய போராட்டத்தில் பங்கு பெற்ற தோழர் சதீஸ், மற்ற இயக்கத் தோழர்களுடன் வெளியே சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த சிலர் அவரை சுற்றி வளைத்து வண்டியில் போட்டு கடத்திச் சென்றிருக்கின்றனர். இது கியூ பிராஞ்ச் போலிசின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எந்தவித வாரண்டோ, காரணங்களோ இல்லாமல், இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பெருவாரியான‌ மக்களிடையே ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த அறப்போரை திசைதிருப்ப எல்லா வழிகளிலும் ஆளும் அரசால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. போராடும் மக்களை நெருங்க முடியாத கையாலாகாத‌ அரசு, மாற்று வழியில் உளவியல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

ந‌மது அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளை எதிர்த்து உலகெங்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழும் கூடன்குளம் இடிந்தகரை மக்கள் இம்மாதிரியான அடக்குமுறைகளை தூசு போலத் துடைத்தெறியத் துணிந்திருக்கின்றனர். முதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்களுக்காக ஒரு சமூகத்தையே பலியிடத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசையும் தமிழக அரசையும் எதிர்த்து, கொலைகார‌ அணு உலையை மூடும் வரை மக்கள் இந்த அறவழிப்போரை இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஆயிர‌க்கண‌க்கான‌ போலீசின் பிரம்மாண்ட அணிவகுப்பும், இராணுவ‌மும் துப்பாக்கிக‌ளும் நெஞ்சுர‌ம் கொண்ட அந்த‌ குழந்தைகளைக் கூட‌ மிர‌ட்ட‌ப் போதுமான‌தாக‌ இருக்கவில்லை.




இன்னொரு முள்ளி வாய்க்காலை நிறைவேற்றி விட‌லாம் என‌ ல‌ட்சிய‌ வெறியோடு க‌ள‌மிற‌ங்கியிருக்கிற‌து அர‌சு இய‌ந்திர‌ம். உண‌வு, குடிநீர் காய்க‌றி எல்லா அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன. ராதாபுரம் பகுதியில் 144 த‌டை உத்த‌ர‌வு பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்டிருக்கிறது. உள்ளே வெளியே போக்குவ‌ர‌த்து அனும‌தி இல்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மருந்துகளின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. கூட‌ங்குள‌மும் இடிந்த‌கரையும் வெளியுல‌கோடு தொட‌ர்ப‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. உதயகுமார் அவர்களின் துணைவி நடத்தும் பள்ளிக்கூடம் கூலிப்படையினரால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட ஒரு கர்ப்பிணிப்பெண் மருத்துவமனைக்குச் செல்ல போலிசு மறுத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. கைதானவர்களில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்துகளில் கொண்டு சென்ற போது, மலஜலம் கழிக்கக்கூட போலிசு வண்டியை நிறுத்த‌ அனுமதிக்கவில்லை.

ச‌ங்க‌ர‌ன் கோவில் இடைத்தேர்த‌ல் நிகழ்ந்த ம‌றுநாளே, த‌ன் கோர‌ முக‌த்தைக் காட்டிக் கழுத்தறுத்த‌ த‌மிழ‌க அரசையும், ஒரு இனப்படுகொலைக்குத் தயாராகும் முஸ்தீபுகளோடு தன் திட்டத்தை வரையறுத்திருக்கும் மாநில அரசையும் மக்கள் அவதானிக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கெனவே சிங்கள் அரசின் உதவியோடு அம்பலமான ஈழப்படுகொலைகளைப் பார்த்து கண்ணீரோடு (சற்று தாமதமாக) கொதித்துப் போயிருக்கிற தமிழனுக்கு காங்கிரசு அரசின் மீதான தேச வளர்ச்சி பொய்க்கரிசனம் தெற்றென விளங்கியிருக்கிறது.

இடிந்தகரையில் அணு உலையை எதிர்த்துப் போராடும் மீனவ விவசாய மக்களின் நியாயத்தையும், ஏன் அணு உலைக‌ளை இந்தியா உள்ளிட்ட‌ மூன்றாந்த‌ர‌ நாடுக‌ள் ஆதரிக்கின்றன என்ற‌ பின்ன‌ர‌சியலையும் ம‌க்க‌ளிடையே அவசரமாய்க் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே தான் இருக்கிறது. தின‌ம‌ல‌ம் போன்ற‌ பாசிச‌ நாளித‌ழ்க‌ளின் க‌ருத்துக‌ளுக்கு போதுமான‌ ஆத‌ர‌வு குறைந்து வருகிற இவ்வேளையில்,நம் சந்ததிகளைக் காக்க இரவு பகலாக போராடி வரும் அந்த மக்களுக்கான ஆதரவைத் திரட்ட‌ நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

தமிழகத்தையே கூறுபோடக் காத்திருக்கும் எண்ணிலடங்கா திட்டங்கள் மத்திய அரசிடம் இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே இந்த அவலம் நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நமது நிலங்கள் பறிக்கப்படவிருக்கின்றன. நமது வீடுகள் சூறையாடப்படவிருக்கின்றன. நமது உயிர்களைச் சுவைக்க‌ பிணந்தின்னி கழுகுகள் காத்திருக்கின்றன. அரசியல்வாதிகள் எப்போதும் போல நம்மைக் கைவிட்டு விடுவார்கள். கூடங்குளத்தையும் இடிந்தகரையையும் வட்டாரப் பிரச்சினையாக பாவித்து பாராமுகமாய் இருக்கப் போகிறோமா? தொலைக்காட்சியையும் கிரிக்கெட்டையும் ஓட்டரசியல் கட்சிகளின் இலவசக் கவர்ச்சி விளம்பரங்களையும் பார்த்து கிறங்கிக் கிடக்கப் போகிறோமா?

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறைச் சேற்றை வாரியிறைத்து வாழ்வாதாரப் போராட்டங்களை நசுக்கத்துடிக்கும் ஒவ்வொரு அரசும் இறுதியில் வீழ்ச்சியைச் சந்தித்தே ஆக வேண்டுமென்பதை, போராடும் மக்களுக்கு தோள் கொடுப்பதன் மூலம் இந்திய அரசை எச்சரிப்போம். நம் மன உறுதியையும் காற்றையும் கடலையும் அவர்களால் அடைக்க முடியாது என்பதை சாவு வியாபாரி அரசுகளின் துப்பாக்கி ரவைகளுக்கு உரக்கச் சொல்வோம்.


கீற்று இதழில் வெளிவந்தது.

***********************************************************

Thursday, February 16, 2012

இனப்படுகொலை வெர்ஷன் 2.0 - முறியடிப்பது எப்படி ?



உலகெங்கும் அணு உலைகளுக்கெதிராக எதிர்ப்பு இயக்கங்கள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வெதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த வரலாறு மிகப்பழமையானது. அணு உலைகளை ஆதரிக்கும் ஜப்பானிலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் தான் உக்கிரமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2001 ஐரோப்பிய கமிஷன் எடுத்த ஒரு சர்வே, வெறும் 10.1 விழுக்காடு ஐரோப்பியர்கள் மட்டுமே அணு சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 80-க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கின்றன. 1982-ல் நியூயார்க் நகரில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு போராட்டம் (அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய அணு உலை எதிர்ப்பு) நடந்தேறியிருக்கிறது.

அணு உலைகளே இல்லாத ஆஸ்திரேலியாவில் கூட அணுசக்திக்கெதிராகவும் யுரேனியம் வெட்டி எடுப்பதை எதிர்த்தும் அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் (CANE) போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஆஸ்திரியா, க‌ன‌டா, ஜெர்ம‌னி, பிரான்ஸ், க‌ஸக‌ஸ்தான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி, போல‌ந்து, தைவான், சுவிட்ச‌ர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் என‌ எல்லா நாடுக‌ளிலும் இவ்விய‌க்க‌ங்க‌ள் போராடி வ‌ருகின்ற‌ன. இவர்களுக்கெல்லாம் எந்நாட்டிலிருந்து நிதி வருகிறதென்றோ அல்லது எந்த மிஷினரியின் பின்புலம் வேலை செய்கிறதென்றோ நமது தினமலரும் நாராயணசாமியும் ஒரு கலந்தாய்வு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். எல்லா இயக்கங்களின் முழக்கம் ஒன்று தான். அது மக்கள் நலம். மக்களின் வாழ்வாதாரங்களுக்கெதிராக அரசோ நாட்டின் வளர்ச்சியோ அணு உலைகளோ முக்கியமல்ல என்பதே அனைத்து போராட்டங்களின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த இரண்டாமாண்டு நினைவு தினம். சோவியத் யூனியனின் குர்சட்டாவ் என்கிற அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதல் இயக்குனரான வாலெரி லெகசோவ் தனது அபார்மென்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னாளில் தெரியவந்த‌ லேகசோவ் தற்கொலைக்கான காரணங்கள் ரஷ்யாவையே உலுக்கின. லெகசோவின் தற்கொலை ரஷ்ய அணுசக்தி கழகத்தின் மீதான‌ மிகப்பெரிய ஐயப்பாட்டையும் அதிர்ச்சி அலைகளையும் மக்களிடையே தோற்றுவித்தது. ரஷ்ய‌ அணுசக்திக் கழகத்தின் அம்பலமாகாத ரகசியங்களை வெளிப்படையாக‌ பேச முடியாத தொடர் மன அழுத்தமே தனது தற்கொலைக்கான காரணமாக லெகசோவ் தனது இறுதி ஆடியோடேப்பில் பதிவு செய்திருக்கிறார். செர்னோபில் அணு உலைகளின் வடிவமைப்பில் இருந்த‌ தொடர் குளறுபடிகளும் கன்ட்ரோல் ராடுகளின் பிரச்சினைகளும் அந்த நிலைய ஆபரேட்டர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம். அனைத்து உண்மைகளையும் விபத்து நடந்ததற்கு பின் ஒப்புக் கொள்ள வேண்டி வந்த மிகப்பெரிய துயரம் அவரை பெருமளவில் பாதித்திருக்கிறது.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் லெகசோவின் தற்கொலை என்பதை விட, அவர் தற்கொலைக்கு ஆகிருதியான காரணியாக விளங்கிய செர்னோபில் அணு உலையின் நம்பகத்தன்மையும் ரஷ்ய அணுசக்திக் கழகத்தின் பொய்யுரைகளுமே. கூடங்குள‌மும் செர்னோபிலும் ஒத்த‌ வ‌டிவ‌மைப்புடைய‌வை என்ப‌து நம் அனைவருக்கும் தெரிந்த‌ உண்மை.

ப‌ல ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை அணு அணுவாய் கொன்று குவித்த‌ அதே செர்னோபில் தான் இப்போது கூடங்குள‌த்தில் ம‌றுபிற‌வி எடுத்திருக்கிற‌து. 16 ஆண்டுக‌ளுக்கு முன் ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ ஒரு மாபெரும் வ‌ர‌லாற்றுத்துய‌ர‌ம் மீண்டும் நிக‌ழக் காத்திருக்கிற‌து. அதே வடிவமைப்பு, அதே காரணங்கள், அதே பொய்கள். எல்லா உண்மைகளையும் தெரிந்தே தான் ரஷ்யா, விபத்திற்கான இழப்பீட்டைத் தர முடியாது என்ற நிர்பந்தத்தில் இந்திய அரசை கையெழுத்திட வைத்திருக்கிறது.

தனது ஏவல் நாயான இலங்கை அரசின் உதவியோடு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய காங்கிரசு அரசின் இரத்த வெறி இன்னும் தீர்ந்து விடவில்லை. பாதுகாப்பானதென‌ பொய்யுரை பரப்பியோ, வெளிநாட்டுச் சதி என உண்மைகளைத் திரித்தோ அல்லது மறைத்தோ, மதச்சாயம் பூசி வன்முறையை ஏவியோ இந்த கூடங்குள அணு உலையை நிறுவி விட்டால் போதும்; குமரி முதல் வங்காளம் வரை மேற்கே மகாராஷ்டிரம் வரை ஆயிரம் மீட்டருக்கு ஒரு அணு உலையை கடலோரப்பகுதிகளில் கட்டி விடலாம் என்ற கொள்கை வெறியோடு களமிறங்கியிருக்கிறது இந்த மக்கள் விரோத காங்கிரசு அரசு. தமிழர்களைக் கூண்டோடு கொன்றொழிக்க போடப்பட்ட திட்டமாகவே இந்த கூடங்குள அணு உலையை நினைக்கத் தோன்றுகிறது. வடதமிழகத்திற்கு கல்பாக்கமும் தென் தமிழகத்திற்கு கூடங்குளமுமே முழு தமிழகத்தை அழிக்கப் போதுமானதாக இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் முடிவாக இருப்பதாலும் ஆரல்வாய் கணவாய் இவைகளினாலும் இயல்பாகவே காற்று வீசும் பகுதியாக அமைந்திருக்கிறது. ஆகவே அணு உலை செயல்படத் துவங்கும் வேளையில், புகை போக்கியின் வழியாக வெளியேறும் சீசியம், அயோடின், சார்ட்டியம் போன்ற நச்சுத்துகள்கள் காற்று வீசும் திசையெங்கும் பரவும்.

நூறு மில்லி சிவரேட் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் மில்லி சிவரேட் கதிர்வீச்சு உடனடி மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நூறு மில்லி சிவரேட் அல்லது அதற்குக் குறைவான கதிர்வீச்சு என்பது ஒரு அணு உலையைச் சுற்றி எழ‌ வாய்ப்பில்லை என யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அணுக்கதிர்வீச்சு முதலில் தாக்குவது கருத்தரிக்கும் உறுப்புகளைத் தான். இதனால் அணு உலையைச் சுற்றியிருக்கும் ஆண்களும் பெண்களும் மலடாகவோ அல்லது உருச்சிதைந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களாகவோ மட்டுமே இருப்பர். இதனால் ஒரு சமூகமே அழியும் பேரவலம் திரைமறைவில் காத்திருக்கிறது. கதிர்வீச்சு கடல்வாழ் உயிரினங்களுக்கும் உலைவைக்கும் என்பதால் கடலை நம்பியே வாழும் மக்களின் வாழ்வாதாராம் பறிபோகவிருக்கிறது.

ச‌ங்க‌ர‌ன்கோவில் இடைத்தேர்த‌லுக்குப் பின் கூட‌ங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌த‌ற்கான‌ எல்லா முகாந்திர‌ங்க‌ளையும் த‌மிழ‌க‌ அர‌சு செய்து வ‌ருகிற‌து. எட்டுமணி நேர மின்வெட்டின் மூலம் கூடங்குள அணு உலையைத் திறக்ககோரி மக்களிடையே ஒருமித்த பொதுக்கருத்தை கட்டமைத்தது முதற்கொண்டு, பேச்சிப்பாறை அணையை தூர்வார‌ ஆணை பிற‌ப்பித்த‌து, எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட‌ அணு உலை ஆதரவாளர்களை வைத்தே நிர்மாணிக்கப்பட்ட நிபுணர் குழு, என‌ மெல்ல‌ மெல்ல கூடங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌தில் மாநில‌ அர‌சு த‌ன் இர‌ட்டை வேட‌த்தைக் க‌லைத்து வ‌ருகிற‌து.

இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் உறவுகளை பறிகொடுத்தபோது செய்வதறியாது கையறு நிலையில் இருந்த நாம், நம் சொந்த மண்ணிலேயே மீண்டுமொரு சதி நிறைவேற அனுமதிக்கக் கூடாது. வலுவான வெகுஜன ஊடகங்களை தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் பொய்யுரைகளை அம்பலமாக்கி அவற்றை வேரறுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. இதற்கான களப்பணிகளை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு தனிமனிதனின் முயற்சியாலேயே செய்திகளைக் கொண்டு சேர்க்க வல்ல அதிநவீன கால கட்டத்தில் வாழும் நாம், பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய வழிகள் எளியன. எடுத்துக்காட்டாக அலுவலக நண்பர்களுக்குப் புரிய வைக்கலாம்; விவாதிக்கலாம். உண்மைகளை தரவுகளோடு எடுத்துரைக்கலாம். பக்கத்து வீட்டு பெரியவர்களுடன் இது குறித்து உரையாடலாம். சிறு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். கூடங்குள அணு உலையின் பேராபத்துகள் குறித்து கட்டுரைகள் நிறைந்த சிறு புத்தகங்கள் எண்ணற்ற அளவில் கிடைக்கின்றன. அதை நண்பர்களுக்குக் கொடுத்து கருத்து கேட்கலாம். பேருந்து, ரயில் பயணம் என கிடைத்த சந்தர்ப்பங்களில் அணு உலைகள் குறித்து பேச முயற்சிக்கலாம்.

எப்படி பேச்சை ஆரம்பிப்பது? வெகு சுலபம். மின்வெட்டு என்ற ஒரு பொறி போதும். அல்லது கூடங்குள அணு உலை படம் போட்ட புத்தக‌மொன்றை கையில் எடுத்துக் கொண்டால் அருகிலிருப்பவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். தொடர்ந்து முகநூலில் நிலைத்தகவல்களை எழுதுதல், கட்டுரைகளைப் பகிர்தல் என எல்லா வகையிலும் நமது பரப்புரைகளைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து கூடங்குள மக்களின் போராட்டங்களுக்கு நம்மால் இயன்றவரை எல்லா வகையிலும் தோள் கொடுத்து, மக்கள் போராட்டம் வெல்லும் வரை உடன் நிற்போம்.


பெப்ரவரி 14,2012 அன்று கீற்று இதழில் வெளிவந்தது

***********************************************************

Monday, January 16, 2012

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரமும் சில விவாதங்களும்




எழுத்தாளரும் களப்பணியாளருமான தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் கூடன்குள அணு உலை தொடர்பான "விழித்தெழும் உண்மைகள்" சிறு நூலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த‌ போது, எதிர்கொண்ட கேள்விகளும் விவாதங்களுமாக இந்த அனுபவம் இன்னும் முற்றுப்பெறாமலிருக்கிறது.பல மாதங்களாக அலுவலகத்திலும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நேரிலும் சாட்டிலும் முகநூலிலும் விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அணு உலை குறித்த அடிப்படை கருத்துகளை பரப்பும் முதல் களமாக பள்ளிக்கூடங்களையும் மஸ்ஜிதுகளையும் நாடலாம் என முடிவு செய்யப்பட்டு களப்பணிகள் ஆரம்பமாயின.சந்தித்த முதல் இடமே ஏமாற்றமளித்தது.நான் படித்த கிறிஸ்துவ பள்ளியின் பாதிரியார், எதிர்ப்பு குறித்தான பிரச்சாரமோ, புத்தக விற்பனையோ செய்வது சமூக விரோதம் என்ற அடிப்படையில் பேசி நிராகரித்ததோடு நில்லாமல், இந்த போராட்டம் ஏன் அணு உலை கட்ட ஆரம்பிக்கும் போதே இல்லை என ஒரு சாமான்யனைப் போல அவரும் அதே பிராண்டட் கேள்வியை கேட்டது வருத்தமளித்தது.மேலும் இந்த விஷயத்தில் அனைத்து கிறிஸ்துவர்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர் என கவலை தெரிவித்தார்.அது போக வேறெங்கும் போய் இதைப்பற்றி செமினார் பண்ணாதீங்க தம்பி..என அறிவுரை வேறு. நல்லது என நடையை கட்டினேன்.

கூடன்குளம் அணு உலையை எதிர்த்து சமநிலைச்சமுதாயம், விடியல் உள்ளிட்ட பல‌ இஸ்லாமிய பத்திரிக்கைகளில் காத்திரமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும் பல உலமாக்கள், மஸ்ஜிது நிர்வாகிகள் அணு உலைகள் குறித்த‌ ஒரு அரசல் புரசலான அறிவு கூட இல்லாமல் இருந்தது வேதனையளித்தது.ஆயிரம் பேர் கூடக்கூடிய வடசென்னையின் ஒரு முக்கிய பள்ளிவாசலின் தலைவர் "கூடன்குளமா..அப்படின்னா...என்ற ரீதியில் நெளிந்தார். புத்தகத்தை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள். ஜமா அத் முன்பு பேச அனுமதி தரமுடியாது என தன்னிச்சையாக அறிவித்தார்.இன்னொரு பள்ளிவாசல் கொஞ்சம் பரவாயில்லை. பள்ளி நிர்வாகி ஒருவர் வழக்கமான‌ பிராண்டட் கேள்வியோடு விவாதத்தை தொடங்கினார்.உண்மைகளை கொஞ்சம் எடுத்துரைத்த பின், புத்தகத்தை பள்ளி இமாமிடம் கொடுத்து படிக்கச் சொல்லி தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டார்.இன்னும் பயான் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

அடையாறு மஸ்ஜித் இமாம் மெள்லானா சதீதுத்தீன் பாகவி குறித்து ஏற்கெனவே பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் ஒரு கல்வியாளர். உலக,மார்க்க கல்வி அறிஞர். அவரை தனியாக சந்தித்த போது, கூடன்குள எதிர்ப்பு தொடர்பான வலுவான கருத்தியல் அவரிடமிருந்தது. சாவகாசமாக தனது கருத்துகளை இஸ்லாமிய பார்வையில் எடுத்துரைத்தார்.கூடன்குளத்தை ஆதரிப்போரின் நுகர்வுப்பார்வையில் இருக்கும் குளறுபடிகளையும் ஏகாதிபத்திய நாடுகளின் வியாபார நோக்கங்கள் குறித்தும் பேசினோம். முத்துக்கிருஷ்ணனை அவருக்கு தெரிந்திருந்தது. ஏற்கெனவே ஜூம்ஆ பயான்களில் கூடன்குள அணு உலை குறித்து அவர் குறிப்பிட்ட கருத்துகளையும் கூறினார். இன்னும் அதைப்பற்றி விரிவாகப் பேசுவதைப் பற்றி பரிசீலிப்பதாகவும் உறுதி கூறினார். இன்ஷா அல்லாஹ் என்று புத்தகத்தை வாங்கி கொண்டார். மஹல்லா மக்களிடம் விற்பனை சொல்லிக் கொள்ளுமளவு இல்லையென்றாலும், இது போன்ற உறுதி மொழிகளும் நம் சமூகத்தின் மீதான அக்கறைகளும் ஆறுதலளிப்பதாக இருந்தன.

ஏறத்தாழ எல்லாரும் வழக்கமான‌ கேள்விகளைத் தான் திரும்ப திரும்ப கேட்டனர்.எல்லாவற்றிற்குமான பதில்களும் விளக்கங்களும் முறையான தரவுகளுடன் முத்துக்கிருஷ்ணனின் இந்நூலில் விரிவாக அலசப்பட்டிருக்கிறது.


1. இந்த போராட்டம் எதிர்ப்பு ஏன் அணு உலைகளை தொடங்கிய நாட்களிலேயே இல்லை ?

2. கூடன்குளம் அணு உலை திறக்கப்படவில்லையென்றால் எப்படி நம் மின் தடை பிரச்சனை நிறைவேறப்போகிறது.காலம் முழுவதும் நாம் இருளில் மூழ்க வேண்டியது தானா ?

3. அப்துல்கலாமே சொல்லிட்டாரே. 100% பாதுகாப்பானது தான் என்று. அப்புறமென்ன போராட்டம் அது இதுன்னு தேவையில்லாத வேலை. அவருக்கு தெரியாததா உங்களுக்கெல்லாம் தெரியப் போகிறது. அப்துல் கலாமின் அபத்தமான ஒப்பீட்டையே அவர்களும் முன்மொழிந்தனர். கார் விபத்தில் இறக்காதவர்களா ? என்று.

4. செர்னோபில்-லாம் ந‌ட‌ந்து 25 வ‌ருஷ‌ம் ஆவுதுங்க‌..இப்ப‌ இருக்க‌ இந்திய‌ விஞ்ஞானிக‌ள்லாம் எக்ஸ‌ப்ர்ட்ஸ். இதெல்லாம் யோசிக்காம‌யா இந்த‌ புராஜெக்ட‌ கொண்டு வருவாய்ங்க‌..?

5.இவ்வளவு செலவு செய்தாகி விட்டதே. இதை எப்படி கைவிடுவது?



கூடங்குளம் அணு உலை திட்டம் உருவான அரசியல் பின்னணி, ரஷ்ய அணு உலைகளின் அபாயம்,இருபத்தைந்து கால இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்கள்,அணுசக்தி கழகத்தின் ஊதாரித்தனம்,ஊழல்,பொய்ப்பிரச்சாரம், அறிவுசார் தளத்தில் இயங்கும் சில ஊடகங்களில் வெளிவந்த விழிப்புர்ணவு கட்டுரைகள், அணு உலைகளைச் சுற்றியுள்ள மக்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொள்கிறார்கள், மாற்று மின்சாரத்தின் அவசியம் என்ன ? இந்திய அணு உலைகளுக்கு நாம் கொடுக்கும் விலை என்ன ? செர்னோபில்,ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புகள் உலகெங்கும் ஏற்படுத்திய பாதிப்புகளை அறிதல் எவ்வளவு முக்கியமானது போன்ற பல கேள்விகளுக்கு எளிய தமிழில் விடையளித்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.உயிர்மையின் 100ஆவது இதழில் சிறப்பு பகுதியாக வெளிவந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பல பதிப்பகங்கள் ஒன்றிணைந்து மக்கள் பதிப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.

1. இருப‌த்தைந்து காலமாக‌ இந்த‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் அதை நாம் தான் அறிந்து கொள்ள‌வில்லை. கூட‌ன்குள‌ம் அணு உலை குறித்தான‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ப‌ல‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளி வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்திருக்கின்ற‌ன.அணு உலையை எதிர்த்து ப‌ல‌ ஊர்வ‌ல‌ங்க‌ளும் பொதுக்கூட்ட‌ங்க‌ளும் இடிந்த‌க‌ரையிலும் நெல்லை மாவ‌ட்ட‌த்தின் ப‌ல‌ ஊர்க‌ளிலும் ந‌ட‌ந்திருக்கிறது. ம‌க்க‌ள் ஆத‌ர‌வு வ‌லுப்பெறாத‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில், அறிவு சார் தள‌த்திலே இருந்த‌ இந்த‌ எதிர்ப்பு, ம‌க்க‌ள் எதிர்ப்பாக‌ உருப்பெற்ற‌வுட‌ன் அத‌னை கொச்சைப்ப‌டுத்த‌ தொட‌ங்கியிருக்கிற‌து இந்திய‌ அர‌சு.

2. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 2.62% தான் அணு உலைகளின் பங்களிப்பாக இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து 1.1%-மும், அனல்,புனல்,காற்று இவைகளிலிருந்து 65% மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.

கூடன்குளம் அணு உலை 1200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.இதில் கூட‌ன்குள‌ அணு உலைக்கே செல‌வாகும் மின்சார‌ம் 12%. ஆக‌ ந‌ம‌க்கு 1080 மெகாவாட் மின்சார‌ம் தான் உற்ப‌த்தி என‌ வைத்துக் கொள்வோம். இதில் ந‌ம் மாநில‌த்திற்கு 50% தான் என‌ அர‌சு நிர்ண‌யித்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌மாக‌ 30% தான் சொந்த‌ மாநில‌த்திற்கு கிடைக்கும்.ஆக‌ த‌மிழ்நாட்டிற்கு 540 மெகாவாட் கிடைக்குமெனில், இதில் மின்க‌ட‌த்த‌லின் இழ‌ப்பு 15 முத‌ல் 20% வ‌ரை இருக்குமெனில் ந‌ம‌க்கு கிடைக்க‌ விருப்ப‌து வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் ம‌ட்டுமே.

சுப‌.உத‌ய‌குமாரின் கூற்றுப்ப‌டி, த‌மிழ்நாட்டில் உள்ள குண்டுப‌ல்புக‌ளை எல்லாம் மாற்றி குழ‌ல் விள‌க்குக‌ளாக‌ மாற்றினாலே நாம் 500 மெகாவாட் மின்சார‌ம் சேமிக்க‌ முடியும். வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கா இவ்வ‌ள‌வு கோடிக‌ள் ??? க‌ட்டுமான‌ செல‌வை விடுங்க‌ள்.உலை இய‌ங்க‌ ஆர‌ம்பித்தால் ப‌ராமரிப்பு செல‌வு என்ன‌ ஆகும் தெரியுமா ?

ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன் ? அமெரிக்கா திணித்த 123 அணு ஒப்ப‌ந்த‌த்திற்கு அடிப‌ணிந்து என்றென்றும் யுரேனியம் விற்கும் நாடுக‌ளுக்கு இந்தியா அடிமையாக‌ இருப்ப‌த‌ற்கான‌ அடிமை சாச‌ன‌ம் தானே அது.

3.1986 செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்குங்கள். ரஷ்யாவில் உள்ள செர்னோபிலின் அதே அணு உலையைத் தான் பெயர் மாற்றி நமக்கு விற்றிருக்கிறார்கள். கூடன்குளமும் செர்னோபிலும் வடிவமைப்பில் ஒன்றே தான். இதிலும் முதன்முறையாக குளிர்விக்கும் கலன்களாக கடல்நீர் அமையவிருப்பது ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே புதியது. ரஷ்ய அணு உலைகளிலே 31 மிகப்பெரிய காரணிகள் ஆபத்தாக இருக்கின்றன என ரஷ்ய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் போது, ஊழல் மிகுந்த நம் நாட்டில் 100% பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயண சாமி, வாயிலே வடை சுடுகிறார்.

4.கூடன்குள அணு உலை விபத்து நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் ஒருபுறமிருக்க, அணு உலை ( விபத்தின்றி ) இயங்கினாலே ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இன்று அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியி இருக்கின்றன.கூடங்குளம் அமைப்பதில் மரபு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அணு உலைப் பகுதியில் மக்கள் உயிர் வாழ உரிய உத்தரவாதம் இல்லை. விபத்து இல்லாமல் அணு உலைகள் இயங்கும்போது ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்கள் வெளியிடும் ஸ்ட்ரோண்டியம், டிரைடியம், டெலுரியம் என்ற கதிர்வீச்சு வாயுக்களால் பல அழிவுகள் ஏற்படும். நிலத்தடி நீர், விவசாய விளைப்பொருட்கள், கடல்நீர், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயங்கள் ஏராளம்.மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் ஒப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டாம் பட்சம் தானே. அணு உலையால் ஏற்படும் கேடுகளால் உலகின் பல நாடுகளில் அணு உலைகள் மூடப்படும் நிலையில் நாம் மட்டும் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

5.தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் கோலான் என்ற தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சில நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில் பழமையானது தாராப்பூர் (மகாராஷ்டிரா). இந்த அணு உலைகளைச்சுற்றி பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் உருக்குலைந்து தான் பிறக்கின்றன. பலர் புற்று நோயால் இறக்கின்றனர்.ஆனால் எல்லா உண்மைகளையும் இந்திய அரசும் அணுசக்திக்கழகமும் ரகசிய காப்பின் கீழ் வெகுசிரத்தையுடன் மூடி மறைத்து வருகிறது. அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, யுகோஸ்லாவாக்கியா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய பல நாடுகளும் பாதகமான இந்த அணுஉலைகளை வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றது.கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஃபூகுஷிமா டைச்சி அணுஉலை கடலில் மூழ்கி அங்கு நடந்த கோர சம்பவத்தை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.


இன்று கூடன்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் தூத்துக்குடி தொடங்கி பழையகாயல், புன்னக்காயல், கொம்புத்துறை, ஆலந்தலை, குலசை, மணப்பாடு, பெரிய தாழை, உவரி, கூத்தங்குளி, கருத்தழை, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி என்று குமரி வரை நீண்ட அமைதியான கடற்கரை கிராமங்கள் யாவும் இன்று அணு உலைகளுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை கோரல்.


----------------