மழைக்கு ஒதுங்கியவை...

Monday, December 7, 2009

நெருப்பாலான‌ ஜின்கள்


நன்னாவைச் சுற்றி அமர்ந்திருந்த நண்டு,ச்சுண்டுகளின் ஈரக்குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

டெக்சஸிலிருந்து, கமுதி சுந்தரபுரத்திலிருக்கும் நன்னி வீட்டிற்கு வ‌ருடாவ‌ருட‌ம் பள்ளி விடுமுறைக்கு தவறாமல் இடப்பெயர்ச்சி செய்யும் இவ்வாண்டுக‌ளுக்கு ந‌ன்னாவிட‌ம் க‌தை கேட்கா விட்டால் விடுமுறைப் ப‌ய‌ன் நிறைவேறாது.ப‌க‌லில் ந‌ரிக்க‌தை.ம‌திய‌ம் நாகூர் ஆண்ட‌கையின் க‌ராம‌த்துக‌ள் ப‌ற்றிய‌ க‌தை.இர‌வில் முஹிய‌த்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் குத்ற‌த்துக‌ளும் பாம்புக‌ளுமாக‌ சில‌ ம‌யிர்கூச்செறிய‌ச் செய்யும் க‌தைக‌ள்.வேளா வேளைக்கு நேரத்திற்கு தக்கன‌ க‌தைக‌ள்.ந‌ன்னாவும் அச‌ராம‌ல் ப‌ன்னீர் புகையிலையை மென்று கொண்டே எச்சில் தெறிக்க‌ க‌தை சொல்வார்.கால் க‌ழுவ‌ க‌க்கூஸூக்கு போவாம‌, கால வெள்ள‌னயே இந்த ப‌க்கிய‌ளுக்கு க‌த‌ சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டீயலா? என்று ந‌ன்னி தான் செல்ல‌மாக க‌டிந்து வைப்பாள்.பிற‌கு நாஸ்டாவுக்கு இட்லி அவிக்க‌ போய் விடுவாள்.

இன்றிரவு மின்சார‌த் த‌டை என்ப‌தால் 'ரவைக்குச் சாப்பாட்டுக்குப் பொறவு' ஜின்க‌ள் க‌தை சொல்ல‌ப் போவ‌தாக ந‌ன்னா அறிவித்தார். ஜின்க‌ள் என்றாலே பிஞ்சுக‌ளுக்கு முக‌ம் வெளிறி தானாக க‌ண்க‌ளில் மிர‌ட்சி வந்து அப்பிக் கொள்ளும். சற்றுமுன்னர் கரைந்து உருகி விழுங்கப்பட்ட குல்பி மலாய் மீண்டும் உறைந்து அடிவயிற்றில் ஒலி எழுப்பும்.

நம்ம சுந்தரபுரம் பள்ளிவாசல்ல மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து' இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு நாளைக்கு சொல்றேன்.ஒங்களமாரி சின்ன புள்ளைஹளுக்கு நெதம் நம்ம ஊருணிக்கு பக்கத்துல இருக்க‌ மதரஸாவுல கொர்வான்(குர்‍‍ஆன்) ஓதிக் கொடுப்பாராம்.

"ஊருணிண்டா நேத்து ஈவ்னிங் போயி குளிச்சமே அந்த டேர்ட்டி லேக்கா நன்னா?"

முதல் கேள்விக்கணை அதிகாரப்பூர்வமாக நன்னாவை நோக்கி வீசி எறியப்பட்டது. இப்படி பல அம்புகள் அவ்வப்பொழுது கதைக்கு நடுவே நன்னாவை நோக்கி ஏவப்படும். ஆமாண்டி எம்மவ பவுசியா பெத்த மவளே!! பேத்தியை அள்ளி மடியில் வைத்துக் கொண்டார். எஞ்சியிருந்த மீதங்கள் தம் குட்டி உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆவல் பொங்க மீதக்கதையை எதிர் நோக்கி காத்திருந்தன‌.

அப்ப ஆலிம் பட்டத்துக்காக நாலைஞ்சி பெரிய புள்ளைஹளும் அவருகிட்ட ஓதிச்சிங்களாம். ஒரு நா வெள்ளிக்கெழம ரவ்வு, பேய் மழ பேஞ்சி ஊரெல்லாம் வெள்ளக்காடாயி, இங்க மாதிரி அங்கனயும் கரெண்ட்டு கட்டாயிருச்சாம். சத்தம் போட்டு ஓதிக்கிட்டிருந்த புள்ளைஹ அம்புட்டும் இருட்டுல கொர்வான் தாள பாக்க முடியாம ஓதுறத நிறுத்திச்சுங்களாம்.

லைட்டெல்லாம் அமந்தவொடன ஒருத்தரு மொவத்த ஒருத்தர் பாக்க முடியாம‌ பள்ளியாச முழுசும் ஒரே இருட்டுக்கசம். கடைசி பெஞ்சில யஸ்ஸர்னல் கொர்வான் ஓதிக்கிருந்த நெட்டப்பயல பாத்து அசர்த்து "அடேய் ரஹ்மான்..உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுத்துக்கிட்டு வாறையா? ன்னு கேட்டாராம்.

"இருட்டுக்கீண்டு கடக்குல்ல...யாருக்கும் தெரியவாப்போவுதுண்டு உக்காந்த மேனியே உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுக்க ரஹ்மான் பெரிய‌ கைய நீட்டினாப்ளயாம். மூணு நாலு அடிக்கு கை நீண்டு துளாவி வெளக்க எடுத்துக்குடுக்கவும் அசர்த்துக்கு பக்குனு ஆயிருச்சாம். அவரு கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு பாருங்க..!! அட அல்லாவு நாயனே ! நாம இத்தன நாளு ஜின்னுக்கா ஓதிக்குடுத்துட்டு இருந்தோம்னு அசந்து வேர்த்து விறுவிறுத்து போச்சாம்.



நன்னா எச்சிப்பணிக்கையில் புளிச் என்று துப்பிக் கொண்டார்.கோடியில் அமர்ந்திருந்த பேரன்மாரு ரெண்டு பேரும் ஓடிவந்து நன்னாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். மற்ற‌ பிள்ளைகள் அருகிலிருந்த இடைவெளிகளை நிரப்பி நெருங்கி அமர்ந்தனர். கேட்டா கொசு கடிக்குதாம். குளிருதாம்.அப்புறம் என்ன ஆச்சாம் நன்னா..?

அதுக்கு பொறவு ஒருநா மதியம் பள்ளிவாசல் கொள்ளப்புறம் இருக்க‌ கிணத்தடில குளிச்சிக்கிட்ருக்கும் போது உக்காந்த மேனிக்க‌ கைய நீட்டி சோப்ப எடுத்திச்சாம் அந்த ஜின்னு.இதையும் அசர்த்து பாத்தாராம். இதுக்கு மேல தாங்காதுனு மக்யா நாளு கூப்பிட்டு பேசிட்டாராம்.

"ய‌ப்பா ர‌ஹ்மான். நீ ஜின்னுன்ற‌ விச‌ய‌ம் என‌க்கு தெரிஞ்சி போச்சி.நானா இருக்க‌க்க‌ண்டு ப‌ய‌ப்ப‌ட‌ல.இதுவே ம‌த‌ர‌ஸாவுல‌ உள்ள‌ ம‌த்த‌ சின்ன‌ புள்ளைஹ‌ பாத்துச்சி‌ண்டா ப‌ய‌ந்து ஜூர‌ம் வ‌ந்துரும். நீ இன்னிக்கே அஞ்சு ம‌ணி ப‌ஸ்ஸ‌ பிடிச்சி உங்க‌ ஊர‌ப்பக்க‌ம் பாத்து கிள‌ம்பிரு ராசா"

போ மாட்டேன்னு அழுது அடம்பிடிச்சி அசர்த்துக்கிட்ட கெஞ்சி கேட்டுச்சாம் அந்த ஜின்னு. அசர்த்து கறாரா பேசிட்டாராம். பொறவு வேற வழியில்லாம பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புள்ளையள பாத்து அலுதுகிட்டே மதரஸாவிட்டு போச்சுதாம் .

ஜின்னு நல்லதா கெட்டதா நன்னா ?

அது நம்ம மாரி மனுசரு கைலதேம் இருக்கு !! ஒழுங்கா சுத்தபத்தமா இருந்தம்னா ஜின் நம்மள அண்டாது. நடுநிசிக்கு மேல குளிப்பு இல்லாம பள்ளியில தூங்கிட்டிருந்த புள்ளைஹள குளத்துல தூக்கி வீசுன ஜின்களும் இருந்துச்சி.வெளக்கு வெக்கிற நேரம் தனியா வர்ற வயசு புள்ளையகிட்ட சில்மிசம் பண்ண ஜின்களும் இருக்கத்தான் செஞ்சிச்சி.

இது போவ ஜின்கள வசியப்படுத்தவும் செய்யலாம்.நல்லா ஓதிப்படிச்ச அசர்த்து மாருங்க ஒன்னா உக்காந்து ரவ்வு பூரா கொர்வான் ஓதினா மசிஞ்சிரும்.ஆனா நடுப்பற வந்து பேய் மாதிரி பயமுறுத்தும்.எம்புட்டு ப‌ய‌முறுத்துனாலும் அசையாம‌ ஓதிக்கிட்டே இருக்க‌ணும். லேசா அச‌ஞ்சோம்..போச்சி..அம்புட்டு தான் ச்சோலி. பயந்துட்டம்னா ஒரே அடியா அடிச்சிரும்.அதோட ம‌ய்ய‌த்து தே.

"வசியப்படுத்திட்டா என்ன ஆவும் நன்னா"?"

வசியப்படுத்திட்டா நீ சொல்றதெல்லாம் செய்யும்.கேக்குறதெல்லாம் எடுத்துட்டு வந்து தரும்.

"குல்பி ஐஸ்? "

குல்பி பானையே எடுத்துட்டு வந்து தரும்.

"ஹைய்!"

சரி சரி! காத்துல‌ குத்துவிளக்கு அமரப்போவுது. அடேய் நைனார் மவனே..உள்ள போய் அந்த சிம்னி விளக்க எடுத்துட்டு வர்றியா ? "

மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.

*********************

மனிதர்களைப் போல‌வே ஜின்களுக்கும் ஒரு தனி அமானுஷ்ய உலகமிருக்கிறது என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.குர் ஆனில் 35 இடங்களில் ஜின்களைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.மனித இனத்தை படைப்பதற்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், ஆதம் நபிக்கு முன்னர் ஜின்கள் இருந்ததாக குறிப்புகள் தெளிவாக இல்லை. இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் தானிருக்கின்ற‌ன‌.

வழக்குச் சொற்கள்: க‌ராமத், குத்ற‌த்து‍‍‍---பராக்கிர‌ம‌ங்க‌ள்; அச‌ர்த்து---இஸ்லாமிய‌ க‌ல்வி க‌ற்ற‌ மார்க்க‌ அறிஞ‌ர் ( ஹ‌ழ்ர‌த்); ந‌ன்னா,ந‌ன்னி‍‍--தாத்தா பாட்டி; ம‌த‌ர‌ஸா--இஸ்லாமிய பாட‌சாலை;ம‌ய்ய‌த்து--பிண‌ம்.

****

நன்றி: உயிரோசை
இணைய இதழ் (08 டிசம்பர் 2009)


------------------------------------

Monday, November 23, 2009

ஆதியின் ஹாலிடேஸ் சிறுகதைக்கான‌ முடிவு

ஆதிமூலகிருஷ்ணனின் ஹாலிடேஸ் கதைக்கான என்னுடைய முடிவு:

************

மூவருக்கும் தூக்கிச்சட்டியை கிணற்றுத் திண்டின் மீது வைத்து விட்டு அகிலா வேப்பமரத்தடி சாலையில் மறைந்து போனாள்.

அகிலாவின் இளமை பூசிய ஸ்தனங்களும் கருத்த உதடுகளும்
இளநீரில் கலந்த கள்ளை விட விஜய்க்கு அசாத்திய‌ கிளர்ச்சியை உண்டு பண்ணின.சசிகுமார்,ஹிமான் என்று தடாலடியாக அவனுக்கு இரண்டு அந்தரங்க எதிரிகள் உருவாக அக்கிளர்ச்சி காரணமாக‌ இருந்தது.

கறிச்சோறு தொண்டைக்குழிக்குள் இறங்கும் வரை மூவரும் நண்பர்களாகவே சிரித்து பேசினர்.நண்பர்களாகவே தென்னை மரத்தடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.அகிலாவை பார்த்த கணம்,அகிலா என்று சத்தம் போட்டு கூப்பிட இருவருக்குமே தைரியம் போதவில்லை தான்.

ஆனால் விஜயை போல சசி இல்லை.அகிலாவின் செழித்த பெண்மை குறித்தான பிரக்ஞையே வளராத காலகட்டங்களிலிருந்து அவளோடு பழகியவன் என்பதால் விஜய்க்கு சசி மேல் லேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.

திடீரென்று இரு நண்பர்களிடையே பூமி பிளவுற்று இரு வேறு உலகில் நின்று கொண்டிருந்தனர்.ஹிமான் உண்ட களைப்பில், ஏற்கெனவே உறங்கி விட்டிருந்தான்.விஜய்,சசி இருவரும் கண்களை மட்டும் மூடியிருந்தனர்.மர நிழலினூடே குத்திட்ட சூரிய கற்றைகள் கண்கள் கூச இருவருமே சிறிது நேரத்திற்கு பிறகு,அகிலா குறித்த‌ சிந்தனைகளோடு உறங்கிப் போயினர்.

திடீரென்று தென்னைக்குரும்பை ஒன்று மரத்திலிருந்து கயிற்றுக்கட்டிலின் வெகு அருகாமையில் விழ, இருவருக்குமே விழிப்பு தட்டியது.அதே நேரம் பம்பு செட்டின் அருகே ஒரு பெண்ணின் அரவம் காற்றைக்கிழித்து வந்தது.

பர‌பரப்போடு ஓடிச்சென்று இருவரும் பம்பு செட்டின் அறையை அடைந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி !!

"தும் முஜே ச்சோட்கே கஹாங் கயா தே சொனாலி !!! சொனாலி !! கஹாங் கயா தே சொனாலி !!!" அகிலாவை வலுக்கட்டாயமாக கட்டியணைக்க முயன்று கண்களில் நீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தான் ஹிமான்.


**************

Sunday, November 15, 2009

வலைச்சர வாரம்

அன்பு நண்பர் சீனாவின் அன்புக்கட்டளையை ஏற்று,இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதவிருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன்.

இணைந்திருங்கள் !!!

இன்றைய வலைச்சர அறிமுகப்பதிவு

**********

Tuesday, November 3, 2009

பிடித்தும் பிடிக்காம‌லும்

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ ஆதிமூல‌கிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

************************

தலைவர்

பிடித்தவர்: பழ.நெடுமாறன் ( இன்றளவும் ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடுவ‌தால் )
பிடிக்காத‌வ‌ர்: ராமதாஸ்

நாடக 'கலைஞர்'

பிடித்தவர்: அதான் சொல்லிட்டேன்ல. ( காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்குமான‌ இடைப்பட்ட வேளையில் உண்ணாவிரதம் இருந்ததற்காக )
பிடிக்காத‌வ‌ர்: திருமா( அங்க போயி, பல் இளித்து விட்டு,இங்க வந்து ராஜபக்சே போர் குற்றவாளி என்று கூவியதற்காக )

நடிகர்

பிடித்தவர்: கமலஹாசன்
பிடிக்காத‌வ‌ர்: ரஜினிகாந்த் ( த‌ற்போது )

ந‌டிகை

பிடித்தவர்: ஷோபா ( நிழ‌ல் நிஜ‌மாகிற‌து என்ற ஒரு ப‌ட‌த்திற்காக‌ )
பிடிக்காத‌வ‌ர்: ராதிகா

வ‌ச‌ன‌க‌ர்த்தா

பிடித்தவர்: கிரேஸி மோக‌ன்
பிடிக்காத‌வ‌ர்: கெள‌த‌ம் மேன‌ன் ( ப‌டத்தோட தமிழ் டப்பிங் எப்ப வரும்னு கேக்க‌ற அள‌வுக்கு ஆங்கில‌ க‌ல‌ப்பு செய்வ‌தால் )

வ‌லையுல‌க‌ க‌விஞ‌ர்

பிடித்த‌வ‌ர்: கடல்புறா பாலா ( மரண ரசனைக்காக ! )
பிடிக்காத‌வ‌ர்: அ.மு.செய்ய‌து ( ஒரு வெள‌ம்பர‌த்திற்காக‌ ! )

எழுத்தாள‌ர்

பிடித்தவர்: வ‌ண்ண‌நில‌வ‌ன் ( 'கட‌ல்புர‌த்தில்'காக‌ )
பிடிக்காத‌வ‌ர்: ஜெயமோகன் ( 'ஊமைச்செந்நாய்' நாவலுக்காக‌வும் அதிமேதாவி க‌ருத்துக‌ளுக்காக‌வும் )

பெண்கவிஞர்

பிடித்தவர்: சல்மா
பிடிக்காதவர்: தாமரை

பாடகர்

பிடித்தவர்: எம்.எம்.அப்துல்லா
பிடிக்காதவர்: சங்கர் மகாதேவன்

***********************

மூன்று நாட்க‌ள் கெடு விதிக்க‌ப்ப‌டுகிற‌து. ப‌திவை தொடர‌ நான் அழைப்ப‌து,

1.அபுஅஃப்ஸ‌ர்
2.ரம்யா
3.நவாஸுதீன்
4.அமிர்தவர்ஷினி அம்மா
5.ஹூசைன‌ம்மா
6.விசா

***********

Sunday, November 1, 2009

இன்னுமொரு நாடகம்-2 (சிறுகதை)

முத‌ல் பாக‌ம்


*******************பாகம்-2**************************************

ஒரு சாக்பீஸ் துண்டை இரண்டாக பிளந்து அவளிடம் தருவேனாம். அவ‌ள் அதை இன்னும் சிறுசிறு துண்டுகளாக்கி என்னிடம் தருவாளாம்.நான் அந்த சிறு துண்டுகளை மேலும் நறுக்கி அவள் உள்ளங்கையில் திணிப்பேனாம்.இப்படி விரல்கள் மாற்றி மாற்றி அவள் கைகளில் சாக்பீஸ் துண்டு பொடியாகி, மேலும் சிறிதாக்க முடியாமல் தோல்வியின் பொய்க்கோபத்தில் மிச்சமிருக்கும் சுண்ணாம்பு பொடிகளை என் கன்னத்தில் அப்பி விட்டு ஓடிவிடுவாள். ஒத்திகை என்ற பேரில் இன்னொரு ரகசிய நாடகம் திரைமறைவில் எங்களுக்காக பிரத்யேகமாக‌ அரங்கேறிக் கொண்டிருந்தது.அவளுடனான‌ பொற்கணங்களை இழக்கிறோமோ என்ற வருத்தத்தை விட,என் அந்தரங்க‌ எதிரியான (குளோரியா மேரியைப் பொறுத்தமட்டில்) ஹேமந்த் பாபுவுடன் நடிக்க போகிறாளே என்ற ஆற்றாமை தான் பிய்த்து தின்றது.

ம‌றுநாள் ச‌னிக்கிழ‌மை காலை 10 ம‌ணிக்கு தொட‌ங்கவிருந்த‌ ஒத்திகை,மேரி வ‌ராத‌தால் தாம‌த‌மான‌து.சிறிது நேர‌ம் க‌ழித்து,சி செக்ஷன் சும‌தி வ‌ந்து கிரேஸி மிஸ் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.அத‌ன் பிற‌கு,சுமார் மூஞ்சி சும‌தியே ஜூலிய‌ட்டாக ந‌டிப்ப‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.ஹேம‌ந்த் பாபு ஏமாந்த‌ பாபுவானான்.அற்ப‌ ச‌ந்தோஷ‌த்தில் நான் மெலிதாக‌ சிரித்த‌து மேரிக்கு கூட‌ கேட்டிருக்கும்.

ஒரு வார‌ம் மேரி ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை.இருப்பு கொள்ளாம‌ல் சைக்கிளின் முன் க‌ம்பியில் அந்தோணி சாமியை கிட‌த்திக் கொண்டு நாலைந்து நாட்க‌ள் அவ‌ள் வீட்டின‌ருகே அலைந்து திரிந்தேன்.ஒரு வழியாக‌ நான்காவ‌து நாள் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைத்து கொண்டு, வாச‌லில் க‌றிகாய் வாங்கிக் கொண்டிருந்த‌ அவ‌ள் அம்மாவிட‌ம் மேரி வ‌ராத‌தை ப‌ற்றி விசாரித்தேன்.கார‌ணத்திற்கு அவ‌ள் என்னிட‌ம் வாங்கியிருந்த‌ புவியிய‌ல் நோட்டை துணைக்கு அழைத்தேன்.மேரிக்கு மேலுக்கு முடிய‌லை என்றும் இர‌ண்டொரு நாளில் ப‌ள்ளிக்கு வ‌ந்து விடுவ‌தாக‌வும் ஆன்ட்டி சொன்னார்க‌ள்.பிற‌கு என்ன‌ நினைத்தார்க‌ளோ.ஒரு நிமிஷ‌ம் இருப்பா மேரியை கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு க‌ன‌த்த உருவம் மேரிரீய்ய் என்று கூவிக்கொண்டே வீட்டிற்குள் ம‌றைந்த‌து.ஒரு வேளை நான் அணிந்திருந்த‌ குவிஆடி சைஸை பார்த்து ந‌ம்பியிருக்க‌க்கூடும் என்று சிரித்த அந்தோணி சாமியை வாச‌லிலேயே இருத்தி விட்டு, நான் ம‌ட்டும் வ‌ராண்டாவிலிருந்த‌ சேரில் காத்திருந்தேன்.சிறிது நேர‌த்தில் பான்ஸ் ப‌வுட‌ருட‌ன் க‌ல‌ந்த ம‌ல்லிகை ம‌ண‌ம் குபீரென்று அவ்விடத்தை நிறைத்தது.ஒரு தாவ‌ணிப் பெண். ம‌ங்கிய‌ வெளிச்ச‌த்தில் நான் க‌ண்ட அந்த உருவம் வாழ்நாளில் ம‌ற‌க்க‌வே முடியாது.கதைகளில் வரும் கடற்கன்னியை போல் மாறிவிட்டிருந்தாள். ம‌ஞ்ச‌ள் பூசிய‌ முக‌ம்,புதிதாய் வெட்க‌ம்,லேசான‌ த‌ய‌க்க‌ம்,குறுகிய‌ இடைவெளி விட்டு ந‌டை, விம்மிப்பூரித்த‌...ச‌ரி வேண்டாம். ஒரு பெண்மையின் ப‌ரிபூர‌ண‌ ஸ்ப‌ரிச‌த்தை வெகு அருகாமையில் அதுவும் அந்த‌ ம‌ல்லிகைப்பூ வாடை அருகில் வ‌ர‌ வர க‌ண்க‌ள் சுர‌ந்து விட்ட‌து.நான் இதுவ‌ரை பார்த்திராத‌ மேரி.

ஒரு வார்த்தையோ அல்லது ஒரு தொடுதலோ இருவரிடையே இருந்த ஒரு மெல்லிய‌ திரையைக் கிழித்தெறிய போதுமானதாக இருந்திருக்கும்.நான் தான் முதலில் ஆரம்பித்தேன்.

'உன‌க்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு அம்மா சொன்னாங்களே'.

'நாந்தான் புவியிய‌ல் புக்க போன‌ வார‌மே கொடுத்துட்டேனே.ஏன் எங்க அம்மாகிட்ட பொய் சொன்ன !!'.

அந்த‌ வ‌ருட‌ம் முழுதும் நாள் த‌வ‌றாம‌ல் இதே கேள்வியை என்னிட‌ம் கேட்டுக் கொண்டேயிருந்தாள். தொல்லை தாங்க‌ முடியாம‌ல் ஒருநாள் Mercy twice blessed நாட‌க‌ம் முடிந்து கொட்டும் ம‌ழையின் பின்ன‌ணி இசையில் அவ‌ளிட‌ம் உண்மையை ஒப்புக்கொண்டேன்.

அப்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் ம‌றுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்ன‌கைத்த‌து செய‌ற்கையாக‌ இருந்த‌து.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாட‌த்தில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் என்று அடுத்த‌டுத்த‌ நாடக‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ம‌றுத்து விட்டாள்.அத‌ன் பிறகு ஒரேயொரு முறை சூசைய‌ப்ப‌ர் ந‌வ‌நாள் விழாவின் போது கையில் செம்பருத்தி பூக்களை வைத்துக் கொண்டு "அசிஷ்ட‌ மரியாயே.ச‌ர்வேசுவே மாதாவே" என்று மைக்கில் ஜெபித்ததும், மச்சி உன் ஆளுக்கு செம கண்ணுடா! என்று மாப்பிள்ளை பெஞ்சு சிலாகித்ததும் மட்டும் நினைவில் இருக்கிறது.

கடைசியாக போட்ட வேடம் எமன் தான்.அதன் பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக நாடகங்களில் நடிப்பதை அறவே நிறுத்திக் கொண்டேன்.அட்டைக்கத்திகளும் வாடகை மீசை தாடி போலிப்பூச்சுகளும் சலிப்புத்தட்ட ஆரம்பித்தன.நாங்கள் எழுதிய எல்லா நாடகங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஒருவித யதார்த்தமின்மையும், தட்டையான பொய் வசனங்களும் பின்னாளில் எங்களைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தன.நாடகங்கள் குறித்த கனவுகள் யாவும் நீர்த்துப் போய்,மலைப்பாம்பின் பிடியைப் போல வெறுமையின் அசுரத் தழுவல் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க், பன்னிரெண்டாம் வகுப்பில் புதிய நண்பர்கள்,மொட்டை மாடி கச்சேரிகள் என நேரத்தை வீணாக்கி, ஊர்சுற்றி குறைந்த மதிப்பெண் பெற்று,பாலிடெக்னிக்கில் சேர்ந்து, அங்கும் கட் அடித்து பஸ்ஸில் தொங்கி,லேட்ரல் என்ட்ரி ம‌கேஸ்வ‌ரிக்கு SMS அனுப்பி அனுப்பி நோக்கியாவின் கீ-மேட் த‌ட‌ம் அழித்து, பிராக்டிக‌ல் எக்ஸாம் காலைய‌ன்று ரெகார்ட் ச‌ப்மிட் ப‌ண்ணி,ஒருவ‌ழியாக‌ கேம்ப‌ஸில் வேலை கிடைத்து பெங்களூர்,ஹைதராபாத் கொச்சின் என்று பந்தாடப்பட்டு கடைசியில் லோனாவாலாவில் செட்டில் ஆகி, தசராவுக்கு கிடைத்த ஏழு நாள் விடுமுறையில் இப்போது தான் ஊருக்கு வருகிறேன்.

அரசு மானியம் பெறும் பள்ளி என்பதால் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு எங்கள் பள்ளியில் தான் அமைத்திருந்தார்கள்.வெள்ளனயே அந்தோணி சாமி வந்து பல்சரில் என்னை அலேக்கி விட்டான்.பல நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்ததால் கிடைத்த பலவந்த உபசரிப்பில் ஏழெட்டு இட்லிகள் நெய்யோடு உள்ளே போய் எதுக்களித்தன.லுங்கியில் சென்றதால் எழுந்த‌ த‌ர்ம‌ ச‌ங்க‌ட‌த்தில் கிரேஸி மிஸ் இருந்த அறையை கண்டுங்காணாதது போல கடந்து சென்று,வேறொரு பூத்துக்குள் நுழைந்து கொண்டேன்.வாக்காளர் சீட்டில் இருந்த என் பெய‌ரைத் தேடி கையெழுத்து போட‌ முனைந்த‌ போது, ஹேய்ய்..அப்துல் !! என்று தோளில் ஒரு மென்மையான‌ கை. திரும்பினால் லிட்டில் ஃபிள‌வர் மிஸ்.எப்ப‌டிடா இருக்க‌..ஆளே மாறிட்டான்ல மிஸ்...என்ன‌டா ப‌ண்ற‌..எத்தன‌ வ‌ருஷ‌மாச்சுல‌ருந்து ஆரம்பித்து அம‌லோற்ப‌ம் பிரின்ஸி ரிடைய‌ர்ட் ஆன‌து வ‌ரை சொல்லி முடித்தார்க‌ள்.

வித‌விதமான‌ வ‌ண்ண‌ங்க‌ளில் எடுக்க‌ப்ப‌ட்ட எங்க‌ள் நாட‌க‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் புது பிரின்ஸியின் அறையில் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன.க‌ண்க‌ள் விரிய‌ பார்த்துக் கொண்டிருந்தோம். க‌ட‌வுள் உன்ன‌ எப்ப‌டி ஆசிர்வ‌திச்சிருக்கார் பாரு !! நீ ந‌ல்லா வ‌ருவ‌ன்னு அப்ப‌வே தெரியும். என்ற‌ அவ‌ர்க‌ளின் அன்பின் வார்த்தைக‌ளில் நெகிழ்ந்து நின்ற‌ போது தான் அந்த‌ அறையின் இட‌து ஓர‌த்தில் அந்த‌ புவியிய‌ல் புத்த‌க‌ம் த‌ட்டுப்பட்ட‌து.க‌டைசி ப‌க்க‌த்தில் லிப்ஸ்டிக் கறைகளோடு ம‌ங்க‌லாக‌ எழுத‌ப்பட்டிருந்த‌ என் பெய‌ர், மேரியின் கையெழுத்து தான் என்று அந்தோணி சாமி அடித்துச் சொன்னான்.


(முற்றும்)

*******************************

Wednesday, October 21, 2009

இன்னுமொரு நாடகம் (சிறுகதை)

மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்ட‌து.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று ப‌ய‌முறுத்திய‌து. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊச‌லாடிக் கொண்டிருந்த‌து.அடிவ‌யிற்றை முட்டிய‌ ஒன் பாத்ரூமை அட‌க்கிக் கொண்டு "பாபிலோனிய‌ ம‌ன்ன‌ர் த‌ரியூ..பராக் ப‌ராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்ப‌ட்ட‌ கால‌ர் மைக்கில் சொல்ல‌ வேண்டும்.பாபிலோனிய‌ ம‌ன்ன‌ருக்கு எப்ப‌டி த‌மிழ் தெரியும் என்ற லாஜிக்கெல்லாம் யோசிக்க‌ நேர‌மில்லை.கொடுக்கப்பட்ட‌ வாயிற்காப்போன் வேட‌த்தைச் ச‌ரியாக‌ செய்ய‌ வேண்டுமென்ப‌து த‌ற்காலிக‌ க‌வலை. ஒன்ப‌தாம் வகுப்பு மாண‌வ‌ர்க‌ளுக்கு நாட‌க‌ங்க‌ளில் இது போன்ற‌ ஒப்புக்குச்ச‌ப்பான் வேட‌ங்க‌ள் தான் கொடுக்க‌ப்ப‌டும்.ம‌ன்ன‌ராக‌ வேண்டுமென்றால் ஃப்ள‌ஸ் டூவில் க‌ம்பியூட்ட‌ர் ச‌யின்ஸ் எடுத்திருக்க‌ வேண்டும்.

படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்.இப்போது செய்து கொண்டிருக்கும் வாயிற்காப்போன் வேடமாவ‌து ப‌ர‌வாயில்லை.க‌ட‌ந்த‌ ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேட‌ம் த‌ந்தார்க‌ள்.அடுத்த‌ முறை த‌மிழ் ம‌ன்ற‌ விழாவின் போது சாக்ர‌ட்டீஸூக்கு விஷ‌ம் வைக்கும் மெலீட்ட‌ஸ் கேர‌க்ட‌ர் த‌ருவ‌தாக லிட்டில் ஃபிள‌வ‌ர் மிஸ் ப்ரா'மிஸ்' ப‌ண்ணியிருந்தது கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருந்த‌து.

ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்க‌லில் மிள‌கு போல‌ ஒதுக்கி வைப்பார்கள்.முரட்டு சைஸ்,மூணு பவர் மூக்கு கண்ணாடியும்,முக்கா கால் பேண்ட்டுமாக அலையும் முதல் ரேங்க் மாணவர்கள் எப்போதும் த‌னித் தீவாக‌த்தானிருக்க‌ வேண்டும்.எந்த‌ கேங்கிலும் சேர்த்து கொள்ள‌ மாட்டார்க‌ள்.ம‌ச்சி..இவன் தான் க‌ண‌க்கு மிஸ் ஜோஸ்பினோட‌ spy டா..அவ‌ன் இருக்கும் போது பாத்து பேசுங்க‌..என்று அபாண்ட‌மாக‌ ச‌ந்தேகிப்பார்க‌ள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.

புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியின் நாடக மேடைகளில்,கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்.குருட்டு பெற்றோரை கூடையில் சுமக்கும் சிரவணனாகவும்,ச‌மூக‌விய‌ல் டீச்ச‌ர் காந்திம‌தியின் இஸ்திரி போட்ட‌ சேலையை அங்கியாக‌ உருமாற்றி, பைபிள் கேரக்டர் யாக்கோபுவாகவும்,இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலிய‌ன் வாலாபாக் ப‌டுகொலைக்கு கார‌ண‌மான‌ ஜென‌ர‌ல் ட‌யரை ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு பின் சுட்டு கொன்ற‌ உத‌ம் சிங்'காக‌வும், கடைசி நேரத்தில் என் ஆத‌ர்ச‌ காஸ்ட்யூம் ஸ்பான்ஸர் இருதயராஜ் காலை வாற, வேட்டி கிடைக்காமல் பள்ளிக்கூடத்து பக்கத்து வீட்டுக்காரன் ஜான்பீட்டர் லுங்கியை கட்டிக் கொண்டு ஆசிரியராகவும்,( ம‌ச்சான் லுங்கில‌ நீ ந‌ம்ம‌ பேட்ட‌ ர‌வுடி கணக்கா மெர்சிலா இருந்த‌..என்று மாப்பிள்ளை பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது வேறு விஷயம் ) அழுக்கு ஜட்டியை ச‌ர்ஃப் எக்ஸ‌லில் ஊற வைத்ததைப் போலவும்,க‌ருப்ப‌ட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார‌ ஜாக்ச‌ன் துரையாக‌வும், இப்ப‌டி நிறைய "ஆக‌வும்" நான் ந‌டித்ததைப் ப‌ற்றி ஒரு நெடுந்தொட‌ரே எடுக்க‌லாம்.

எங்கள் தமிழ் மீடியமும், சேட்டு பிள்ளைக‌ள் நிறைந்த‌ கான்வென்ட்டும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்திருந்தன.இரண்டு பள்ளிகளும் ஒரே குழுமத்தை சேர்ந்தவை என்பதால் ஆண்டு விழா உட்பட எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகத்தான் நடக்கும். எந்த விழாவாக இருந்தாலும், கான்வென்ட் தரப்பிலிருந்து குறைந்தது நான்கைந்து மேற்கத்திய நடனங்கள் தயாராகி விடும். பிரிட்டினி பியர்ஸ்,ஜெலோ என்று மெட்ரிகுலேசன் குட்டைப்பாவாடை குருவிகள் ஒருபுறம் சிறகடிக்க..பூலித்தேவன்..ஊமைத்துரை,பாரதியார் என எங்கள் தமிழ் மீடிய நாடகப்பட்டறை காத்து வாங்கும்.அத்தி பூத்தாற் போல‌ கைத‌ட்ட‌ல்க‌ள் அள்ளும் எங்க‌ள் நாட‌க‌ குழுவின் ந‌ட்ச‌த்திர‌ நாய‌க‌ன் சுப்புர‌ம‌ணி, 11ம் வகுப்பு சேர வேறு ப‌ள்ளிக்கு சென்று விட்டதாலும், ஒலிபெருக்கிகளும் மைக்குகளும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டதாலும், ஏறத்தாழ நாங்கள் போட்ட அனைத்து நாடகங்களும் ஃபிளாப் ஆனது. சகாக்கள் ரொம்பவும் சோர்ந்து போயினர்.

ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓர‌ள‌வு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது.ரோமியோவாக‌ நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும். ஆஹா..ராவெல்லாம் தூக்கம் வராமல்..ரத்தத்திலகம் சிவாஜி ஒத்ஸெல்லோ ஸ்டைலில் போர்வைக்குள் வசன ஒத்திகை நடந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சம்மர் சால்ட் அடித்தன.மேரியின் விரல்களை தொடுவதே ஒரு சம்போகம் தான்.எங்களுக்குள் மெளன தீட்சண்யமாக ஒரு உறவு அரங்கேறி கொண்டிருந்ததை நான் ம‌ட்டுமே ந‌ம்பினேன்.ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.

( மீதி விரைவில்..)

************************************************

Monday, October 19, 2009

முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று




எழுத்துல‌கில் வெகு அபூர்வ‌மாக‌த்தான் நிக‌ழ்கின்றன‌ இது போன்ற‌ ப‌டைப்புக‌ள்.கவிஞ‌ர் ச‌ல்மாவின் க‌விதைக‌ள் பெரும்பாலும் பெண்க‌ளின் வாழ்விய‌ல் போராட்ட‌ங்க‌ளையும் அவ‌ல‌ங்க‌ளையும் உண‌ர்வுப்பூர்வ‌மாக எடுத்துரைக்கும்.அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளுள் ஒன்று அதிகாலையில் பார்த்த மாத்திரத்திலென் முகத்திலறைந்தது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீள வில்லை.


இரண்டாம் ஜாமத்துக் கதை
****************************

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய

இரவுகளில்

பழகிய நிர்வாணத்திற்கிடையில்

அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்

என் அழகின் களங்கமின்மையை



பெருத்த உடலும்

பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்

ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்

சொல்கிறாய்

இன்றும் இனியும்

எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்



நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டிருக்கும் என் குரல்

தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்

என் உடலைப் போலல்ல

உன்னுடையது

பறைசாற்றிக்கொள்வதில்

வெளிப்படையாக இருப்பதில்



இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்



நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்

இந்தப் பிரசவக் கோடுகளும்

எளிதில் செப்பனிட முடிவதில்லை

வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை



உன்னைக் காட்டிலும்

மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது

இயற்கை எனக்கு

உன்னிலிருந்துதானே தொடங்கிற்று

எனது தோல்வியின் முதலாவது நிலை



முதல் ஜாமத்தைக் காட்டிலும்

விபமுதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்



சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டிலமர்ந்து

உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது


************************