மழைக்கு ஒதுங்கியவை...

Thursday, February 16, 2012

இனப்படுகொலை வெர்ஷன் 2.0 - முறியடிப்பது எப்படி ?



உலகெங்கும் அணு உலைகளுக்கெதிராக எதிர்ப்பு இயக்கங்கள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வெதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த வரலாறு மிகப்பழமையானது. அணு உலைகளை ஆதரிக்கும் ஜப்பானிலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் தான் உக்கிரமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2001 ஐரோப்பிய கமிஷன் எடுத்த ஒரு சர்வே, வெறும் 10.1 விழுக்காடு ஐரோப்பியர்கள் மட்டுமே அணு சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 80-க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கின்றன. 1982-ல் நியூயார்க் நகரில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு போராட்டம் (அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய அணு உலை எதிர்ப்பு) நடந்தேறியிருக்கிறது.

அணு உலைகளே இல்லாத ஆஸ்திரேலியாவில் கூட அணுசக்திக்கெதிராகவும் யுரேனியம் வெட்டி எடுப்பதை எதிர்த்தும் அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் (CANE) போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஆஸ்திரியா, க‌ன‌டா, ஜெர்ம‌னி, பிரான்ஸ், க‌ஸக‌ஸ்தான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி, போல‌ந்து, தைவான், சுவிட்ச‌ர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் என‌ எல்லா நாடுக‌ளிலும் இவ்விய‌க்க‌ங்க‌ள் போராடி வ‌ருகின்ற‌ன. இவர்களுக்கெல்லாம் எந்நாட்டிலிருந்து நிதி வருகிறதென்றோ அல்லது எந்த மிஷினரியின் பின்புலம் வேலை செய்கிறதென்றோ நமது தினமலரும் நாராயணசாமியும் ஒரு கலந்தாய்வு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். எல்லா இயக்கங்களின் முழக்கம் ஒன்று தான். அது மக்கள் நலம். மக்களின் வாழ்வாதாரங்களுக்கெதிராக அரசோ நாட்டின் வளர்ச்சியோ அணு உலைகளோ முக்கியமல்ல என்பதே அனைத்து போராட்டங்களின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த இரண்டாமாண்டு நினைவு தினம். சோவியத் யூனியனின் குர்சட்டாவ் என்கிற அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதல் இயக்குனரான வாலெரி லெகசோவ் தனது அபார்மென்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னாளில் தெரியவந்த‌ லேகசோவ் தற்கொலைக்கான காரணங்கள் ரஷ்யாவையே உலுக்கின. லெகசோவின் தற்கொலை ரஷ்ய அணுசக்தி கழகத்தின் மீதான‌ மிகப்பெரிய ஐயப்பாட்டையும் அதிர்ச்சி அலைகளையும் மக்களிடையே தோற்றுவித்தது. ரஷ்ய‌ அணுசக்திக் கழகத்தின் அம்பலமாகாத ரகசியங்களை வெளிப்படையாக‌ பேச முடியாத தொடர் மன அழுத்தமே தனது தற்கொலைக்கான காரணமாக லெகசோவ் தனது இறுதி ஆடியோடேப்பில் பதிவு செய்திருக்கிறார். செர்னோபில் அணு உலைகளின் வடிவமைப்பில் இருந்த‌ தொடர் குளறுபடிகளும் கன்ட்ரோல் ராடுகளின் பிரச்சினைகளும் அந்த நிலைய ஆபரேட்டர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம். அனைத்து உண்மைகளையும் விபத்து நடந்ததற்கு பின் ஒப்புக் கொள்ள வேண்டி வந்த மிகப்பெரிய துயரம் அவரை பெருமளவில் பாதித்திருக்கிறது.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் லெகசோவின் தற்கொலை என்பதை விட, அவர் தற்கொலைக்கு ஆகிருதியான காரணியாக விளங்கிய செர்னோபில் அணு உலையின் நம்பகத்தன்மையும் ரஷ்ய அணுசக்திக் கழகத்தின் பொய்யுரைகளுமே. கூடங்குள‌மும் செர்னோபிலும் ஒத்த‌ வ‌டிவ‌மைப்புடைய‌வை என்ப‌து நம் அனைவருக்கும் தெரிந்த‌ உண்மை.

ப‌ல ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை அணு அணுவாய் கொன்று குவித்த‌ அதே செர்னோபில் தான் இப்போது கூடங்குள‌த்தில் ம‌றுபிற‌வி எடுத்திருக்கிற‌து. 16 ஆண்டுக‌ளுக்கு முன் ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ ஒரு மாபெரும் வ‌ர‌லாற்றுத்துய‌ர‌ம் மீண்டும் நிக‌ழக் காத்திருக்கிற‌து. அதே வடிவமைப்பு, அதே காரணங்கள், அதே பொய்கள். எல்லா உண்மைகளையும் தெரிந்தே தான் ரஷ்யா, விபத்திற்கான இழப்பீட்டைத் தர முடியாது என்ற நிர்பந்தத்தில் இந்திய அரசை கையெழுத்திட வைத்திருக்கிறது.

தனது ஏவல் நாயான இலங்கை அரசின் உதவியோடு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய காங்கிரசு அரசின் இரத்த வெறி இன்னும் தீர்ந்து விடவில்லை. பாதுகாப்பானதென‌ பொய்யுரை பரப்பியோ, வெளிநாட்டுச் சதி என உண்மைகளைத் திரித்தோ அல்லது மறைத்தோ, மதச்சாயம் பூசி வன்முறையை ஏவியோ இந்த கூடங்குள அணு உலையை நிறுவி விட்டால் போதும்; குமரி முதல் வங்காளம் வரை மேற்கே மகாராஷ்டிரம் வரை ஆயிரம் மீட்டருக்கு ஒரு அணு உலையை கடலோரப்பகுதிகளில் கட்டி விடலாம் என்ற கொள்கை வெறியோடு களமிறங்கியிருக்கிறது இந்த மக்கள் விரோத காங்கிரசு அரசு. தமிழர்களைக் கூண்டோடு கொன்றொழிக்க போடப்பட்ட திட்டமாகவே இந்த கூடங்குள அணு உலையை நினைக்கத் தோன்றுகிறது. வடதமிழகத்திற்கு கல்பாக்கமும் தென் தமிழகத்திற்கு கூடங்குளமுமே முழு தமிழகத்தை அழிக்கப் போதுமானதாக இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் முடிவாக இருப்பதாலும் ஆரல்வாய் கணவாய் இவைகளினாலும் இயல்பாகவே காற்று வீசும் பகுதியாக அமைந்திருக்கிறது. ஆகவே அணு உலை செயல்படத் துவங்கும் வேளையில், புகை போக்கியின் வழியாக வெளியேறும் சீசியம், அயோடின், சார்ட்டியம் போன்ற நச்சுத்துகள்கள் காற்று வீசும் திசையெங்கும் பரவும்.

நூறு மில்லி சிவரேட் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் மில்லி சிவரேட் கதிர்வீச்சு உடனடி மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நூறு மில்லி சிவரேட் அல்லது அதற்குக் குறைவான கதிர்வீச்சு என்பது ஒரு அணு உலையைச் சுற்றி எழ‌ வாய்ப்பில்லை என யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அணுக்கதிர்வீச்சு முதலில் தாக்குவது கருத்தரிக்கும் உறுப்புகளைத் தான். இதனால் அணு உலையைச் சுற்றியிருக்கும் ஆண்களும் பெண்களும் மலடாகவோ அல்லது உருச்சிதைந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களாகவோ மட்டுமே இருப்பர். இதனால் ஒரு சமூகமே அழியும் பேரவலம் திரைமறைவில் காத்திருக்கிறது. கதிர்வீச்சு கடல்வாழ் உயிரினங்களுக்கும் உலைவைக்கும் என்பதால் கடலை நம்பியே வாழும் மக்களின் வாழ்வாதாராம் பறிபோகவிருக்கிறது.

ச‌ங்க‌ர‌ன்கோவில் இடைத்தேர்த‌லுக்குப் பின் கூட‌ங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌த‌ற்கான‌ எல்லா முகாந்திர‌ங்க‌ளையும் த‌மிழ‌க‌ அர‌சு செய்து வ‌ருகிற‌து. எட்டுமணி நேர மின்வெட்டின் மூலம் கூடங்குள அணு உலையைத் திறக்ககோரி மக்களிடையே ஒருமித்த பொதுக்கருத்தை கட்டமைத்தது முதற்கொண்டு, பேச்சிப்பாறை அணையை தூர்வார‌ ஆணை பிற‌ப்பித்த‌து, எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட‌ அணு உலை ஆதரவாளர்களை வைத்தே நிர்மாணிக்கப்பட்ட நிபுணர் குழு, என‌ மெல்ல‌ மெல்ல கூடங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌தில் மாநில‌ அர‌சு த‌ன் இர‌ட்டை வேட‌த்தைக் க‌லைத்து வ‌ருகிற‌து.

இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் உறவுகளை பறிகொடுத்தபோது செய்வதறியாது கையறு நிலையில் இருந்த நாம், நம் சொந்த மண்ணிலேயே மீண்டுமொரு சதி நிறைவேற அனுமதிக்கக் கூடாது. வலுவான வெகுஜன ஊடகங்களை தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் பொய்யுரைகளை அம்பலமாக்கி அவற்றை வேரறுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. இதற்கான களப்பணிகளை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு தனிமனிதனின் முயற்சியாலேயே செய்திகளைக் கொண்டு சேர்க்க வல்ல அதிநவீன கால கட்டத்தில் வாழும் நாம், பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய வழிகள் எளியன. எடுத்துக்காட்டாக அலுவலக நண்பர்களுக்குப் புரிய வைக்கலாம்; விவாதிக்கலாம். உண்மைகளை தரவுகளோடு எடுத்துரைக்கலாம். பக்கத்து வீட்டு பெரியவர்களுடன் இது குறித்து உரையாடலாம். சிறு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். கூடங்குள அணு உலையின் பேராபத்துகள் குறித்து கட்டுரைகள் நிறைந்த சிறு புத்தகங்கள் எண்ணற்ற அளவில் கிடைக்கின்றன. அதை நண்பர்களுக்குக் கொடுத்து கருத்து கேட்கலாம். பேருந்து, ரயில் பயணம் என கிடைத்த சந்தர்ப்பங்களில் அணு உலைகள் குறித்து பேச முயற்சிக்கலாம்.

எப்படி பேச்சை ஆரம்பிப்பது? வெகு சுலபம். மின்வெட்டு என்ற ஒரு பொறி போதும். அல்லது கூடங்குள அணு உலை படம் போட்ட புத்தக‌மொன்றை கையில் எடுத்துக் கொண்டால் அருகிலிருப்பவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். தொடர்ந்து முகநூலில் நிலைத்தகவல்களை எழுதுதல், கட்டுரைகளைப் பகிர்தல் என எல்லா வகையிலும் நமது பரப்புரைகளைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து கூடங்குள மக்களின் போராட்டங்களுக்கு நம்மால் இயன்றவரை எல்லா வகையிலும் தோள் கொடுத்து, மக்கள் போராட்டம் வெல்லும் வரை உடன் நிற்போம்.


பெப்ரவரி 14,2012 அன்று கீற்று இதழில் வெளிவந்தது

***********************************************************

Monday, January 16, 2012

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரமும் சில விவாதங்களும்




எழுத்தாளரும் களப்பணியாளருமான தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் கூடன்குள அணு உலை தொடர்பான "விழித்தெழும் உண்மைகள்" சிறு நூலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த‌ போது, எதிர்கொண்ட கேள்விகளும் விவாதங்களுமாக இந்த அனுபவம் இன்னும் முற்றுப்பெறாமலிருக்கிறது.பல மாதங்களாக அலுவலகத்திலும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நேரிலும் சாட்டிலும் முகநூலிலும் விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அணு உலை குறித்த அடிப்படை கருத்துகளை பரப்பும் முதல் களமாக பள்ளிக்கூடங்களையும் மஸ்ஜிதுகளையும் நாடலாம் என முடிவு செய்யப்பட்டு களப்பணிகள் ஆரம்பமாயின.சந்தித்த முதல் இடமே ஏமாற்றமளித்தது.நான் படித்த கிறிஸ்துவ பள்ளியின் பாதிரியார், எதிர்ப்பு குறித்தான பிரச்சாரமோ, புத்தக விற்பனையோ செய்வது சமூக விரோதம் என்ற அடிப்படையில் பேசி நிராகரித்ததோடு நில்லாமல், இந்த போராட்டம் ஏன் அணு உலை கட்ட ஆரம்பிக்கும் போதே இல்லை என ஒரு சாமான்யனைப் போல அவரும் அதே பிராண்டட் கேள்வியை கேட்டது வருத்தமளித்தது.மேலும் இந்த விஷயத்தில் அனைத்து கிறிஸ்துவர்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர் என கவலை தெரிவித்தார்.அது போக வேறெங்கும் போய் இதைப்பற்றி செமினார் பண்ணாதீங்க தம்பி..என அறிவுரை வேறு. நல்லது என நடையை கட்டினேன்.

கூடன்குளம் அணு உலையை எதிர்த்து சமநிலைச்சமுதாயம், விடியல் உள்ளிட்ட பல‌ இஸ்லாமிய பத்திரிக்கைகளில் காத்திரமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும் பல உலமாக்கள், மஸ்ஜிது நிர்வாகிகள் அணு உலைகள் குறித்த‌ ஒரு அரசல் புரசலான அறிவு கூட இல்லாமல் இருந்தது வேதனையளித்தது.ஆயிரம் பேர் கூடக்கூடிய வடசென்னையின் ஒரு முக்கிய பள்ளிவாசலின் தலைவர் "கூடன்குளமா..அப்படின்னா...என்ற ரீதியில் நெளிந்தார். புத்தகத்தை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள். ஜமா அத் முன்பு பேச அனுமதி தரமுடியாது என தன்னிச்சையாக அறிவித்தார்.இன்னொரு பள்ளிவாசல் கொஞ்சம் பரவாயில்லை. பள்ளி நிர்வாகி ஒருவர் வழக்கமான‌ பிராண்டட் கேள்வியோடு விவாதத்தை தொடங்கினார்.உண்மைகளை கொஞ்சம் எடுத்துரைத்த பின், புத்தகத்தை பள்ளி இமாமிடம் கொடுத்து படிக்கச் சொல்லி தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டார்.இன்னும் பயான் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

அடையாறு மஸ்ஜித் இமாம் மெள்லானா சதீதுத்தீன் பாகவி குறித்து ஏற்கெனவே பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் ஒரு கல்வியாளர். உலக,மார்க்க கல்வி அறிஞர். அவரை தனியாக சந்தித்த போது, கூடன்குள எதிர்ப்பு தொடர்பான வலுவான கருத்தியல் அவரிடமிருந்தது. சாவகாசமாக தனது கருத்துகளை இஸ்லாமிய பார்வையில் எடுத்துரைத்தார்.கூடன்குளத்தை ஆதரிப்போரின் நுகர்வுப்பார்வையில் இருக்கும் குளறுபடிகளையும் ஏகாதிபத்திய நாடுகளின் வியாபார நோக்கங்கள் குறித்தும் பேசினோம். முத்துக்கிருஷ்ணனை அவருக்கு தெரிந்திருந்தது. ஏற்கெனவே ஜூம்ஆ பயான்களில் கூடன்குள அணு உலை குறித்து அவர் குறிப்பிட்ட கருத்துகளையும் கூறினார். இன்னும் அதைப்பற்றி விரிவாகப் பேசுவதைப் பற்றி பரிசீலிப்பதாகவும் உறுதி கூறினார். இன்ஷா அல்லாஹ் என்று புத்தகத்தை வாங்கி கொண்டார். மஹல்லா மக்களிடம் விற்பனை சொல்லிக் கொள்ளுமளவு இல்லையென்றாலும், இது போன்ற உறுதி மொழிகளும் நம் சமூகத்தின் மீதான அக்கறைகளும் ஆறுதலளிப்பதாக இருந்தன.

ஏறத்தாழ எல்லாரும் வழக்கமான‌ கேள்விகளைத் தான் திரும்ப திரும்ப கேட்டனர்.எல்லாவற்றிற்குமான பதில்களும் விளக்கங்களும் முறையான தரவுகளுடன் முத்துக்கிருஷ்ணனின் இந்நூலில் விரிவாக அலசப்பட்டிருக்கிறது.


1. இந்த போராட்டம் எதிர்ப்பு ஏன் அணு உலைகளை தொடங்கிய நாட்களிலேயே இல்லை ?

2. கூடன்குளம் அணு உலை திறக்கப்படவில்லையென்றால் எப்படி நம் மின் தடை பிரச்சனை நிறைவேறப்போகிறது.காலம் முழுவதும் நாம் இருளில் மூழ்க வேண்டியது தானா ?

3. அப்துல்கலாமே சொல்லிட்டாரே. 100% பாதுகாப்பானது தான் என்று. அப்புறமென்ன போராட்டம் அது இதுன்னு தேவையில்லாத வேலை. அவருக்கு தெரியாததா உங்களுக்கெல்லாம் தெரியப் போகிறது. அப்துல் கலாமின் அபத்தமான ஒப்பீட்டையே அவர்களும் முன்மொழிந்தனர். கார் விபத்தில் இறக்காதவர்களா ? என்று.

4. செர்னோபில்-லாம் ந‌ட‌ந்து 25 வ‌ருஷ‌ம் ஆவுதுங்க‌..இப்ப‌ இருக்க‌ இந்திய‌ விஞ்ஞானிக‌ள்லாம் எக்ஸ‌ப்ர்ட்ஸ். இதெல்லாம் யோசிக்காம‌யா இந்த‌ புராஜெக்ட‌ கொண்டு வருவாய்ங்க‌..?

5.இவ்வளவு செலவு செய்தாகி விட்டதே. இதை எப்படி கைவிடுவது?



கூடங்குளம் அணு உலை திட்டம் உருவான அரசியல் பின்னணி, ரஷ்ய அணு உலைகளின் அபாயம்,இருபத்தைந்து கால இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்கள்,அணுசக்தி கழகத்தின் ஊதாரித்தனம்,ஊழல்,பொய்ப்பிரச்சாரம், அறிவுசார் தளத்தில் இயங்கும் சில ஊடகங்களில் வெளிவந்த விழிப்புர்ணவு கட்டுரைகள், அணு உலைகளைச் சுற்றியுள்ள மக்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொள்கிறார்கள், மாற்று மின்சாரத்தின் அவசியம் என்ன ? இந்திய அணு உலைகளுக்கு நாம் கொடுக்கும் விலை என்ன ? செர்னோபில்,ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புகள் உலகெங்கும் ஏற்படுத்திய பாதிப்புகளை அறிதல் எவ்வளவு முக்கியமானது போன்ற பல கேள்விகளுக்கு எளிய தமிழில் விடையளித்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.உயிர்மையின் 100ஆவது இதழில் சிறப்பு பகுதியாக வெளிவந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பல பதிப்பகங்கள் ஒன்றிணைந்து மக்கள் பதிப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.

1. இருப‌த்தைந்து காலமாக‌ இந்த‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் அதை நாம் தான் அறிந்து கொள்ள‌வில்லை. கூட‌ன்குள‌ம் அணு உலை குறித்தான‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ப‌ல‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளி வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்திருக்கின்ற‌ன.அணு உலையை எதிர்த்து ப‌ல‌ ஊர்வ‌ல‌ங்க‌ளும் பொதுக்கூட்ட‌ங்க‌ளும் இடிந்த‌க‌ரையிலும் நெல்லை மாவ‌ட்ட‌த்தின் ப‌ல‌ ஊர்க‌ளிலும் ந‌ட‌ந்திருக்கிறது. ம‌க்க‌ள் ஆத‌ர‌வு வ‌லுப்பெறாத‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில், அறிவு சார் தள‌த்திலே இருந்த‌ இந்த‌ எதிர்ப்பு, ம‌க்க‌ள் எதிர்ப்பாக‌ உருப்பெற்ற‌வுட‌ன் அத‌னை கொச்சைப்ப‌டுத்த‌ தொட‌ங்கியிருக்கிற‌து இந்திய‌ அர‌சு.

2. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 2.62% தான் அணு உலைகளின் பங்களிப்பாக இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து 1.1%-மும், அனல்,புனல்,காற்று இவைகளிலிருந்து 65% மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.

கூடன்குளம் அணு உலை 1200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.இதில் கூட‌ன்குள‌ அணு உலைக்கே செல‌வாகும் மின்சார‌ம் 12%. ஆக‌ ந‌ம‌க்கு 1080 மெகாவாட் மின்சார‌ம் தான் உற்ப‌த்தி என‌ வைத்துக் கொள்வோம். இதில் ந‌ம் மாநில‌த்திற்கு 50% தான் என‌ அர‌சு நிர்ண‌யித்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌மாக‌ 30% தான் சொந்த‌ மாநில‌த்திற்கு கிடைக்கும்.ஆக‌ த‌மிழ்நாட்டிற்கு 540 மெகாவாட் கிடைக்குமெனில், இதில் மின்க‌ட‌த்த‌லின் இழ‌ப்பு 15 முத‌ல் 20% வ‌ரை இருக்குமெனில் ந‌ம‌க்கு கிடைக்க‌ விருப்ப‌து வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் ம‌ட்டுமே.

சுப‌.உத‌ய‌குமாரின் கூற்றுப்ப‌டி, த‌மிழ்நாட்டில் உள்ள குண்டுப‌ல்புக‌ளை எல்லாம் மாற்றி குழ‌ல் விள‌க்குக‌ளாக‌ மாற்றினாலே நாம் 500 மெகாவாட் மின்சார‌ம் சேமிக்க‌ முடியும். வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கா இவ்வ‌ள‌வு கோடிக‌ள் ??? க‌ட்டுமான‌ செல‌வை விடுங்க‌ள்.உலை இய‌ங்க‌ ஆர‌ம்பித்தால் ப‌ராமரிப்பு செல‌வு என்ன‌ ஆகும் தெரியுமா ?

ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன் ? அமெரிக்கா திணித்த 123 அணு ஒப்ப‌ந்த‌த்திற்கு அடிப‌ணிந்து என்றென்றும் யுரேனியம் விற்கும் நாடுக‌ளுக்கு இந்தியா அடிமையாக‌ இருப்ப‌த‌ற்கான‌ அடிமை சாச‌ன‌ம் தானே அது.

3.1986 செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்குங்கள். ரஷ்யாவில் உள்ள செர்னோபிலின் அதே அணு உலையைத் தான் பெயர் மாற்றி நமக்கு விற்றிருக்கிறார்கள். கூடன்குளமும் செர்னோபிலும் வடிவமைப்பில் ஒன்றே தான். இதிலும் முதன்முறையாக குளிர்விக்கும் கலன்களாக கடல்நீர் அமையவிருப்பது ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே புதியது. ரஷ்ய அணு உலைகளிலே 31 மிகப்பெரிய காரணிகள் ஆபத்தாக இருக்கின்றன என ரஷ்ய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் போது, ஊழல் மிகுந்த நம் நாட்டில் 100% பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயண சாமி, வாயிலே வடை சுடுகிறார்.

4.கூடன்குள அணு உலை விபத்து நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் ஒருபுறமிருக்க, அணு உலை ( விபத்தின்றி ) இயங்கினாலே ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இன்று அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியி இருக்கின்றன.கூடங்குளம் அமைப்பதில் மரபு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அணு உலைப் பகுதியில் மக்கள் உயிர் வாழ உரிய உத்தரவாதம் இல்லை. விபத்து இல்லாமல் அணு உலைகள் இயங்கும்போது ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்கள் வெளியிடும் ஸ்ட்ரோண்டியம், டிரைடியம், டெலுரியம் என்ற கதிர்வீச்சு வாயுக்களால் பல அழிவுகள் ஏற்படும். நிலத்தடி நீர், விவசாய விளைப்பொருட்கள், கடல்நீர், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயங்கள் ஏராளம்.மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் ஒப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டாம் பட்சம் தானே. அணு உலையால் ஏற்படும் கேடுகளால் உலகின் பல நாடுகளில் அணு உலைகள் மூடப்படும் நிலையில் நாம் மட்டும் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

5.தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் கோலான் என்ற தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சில நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில் பழமையானது தாராப்பூர் (மகாராஷ்டிரா). இந்த அணு உலைகளைச்சுற்றி பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் உருக்குலைந்து தான் பிறக்கின்றன. பலர் புற்று நோயால் இறக்கின்றனர்.ஆனால் எல்லா உண்மைகளையும் இந்திய அரசும் அணுசக்திக்கழகமும் ரகசிய காப்பின் கீழ் வெகுசிரத்தையுடன் மூடி மறைத்து வருகிறது. அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, யுகோஸ்லாவாக்கியா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய பல நாடுகளும் பாதகமான இந்த அணுஉலைகளை வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றது.கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஃபூகுஷிமா டைச்சி அணுஉலை கடலில் மூழ்கி அங்கு நடந்த கோர சம்பவத்தை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.


இன்று கூடன்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் தூத்துக்குடி தொடங்கி பழையகாயல், புன்னக்காயல், கொம்புத்துறை, ஆலந்தலை, குலசை, மணப்பாடு, பெரிய தாழை, உவரி, கூத்தங்குளி, கருத்தழை, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி என்று குமரி வரை நீண்ட அமைதியான கடற்கரை கிராமங்கள் யாவும் இன்று அணு உலைகளுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை கோரல்.


----------------

Monday, January 9, 2012

புத்தகத் திருவிழா 2012 ‍- எழுச்சியும் புறக்கணிப்பும்




நேர்காணல்களும் நலம் விசாரிப்புகளும் போராட்டங்களும் வெளியேற்றங்களும் மேடைப்பேச்சுகளும் என ஒரு மிகப்பெரிய ஆரவாரம், புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்கிறது.சுற்று வட்டார‌ சாலைகளில் புத்தக திருவிழாவையொட்டி ஒரு சின்ன விளம்பர பலகை, சுவரொட்டி கூட தென்படவில்லை.தமிழ் நாட்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், பெரிய அளவிலான விளம்பரம் தேவையிருக்காது என பபாசி கருதியிருக்கலாம். எழுத்தாளர்‍-வாசகர் சந்திப்புக்கென தனியே ஒரு ஸ்டால் அமைத்து நாள் குறித்திருக்கிறார்கள். எதாவதொரு பதிப்பகத்தின் முன் நடக்கும் 'கூடிக்கும்மி அடித்தல்' செல்லமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இக்காலத்து இளைஞர்களிடம் வாசிப்பு குறைந்து வருகிறது என சஞ்சலப்படுவோர் கவனிக்க வேண்டிய விஷயம், புத்தக கண்காட்சியில் அதிகமாக இளைஞர்களைத் தான் பார்க்க முடிகிறது. வேலை நாளான திங்கட் கிழமை கூட, படையெடுக்கின்றனர்.பெரும்பாலும் ரிபீட் ஆடியன்ஸூகளாக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்த கரையிலோ கீழ்ப்பாக்கத்திலோ 15 நாட்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கக்கூடும். தினமும் வந்து கையெழுத்து போடுகின்றனர். நேர்காணலில் பங்கேற்கின்றனர். நின்று கொண்டே வாசிக்கின்றனர்.எஸ்.ராமகிருஷ்ணனைச் சுற்றி ஒரு இயக்கமே செயல்படுகிறது.சலிப்பு தட்டாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் மனிதர். நிச்சயமாக அவர் ஒரு சாக்ரட்டீஸ் தான்.

சென்ற ஆண்டு இருந்த மனநிலை இந்த முறை இல்லை.புனை கதைகளின் வாசிப்பில் ஒருவித தேக்க நிலையும் அயர்ச்சியும் உருவாகி விட்டதாக உணர்கிறேன். கிருஷ்ணபிரபு மாதிரியான ஆட்களைத் தவிர மற்ற யாருடனும் அதிகம் அளவளாவ பிடிக்கவில்லை.புனைவு இலக்கியங்களில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது என தீர்மானம் இயற்றி விட்டுத் தான் புத்தக வேட்டையைத் துவக்கினேன்.மேலும் கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்திருந்தேன்.இருப்பினும் யுவனின் குள்ளச்சித்தனுக்காகவே கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. தமிழினி வெளியீடாக முன்பு வந்ததை, கிழக்கு மீள்பதிப்பு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல, கோபி கிருஷ்ணனின் புத்தகங்கள் 'கடல்'லையே இல்லையாம்.

கீழைக்காற்று, பாரதி புத்தகாலயங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முற்போக்கு கட்டுரைகள் நிரம்பிய குட்டி புத்தகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள். பாதசாரியின் 'பேய்க்கரும்பு', கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன் குகை வாசிகள்' பார்த்த மாத்திரத்தில் வாங்கத் தூண்டியவை.தமிழ்மகனின் 'வெட்டுப்புலி', யூமா.வாசுகியின் 'மஞ்சள் வெயில்', யுவன் சந்திர சேகரின் 'மணற்கேணி' எதிர்பார்த்து வாங்க வேண்டியவை பட்டியலில் இடம் பெற்றிருந்தன. சிக்மண்ட் ஃபிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' உளவியல் வேட்கைக்கு தீர்வு அளித்திருக்கிறது.

காத்திரமான கட்டுரைகள் அடங்கிய புதிய கலாச்சாரத்தின் "கண்ணை மறைக்கும் காவிப்புழுதியும்", அரபி இலக்கியம் குறித்தான சாருநிவேதிதாவின் "தப்பு தாளங்களும்" மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.ஆண்டன் செகாவ் சிறுகதைகளும்,சாருவின் 'ஊரில் மிக அழகான பெண்ணும்'மொழிபெயர்ப்பு வரிசையில் சேர்ந்து கொண்டன. மற்றபடி,என் மனதிற்கு நெருக்கமான வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" சிறுகதை தொகுப்பு இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கான‌ எனது தேடலை மனநிறைவுடன் இறுதி செய்திருக்கிறது.


இதுவரை வாங்கியவை:

1.பேய்க்கரும்பு - பாதசாரி / தமிழினி

2.மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி/அகல் பதிப்பகம் ( கருப்பு பிரதிகளில் கிடைக்கும் )

3.மீன்குகை வாசிகள் ‍ - கீரனூர் ஜாஹிர் ராஜா / ஆழி பப்ளிஷர்ஸ்

4.அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ் / பாதரசம் வெளியீடு
( கீழைக்காற்றில் கிடைக்கும் )

5.கண்ணை மறைக்கும் காவிப்புழுதி ‍- புதிய கலாச்சாரம் கட்டுரைகள / கீழைக்காற்று

6.தலித் முஸ்லிம் - ஹெச்.ஜி.ரசூல் / பாரதி புத்தகாலயம்

7.சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும்‍ - பிரபாத் பட்நாயக் / பாரதி புத்தகாலயம்

8.பெண்ணியம் பேசலாம் வாங்க ‍- உ.வாசுகி / பாரதி புத்தகாலயம்

9.நக்சலிசம் புரட்சித் தத்துவமா ? ‍ - அனில் பிஸ்வாஸ் / பாரதி புத்தகாலயம்

10.கனவுகளின் விளக்கம் சிக்மண்ட் ஃபிராய்ட் - நாகூர் ரூமி /ஸ்நேகா பதிப்பகம் ( பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும் )

11.வெட்டுப்புலி - தமிழ்மகன் / உயிர்மை

12.தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா / உயிர்மை

13.மணற்கேணி - யுவன் சந்திரசேகர் / உயிர்மை

14.ஊரில் மிக அழகான பெண் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் - சாருநிவேதிதா / உயிர்மை

15.பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் / சந்தியா பதிப்பகம்

16.குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திர சேகர் / கிழக்கு பதிப்பகம்


*****************************

Sunday, September 18, 2011

எப்போதுமிருக்கும் ஒருநாள்



பொடி கடை,பாண்டியன் பலசரக்கு, விதை உரம் பூச்சி மருந்து கடை,அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கோயில் சாவி எதிரே உள்ள பட்டறையில் இருக்கிறது இரும்பு பலகை,ஆழாக்கரிசி வணிக வளாகம்,சுலைகா மர இழைப்பகம்,அச்சம்மாள் கிளினிக், ஃபிரண்ட்ஸ் புரோட்டா கடை, மிட்டாய் கடை,உப்புமா,கேசரி விற்கப்படும் ஒரு டீக்கடை சன்னல் வழி பார்த்தபடியே வந்த களிப்பில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பயணித்த பேருந்து களைப்பு ச‌ற்று த‌ணிந்திருந்த‌து.

பல‌முறை த‌ண்ணீர் தெளித்து அய‌ர்ன் செய்த புது ச‌ட்டை முதுகுப்புற‌ம் சாய்ந்து அம‌ர்ந்த‌தில் நிறைய‌ க‌ச‌ங்கியிருந்த‌து.வெயிலின் உக்கிர‌ம் புது பேருந்து நிலைய‌ பாத்திர‌க்க‌டையின் எவ‌ர்சில்வ‌ர் குடக்கண்ணாடியில் முக‌த்தை இன்னும் க‌ருப்பாகக் காட்டிய‌து.பெரிய‌ப்பாவும் மாமாவும் சாத்துக்குடி,ஆப்பிள் வாங்க பழக்கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார்க‌ள்.அப்பா எதிரே உள்ள‌ மிட்டாய் க‌டையில் ல‌ட்டுக‌ளை அட்டைப்பெட்டியில் "எம்புட்டுண்ணே" பெண்ணிட‌ம் வெகுசீராக‌ அடுக்க‌ உத‌விக் கொண்டிருந்தார்.அம்மாவும் சித்தியும் சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தில் அறைந்து கழுவி, தலை சீவி கைக்குட்டையில் துடைத்து துடைத்து சற்று வெளுப்பாக்கிக் கொள்கிற தலையாய முயற்சியில் மதியம் மணி ஒன்றைத் தாண்டியது. மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காக அன்று மட்டும் கொஞ்சம் என்னை மரியாதையோடு பார்ப்பதற்கான ஒப்பந்தத்தை தம்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.முகம் கழுவ அவன் தான் தண்ணீர் பாக்கெட்டை உள்ளங்கையில் பீய்ச்சினான்.

பல்முனை ஆயத்தங்கள் நிறைவு பெற்று உறவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடி, பெண் வீட்டை நோக்கி மூங்கில் கைப்பிடி வைத்த பைகளோடு நடக்கத் தொடங்கியிருந்தோம்.லேசாக மழை தூர ஆரம்பித்தது.எப்போதுமில்லா பதற்றமும் குறுகுறுப்பும் பலமுறை சீராக சீவியச் சிகையை மீண்டும் மீண்டும் சீவத் தூண்டியது. மணக்கப்போகும் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பே நெய்சோறும் கோழி வறுவலும் பரிமாறப்பட்டு உள்ளூர் அஸ்ரத்து தூவா ஓதி அங்கேயே நிச்சயம் முடிந்து, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ முதிய‌வ‌ர் என் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு என்ப‌தை தெரிந்து கொள்வ‌தில் மிகுந்த சிரத்தையோடு இருந்தார்.வாச‌லில் நின்றிருந்த‌ வேப்ப‌ம‌ர‌த்திற்க‌டியில் இர‌ண்டு ஆட்டிக் குட்டிக‌ள் ஓயாம‌ல் க‌ர‌க‌ர‌வென்று கத்திக் கொண்டேயிருந்தன. தெரு வீட்டிலிருந்து சற்றே கண் அகற்றிப் பார்த்தால் வீட்டின் உள்ளறையிலிருந்து நான்கைந்து பெண்கள் சலசலக்கும் புடவை கொலுசு சத்தத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதில் யார் மணப்பெண்ணாக இருக்கும் என்று யூகிக்கலாமா என்று யோசிப்பதற்குள், நொடிகளை எண்ணி மணவாட்டியைக் காண்பித்து அவசர கதியில் மதுரைக்கு என்னை பஸ் ஏற்றி விட்டார்கள்.

மாட்டுத்தாவ‌ணியிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் க‌ன‌வுக‌ளும் எதிர்பார்ப்புக‌ளும் கூட‌வே ஏறிக் கொண்ட‌ன‌.அட‌ர்ந்த‌ வேப்ப‌ம‌ர‌மொன்றும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ம் பொருத்த‌ப்ப‌ட்ட‌ திண்ணையும் அதில் தனது இஷ்டம் போல விரிந்திருந்த மணி பிளாண்ட் கொடியின் பச்சை இலைகளும், ம‌ங்க‌லாக‌ ஒரு பெண்ணின் முக‌மும் ம‌ன‌மெங்கும் நிறைந்திருந்த‌ன‌.வாக‌ன‌ இரைச்ச‌லையும் தாண்டி, ஒரு ஆட்டிக் குட்டியின் க‌ரைச்ச‌ல் காதில் இடைவிடாம‌ல் ஒலித்துக் கொண்டேயிருந்த‌து. எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கியதற்கு பரிசாக அப்பா வாங்கி கொடுத்த மீன்குஞ்சுகளை ஆவலோடு தொடும் போது ஏற்பட்ட ஒரு இனம்புரியாத பதற்றமும் சந்தோசமும் முதன் முதலாக அவளைப் பார்த்தபோது ஏற்பட்டது.ஒரு சேரில் அமர்த்தி அவள் வாயில் சீனி போடச் சொன்னார்கள்.மீண்டும் அவளை எனக்கு சீனி போடுமாறு சொல்லி என்னை அமரச் செய்தார்கள்.உறவினர்கள் பகடியும் புன்னகையுமாக‌ மாறி மாறி ஒரு கனவு போல அந்த காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.பேருந்து திண்டுக்கல் தாண்டியும் தூக்கமே வரவில்லை.

ஆண்பிள்ளை என்பதால் தாத்தா பாட்டி முதற்கொண்டு குஞ்சு குளுவான்கள் வரை புது டிரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்.நல்ல சூட் தைக்க வேண்டும்.காலனி கொஞ்சம் குதிகால் உயரமாக பார்க்கவேண்டும். இதில் அசட்டையாக இருந்தால் அவள் என்னைவிட ஒரு இஞ்ச் அதிகமாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன.இரண்டு அக்காளுக்கும் காஞ்சிபுரத்தில் உயர்ந்த விலையில் பட்டு புடவை வாங்கித் தர‌ வேண்டும். மணப்பெண் மஹருக்கு நகை வாங்க வேண்டும்.எத்தனை பவுன் என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லா செலவுகளையும் சமாளிக்க வங்கியில் லோன் எடுக்க வேண்டும். வட்டியாக‌ மாதச் சம்பளத்தில் இருந்து எவ்வளவு பிடிப்பான் என்ற‌ கவலை, வெள்ளை சட்டையில் காக்காய் எச்சம் போல பொத்தென்று தெறித்து அநாவசியமாக தொற்றிக் கொண்டது.சட்டென உதறிவிட்டு, மீண்டும் திருமணக் கனவு என்னை உள்ளிழுத்து தாழ்பாளிட்டது.

பார்த்தவுடன் கவர்ந்துவிடும் வசீகர முகம் கொண்டவனில்லை என்பதால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்குமா? எந்த அளவுகோல் கொண்டு என்னை மதிப்பீடு செய்திருப்பாள், அவளின் உறவினர்கள் எப்படியான விமரிசனத்தை அவளிடம் வைப்பார்கள், திருமணத் தேதி வரையில் இடையில் இருக்கும் சொற்ப நாட்களில் பேச வாய்ப்பு கிடைக்குமா,யாரிடம் சொல்லி அலைபேசி எண் வாங்குவது,என்னென்ன பேசுவது,பழைய கதைகளையெல்லாம் சொல்லித் தொலைப்பதா இல்லை மறைப்பதா,என்னைப் போலவே புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்குமா, சாலையில் சிதறியிருக்கும் சிறுபூக்களை பொறுக்குபவளாயிருப்பாளா ? கவிதைகள் பிடிக்குமா, மழையை ரசிப்பவளாயிருப்பாளா,ஏதேனும் ஒரு சிறுகதையையாவது வாசித்திருக்கக்கூடுமா. பேருந்து தாம்பரம் தாண்டியிருந்தது.

அவள் வீட்டு நிலைக்கண்ணாடியும் தூண்களும் நூறு வருட பழைய கடிகாரமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன.நகரம் அழகாகத் தெரிந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மின்சார ரயிலில் எல்லோரும் அழகாகத் தெரிந்தார்கள்.குறுந்தகவலில் கவிதைகளோடு நிறைய பரிமாறத் தொடங்கியிருந்த நாட்கள்.காணாமல் போன குருவியொன்று என் வீட்டு தென்னை மரத்தில் மீண்டும் கூடுகட்ட ஆரம்பித்திருந்தது.'இன்னும் எத்தன நாள் இருக்கு..சொல்லு பாப்போம்'. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாள்.பதிலையும் அவளாகவே சொல்வதைத் தான் விரும்புவாள்.அதில் இருந்த‌ குழந்தைமையும் சந்தோசமும் இன்று வரை மாறாதவை. வண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு அடிக்கடி வருகிறது.சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை.


------

வைர மோதிரமோ,சலவைக்கல் மாளிகையோ,இறக்குமதி செய்யப்பட்ட காரோ வாங்கித் தர இயலாதவனாய் இருந்தும் என்னை சகித்துக் கொண்டும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டும், உலகின் பரிவு அனைத்தையும் எனக்காக தன் கண்களில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் என் அன்பு மனைவிக்கு.

*****************

Friday, August 19, 2011

ராம்லீலாவில் ஒரு குபீர் சிரிப்பு நாடகம்


ராலேகான் கிராமத்தில் மது குடித்த‌ இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த சாந்த சொரூபியும், இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்டில் கையாடல் செய்த புண்ணியவானும்,தன்னுடைய அறப்போராட்டமும் அகிம்சையும் ஆஃப் சைடு வாங்கினாலும் பரவாயில்லை என்று ராசாவை தூக்கிலிட வேண்டும் என்ற வீரமராட்டிய சிவாஜி சிவசேனாக்களின் முழக்கங்களைப் பறை சாற்றிய இந்த உத்தமர் காந்தி தன்னுடைய உண்ணாவிரத நாடகத்தை, ஏற்கனவே பண்டார ராம்தேவ் மண்ணைக்கவ்விய ராம்லீலா மைதானத்தில்,தேசபக்தி பாடல்களுடனும் முதலாளித்துவ ஊடகங்களின் ஆசிர்வாதத்துடனும் வெகு விமரிசையாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.மேலும் அன்னா சிறையில் இருந்த போது,அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் "ராம் ராம்" என்ற முழக்கங்களும் விண்ணைத் தொட்டன. உச்சபட்ச காமெடி என்னவென்றால் டப்பாவாலாக்கள் முதற்கொண்டு, நம் நாட்டையே சுரண்டி சுண்ணாம்பாக்கிய கார்பரேட் பகற்கொள்ளையர்களான‌ CEO-க்கள் கூட அன்னாவின் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து விட்டார்களாம்.




கிரண்பேடியிடமிருந்த தேசியக் கொடியை பிடுங்கி ஆட்டி கைதட்டல்களைப் பெற்ற நமது மீடியா கதாநாயகர் இந்த காமெடி காட்சிகளை, தம்மால் கேபிள் டிவி தடை செய்யப்பட்ட ராலேகான் மக்கள் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டாரோ இல்லையோ, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் தான் மூன்று கிலோ எடை குறைந்ததைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க 3 கிலோ எடைகுறைதல் என்றால் அது எவ்வளவு பெரிய தியாகம் ?

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, 30, 7 ,15 என்று ஒரு வழியாக பேரம் பணிந்து, அரசும் அன்னாவும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ஒரு காலவரையற்ற ஆனால் 15 நாள் உண்ணாவிரதத்துக்கு ஒப்புக் கொண்டனர்.இதை முன்னாடியே காங்கிரஸ் செய்திருந்தால், "அரசு பணிந்தது",அன்னா காலடியில் அன்னை அரசு போன்ற நக்கல்களையெல்லாம் கேட்கும் அவல நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது.என்ன செய்வது ? இடுப்பு வரை மாட்டிக் கொண்ட ஊழல் சேற்றிலிருந்து அன்னாவைப் போல விரல்களைக் கூட‌ அசைக்க முடியவில்லையே.

உண்ணாவிரததுக்கு இடமளிக்காமல் அன்னாவை காங்கிரஸ் அரசு கைது செய்த போது,"ஐயகோ என்ன கொடுமை இது. ஜனநாயகம் கற்பிழந்து விட்டது.பாசிசம் தலை விரித்தாடுகிறது" என்றெல்லாம் ஆவேசத்துடன் டிவிட்டிய, ஃபேஸ்புக்கிய நமது மீடியாக்களின் செல்லக் குஞ்சுகளும் இதுவரை ஜன்லோக்பாலை ஏற்காத பிஜேபியும், தன் வீட்டு நாய்க்குட்டியை விரட்டுவது போன்ற தொனியுடன் அன்னா இந்திய அரசையும் நீதித்துறைகளையும் கேமரா முன் ஆள் காட்டி விரல் கொண்டது மிரட்டுவது மட்டும் எவ்விதத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் செயலாகும் என்பதை விளக்க வேண்டும்.

ஊழலை எதிர்க்க மாபெரும் ஆயுதம் ஜன்லோக்பால் என தொண்டைக்குள் ஸ்பீக்கர் சொருகி பிரகடனப்படுத்தும் அன்னாவின் கூட்டணியில் உள்ள அறிவு ஜீவிகள், அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தின் சாராம்சமான, அரசல்லாத துறைகளின் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர். NGO-க்களின் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அம்சம் ஜன்லோக்பால் வரைவில் சேர்க்கப்பட்டால் அந்த பொறியில் முதலில் மாட்டும் எலியாக அன்னா தான் இருப்பார் என்ற உண்மை, ரூம்போட்டு விளக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாதா என்ன ? அன்னாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்ன என்ற உண்மையைத் தான் நீதிபதி பி.பி.சாவந்த் அன்னாவின் புனிதப்பானையை பொதுவெளியில் வைத்து உடைத்து விட்டாரே.

நம் நாட்டையே கூறு போட்டு பங்கு வைக்கும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் தனியார் மயமாக்கலையும் ஏற்றுக் கொள்ளும் இந்த அன்னா ஹசாரே கும்பல், மிகப்பெரும் அன்னிய முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவுடனும், பியூட்டி பார்லர் பளபளப்போடு வலம் வரும் மீடியா மங்கைகளின் பின்னணி கொஞ்சல்களோடும், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற கார்பரேட் பண்டாரங்களின் யாவார நோக்கத்தோடும் நடாத்தி வரும் இந்த ஐடெக் குபீர் சிரிப்பு நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நம் திடீர் புரட்சியாளர்களை ஆரவாரத்தில் வைத்திருக்கப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.

புதிதாக ஒரு உணவு பதார்த்தத்தை சாப்பிட்டால் முகமெங்கும் கட்டிகள் உருவாகி அலர்ஜி வருவது போல, இந்திய வரலாற்றில் அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல்,எஸ் பேண்ட் ஊழல்,ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்,காமன்வெல்த் ஊழல் என பாரத மாதாவின் 'அழகிய' முகத்தில் கண்டு கண்டுகளாக வீங்க வைத்திருக்கும் இந்த பொற்கால காங்கிரஸ் ஆட்சி, ஒரு சராசரி இந்திய பிரஜைக்கு நிச்சயமாக வலிக்கத் தான் செய்யும்.அந்த ஆதங்கத்திற்கும் கோபத்திற்கும் வடிகாலாக, இந்த போராட்ட செய்திகளை அதிர வைக்கும் விவாதங்களுடனும் இசை பின்னணியுடனும் பார்க்கும் போது, தேசிய உணவு மெய்சிலிர்த்து வீறு கொண்டு எழும்.எப்படி டோனி கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் போது ஒரு தேசப்பற்று எழுந்ததே அதற்கு ஒப்பானது இந்த வீரம்.

ஊழலை எதிர்ப்பதற்கு முன்,அதன் ஊற்றுக் கண்ணான முதலாளித்துவ மறுகாலனியாக்க கொள்கைகளையும் சுரண்டலையும் அதற்கு வழிவகை செய்யும் இந்திய பொருளாதார அமைப்பு முறையையும் டாடா, ரிலையன்ஸ் அம்பானி,வேதாந்தா போன்ற கார்பரேட் பெருச்சாளிகளின் பகற்கொள்ளைகளையும் ஒவ்வொரு குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும். ஹசாரே கூறும் ஜன் லோக்பால் ஆனது இந்த சுரண்டல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வெறும் சில்லறை விஷயங்களையும் எலும்பு துண்டுகளைப் பொறுக்கக் காத்திருக்கும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைப்பதாக்ச் சொல்லிக் கொள்கிறது. மக்களை அரசியல் குருடர்களாக்கி இது போன்ற அடிப்படை அறிவில்லாத காமெடியன்களின் நகைச்சுவை நாடகங்களின் மூலம் ஆளும் வர்க்கம் ஒரு பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது.நம் நாட்டின் இயற்கை வளங்களையும் சொத்துக்களை அன்னிய முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் கார்ப்பரேட் கும்பல், நமது வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரத்தை எவ்வித தங்கு தடையின்றி, சட்ட்ப்பூர்வமாக சூறையாடி மகிழ்கிறது.

இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ,கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவும், வேதாந்தா என்னும் அன்னிய முதலாளி தம்முடைய வாழ்வாதாரமான நியாம்கிரி மலைப்ப்குதியை பாக்சைட் தாதுக்காக வெட்டிப் பங்கு வைப்பதை எதிர்த்து போராடி வரும் டோங்கிரியா கோந்த் மலைவாழ் மக்களும், டாடா கம்பெனியை எதிர்க்கப் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் விவசாயிகளும் நடத்தும் நிஜமான அக்மார்க போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மேட்டுக்குடி மக்களின் பார்ட் டைம் பொழுது போக்கான இந்த கூட்டுக்களவாணி நாடகங்களை ஆதரிக்கப் போகிறோமா ?


*****************

Wednesday, June 1, 2011

தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்

---------

ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் வழிதவறும் போது தவறுகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வழிமுறைகளைச் சொல்லித்தர வேண்டிய புனிதப்பணி பத்திரிக்கையினுடையது.எழுத்து சுதந்திரம் என்பது நடுநிலைமை பிறவாமல் வாள்சுழற்றும் வித்தை.அந்த வாள் இரத்தத்தை கொணர்வதற்காக அல்ல.மேலும் வதைகள் ஏற்படாமல் தடுக்க.

மெழுகுவர்த்தி புகழ் ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களையும் கிரிக்கெட்டையும் பிரதான செய்திகளாக வெளியிடும் வடஇந்திய ஊடகங்களுக்கு இணையாக ஆனந்த விகடன் இப்போது தரம் தாழ்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.பக்கத்திற்கு பக்கம் கனிமொழி கைதை நையாண்டி செய்வதிலும் கலைஞரையும் திமுகவையும் கிண்டலடிப்பதிலும் தற்பொழுது ஆ.வி முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறது.ஏற்கெனவே அணைந்து போன நெருப்பை
மீண்டும் மீண்டும் நீர் தெளித்து அணைப்பதில் ஒரு ஆழ்மன வக்கிரம் தொனிக்கிறது.

ஆனந்த விகடன் அதிமுக விகடனாக புத்துயிர் பெற்று கனகாலமாகி விட்ட நிலையில்,ஜெ.வின் வெற்றியை ஜெ எந்தளவு கொண்டாடினாரோ,அதைவிட ஆ.வி அந்த வெற்றியில் ஊறி ஊறித் திளைத்து இத்து போகும் அளவு ஊறிக் கொண்டிருக்கிறது.கடந்த கால திமுக ஆட்சியின் பேயாட்ட ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு போன்ற ஆயிரம் காரணங்கள் தான் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை ஒருபுறமிருக்க,ஏதோ ஜெயலலிதா மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி ஜெயித்ததாக உச்சி மோர்ந்து கொஞ்சுகிறது ஆ.வி.அதிலும் ஜெவுக்கு அட்வைஸ் செய்து நல்லபேர் வாங்கி கொள்ள நினைப்பது அதைவிட பேரபத்தம்.

கலைஞர் ஜெயா டிவிகளின் அபத்தங்களுக்கு இணையாக‌ "முதல்வரின் கம்மல் டாலடித்தது முகம் டாலடித்தது" போன்ற மூன்றாந்தர எழுத்துக்களை வாரி இறைத்து கொண்டிருக்கிறது.வீட்டுவசதி திட்டத்தை "தீப்பெட்டி திட்டம்" என்று கேலி செய்து பேசியதற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும்,கல்வி பற்றி நாலு வார்த்தை உளறியதற்காக உயர்கல்வித்துறை ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டதையும் ஏதோ ஜெயலலிதா தமிழ்நாட்டின் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தம் செய்து விட்டதாக கொண்டாடுகிறது.

லோக்பால் திட்டத்தின் வெற்றி லட்சணம் எந்த அளவு என்கிற முகாந்திரத்தின் அடிப்படை தெரியாமலேயே, இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியையும்,மும்பை ரவுடி ராஜ் தாக்கரேவையும் அபிமானியாக கொண்ட அண்ணா ஹசாரே (எ) கொல்லு தாத்தாவை வாராவாரம் பாலாபிஷேகம் செய்து ம‌கிழ்கிற‌து.இதில் வரும் வாரங்களில் வெத்து வேட்டு விஜயின் கேள்வி பதில் வேறாம்.ஏற்கெனவே ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கழுவுற மீனில் நழுவுற மீன் கேள்வி பதில்களை படித்து சலித்துப் போன வாசகர்களுக்கு மேலும் ஒரு துன்ப அதிர்ச்சி.பொக்கிஷம்,எனர்ஜி பக்கங்கள் போன்ற பதிவுகள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும்
மேற்கூறிய‌ மொக்கை கேள்வி பதில்களும் முகம் சுழிக்க வைக்கும் நையாண்டி விருதுகளும் டிவிட்டர் உளறல்களும் விகடனின் வாசகப்பரப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது.

பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர்,தினசரி செய்தித்தாள் இவைகளுக்கு பிறகு வாசக அனுபவ பரிணாமத்தை விரிவுபடுத்துவதில் விகடன் எல்லா கால கட்டங்களிலும் முன்னணி வகித்திருக்கிறது.சராசரி நடுத்தர வர்க்க சமூகத்திலிருந்து மேட்டுக்குடி வரை விகடன் வாசிக்கப்படுகிறது.ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்த‌ பாமரனிலிருந்து இலக்கியவாதிகள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே பத்திரிக்கை விகடன்.தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் மறந்து விட்ட நிலையில்,கி.ரா வண்ணதாசன் சிறுகதைகளை இன்றும் ஆனந்த விகடனில் பார்க்கலாம்.அழகிய பெரியவனின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.இப்படி எல்லா அருமை பெருமைகளையும் தன் ஒருதலை பட்சமான எழுத்துகளால் இன்று விகடன் குழுமம் இழந்து கொண்டே இருக்கிறது.தரமான வாசகர்களையும் சேர்த்து தான்.


-----

Friday, January 7, 2011

புத்த‌க‌ ச‌ந்தை- 2011 இதுவரை வாங்கிய புத்தகங்கள்

போதிய விளம்பரம் இல்லாததாலும்,வேலை நாட்களாக இருப்பதாலும் நேற்று
ஸ்டால்களில் கூட்டம் மட்டுமல்ல.பதிப்பக உரிமையாளர்களைக் கூட காண்பது அரிதாக இருந்தது.தற்காலிக பொறுப்பில் இருந்த கடைப்பையன்களிடம் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால்,ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களையும் பிடுங்கி விடுவார்கள் என்ற பீதியில் நானே முடிந்தவரை தேடிக் கொண்டேன்.

வாங்க நினைத்திருந்த புத்தகங்கள் கிடைக்கப் பெறாமல் அலையும் அவலம் இந்த வருடமும் தொடர்கிறது.வண்ணதாசன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும்,கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸூம் எங்கு கிடைக்கும் என்றும் யாராவது தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

கிருஷ்ணபிரபு பரிந்துரைத்த சிஸ்டர் ஜெஸ்மியின் "ஆமென்" மலையாள புத்தகம் பரபரப்பான தன்வரலாறு.காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து குளச்சல் மு.யூசுப் தமிழில் கொணர்ந்திருக்கிறார்.கிறிஸ்துவ மடத்தில் நடக்கும் ஆன்மீக மீறல்கள்,குற்றங்கள்,பாலியல் வன்முறை குறித்து விரிவாக பேசுகிறது இந்நூல்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் தாங்கிய அலமாரியில் தோப்பில் முகமது மீரானின் "சாய்வு நாற்காலி"யும் அடுக்கப்பட்டிருந்தது வருத்தமளிக்கிறது.தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான இந்நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நாவல் ஒரு படிப்பினை.

தயவு செய்து பா.ராகவனின் டாலர்தேசம் புத்தகத்திருவிழாவில் வாங்கி விடாதீர்கள்.525 ரூபாய் விலை சொல்லும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.அதன் அசல் விலையான ரூபாய் 400க்கு,கிண்டி நடைபாதையில் கிடைக்கிறது.

சுஜாதா நூல்கள் படிக்க நினைப்பவர்கள் கிழக்கு பதிப்பகம் விஜயம் செய்யலாம்.எங்கு நோக்கினும் வண்ணமயமான வழவழப்பான அட்டைப் படங்களில் சுஜாதா கண்ணாடி அணிந்திருக்கிறார்.விஞ்ஞான சிறுகதைகள் உயிர்மையில் கிடைக்கிறது.

இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற, நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" தமிழினியில் கிடைக்கிறது.அவரிடமே கையெழுத்து போட்டு வாங்கி கொள்ளும் பாக்கியமும் தமிழினியில் இலவசம்.

த‌மிழினி:

சூடிய‌ பூ சூட‌ற்க‌ நாஞ்சில் நாட‌ன்
நெரிக்க‌ட்டு அழ‌கிய‌ பெரிய‌வ‌ன்

கிழக்கு:

காஷ்மீர் பா.ராக‌வ‌ன்
ரெய்னீஸ் ஐயர் தெரு வ‌ண்ண‌நில‌வ‌ன்

உயிர்மை:

க‌டிகார‌ம் அமைதியாக‌ எண்ணிக் கொண்டிருக்கிற‌து அ.முத்துலிங்க‌ம்
எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் சாரு நிவேதா
ம‌ண்பூத‌ம் வாமுகோமு

காலச்சுவடு:

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது ‍பஷீர்
பாத்துமாவின் ஆடு பஷீர்
மதில்கள் பஷீர்
ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி
ம‌காராஜாவின் ர‌யில் வ‌ண்டி அ.முத்துலிங்க‌ம்
கோப‌ல்ல‌ கிராம‌ம் கி.ரா

வ‌ம்சி:

உரையாட‌லினி அய்ய‌னார்
க‌தை நேர‌ம் பாலும‌கேந்திரா

கலீஃபாக்கள் வரலாறு
இஸ்லாமிய கேள்வி பதில்கள் ஜாகீர் நாயக்
இஸ்லாமும் பெண்களும்

********************