Saturday, January 23, 2010

நெப்பந்தஸ்



"நெருக்கியடித்து வளர்ந்தும் வளராத முட்புதர்களும்,செம்மண் புழுதி படிந்து காய்ந்து போயிருக்கும் கீழாநெல்லிச்செடிகளும்,சிறியதும் பெரியதுமாக கோரைப்புற்களும் சூழ்ந்த புனித மார்க் தோட்டத்தின் மண்ணறையொன்றில் மெல்வின் கிடத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."

ஆயிர‌ம் குண்டூசிக‌ள் ஒரு சேர செருகிய‌தைப் போல் வாடைக்காற்று செவிப்ப‌றையைக் கீறும் குளிர்கால‌ம்.எதிர் வீட்டு நாவ‌ல் ப‌ழ‌ ம‌ர‌ம் மட்டும் இலைகளையும் சருகுகளையும் கலைத்து பேரிரைச்ச‌லை உண்டு ப‌ண்ணாம‌லிருந்தால்,அந்த ர‌க‌சிய‌க் காற்றின் அமானுஷ்ய‌ம் விள‌ங்காம‌லே போயிருக்க‌க்கூடும்.ப‌றவைக‌ளும் மின்மினிப்பூச்சிக‌ளும் தத்தம் இணைகளோடு கூடிய நிசப்த வெளியில் தியான‌த்தில் இருக்கின்ற‌ன.புலர்காலை சூரியன் முதுகில் அறைந்து எழுப்பிய‌தும் அவைக‌ளின் த‌வ‌ம் க‌லைய‌க்கூடும்.அப்போது எல்லாம் ச‌ரியாகி விடும்.

ச‌ன்ன‌லின் திரைச்சீலை இருப்பு கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்த‌து.குளிர்சாதன‌ம் அணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌ற்காலிக‌ உஷ்ண‌த்தில் க‌டிகார‌ முள் ச‌ற்று உற்சாக‌மாக‌ ஒலியெழுப்பி ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌து.மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.வ‌ழ‌க்கமாக‌ இர‌வின் சுழற்த‌ன்மை புல‌னாவ‌த‌ற்கு முன்பே எனக்கு விடிந்து விடும்.இன்று கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ நாள்.அத‌னால் தான் என்ன‌வோ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டைத் தாண்டியும் தூக்க‌ம் பிடிக்க மறுக்கிறது.

ச‌குந்தலா இடப்பக்கம் படுத்திருக்கிறாள்.என் முக‌த்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.குழந்தைமை மாறாத க‌ண்க‌ளில் நீர்த்துளிக‌ள் சுர‌ந்து வீங்கியிருக்கிறது முக‌ம்.நிறைய அழுதிருப்பாள்.சோக‌ம் விர‌வியிருந்த அழகிய முட்டைக்க‌ண்க‌ளை விடியும் வ‌ரை பார்த்து கொண்டிருந்தாலும் பாவ‌மில்லை.பார்வை எதிர்கொள்ளும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ட‌ந்து,அவ‌ள் சிந்த‌னை கால‌ய‌ந்திர‌த்தின் ஞாப‌க‌ க‌ண்ணியை ப‌ற்றிக் கொண்டு,ஒரு வ‌ருட‌ம் பின்னோக்கி நீள்கிறது.நிச்ச‌ய‌ம் அங்கு நானிருக்க‌ப் போவ‌தில்லை.இருந்தாலும் தொந்த‌ர‌வு செய்ய‌ப்போவ‌தில்லை.அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.இது அவளுடைய அந்தரங்கம்.பிர‌த்யேக‌ தனிமை.முழுமையாய் அனுபவிக்கட்டும்.கரைந்து தீர்க்கட்டும்.

----

எங்கள் வீட்டின் வலது திண்ணையிலிருந்து சுவற்றை ஒட்டி எட்டிப்பார்த்தால்,வரதராஜ பெருமாள் கோயிலின் பின்புறமிருக்கும் பொற்றாமரைக்குளம் தெரியும்.சைக்கிள் இருந்தால் ஐந்து நிமிடங்களில் குளத்தை அடைந்து விடலாம்.குளத்தின் மறுகரையில் இருந்தது பாப்லோ ராமசாமி தெரு.குளத்தை ஒட்டியே இருந்ததால் அத்தெருவுக்கு ஒரு திவ்யமான அழகு கூடியிருந்தது.வைகறைகளில் சாணி மொழுகி,வண்ணப்பொடிகளைத் தூவி மலர்க்கோலம் இடும் இளந்தளிர்களை அலகில் வைத்து கவர்ந்து போக காகங்கள் கூட காத்திருக்குமாம்.மாமா சொல்லியிருக்கிறார்.

அக்ரஹாரத்து பெரியவாள் தெப்பக்குளத்தின் வலது கோடியில் குளிப்பது தான் வாடிக்கை என்பதால் இடது ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு பொற்றாமரைக் குளம் லேசாக கலங்கியிருந்தது.தூர்வாறப்படாத அந்த இடது ஓரத்தில் தான் நாங்கள் சர்வ ரகசியமாக குளிப்பதும் கோயில் கோபுரத்தைப் பார்த்து கை கூப்புவதும்! வரதராஜ பெருமாளை தரிசித்த கணங்களை விட,குளத்தில் ஊறியவாறே ராமசாமி தெருவின் தேவதைகளைக் கண்டு வாய் பிளந்த தருணங்கள் அதிகம்.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.

(தொடரும்..)

****

18 comments:

நட்புடன் ஜமால் said...

வழமை போல் ஒரு வித்தியாசமான துவக்கத்தோடு துவங்குகிறது பயணம்

நெப்பந்தஸ் இதை பற்றி படித்த ஞாபகம் இல்லை.

ஐக்கிய அமீரகத்தில் இருக்கையில் இப்படியாக உணர்ந்ததுண்டு குளிரை.

புலர்காலை சூரியன் வரும் வரை சந்தோஷமாக இருக்கட்டும்.

கொசுவுக்கு கூட இடைப்பகுதி பிடித்திருக்கின்றது

ஆம் கரைந்து தீர்க்கட்டும்

பாப்லோ - இப்படி ஒரு தெரு கண்டதில்லை

கீழ் வர்ணம் - ஹூம் தொடருங்கள் பிறகு கருத்திடுவோம் இதனை பற்றி

Thamiz Priyan said...

அழகா இருக்கு வர்ணனைகள்! புரியவும் செய்கின்றது.

VISA said...

//.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."//

வியந்தேன்!!!!

I envy your writing.

//திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் ......//

ரகசியம்....இரவு....இதை இரண்டையும் திகிலோடு சொல்கிறது இந்த வர்ணனை. உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதை அப்படியே தொடருங்கள். சில மாதங்களுக்கு முன்னால் உங்கள் எழுத்தின் மேல் எனக்கு நம்பிக்கை மட்டும் இருந்தது. இப்போது பொறாமையும் கூட. நான் இது போல் சிலரது பதிவுகளையும் புத்தகங்களை கூட படித்திருக்கிறேன் ஆனால் அவற்றில் ஒரு காட்சி விரிவு தென்படுவதில்லை. உங்களது இந்த எழுத்தில் நிறைய காட்சிகள் விரிகிறது. எழுத்தின் வெற்றியே அந்த காட்சி விரிதலில் இருக்கிறது. வாசிப்பவனுக்கு கதை வெறும் வார்த்தைகளாய் இல்லாமல் அவனுக்குள் ஒரு காட்சி ஓட வேண்டும் அது தான் கதாசிரியனின் முதல் வெற்றி.

S.A. நவாஸுதீன் said...

/////தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."/////

வாவ். பின்றீங்க செய்யது. என்ன எழுத்து இது!!. மாஷா அல்லாஹ். தொடரட்டும்.

S.A. நவாஸுதீன் said...

/////அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.//////

சான்ஸே இல்லை வாப்பா. உங்களுக்குன்னு ஒரு தனி இடம் கிடைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. அதன் தொடக்கம்தான் இது. அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க செய்யது.

அப்துல்மாலிக் said...

//மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.//

செய்யது கற்பனைக்கு ஒரு அளவே இல்லியா இப்புடியா.. வியந்தேன் எழுத்துக்களோடு பின்னிய கற்பனை எடுத்துக்காட்டுகளை

தேர்ந்த எழுத்தாளனின் நாவல் படிக்கும் பிரமிப்பு, செய்யதுக்கூட தேர்ந்த எழுத்தாளந்தானே..

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
ஐக்கிய அமீரகத்தில் இருக்கையில் இப்படியாக உணர்ந்ததுண்டு குளிரை
//

இப்போ அதெல்லாம் இல்லேப்பா.. வெப்பமயாதலின் தாக்கமோ?

SUFFIX said...

//இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை//

அழகிய எழுத்து நடையுடன் அருமையாக செல்கிறது...

ப்ரியமுடன் வசந்த் said...

ஜமாலண்ணா நெப்பந்தஸ் அசைவ உண்ணி பூச்சிகளை உணவாக தின்னும் விசித்திர தாவரவகை நீங்கள் முதல் குரூப் படித்திருந்தால் அறிந்திருக்க இயலாது...

கதைக்கேற்ற பொருத்தமான தலைப்பு

//வ.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.//

தேர்ந்த எழுத்து நடை செய்யது இப்படி தலைக்கனமில்லா எழுத்தில் மிகச்சிறப்பான எதிர்காலபடைப்புகள் ஒளிந்திருக்கின்றது என்பதை தங்கள் எழுத்துகள் சொல்லாமல் சொல்கின்றன... தொடரும்ன்னு போட்டு ஒரு வாரமோ ரெண்டுவாரமோ காக்க விட வேண்டாம்...! விரைவில் அடுத்த பகுதி

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால்..கருத்துகளுக்கு

------------------

நன்றி தமிழ் பிரியன்..!!!

----------------------

நன்றி விசா...உங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளுமே உத்வேகத்துடன் அயராது இயங்கச்செய்கிறது.தயக்கமில்லாமல் புதிய சோதனை முயற்சிகளை அணுகுவதற்கு
உங்கள் உதவியும் தேவைப்படுகிறது.

அ.மு.செய்யது said...

ந‌ன்றி நவாஸூதீன்..ஒவ்வொரு ப‌திவிலும் இப்ப‌டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அந்த‌ ரேஞ்சுக்கு பின்னூட்ட‌ம் போட‌றீங்க‌ளே !!! அவ்வ்வ்வ்வ் !!!!
--------------------------

ந‌ன்றி அபுஅஃப்ஸ‌ர்..ந‌வாஸூக்கு அடுத்து நீங்க‌ளா...ச்செய்ங்க‌ !!!
-----------------------------

ந‌ன்றி ஷஃபிக்ஸ் !!!

அ.மு.செய்யது said...

நன்றி பிரியமுடன் வசந்த்..!!!

நெப்பந்தஸூக்கு சரியான விளக்கம் நீங்க சொன்னது தான்.வாழ்த்துகளுக்கு நன்றி !!!

உங்கள் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அடுத்த பகுதி விரைவில் !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் எழுத்தில் நிறைய பரிணாம வளர்ச்சி. அதை கடந்த பதிவிலும் இந்தப் பதிவிலும் பார்த்து வியக்கிறேன் செய்யத்.

நெப்பந்தஸ் - அறிவியல் பாடத்தில் படித்த ஒரு தாவரத்தை அழகாக பொருத்தியுள்ள இடம் மிக அழகு.

தொடருங்கள்.

மாதவராஜ் said...

முழுவதுமாய் படிக்க காத்திருக்கிறேன்.

எழுத்து நடை வசீகரமாய் இருக்கிறது...!

அ.மு.செய்யது said...

நன்றி அமித்து அம்மா...மாதவராஜ் அவர்களே !!!

உற்சாகமளிக்கிறது உங்கள் பின்னூட்டங்கள்.

அன்புடன் மலிக்கா said...

நல்ல வர்ணனைகள்..

நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்

http://fmalikka.blogspot.com/

நேசமித்ரன் said...

//மாதவராஜ் said...
முழுவதுமாய் படிக்க காத்திருக்கிறேன்.

எழுத்து நடை வசீகரமாய் இருக்கிறது...!

January 25, 2010 3:01 AM//

Same blood !!!

பா.ராஜாராம் said...

செய்யது,

வேலைப் பளுக்கள்.வர தாமதமாகிப் போச்சு.

எல்லோரையும் பேசுவது போல் உங்களையும் பேச விரும்புகிறேன்.

"எழுதுங்கியா..."