Monday, October 19, 2009

முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று




எழுத்துல‌கில் வெகு அபூர்வ‌மாக‌த்தான் நிக‌ழ்கின்றன‌ இது போன்ற‌ ப‌டைப்புக‌ள்.கவிஞ‌ர் ச‌ல்மாவின் க‌விதைக‌ள் பெரும்பாலும் பெண்க‌ளின் வாழ்விய‌ல் போராட்ட‌ங்க‌ளையும் அவ‌ல‌ங்க‌ளையும் உண‌ர்வுப்பூர்வ‌மாக எடுத்துரைக்கும்.அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளுள் ஒன்று அதிகாலையில் பார்த்த மாத்திரத்திலென் முகத்திலறைந்தது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீள வில்லை.


இரண்டாம் ஜாமத்துக் கதை
****************************

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய

இரவுகளில்

பழகிய நிர்வாணத்திற்கிடையில்

அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்

என் அழகின் களங்கமின்மையை



பெருத்த உடலும்

பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்

ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்

சொல்கிறாய்

இன்றும் இனியும்

எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்



நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டிருக்கும் என் குரல்

தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்

என் உடலைப் போலல்ல

உன்னுடையது

பறைசாற்றிக்கொள்வதில்

வெளிப்படையாக இருப்பதில்



இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்



நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்

இந்தப் பிரசவக் கோடுகளும்

எளிதில் செப்பனிட முடிவதில்லை

வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை



உன்னைக் காட்டிலும்

மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது

இயற்கை எனக்கு

உன்னிலிருந்துதானே தொடங்கிற்று

எனது தோல்வியின் முதலாவது நிலை



முதல் ஜாமத்தைக் காட்டிலும்

விபமுதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்



சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டிலமர்ந்து

உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது


************************

27 comments:

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!

பாலா said...

இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்




ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ் அப்பாடி கன்னம் வலிக்குது

anujanya said...

பிரசவக் கோடுகள் புலியின் வரிகளாய் கம்பீரமாக மிளிர்கின்றன

அனுஜன்யா

pudugaithendral said...

முகத்தில் அறைந்த கவிதை நல்ல தலைப்பு, நல்ல கவிதை ரசித்தேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கவிதை, பகிர்வுக்கு நன்றி.

S.A. நவாஸுதீன் said...

எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிஞர் சல்மா. இது முன்னரே படித்திருந்தாலும், எத்துனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். அவலங்களை அனாயசமான வரிகளில் வெளுத்து வாங்குவார். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி செய்யது.

தாரணி பிரியா said...

சல்மா அவங்களை பாக்கும்போது பக்கத்து வீட்டு பொண்ணு போலத்தான் இருப்பாங்க. பேசறதும் அது போல பழகியதொரு தோழிகிட்ட பேசறது போலத்தான் இருக்கும். ஆனா எழுத்தில் அவங்க காட்டற வலிமை கம்பீரமா இருக்கு. நல்ல பகிர்வுக்கு நன்றி செய்யது

SUFFIX said...

பகிர்விற்க்கு நன்றி செய்யது. தாங்கள் கொடுத்த தலைப்பும் அருமை!!

வனம் said...

வணக்கம்

\\உன்னைக் காட்டிலும்

மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது

இயற்கை எனக்கு

உன்னிலிருந்துதானே தொடங்கிற்று

எனது தோல்வியின் முதலாவது நிலை\\

முகத்தில் அறையவில்லை, நெஞ்சில் முட்டித்தல்லுகின்றது

இந்த கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது என்றுதானே அதிகம் பேசாத பெண் வேண்டும் என கேட்கின்றோம் இப்பொழுது அனுசரித்துப்பபோகும் பெண் என

இராஜராஜன்

வால்பையன் said...

மறுகன்னத்தையும் காட்டியிருந்தால் இன்னொரு கவிதை கிடைத்திருக்குமே!

இங்கணம்
உசுபேத்தி ரணகளம் ஆக்குவோர் சங்கம்!

தேவன் மாயம் said...

பெண்மையின் இயலாமையை அனுபவித்து வடித்திருக்கிறார்!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மிக நேர்மையான கவிதை. பகிர்வுக்கு நன்றி

-ப்ரியமுடன்
சேரல்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பகிர்வுக்கு நன்றி. நல்ல கவிதை. ரசித்தேன்.

Anonymous said...

உயிர் சிலிர்க்கிறது இந்த பெண்ணின் கோவம்...

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை.. இதுவரை சல்மாவின் கவிதைகளைப் படித்ததில்லை.. பகிர்வுக்கு நன்றி நண்பா

ஹேமா said...
This comment has been removed by the author.
ஹேமா said...

வலியின் அடிப்பாதத்திலிருந்து எடுத்து வந்த வலிந்த வரிகள்.பெண்களை அடிமைப் படுத்தாவிடினும் சில அலட்சியங்களே போதும் வலிகொள்ள வைக்க.

செய்யது,நான் நல்லாப் பிந்திட்டேன்.

அ.மு.செய்யது said...

அலுவலக ஆணிகள் காரணமாக தனித்தனியாக நன்றி சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்.

இவ்வளவு தூரம் வந்து கருத்துகளை தெளித்து வைத்த அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு ஹோல்சேல் நன்றி !!!

பா.ராஜாராம் said...

உலுக்கி எடுக்குது செய்யது.பகிர்வுக்கு நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதைத் தேர்வு.

அ.மு.செய்யது said...

நன்றி ராஜாராம் !!!

நன்றி உழவன் !!! வருகைக்கும் கருத்துகளுக்கும் .

அன்புடன் அருணா said...

பளாரென விழுந்தது....

Thamira said...

ஆண்களை பதிலற்றுப்போகச்செய்யும் பலமான கேள்விகளை எழுப்பும் சிறந்த பல படைப்புகளுள் இதுவும் ஒன்று. பகிர்வுக்கு நன்றி செய்யது.!

அன்புடன் மலிக்கா said...

பெண்மையின்
இயலாமையின் வெளிப்பாட்டை வரிகளின் கருவுக்குள் வைத்து கவிதையாய் தந்த சல்மாவுக்கு பாராட்டுக்கள்,

அதை பகிர்ந்துகொண்ட செய்யதுக்கும் மிக்க நன்றி..

சுந்தரா said...

கனல் கவிதைக்குப் பாராட்டுகள்!

பகிர்வுக்கு நன்றிகள்

ISR Selvakumar said...

//இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்
//
ஆற்றாமையும், கோபமும் கலந்த வரிகள்.

அ.மு.செய்யது said...

ந‌ன்றி அன்புடன் அருணா !

ந‌ன்றி ஆதிமூல‌கிருஷ்ண‌ன்

ந‌ன்றி அன்புட‌ன் ம‌லிக்கா

ந‌ன்றி சுந்த‌ரா

ந‌ன்றி r.selvakkumar !!!