Monday, December 1, 2008

மேகங்கள் திரட்டுவது நீ.......


பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.

விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து
விடும்.
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

இன்னுமொரு பிரபஞசத்தில்
மீண்டும் என்னைப் பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும் என்னைக் காதலிப்பாய்.

வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருக்கிறது நம் காதல்.