Tuesday, April 28, 2009

இளமை விகடனில் எனது சிறுகதை


நேற்று காலை நான் பதிவிட்ட "உச்சத்தை தொட்ட தினம்" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.

படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.நன்றி விகடன் !!!!

பதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள்.
குறையொன்றுமில்லை.

Sunday, April 5, 2009

அந்த முதல் சந்திப்பு பாகம்-2



பாக‌ம்-1 ப‌டிக்க இங்கே சொடுக்குக !!!!

மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.

முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.

ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!

நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.

வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.

"வ‌ந்து ரொம்ப‌ நேர‌ம் ஆச்சா ??" நான்.

"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌" அவள்.

விடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின் தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....

அன்று சனிக்கிழமை மதிய நேரமாக‌ இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.

அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.

காத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.

ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.

கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.

முதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்த‌தை நினைவூட்டினேன்.

"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.."

"ப்ளீஸ்..ப்ளீஸ்..என‌க்காக‌ ஒருமுறை"

"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."


வடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த செய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."


( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)

Tuesday, March 17, 2009

சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ??

"இந்துக்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.மற்ற அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்"என்று தேர்தல் களத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வருண்காந்தி.

இதற்கு பா.ஜ.க வே அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

அவ‌ர‌து பேச்சுக்க‌ள் அட‌ங்கிய‌ வீடியோ சிடி ந‌ம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வ‌சூலில் சாத‌னை ப‌டைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,இந்த‌ செய்தி மிகைப்ப‌டுத்தப் ப‌ட்டிருக்கிறது என்றும் நான் அதில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே இல்லையே எனவும் பல‌ காமெடி ஜ‌கா வாங்கியிருக்கிறார் வ‌ருண்.

தேர்த‌ல் விதிமுறைக‌ளை மீறிய‌த‌ற்காக‌, அவ‌ர் மீது கிரிமின‌ல் வழ‌க்கு தொட‌ர‌, தேர்த‌ல் ஆணைய‌ம்,உத்திர‌ பிர‌தேச தேர்த‌ல் ஆணைய‌த்திட‌ம் ப‌ரிந்துரைத்திருக்கிற‌து.

அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.

இன்னும் என்னென்ன‌ கூத்துக்க‌ள் ந‌ட‌க்க‌விருக்கின்ற‌ன‌வோ !!!! பொறுத்திருந்து பார்ப்போம்.

வ‌ருணிட‌ம் ஒரே ஒரு கேள்வி: ச‌ரிங்க‌ண்ணா...இந்துக்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ம‌ய‌த்தனைவ‌ரையும் இந்தியாவை விட்டு வெளியேற்றி விட‌லாம்.

அப்ப‌டியானால், அக‌ர‌ ( ஆங்கில )வ‌ரிசைப்ப‌டி, முத‌லில் அப்துல் கலாமையும், பிற‌கு அல்லா ர‌க்கா ர‌ஹ்மானையும் வெளியேற்றுவீர்க‌ளா ??

சொல்லுங்க‌ எச‌மான்..சொல்லுங்க‌...

Wednesday, March 4, 2009

கண்டினியுட்டி இல்லா கவிதை......

முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..

உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் ப‌த்திர‌மாக‌
ப‌த‌ப்படுத்திக் கொள்ள‌
மீண்டும் மீண்டும் முய‌ன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.

கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்
அந்த ஒற்றை இரவில்...

அவ‌ள் அழுகை
ச‌த்த‌மாக சிரிக்கத் தொட‌ங்கிய‌து
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.

'எங்கிருந்தாலும் வாழ்க' வென‌
விய‌ங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க‌ இல‌க்க‌ண‌ம் ம‌ற‌ந்துபோன‌து
இருவரின் மொழியிலும்.

பெருங்கூச்சலிட்ட நிசப்த‌
சாரீரங்களை கொண்ட‌
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.



*******************************

Friday, February 20, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

"தமிழ் கோனாறுகளோ காயிலாங்கடையில்....

மனப்பாடம் செய்த செய்யுட்களோ மறதிக்கிரையாய்...

அகநானூறும் புறநானூறும் அவுட் ஆஃப் ஃபோகஸில்..."


இந்த வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர்பதிவுக்கு நம்ம ரம்யா டீச்சர் அழைத்ததிலிருந்து,இப்படித்தான் ஆயிட்டேன்.சரி டீச்சர் செய்ய சொன்னா அது ஹோம் வொர்க் மாதிரி..செஞ்சே ஆகணுமா இல்லையா...??



உலக பொருளாதார பெருமந்தத்தின் விளைவாக,பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சராசரி குடிமகனும் தன்னுடைய அடிப்படை செலவீனங்களை குறைத்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.எனவே நாம் உபயோகிக்கும் வார்த்தைகளையும் சற்றே குறைத்து கொள்வதில் யாதொரு தவறுமில்லை என்று ( நான் மட்டுமே ) கருதியதால்,நீங்கள் தமிழை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள ஓரெழுத்து தமிழ் சொற்களை மட்டும் இங்கே பார்வைக்கு வைக்கலாம் என முடிவு செய்தேன்.

ஓரெழுத்து சொற்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரியது என்பது என்னுடைய‌ அனுமானம்.( இது போன்ற ஓரெழுத்து வார்த்தைகளைக் கொண்ட பிற மொழிகள் உங்களுக்கு தெரிந்திருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் )

-பசு ( '' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )

-பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

சோ-மதில்,அரண்

-இறைச்சி, உணவு

-அழகு, ஐந்து, ஐயம் ( "ஐயா..எனக்கொரு டவுட்டு" என்பதற்கு பதிலாக "ஐயா எனக்கொரு " என இனிமேல் கேட்கலாமா ?? )

-சென்று தாக்குதல்

மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ -மேலே, ஆகாயம், உயர்வு

மூ -மூப்பு (முதுமை), மூன்று

மே -மேல், மேன்மை

மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு

மோ -முகர்தல்

கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம் ("உன் பேச்சு கா" என்று நாம் சொல்வதின் பொருள் விளங்குகிறதா ? )

கூ - பூமி , கூவு

கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)

இன்னும் எண்ணற்ற ஓரெழுத்து தமிழ் சொற்கள் கைவசமிருக்கின்றன..தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )

விதிப்படி 3 பேரை கொக்கி போட வேண்டும்.எனவே மூவரை கொக்கி போட்டு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.மூவருக்கும் ஏழு திங்கள் ( ஒன் வீக் ) கெடு விதிக்கப்படுகிறது.கொடுத்த கால அவகாசத்திற்குள் கடமையைச் செய்ய தவறினால் "பிம்பிலிக்கி பிலாபி" போன்ற பல அரிய தமிழ் சொற்களை வைத்து,ஒரு செய்யுள் இயற்றச் சொல்லி துன்புறுத்தப்படுவார்கள் என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

1.அன்புடன் வாலு என்கிற டொக்டர் வால்ஸ்

2. நசரேயன் என்கிற சாக்ரட்டீஸ் ( பதிவு போட்டா பின்னூட்டத்தில ஓவரா கேள்வி கேக்குறதினால இந்த 'வலையுலக சாக்ரட்டீஸ்' பட்டம்.இந்த பட்டத்த நம்ம நிஜமா நல்லவரோட சேர்ந்து சண்ட போடாம ஓரமா போயி பிச்சிக்கிங்க.. )

3.தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.

டிஸ்கி: ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட பலரால் தொடர்பதிவுக்கு அழைக்கப்பட்டு, இன்னும் கொடுத்த ஹோம்வொர்கை நிறைவு செய்யாமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருக்கும் சான்றோர் பெருமக்கள்.

* அபுஅஃப்ஸர்
* வால்பையன்
* ஜமால் காக்கா


( பள்ளிக் காலங்களில் நாந்தான் ரெப்பு என்கிற பராக்கிரமத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.)

Tuesday, February 17, 2009

அந்த முதல் சந்திப்பு

"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"


எல்லா காதலர்களின் முதல் சந்திப்புமே இது போன்ற ஏக்கப் பிரகடனங்களில் தான் ஆரம்பிக்கும்.நாங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.

இடம்:ஆள் அரவம் அதிகம் இல்லா ஒரு ரயில் நிலையம்.
நேரம்: மதியம் 1.30 முதல் கெஞ்சல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை.

அவசரம் அவசரமாய் எல்லாம் ஒன்றுமில்லை.மதியம் பன்னிரெண்டை தொடுமுன் கடிகார முட்களை மானுவலாக திருப்பாத குறை தான்.

கருஞ்சாம்பல் நிற ஜீன்ஸ்,பிராண்டட் சட்டை,ரீபோக் ஷுஸ்,ப்ரில் கீரீம்,ஆக்ஸ் ஸ்பிரே மற்றும் சில புன்னகைகள் என்னை ஒரு புதிய பரிமாணத்தில் ஆயத்தமாக்கி கொண்டிருந்தன. போருக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.

ஒரு வழியாக படியாத தலைமுடியை படிய வைத்து சீவி கிளம்பியாகிவிட்டது.வேண்டுமென்றே முதல் ரெண்டு ரயில்களைத் தவற விட்டு,மூன்றாவது ரயிலில் அமர்ந்தவனுக்கு நேற்று அலைபேசியில் அவளிடம் பரிமாறிய குறுந்தகவல்கள் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வந்தன.

"நான் தான் முகத்தை மறைத்திருப்பேனே..என்னை எப்படி கண்டு பிடிப்ப ??"

"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""

அதற்குள் அலைபேசி அதிர.. அவளாகத் தானிருக்கும்..அவளே தான்..

"எங்கடா இருக்க ??"

"பழவந்தாங்கல் கிட்ட வந்துட்டேன்..இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.நீ எங்க இருக்க?"

"நான் மீனம்பாக்கம் வந்து 15 வருஷம் ஆச்சுடா..சீக்கிரம் வா..நான் இங்க ஒரு போன் பூத் பக்கத்தில நிக்கிறேன்."


"சரி..அங்கயே வெயிட் பண்ணு...வந்துட்றேன்."

இந்த பத்து நிமிட இடைவெளியில் நான் அவளோடு...அந்த அற்புத கணங்களை எப்படி செலவிடப் போகிறேன் என ஒரு சராசரி காதலனாய் மனதுக்குள் சில ஒத்திகைகள் நடந்தேறின.

நிச்சயம் அவள் கண்களைப் பார்த்து தான் பேச வேண்டும்.அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அவள் புன்னகைக்கும் போது,

"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"

என்ற ஒரு அரிய கேள்வியெழுப்பி அவளின் முதல் செல்ல அடிகளையும் மற்றும் எனக்கே எனக்கான சில'முதல்'களையும் பரிசில் பெற வேண்டுமெனத் தீர்மானித்து கொண்டேன்.

இப்படி கைவசம் இருந்த பலப்பல பிட்டுகளின் பட்டியல் நீண்டது.

இரண்டு முறை அவளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவள் "அவளாக" இருந்த போது.....இப்போது அந்த அவள் "என்னவள்" ஆகிவிட்டாள் அல்லவா?.
மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் நடுக்கமும் கூடிய ஒரு புதுவித படபடப்பு தொற்றி கொண்டது.இருவரும் காதலைச் சொன்னபிறகு நிகழப் போகும் முதல் சந்திப்பு என்பதால் ஒரு கூடுதல் குறுகுறுப்பு.

வாங்கி வைத்திருந்த மினரல் வாட்டரால் முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் ஒருமுறை தலை வாரிக் கொண்டேன்.

மீனம்பாக்கமும் வந்தாகிவிட்டது.படபடப்பு அதிகரித்தது.முகத்தில் வழிவது தண்ணீரா வியர்வையா என்றெல்லாம் பட்டிமன்றம் வைக்காமல்,கண்கள் மட்டும் பிரத்யேகமாக எனக்காக மட்டும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட என்னவளைத் தேட ஆரம்பித்தன.

( அடுத்த பாகம் விரைவில்.... )

******************************************************************************

Thursday, February 5, 2009

கவிதை எழுதுவது எப்படி ??

முன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் ப‌டித்து முடித்த‌வுட‌ன் காரி உமிழ‌க் கூடாது.

கடந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப் பேற்றிருந்த நம் அதிரை ஜமால் அவர்கள்,வலையுலகின் தலைசிறந்த கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருந்தார்.அந்த கவிப்பேரரசுகளின் படைப்புகளை படித்து விட்டு,எல்லோருக்கும் ஏற்படுவதைப் போல், நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என உள்ளுக்குள் இருந்த பட்சி பீதியை கிளப்பியது.

"பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி
"................எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்...

ஆனா ஒரு க‌ண்டிச‌ன்...

இந்த‌ க‌விதைய‌ எழுதி முடிக்க‌ற‌ வ‌ரைக்கும் ந‌ம்ம‌ புதியவ‌ன்,ச‌ர‌வ‌ண‌க்குமார்..அய்ய‌னார் இந்த‌ மாதிரி பெரிய‌வா ஆத்துப்ப‌க்க‌ம் த‌ல‌ வெச்சி ப‌டுக்க‌ப் ப‌டாது.மீறி ப‌டுத்தால் இவர்களின் பாதிப்பு ந‌ம்மையும் தொற்றிக் கொள்வ‌தோடு ம‌ட்டுமின்றி,ந‌ம் மூளையும் செக‌ண்ட் ஹேண்ட் மூளையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று குத்த வைத்திருந்த அதே பட்சி குறி சொல்லிற்று.

எல்லாவ‌ற்றையும் ம‌ன‌த்தில் இறுத்திக் கொண்டு,மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்....

எதைப் பற்றி எழுதுவது ??? மனம் கொஞ்ச நேரம் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது....ஆஆ..காதல்......

கழுத கெட்டா குட்டிச் சுவர்..அட டைட்டில் இதயே வச்சிர்லாம் போல..வேணாம்..கவிதைனா படிப்பவர்கள் மனதைப் பிழிய வேண்டும்.
ஆகவே முதல் முத்தம்..பிரிவு சோகம்..இப்படி எழுதினால் எமோஷனல் வொர்க் அவுட் ஆக கூடும் என்பதால் நம் கற்பனை வண்டிக்கு கிருஸ்னாயில் ஊற்றி, டாப்கியரில் தூக்கினோம்.

கண்ணீர்.......oooo

அழுகை......(ஆஹா...)

பிரிவு.......

வலி.........(ஆஹா...)

வ‌ருது ..வ‌ருது....விடாத‌...( அதே ப‌ட்சி என்க‌ரேஜ் செய்ய ஆர‌ம்பித்த‌து )

வான‌ம்...

நீல‌ம்...ம்ம்ம்ம்ம்...

நாற்ற‌ம்....
....
...( கொட‌ல‌ பொற‌ட்டுதுடா சாமி...!!!!!!!)
என்னாச்சு....யாருப்பா அது...எங்கோ பெருச்சாளி செத்த‌ வாடை மூக்கினுள் உட்புகுந்து மூளையை க‌டித்து குத‌ற‌ ஆர‌ம்பிக்க‌..அலுவல‌க‌த்தில் ஒரு க‌ண‌வான் த‌ன் காலுறையை க‌ழ‌ற்றி வைத்ததால் ஏற்ப‌ட்ட‌ விஷ‌வாயு தான் அது என்று தெரிவிக்க‌ப் ப‌ட்டு அதிருப்தி வெளியிடப்ப‌ட்ட‌து.

நமது வால்பையனின் ஒரு பதிவில் "பெருச்சாளி" என்ற பெயரில் அனானியாக‌ சென்று பின்னூட்டியது நினைவுக்கு வர, அவர் இட்ட சாபம் தான் பிற்பகலில் விளைகிறது என மனம் நொந்து கொண்டு....

மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்...

"அவள் அழுகையும்
கண்ணீரும்
அந்த எலிச்செத்த நாற்றத்தில்
மறைந்து போனது"


அப்படினு அடுத்த லைன் எழுத, பக்கத்தில் அமர்ந்திருந்த பட்சியின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

சரி...முடிஞ்சி போன பத்தி எதுக்கு பேசுவானேன்..கொஞ்சம் கமர்ஷியலா யோசிங்க பாஸ்...எப்படி...நம்ம தர்மு சிவராமு எழுதியிருந்தாரே !!!

"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு
"

இப்படி சிவராமு யோசிக்கலாம்..நாம் யோசித்தால் கமர்ஷியல் எந்த கோணத்தில் போகும் என்று உமக்கு தெரியாதா ?? ஆரம்பிக்கும்போதே ரிஸ்க் எடுப்பது உசிதமல்ல‌ என்று அந்த சூனியக்கார பட்சிக்கு விடையளித்தேன்."வேண்டுமென்றால் ஒரு க‌ண்காட்சி க‌விதை எழுத‌லாம்."

க‌ண்காட்சி க‌விதையென்ப‌து புதுக்க‌விதையில் ஒரு வ‌கை.இங்கு க‌விதையின் க‌ருத்திய‌லோடு அத‌ன் உருவ‌மும் முக்கிய‌த்துவ‌ம் பெறுகிற‌து.க‌விதையில் கூற‌வ‌ரும் பொருளும் உருவ‌மும் இறுகிச் செறிந்திருக்க‌ வேண்டும்.பொருளையும் உருவ‌த்தையும்
பிரிக்க‌ முடியாத‌ப‌டி பிணைந்திருக்க‌ வேண்டும்.

எடுத்துக் காட்டாக எஸ்.வைத்தீஸ்வரனின் "ஆசை" என்ற கவிதையைச் சொல்லலாம்.

"முதுகு வளர‌
நீ
ண்
டு
விட்ட‌
கூந்தலுக்கு
மேலும் வளரத்
துடிதுடிப்பென்ன..
"

ஆகவே, உள்ளடக்கத்தின் ஆதிக்கம் உருவத்தில் புலப்பட வேண்டும்.வெகு சமீபத்தில் நம் தேவா எழுதிய‌ கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது! கண்காட்சி வகை கவிதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.

என்று நாம் அதன் சாராம்சங்களை விளக்க,(ப‌ட்சியின் புற‌த்திலிருந்து ஒரு ஆங்கில ப‌ட‌த்தின் ட்ரெயிலர் ஓடிக்கொண்டிருந்த‌து..க்க்க்கொர்,...ர்ர்ர்ர்ர்....தூங்கிட்டானா ??)

ஆஹா..இது நமக்கு ஒத்துவரக்கூடும் என நானும் பட்சியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி,மீண்டும் நம் கற்பனை வண்டியின் ஆக்ஸிலரேஷனைத் திருக்கினோம்.டைரியை க‌க்கத்தில் இறுக்கிக் கொண்டு,ரத்த வெறியோடு யோசித்துக் கொண்டே சென்று என்னைய‌றியாம‌ல் லேடிஸ் ரெஸ்ட் ரூமின் க‌த‌வைத் திற‌ந்து வைத்தேன்.

SORRY FOR THE BREAK !!!!!!!!!!!!!

ந‌ல்ல‌ வேளை.அங்கே ஜீன்ஸ் போட்ட‌ பைங்கிளி ஒன்று ம‌ட்டும் க‌ண்ணாடி முன்பு சோப்பு போட்டு முக‌ம் க‌ழுவிக் கொண்டிருந்த‌ ப‌டியால்,ம‌யிரிழையில் நாம் உயிர் த‌ப்பினோம்.( எங்க‌ அந்த‌ ப‌ட்சி ப‌ய‌ புள்ள....எஸ் ஆயிட்டானா...)அதோடு அபசகுனம் கருதி அந்த கண்காட்சி கவிதை முயற்சியும் கைவிடப்பட்டது.

ச‌ரி..க‌டைசியாக‌ யாருக்கும் புரியாம‌ல்,உண‌ர்த்தும் முறையில் வித்தியாசம் காண்பித்து..நிறைய‌ காம்பிளக்ஸ் குறிப்புகளைச்செருகி, ஒரு ப‌டிம‌க் க‌விதையெழுத‌லாம் என இறுதி முடிவு நானே எடுத்தேன்.ச‌ர‌வ‌ண‌குமார்,அய்ய‌னார் இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டிம‌க் க‌விதையெழுதுவ‌தில் கை தேர்ந்த‌வ‌ர்க‌ள் என்பதை க‌ருத்தில் கொள்ள‌வேண்டும்.என‌வே,அவர்க‌ளின் பாதிப்பு வ‌ர‌க்கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

ஸ்டார்ட் மீமீசிக்...

"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் நான் எழுதிய இந்த படிமக்கவிதையை, வலைதளம் ஆரம்பித்து "தவம்" என்று பெயரிட்டு பதிவிட்ட போது.. கிடைத்த ஒரே ஒரு பின்னூட்டத்தை எண்ணி, கண்ணில் ஒரு துளிநீர் எட்டிப் பார்த்து, அப்பீட் ஆனது....அந்த ஒற்றைப் பின்னூட்டமிட்ட அந்த புண்ணியவானைத் தான் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ச‌ரி க‌விதையெழுதுவ‌து எப்ப‌டி ??

அது தெரிஞ்சிருந்தாத்தான் ஒரு கவிதைய போட்டிருப்ப‌ம்ல‌..இவ்ளோ பெரிய‌ விள‌க்க‌ம் எதுக்குன்ன‌ ??(போங்க‌..போங்க‌.போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌..!!!!! )