
நீ என்னுள் விதைக்கப் பட்ட
நாளை நான்
ஒருபோதும் மறந்ததில்லை.
ஒவ்வொரு மழைத்துளியும்
நம்மையும் நாம் சந்தித்த
முதல் நாளையும்
நினைவு படுத்தி கொண்டே இருக்கின்றன.
வெயிலில் காய்ந்த
விரல்களிலிருந்து
உதிரமாக படர்ந்தாய்
என்மீது நம்பிக்கையுடன்.
நான் உன்னை இறுகப் பற்றிக் கொண்டேன்.
நீ உன் வேர்களால் என்னைக் கட்டியணைத்தாய்.
உயிரைப் பிழிந்து
உனக்கென ஈரம் சுரப்பேன்.
உன் வேரிதழ்களால்
முழுவதுமாக உறிஞ்சிக் கொள்வாய்.
வெய்யவன் கூட சிறிது
வெட்கப் பட்டுக் கொள்வான்.
சுள்ளென்று தன் கதிர்களால்
சுவரம் வாசிப்பான்.
காற்றில் நீ அசைவதும் என்
மெளன மொழி கேட்டு
நாணித் தலை கவிழ்வதும்
கவிதையின் தூரிகைகள்.
சேர்ந்த நாளிலிருந்து
கண நேரம் கூட
நாம் பிரிந்ததாக
பிரபஞ்சத்தில் குறிப்புகளில்லை.
வளர்ந்தன செழிப்பாய்
உருவமும் உறவுகளும்.
காலத்தின் நகர்வுகள்
காதலுக்கு பரிச்சயமில்லை.
இதோ என்னுள் நீ
முழுவதுமாக் ஊடுருவி விட்டாய்.
உயிருடன் பிணைந்து விட்டாய்.
நம்மை இணைத்த அதே கரங்கள்
இன்று நம் பிரிவுக்கு வித்திடுகின்றன.
உறவோ முறையோ
உயிரோ ரணமோ
கண்ணீருடன் விடை பெற்றோம்.
பிறர் நலனுக்காக
உன்னுயிரைத் தியாகம் செய்தாய்.
உன்னில் என்னையும் அர்ப்பணித்தாய்.
இந்த உறவு
உலகம் உயிர்வாழ,
நீ விட்டுச் சென்ற
சுவடுகள்
அடுத்த விதையின்
ஆரம்பப் புள்ளிகள்.
ஒவ்வொரு முறையும்
துவைக்கப் படும் போது
சிதறிப் போகின்றன
நெற்கதிர்களும்
நம் காதலும்............
இப்படிக்கு,
உன் அன்பு வேர்.