Showing posts with label குறுநாவல். Show all posts
Showing posts with label குறுநாவல். Show all posts

Sunday, February 14, 2010

நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )


முத‌ல் பாக‌ம் ப‌டிக்க..!

---------------------------------

தீட்டுக்காயங்கள் பழுத்து,ஆறி காய்ந்து தழும்புகள் மறைந்து சமநிலைக்கு வந்தது கல்லூரியில் சகுந்தலாவின் அறிமுகத்திற்கு பிறகு தான்.பால்க‌வுச்சியும் நெய் வாடையும் கும‌ட்ட வைத்த‌ பா.ரா தெருவின் ஒரே ம‌ரிக்கொழுந்து ம‌ண‌ம் சகுந்தலாவினுடைய‌து.பெரிய‌ பெரிய‌ க‌ண்க‌ளுடைய‌ ச‌குந்த‌லாவின் மேனியெங்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ம‌ண‌ம் வீசும்.துள‌சி,ம‌ல்லிகை,பெருங்காய‌ சாம்பார்,மூல்தானி மெட்டி,சிகைக்காய்,மோர்க்குழ‌ம்பு என ஒவ்வொரு கிழமையும் திங்களும் நாழிகையும் ஒவ்வொரு மணம்.அப்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் ஒரு சுத்த ஐய‌ங்கார் வீட்டுப் பெண்,பேயன் தெரு மக்களோடு புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும்,தொட்டு அடித்து பேசுவதும் டிப‌ன் பாக்ஸை திற‌ந்து பார்ப்ப‌தும்,ஐம்ப‌து ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டி க‌ருவாட்டுத் துண்டைக் காக்காய் க‌டி க‌டித்த‌தும்,ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.

சக ந‌ண்ப‌ர்க‌ளைப் போலத் தான் என்னிடமும் பழகுகிறாள் என்று வெற்றுச்ச‌மாதான‌ம் செய்து செய்து கொள்வது பெருஞ்சிரமமாக இருந்தது.ச‌மாதான‌ம் செய்து கொள்ள‌வும் விருப்ப‌மிருக்க‌வில்லை.த‌ண்ணி சீசாவை வாய் வைத்து குடித்த‌த‌ற்கு கூட ஒன்றுமே சொல்ல‌வில்லை.இதுவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்திருந்தால் ச்சீ எச்சி என்று உத‌டு கோணியிருப்பாள்.பிசிஓ ப‌ரிம‌ள‌த்திட‌ம் பேசும் போது கூட‌,ஒருமுறை என்னைப் பார்த்து முறைத்தாள்.நான் எரிப்ப‌து போல் பார்த்தாள் என்று க‌விதை எழுதினேன்.என‌க்கு பிடித்தவாறு தான் உடைய‌ணிகிறாள்.சுதா ர‌குநாத‌னின் அலைபாயுதே குர‌ல் பிடித்திருக்கிறது என‌ கார‌ண‌மில்லாம‌லா என்னிட‌ம் ம‌ட்டும் சொல்லுவாள்.ஸ்நான‌ம் ப‌ண்ணின்ட்ருக்க‌ச்ச‌ அடிவ‌யித்துல‌ அப்ப‌டி ஒரு வ‌லிடா.அதான் மூணுநாளா காலேஜூக்கு வ‌ல்ல என்று பெண்மையின் ர‌க‌சிய முடிச்சுக‌ளை த‌னிமையில் அவிழ்க்கிறாள்.அவளின் உடல்மொழியின் அளபெடையில் நான் எத்தனை மாத்திரை என்பதை கணக்கிடுவதிலும்,நடந்தவற்றை அசை போட்டு மென்று,தற்குறிப்பேற்ற அணிகளை இயற்றுவதிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை உணர முடிந்தது.

வழக்கமான காதலின் சராசரி மூடநம்பிக்கைகள்,கெட்டப்பழக்கங்களில் எனக்கு இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.ஒருவரை விரும்பலாம் என்று அவர்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.ஆனால் காரணங்கள் அபத்தமாக இருக்கும்.வேதியல் துறை கணபதி பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தவனாம்.அதே துறையில் படிக்கும் புஷ்பவல்லியும் பிப்ரவரி 23ம் தேதி பிறந்தவள் என்பதால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம்.பிரபாவதி பிரபாகரன் பிரபா பிரபா ஒரே மாதிரி வந்தால் போதும் காதல் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி விடுவார்கள்.பக்கத்து வீடாக இருத்தல்,அம்மாக்கள் ஒரே ரேஷன் கடையில் சீனி வாங்குதல் அல்லது அப்பாக்கள் ஒரே கடையில் சவரம் செய்பவர்களாதல்,ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் நாய்க்குட்டி,தோட்டம்,சுண்டக்காய் என இப்படி குறைந்த முதலீட்டில் சம்பந்தங்களை உருவாக்கி,சந்தர்ப்பவாத காதலை நடத்துவார்கள்.

சகுந்தலாவின் மீதான ஈர்ப்பு வேலி தாண்டி அத்து மீறியதற்கு தரம் தாழ்ந்த காரணங்கள் எனக்கு அவசியப்படவில்லை.அவள் ஒரு அதிசயப்பிறவி.மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கத் தெரிந்த அதிசயப்பிறவி.சாதியும் வர்ணங்களும் எங்களை வேற்றுக்கிரகத்தில் வீசி எறிந்த போது,வானத்தைக் கிழித்து பறந்து வந்த மீன்கொத்திப் பறவையாக,நட்பு அலகில் கவர்ந்து சென்று மீட்டவள்.என் க‌ருப்பு புறங்கையில் அவ‌ளின் செக்க‌ச்சேவேல் விர‌ல்க‌ள் ப‌ட‌ரும் போது தோன்றும் அதீத‌ குற்ற‌ உண‌ர்ச்சியை,தாழ்வு ம‌ன‌ப்பான்மையை,கூச்ச‌த்தை,வெட்க‌த்தை,குறுகுறுப்பை,ப‌ர‌வ‌ச‌த்தை சலனமின்றி ஒரு வென்னிற‌ கைக்குட்டை கொண்டு துடைத்து தூர எறிந்தவள்.

வாய் நிறைய புன்னகையும்,மடிநிறைய இளைப்பாறல்களும் அவள் மீதான உடைமைத்துவத்தை அகலப்படுத்தியது.சகுந்தலா எனக்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவள் என்ற மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது.அந்த‌ர‌ங்க‌ உடைமையில் கீறல்கள் விழுவது சாட்டை அடியை ஒத்திருந்த‌து.ஒவ்வொரு வ‌லியும் வெறுப்பை விதைத்த‌து.வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.

(தொட‌ரும்...)

*****

Saturday, January 23, 2010

நெப்பந்தஸ்



"நெருக்கியடித்து வளர்ந்தும் வளராத முட்புதர்களும்,செம்மண் புழுதி படிந்து காய்ந்து போயிருக்கும் கீழாநெல்லிச்செடிகளும்,சிறியதும் பெரியதுமாக கோரைப்புற்களும் சூழ்ந்த புனித மார்க் தோட்டத்தின் மண்ணறையொன்றில் மெல்வின் கிடத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."

ஆயிர‌ம் குண்டூசிக‌ள் ஒரு சேர செருகிய‌தைப் போல் வாடைக்காற்று செவிப்ப‌றையைக் கீறும் குளிர்கால‌ம்.எதிர் வீட்டு நாவ‌ல் ப‌ழ‌ ம‌ர‌ம் மட்டும் இலைகளையும் சருகுகளையும் கலைத்து பேரிரைச்ச‌லை உண்டு ப‌ண்ணாம‌லிருந்தால்,அந்த ர‌க‌சிய‌க் காற்றின் அமானுஷ்ய‌ம் விள‌ங்காம‌லே போயிருக்க‌க்கூடும்.ப‌றவைக‌ளும் மின்மினிப்பூச்சிக‌ளும் தத்தம் இணைகளோடு கூடிய நிசப்த வெளியில் தியான‌த்தில் இருக்கின்ற‌ன.புலர்காலை சூரியன் முதுகில் அறைந்து எழுப்பிய‌தும் அவைக‌ளின் த‌வ‌ம் க‌லைய‌க்கூடும்.அப்போது எல்லாம் ச‌ரியாகி விடும்.

ச‌ன்ன‌லின் திரைச்சீலை இருப்பு கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்த‌து.குளிர்சாதன‌ம் அணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌ற்காலிக‌ உஷ்ண‌த்தில் க‌டிகார‌ முள் ச‌ற்று உற்சாக‌மாக‌ ஒலியெழுப்பி ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌து.மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.வ‌ழ‌க்கமாக‌ இர‌வின் சுழற்த‌ன்மை புல‌னாவ‌த‌ற்கு முன்பே எனக்கு விடிந்து விடும்.இன்று கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ நாள்.அத‌னால் தான் என்ன‌வோ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டைத் தாண்டியும் தூக்க‌ம் பிடிக்க மறுக்கிறது.

ச‌குந்தலா இடப்பக்கம் படுத்திருக்கிறாள்.என் முக‌த்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.குழந்தைமை மாறாத க‌ண்க‌ளில் நீர்த்துளிக‌ள் சுர‌ந்து வீங்கியிருக்கிறது முக‌ம்.நிறைய அழுதிருப்பாள்.சோக‌ம் விர‌வியிருந்த அழகிய முட்டைக்க‌ண்க‌ளை விடியும் வ‌ரை பார்த்து கொண்டிருந்தாலும் பாவ‌மில்லை.பார்வை எதிர்கொள்ளும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ட‌ந்து,அவ‌ள் சிந்த‌னை கால‌ய‌ந்திர‌த்தின் ஞாப‌க‌ க‌ண்ணியை ப‌ற்றிக் கொண்டு,ஒரு வ‌ருட‌ம் பின்னோக்கி நீள்கிறது.நிச்ச‌ய‌ம் அங்கு நானிருக்க‌ப் போவ‌தில்லை.இருந்தாலும் தொந்த‌ர‌வு செய்ய‌ப்போவ‌தில்லை.அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.இது அவளுடைய அந்தரங்கம்.பிர‌த்யேக‌ தனிமை.முழுமையாய் அனுபவிக்கட்டும்.கரைந்து தீர்க்கட்டும்.

----

எங்கள் வீட்டின் வலது திண்ணையிலிருந்து சுவற்றை ஒட்டி எட்டிப்பார்த்தால்,வரதராஜ பெருமாள் கோயிலின் பின்புறமிருக்கும் பொற்றாமரைக்குளம் தெரியும்.சைக்கிள் இருந்தால் ஐந்து நிமிடங்களில் குளத்தை அடைந்து விடலாம்.குளத்தின் மறுகரையில் இருந்தது பாப்லோ ராமசாமி தெரு.குளத்தை ஒட்டியே இருந்ததால் அத்தெருவுக்கு ஒரு திவ்யமான அழகு கூடியிருந்தது.வைகறைகளில் சாணி மொழுகி,வண்ணப்பொடிகளைத் தூவி மலர்க்கோலம் இடும் இளந்தளிர்களை அலகில் வைத்து கவர்ந்து போக காகங்கள் கூட காத்திருக்குமாம்.மாமா சொல்லியிருக்கிறார்.

அக்ரஹாரத்து பெரியவாள் தெப்பக்குளத்தின் வலது கோடியில் குளிப்பது தான் வாடிக்கை என்பதால் இடது ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு பொற்றாமரைக் குளம் லேசாக கலங்கியிருந்தது.தூர்வாறப்படாத அந்த இடது ஓரத்தில் தான் நாங்கள் சர்வ ரகசியமாக குளிப்பதும் கோயில் கோபுரத்தைப் பார்த்து கை கூப்புவதும்! வரதராஜ பெருமாளை தரிசித்த கணங்களை விட,குளத்தில் ஊறியவாறே ராமசாமி தெருவின் தேவதைகளைக் கண்டு வாய் பிளந்த தருணங்கள் அதிகம்.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.

(தொடரும்..)

****