Showing posts with label ச‌மூக‌ம். Show all posts
Showing posts with label ச‌மூக‌ம். Show all posts

Thursday, February 14, 2013

அப்ஃசல் குருவும் கஷ்மீரும் - வஞ்சிக்கப்பட்ட வரலாறு




வருகின்ற‌ நாடாளுமன்ற‌ தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரசு அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வீச, பா.ஜ.க வுக்கு எவ்வித அருகதையும் இல்லை. இருகட்சிகளுமே கழுத்தளவு ஊழல் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் கட்சிகள் என்பதால் ஊழலை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக பா.ஜ.க பயன்படுத்த முடியாது. எனவே தேசப்பாதுகாப்பு என்ற ஒரு கருத்தியலை எடுத்துக் கொண்டால் மட்டுமே காங்கிரசை கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பா.ஜ.க வின் திட்டத்தை, காங்கிரசு முறியடிக்க இந்த வைகறைக் கொலைகள் அவசியமாயிருக்கின்றன. இந்து தீவிரவாதிகள் என வாய் மலர்ந்ததற்காக எங்கே வாக்கு வங்கியை தவற விட்டு விடுவோமோ என்ற பதை பதைப்புடன் இப்படுகொலை முழுக்க முழுக்க சர்வ ரகசியமாக, உரிய நேரத்தில் காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புள்ளியிலிருந்து தான் அஃப்சல் குரு படுகொலையை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியலமைப்பு, ஆனால் அஃப்சல் குருவின் வழக்கில் நடந்ததோ இதற்கு நேரெதிர்.

சரணடைந்த போராளியான அஃப்சல் குரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். சரணடைந்த போராளிகளுக்கு எந்த அரசு வேலையும் கிடைக்காது. அஃப்சல் குருவுக்கு ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளும் அளவுக்குக் கூட வசதியில்லை.குற்றம் சாட்டப் பட்ட நால்வரில் தண்டனை வழங்கப்பட சாத்தியம் உள்ளவராக இருந்த போதிலும் அஃப்சலுக்கு மட்டுமே வழக்கறிஞர் யாருமில்லை. தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு அவர் சிறப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.எட்டு வழக்கறிஞர்களின் பெயர்களடங்கிய பட்டியலொன்றையும் அவர் அளித்திருந்தார். எனினும் தாங்கள் தேசத்துரோகிகள் என அழைக்கப்பட நேருமோ என்கிற அச்சத்தின் விளைவாக அவ்வழக்கறிஞர்கள் அவருக்காக வாதிடுவதற்கு மறுத்துவிட்டனர்.ராம்ஜெத் மலானி மட்டும் கிலானிக்காக வாதிட முன் வந்த போது, சிவசேனா இந்து வெறியர்கள் அவரது மும்பை அலுவலகத்தை சூறையாடியது நினைவிருக்கலாம்.

இறுதியாக 2002 ஜூலை 12 ஆம் தேதி அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒரு இளம் வழக்குரைஞரை சட்ட உதவுனராக ( amicus curiae) நியமித்தும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அஃப்சலுக்கு உரிமை அளித்தும் ஆணை ஒன்றை இட்டார். கிரிமினல் விசாரணை என்பது குற்றவியல் சட்ட அறிவைக் கோரும் ஒரு விஷயம் என்பதையும் ஒரு சாதாரண மனிதன் சட்ட உதவியின்றி குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்பதையும் எல்லோரும் அறிவர். அஃப்சல் சட்ட உதவி பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். எஸ்.ஏ.ஆர் கீலானியைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட அகில இந்திய குழுவிற்கும், உச்சநீதி மன்றத்தால் அவருக்காக வாதாடிய வழக்கறிஞருக்கும் அவர் எழுதிய கடிதங்களை வாசித்தால் சட்டபூர்வமாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் அவரது முயற்சிகள் எவ்வளவு குரூரமாக மறுக்கப்பட்டன என்பது புரியும்.

தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பிலும் முகம்மது அஃப்சல் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படையாக கூறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் பொடா சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்தும் அஃப்சலை அது விடுதலை செய்துள்ளது. பொடா சட்டம் 3(2) பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட தண்டனை விலக்கப்பட்டுள்ளது. அவர் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தவிர வேறு நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்பதால் பொடா சட்டம் 3(5) பிரிவின் கீழான தண்டனையும் விலக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்குமூலத்தின் படியும் கூட அவர் எந்த ஒரு பயங்கரவாதக் கும்பல் அல்லது அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பது சந்தேகத்துக்குரியதே என்பதையும் நாங்கள் சொல்ல முடியும்” என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.காவல்துறை சார்பாக 80 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அஃப்சலுக்கு ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டவில்லை. உண்மைகள் இப்படி இருந்தும் கூட காவல் துறையும் ஊடகங்களும் தொடர்ந்து அஃப்சல் குருவின் மரணத்தை ஒரு “தீவிரவாதியின்” மரணமாகத் தான் கொண்டாடி மகிழ்கின்றன. இது அடிப்படை இசுலாமிய வெறுப்பும் இந்துத்துவ பாசிச வெறியும் அறுவடை செய்த மரண தண்டனை. உலகளாவிய பச்சைக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு, அடிவருடி இந்திய அரசு நிறைய துரும்புகளைக் கிள்ளிப் போட வேண்டியிருக்கிறது.‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” என்று கூறி அஃப்சல் குருவிற்கு மரண தண்டனை அளித்தது உச்ச நீதிமன்றம். நாட்டையே உலுக்கிய நிகழ்ச்சியின் விசாரணையும், தண்டனை வழங்கிய விதமும் எவ்வளவு கேலிக்கூத்தான வகையில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

அஃப்சல் குரு தூக்கில் இடப்பட்டது அவரது குடும்பத்திற்கு கூட தெரிவிக்கவில்லை, அதுமட்டுமின்றி அவரது உடலையும், சனநாயகத்தையும் சேர்த்து திகார் சிறையினுள்ளே புதைத்துவிட்டது இந்திய அரசு. அஃப்சல் குரு தூக்கிலிட்ட அன்றிலிருந்து இன்று வரை கஷ்மீர் முழுக்க ஊரடங்கு உத்தரவு, அஃப்சல் குரு குடும்பம் உள்ளிட்ட கஷ்மீர் மக்கள் யாருக்கும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட உரிமையில்லை, ஆனால் நாம் சொல்கின்றோம் இந்தியா சனநாயக நாடென்று, தன் தந்தையின் இறந்த உடலை கூட பார்க்கமுடியாத சனநாயக நாட்டில் வாழ்கின்றது அஃப்சல் குருவின் குழந்தை. அஞ்சலி செலுத்துவதற்காக ஒன்று கூடிய மக்களின் மேல் எந்த வித சனநாயக வழிகளையும் பின்பற்றாமல் நடந்தேறிய துப்பாக்கி சூட்டில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். மருத்துவர்கள் கூட தங்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இராணுவ படையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

இந்த கூட்டு மனசாட்சியில் கஷ்மீரிய மக்களுக்கு இடமில்லையா? அல்லது சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஒரு உயிரின் முடிவில் தான் சமனமடைகிறதா? அஃப்சல் குரு என்ற இளைஞனுக்கு நிகழ்ந்த இந்த கொடூரம் இன்று ஒவ்வொரு அப்பாவி கஷ்மீரி இளைஞனுக்கும் அவன் சொந்த மண்ணிலேயே நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை அழகு கொஞ்சும் கஷ்மீரில் இன்று எட்டு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள், அதாவது ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவ வீரன். இராணுவ படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற வரம்பிலா அதிகாரத்துடன் அம்மக்களை ஆண்டு வருகின்றனர். இராணுவம் யாரை வேண்டுமென்றாலும் கொலை செய்யலாம், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கலாம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காது, அதற்கு பதிலாக பதவி உயர்வுகளும், பரிசுகளும் சன்மானமாக கிடைக்கின்றன. கடந்த 2010 சூலையில் இந்த இந்திய இராணுவத்தினரால் 113 சிறுவர், சிறுமியர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், இவர்களை சுட்டுக்கொன்றவர்களின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை, 6000த்திற்கும் அதிகமான மனித புதைகுழிகளை கஷ்மீர் அரசு அமைத்த மனித உரிமை ஆணையம் கண்டுபிடித்து சட்டசபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, இதன் மேலும் எந்த ஒரு விசாரணையும் இல்லை. கஷ்மீரை ஆள்வது சனநாயகமல்ல, இராணுவமே. மணிப்பூரின் ஐரோம் சர்மிளா முதற்கொண்டு தற்போது அமைக்கப்பட்ட வர்மா கமிசன் வரை எல்லோரும் பரிந்துரைக்கும் முதல் வாக்கியம் இராணுவ படை சிறப்பு அதிகார சட்டத்தை இரத்து செய்யச் சொல்கின்றது, ஆனால் அரசு அதை காதில் கூட வாங்க மறுக்கின்றது.

பூக்களின் தேசம் இன்று ராணுவ கூடாரங்கள் சூழ்ந்த விதவைகளின் தேசமாக மாறிப் போயிருக்கிறது.கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் கஷ்மீரிக‌ள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். தொடர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆண்டின் பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு.

கஷ்மீர் பிரச்சினைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், இந்திய ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கின்றன. இவ்விவகாரத்தில் அமெரிக்காவோ ஐ.நாவோ வேறு எந்த மூன்றாம் தரப்போ தலையிடுவதை நிராகரிப்பது தான் அதன் முதல் நிலை.காரணம், எச்சூழ்நிலையிலும் அது கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசை ஏற்கச் செய்து விடவும் கஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வாய்ப்பளித்து விடக்கூடும்.ஆகவே தான் கஷ்மீர் ஒரு சர்வதேச பிரச்சினையாவதை எப்போதும் கடுமையாகவே எதிர்த்து வந்திருக்கிறது இந்திய அரசு. அதே நேரம் எல்லைக்கப்பாலிருந்து பயங்கரவாதிகளை ஏவிவிடுவதால் பாகிஸ்தானைப் பயங்கரவாத நாடாக அறிவித்து, பொருளாதாரத் தடைகள் விதித்து ஒடுக்க வேண்டும் என்று தொடர்ந்து உலக நாடுகளை வற்புறுத்தியே வந்திருக்கிறது. இது தான் கஷ்மீர் மக்கள் தொடர்ந்து இந்திய அரச பயங்கரவாதத்தின் மூலம் வஞ்சிக்கப்படும் வரலாறு.

கஷ்மீர் மண்ணும் மலையும் காடுகளும் இயற்கை வளங்களும் கஷ்மீரிய மக்களுக்கே சொந்தம். அதைக் கேட்பது அவர்கள் உரிமை. அஃப்சல் குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமும் கஷ்மீரிய தெருக்களில் கட்டவிழ்க்கப்படும் இந்திய அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலமுமாகத் தான் அம்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் துணை நிற்கிறோம் என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்த முடியும். கஷ்மீர் நிலப்பரப்பை மட்டும் நேசித்து கஷ்மீர் மக்களை இராணுவப் பிடியில் வைக்கச் சொல்லும் இந்தியாவின் பெரும்பான்மை ’நாட்டுப் பற்றாளர்கள்’ போல் அல்லாமல் கஷ்மீர் மக்களை நேசிக்கும் நாட்டுப் பற்றாளர்கள் கஷ்மீரிகளோடு இருக்கின்றார்கள் என்பதை உரக்கச் சொல்வதே நம் முன் இருக்கும் கடமை.


கீற்றுவில் வெளிவந்தது

---------

Sunday, May 17, 2009

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்



பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில்,பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல்,ஷேர் ஆட்டோக்க‌ளை நாடும் கணவான்கள்,குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன் மற்றும் வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.

ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும் நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.

இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மி(மு)னிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.

இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ தவுலத்தாக‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.

ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.

இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்?

அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் மட்டுமே.

சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு,
கழிப்பறையில் அமர்ந்த வண்ணம் கனநேரத்தில் யோசித்து எழுதிய இக்கவுஜையை அர்ப்பணிக்கிறேன்.

தட தட சத்தமும்
வியர்வை கலந்த டீசல் வாடையும்
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"


மத்தியதர வர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.

******************************************************************

Tuesday, March 17, 2009

சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ??

"இந்துக்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.மற்ற அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்"என்று தேர்தல் களத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வருண்காந்தி.

இதற்கு பா.ஜ.க வே அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

அவ‌ர‌து பேச்சுக்க‌ள் அட‌ங்கிய‌ வீடியோ சிடி ந‌ம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வ‌சூலில் சாத‌னை ப‌டைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,இந்த‌ செய்தி மிகைப்ப‌டுத்தப் ப‌ட்டிருக்கிறது என்றும் நான் அதில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே இல்லையே எனவும் பல‌ காமெடி ஜ‌கா வாங்கியிருக்கிறார் வ‌ருண்.

தேர்த‌ல் விதிமுறைக‌ளை மீறிய‌த‌ற்காக‌, அவ‌ர் மீது கிரிமின‌ல் வழ‌க்கு தொட‌ர‌, தேர்த‌ல் ஆணைய‌ம்,உத்திர‌ பிர‌தேச தேர்த‌ல் ஆணைய‌த்திட‌ம் ப‌ரிந்துரைத்திருக்கிற‌து.

அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.

இன்னும் என்னென்ன‌ கூத்துக்க‌ள் ந‌ட‌க்க‌விருக்கின்ற‌ன‌வோ !!!! பொறுத்திருந்து பார்ப்போம்.

வ‌ருணிட‌ம் ஒரே ஒரு கேள்வி: ச‌ரிங்க‌ண்ணா...இந்துக்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ம‌ய‌த்தனைவ‌ரையும் இந்தியாவை விட்டு வெளியேற்றி விட‌லாம்.

அப்ப‌டியானால், அக‌ர‌ ( ஆங்கில )வ‌ரிசைப்ப‌டி, முத‌லில் அப்துல் கலாமையும், பிற‌கு அல்லா ர‌க்கா ர‌ஹ்மானையும் வெளியேற்றுவீர்க‌ளா ??

சொல்லுங்க‌ எச‌மான்..சொல்லுங்க‌...

Sunday, January 18, 2009

ஒரு குழந்தையும் மூன்று தகப்பன்மார்களும்


முன் ஜாமீன்: இது ஒரு வரலாற்றுப் பதிவோ,இல்லை சேகரிக்கப் பட்ட செய்திகளின் தொகுப்போ அல்ல.என்னுடைய தனிப்பட்ட கோபத்தின் விளைவு தான் இந்த பதிவு.

கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.

*********************

ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞர் எழுதுகிறார்.ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.

1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே.

அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை.

பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த‌ இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது
மேலும் அவ‌ர் எழுதிய‌வ‌ற்றிலிருந்து,

"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."

"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"


*******************************

மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன்.

*ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய‌ சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்ற‌ன‌ என்பதே அந்த‌ ம‌னித‌ உரிமை க‌ழ‌க‌ங்க‌ளுக்கு தெரியாதாம்.

*குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய‌ ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும் ஆம்புல‌ன்ஸ் ஊர்திக‌ளையும் தான் பிர‌தான் இலக்காக‌ கொண்டு தாக்கி வ‌ருகிற‌து.

*ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க‌ வேண்டுமென்றால்,அந்த‌ நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமான‌து என்ப‌தை ந‌ன்கு அறிந்த‌ இஸ்ர‌வேல‌ர்க‌ள்,ஒரே வார‌த்தில் பால‌ஸ்தீன‌த்தின் 61 காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளை கொன்று குவித்திருக்கின்ற‌ன‌ர்.

*நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய‌ நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச்சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன.

உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இன்று இருபது லட்சம் பேர் இராக்கில் அனாதையாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் விதவைகளும் குழந்தைகளுமே அதிகம்.ஆப்கன் நிலைமை இதை விட மோசம்.

"என் நாட்டில் அனாதையாக்கப் பட்ட குழ‌ந்தைக‌ளின் சார்பாக‌வும் வித‌வைக‌ளின் சார்பாக‌வும் உனக்கு நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்டே தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன்தாதர் அல்ஸ‌ய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்ப‌டுத்துவ‌து ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ??

பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.

***************************************************************
என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள் கீழே !!!!! !!!!!