Friday, August 19, 2011

ராம்லீலாவில் ஒரு குபீர் சிரிப்பு நாடகம்


ராலேகான் கிராமத்தில் மது குடித்த‌ இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த சாந்த சொரூபியும், இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்டில் கையாடல் செய்த புண்ணியவானும்,தன்னுடைய அறப்போராட்டமும் அகிம்சையும் ஆஃப் சைடு வாங்கினாலும் பரவாயில்லை என்று ராசாவை தூக்கிலிட வேண்டும் என்ற வீரமராட்டிய சிவாஜி சிவசேனாக்களின் முழக்கங்களைப் பறை சாற்றிய இந்த உத்தமர் காந்தி தன்னுடைய உண்ணாவிரத நாடகத்தை, ஏற்கனவே பண்டார ராம்தேவ் மண்ணைக்கவ்விய ராம்லீலா மைதானத்தில்,தேசபக்தி பாடல்களுடனும் முதலாளித்துவ ஊடகங்களின் ஆசிர்வாதத்துடனும் வெகு விமரிசையாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.மேலும் அன்னா சிறையில் இருந்த போது,அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் "ராம் ராம்" என்ற முழக்கங்களும் விண்ணைத் தொட்டன. உச்சபட்ச காமெடி என்னவென்றால் டப்பாவாலாக்கள் முதற்கொண்டு, நம் நாட்டையே சுரண்டி சுண்ணாம்பாக்கிய கார்பரேட் பகற்கொள்ளையர்களான‌ CEO-க்கள் கூட அன்னாவின் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து விட்டார்களாம்.




கிரண்பேடியிடமிருந்த தேசியக் கொடியை பிடுங்கி ஆட்டி கைதட்டல்களைப் பெற்ற நமது மீடியா கதாநாயகர் இந்த காமெடி காட்சிகளை, தம்மால் கேபிள் டிவி தடை செய்யப்பட்ட ராலேகான் மக்கள் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டாரோ இல்லையோ, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் தான் மூன்று கிலோ எடை குறைந்ததைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க 3 கிலோ எடைகுறைதல் என்றால் அது எவ்வளவு பெரிய தியாகம் ?

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, 30, 7 ,15 என்று ஒரு வழியாக பேரம் பணிந்து, அரசும் அன்னாவும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ஒரு காலவரையற்ற ஆனால் 15 நாள் உண்ணாவிரதத்துக்கு ஒப்புக் கொண்டனர்.இதை முன்னாடியே காங்கிரஸ் செய்திருந்தால், "அரசு பணிந்தது",அன்னா காலடியில் அன்னை அரசு போன்ற நக்கல்களையெல்லாம் கேட்கும் அவல நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது.என்ன செய்வது ? இடுப்பு வரை மாட்டிக் கொண்ட ஊழல் சேற்றிலிருந்து அன்னாவைப் போல விரல்களைக் கூட‌ அசைக்க முடியவில்லையே.

உண்ணாவிரததுக்கு இடமளிக்காமல் அன்னாவை காங்கிரஸ் அரசு கைது செய்த போது,"ஐயகோ என்ன கொடுமை இது. ஜனநாயகம் கற்பிழந்து விட்டது.பாசிசம் தலை விரித்தாடுகிறது" என்றெல்லாம் ஆவேசத்துடன் டிவிட்டிய, ஃபேஸ்புக்கிய நமது மீடியாக்களின் செல்லக் குஞ்சுகளும் இதுவரை ஜன்லோக்பாலை ஏற்காத பிஜேபியும், தன் வீட்டு நாய்க்குட்டியை விரட்டுவது போன்ற தொனியுடன் அன்னா இந்திய அரசையும் நீதித்துறைகளையும் கேமரா முன் ஆள் காட்டி விரல் கொண்டது மிரட்டுவது மட்டும் எவ்விதத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் செயலாகும் என்பதை விளக்க வேண்டும்.

ஊழலை எதிர்க்க மாபெரும் ஆயுதம் ஜன்லோக்பால் என தொண்டைக்குள் ஸ்பீக்கர் சொருகி பிரகடனப்படுத்தும் அன்னாவின் கூட்டணியில் உள்ள அறிவு ஜீவிகள், அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தின் சாராம்சமான, அரசல்லாத துறைகளின் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர். NGO-க்களின் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அம்சம் ஜன்லோக்பால் வரைவில் சேர்க்கப்பட்டால் அந்த பொறியில் முதலில் மாட்டும் எலியாக அன்னா தான் இருப்பார் என்ற உண்மை, ரூம்போட்டு விளக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாதா என்ன ? அன்னாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்ன என்ற உண்மையைத் தான் நீதிபதி பி.பி.சாவந்த் அன்னாவின் புனிதப்பானையை பொதுவெளியில் வைத்து உடைத்து விட்டாரே.

நம் நாட்டையே கூறு போட்டு பங்கு வைக்கும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் தனியார் மயமாக்கலையும் ஏற்றுக் கொள்ளும் இந்த அன்னா ஹசாரே கும்பல், மிகப்பெரும் அன்னிய முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவுடனும், பியூட்டி பார்லர் பளபளப்போடு வலம் வரும் மீடியா மங்கைகளின் பின்னணி கொஞ்சல்களோடும், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற கார்பரேட் பண்டாரங்களின் யாவார நோக்கத்தோடும் நடாத்தி வரும் இந்த ஐடெக் குபீர் சிரிப்பு நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நம் திடீர் புரட்சியாளர்களை ஆரவாரத்தில் வைத்திருக்கப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.

புதிதாக ஒரு உணவு பதார்த்தத்தை சாப்பிட்டால் முகமெங்கும் கட்டிகள் உருவாகி அலர்ஜி வருவது போல, இந்திய வரலாற்றில் அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல்,எஸ் பேண்ட் ஊழல்,ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்,காமன்வெல்த் ஊழல் என பாரத மாதாவின் 'அழகிய' முகத்தில் கண்டு கண்டுகளாக வீங்க வைத்திருக்கும் இந்த பொற்கால காங்கிரஸ் ஆட்சி, ஒரு சராசரி இந்திய பிரஜைக்கு நிச்சயமாக வலிக்கத் தான் செய்யும்.அந்த ஆதங்கத்திற்கும் கோபத்திற்கும் வடிகாலாக, இந்த போராட்ட செய்திகளை அதிர வைக்கும் விவாதங்களுடனும் இசை பின்னணியுடனும் பார்க்கும் போது, தேசிய உணவு மெய்சிலிர்த்து வீறு கொண்டு எழும்.எப்படி டோனி கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் போது ஒரு தேசப்பற்று எழுந்ததே அதற்கு ஒப்பானது இந்த வீரம்.

ஊழலை எதிர்ப்பதற்கு முன்,அதன் ஊற்றுக் கண்ணான முதலாளித்துவ மறுகாலனியாக்க கொள்கைகளையும் சுரண்டலையும் அதற்கு வழிவகை செய்யும் இந்திய பொருளாதார அமைப்பு முறையையும் டாடா, ரிலையன்ஸ் அம்பானி,வேதாந்தா போன்ற கார்பரேட் பெருச்சாளிகளின் பகற்கொள்ளைகளையும் ஒவ்வொரு குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும். ஹசாரே கூறும் ஜன் லோக்பால் ஆனது இந்த சுரண்டல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வெறும் சில்லறை விஷயங்களையும் எலும்பு துண்டுகளைப் பொறுக்கக் காத்திருக்கும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைப்பதாக்ச் சொல்லிக் கொள்கிறது. மக்களை அரசியல் குருடர்களாக்கி இது போன்ற அடிப்படை அறிவில்லாத காமெடியன்களின் நகைச்சுவை நாடகங்களின் மூலம் ஆளும் வர்க்கம் ஒரு பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது.நம் நாட்டின் இயற்கை வளங்களையும் சொத்துக்களை அன்னிய முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் கார்ப்பரேட் கும்பல், நமது வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரத்தை எவ்வித தங்கு தடையின்றி, சட்ட்ப்பூர்வமாக சூறையாடி மகிழ்கிறது.

இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ,கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவும், வேதாந்தா என்னும் அன்னிய முதலாளி தம்முடைய வாழ்வாதாரமான நியாம்கிரி மலைப்ப்குதியை பாக்சைட் தாதுக்காக வெட்டிப் பங்கு வைப்பதை எதிர்த்து போராடி வரும் டோங்கிரியா கோந்த் மலைவாழ் மக்களும், டாடா கம்பெனியை எதிர்க்கப் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் விவசாயிகளும் நடத்தும் நிஜமான அக்மார்க போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மேட்டுக்குடி மக்களின் பார்ட் டைம் பொழுது போக்கான இந்த கூட்டுக்களவாணி நாடகங்களை ஆதரிக்கப் போகிறோமா ?


*****************

Wednesday, June 1, 2011

தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்

---------

ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் வழிதவறும் போது தவறுகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வழிமுறைகளைச் சொல்லித்தர வேண்டிய புனிதப்பணி பத்திரிக்கையினுடையது.எழுத்து சுதந்திரம் என்பது நடுநிலைமை பிறவாமல் வாள்சுழற்றும் வித்தை.அந்த வாள் இரத்தத்தை கொணர்வதற்காக அல்ல.மேலும் வதைகள் ஏற்படாமல் தடுக்க.

மெழுகுவர்த்தி புகழ் ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களையும் கிரிக்கெட்டையும் பிரதான செய்திகளாக வெளியிடும் வடஇந்திய ஊடகங்களுக்கு இணையாக ஆனந்த விகடன் இப்போது தரம் தாழ்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.பக்கத்திற்கு பக்கம் கனிமொழி கைதை நையாண்டி செய்வதிலும் கலைஞரையும் திமுகவையும் கிண்டலடிப்பதிலும் தற்பொழுது ஆ.வி முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறது.ஏற்கெனவே அணைந்து போன நெருப்பை
மீண்டும் மீண்டும் நீர் தெளித்து அணைப்பதில் ஒரு ஆழ்மன வக்கிரம் தொனிக்கிறது.

ஆனந்த விகடன் அதிமுக விகடனாக புத்துயிர் பெற்று கனகாலமாகி விட்ட நிலையில்,ஜெ.வின் வெற்றியை ஜெ எந்தளவு கொண்டாடினாரோ,அதைவிட ஆ.வி அந்த வெற்றியில் ஊறி ஊறித் திளைத்து இத்து போகும் அளவு ஊறிக் கொண்டிருக்கிறது.கடந்த கால திமுக ஆட்சியின் பேயாட்ட ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு போன்ற ஆயிரம் காரணங்கள் தான் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை ஒருபுறமிருக்க,ஏதோ ஜெயலலிதா மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி ஜெயித்ததாக உச்சி மோர்ந்து கொஞ்சுகிறது ஆ.வி.அதிலும் ஜெவுக்கு அட்வைஸ் செய்து நல்லபேர் வாங்கி கொள்ள நினைப்பது அதைவிட பேரபத்தம்.

கலைஞர் ஜெயா டிவிகளின் அபத்தங்களுக்கு இணையாக‌ "முதல்வரின் கம்மல் டாலடித்தது முகம் டாலடித்தது" போன்ற மூன்றாந்தர எழுத்துக்களை வாரி இறைத்து கொண்டிருக்கிறது.வீட்டுவசதி திட்டத்தை "தீப்பெட்டி திட்டம்" என்று கேலி செய்து பேசியதற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும்,கல்வி பற்றி நாலு வார்த்தை உளறியதற்காக உயர்கல்வித்துறை ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டதையும் ஏதோ ஜெயலலிதா தமிழ்நாட்டின் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தம் செய்து விட்டதாக கொண்டாடுகிறது.

லோக்பால் திட்டத்தின் வெற்றி லட்சணம் எந்த அளவு என்கிற முகாந்திரத்தின் அடிப்படை தெரியாமலேயே, இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியையும்,மும்பை ரவுடி ராஜ் தாக்கரேவையும் அபிமானியாக கொண்ட அண்ணா ஹசாரே (எ) கொல்லு தாத்தாவை வாராவாரம் பாலாபிஷேகம் செய்து ம‌கிழ்கிற‌து.இதில் வரும் வாரங்களில் வெத்து வேட்டு விஜயின் கேள்வி பதில் வேறாம்.ஏற்கெனவே ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கழுவுற மீனில் நழுவுற மீன் கேள்வி பதில்களை படித்து சலித்துப் போன வாசகர்களுக்கு மேலும் ஒரு துன்ப அதிர்ச்சி.பொக்கிஷம்,எனர்ஜி பக்கங்கள் போன்ற பதிவுகள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும்
மேற்கூறிய‌ மொக்கை கேள்வி பதில்களும் முகம் சுழிக்க வைக்கும் நையாண்டி விருதுகளும் டிவிட்டர் உளறல்களும் விகடனின் வாசகப்பரப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது.

பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர்,தினசரி செய்தித்தாள் இவைகளுக்கு பிறகு வாசக அனுபவ பரிணாமத்தை விரிவுபடுத்துவதில் விகடன் எல்லா கால கட்டங்களிலும் முன்னணி வகித்திருக்கிறது.சராசரி நடுத்தர வர்க்க சமூகத்திலிருந்து மேட்டுக்குடி வரை விகடன் வாசிக்கப்படுகிறது.ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்த‌ பாமரனிலிருந்து இலக்கியவாதிகள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே பத்திரிக்கை விகடன்.தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் மறந்து விட்ட நிலையில்,கி.ரா வண்ணதாசன் சிறுகதைகளை இன்றும் ஆனந்த விகடனில் பார்க்கலாம்.அழகிய பெரியவனின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.இப்படி எல்லா அருமை பெருமைகளையும் தன் ஒருதலை பட்சமான எழுத்துகளால் இன்று விகடன் குழுமம் இழந்து கொண்டே இருக்கிறது.தரமான வாசகர்களையும் சேர்த்து தான்.


-----

Friday, January 7, 2011

புத்த‌க‌ ச‌ந்தை- 2011 இதுவரை வாங்கிய புத்தகங்கள்

போதிய விளம்பரம் இல்லாததாலும்,வேலை நாட்களாக இருப்பதாலும் நேற்று
ஸ்டால்களில் கூட்டம் மட்டுமல்ல.பதிப்பக உரிமையாளர்களைக் கூட காண்பது அரிதாக இருந்தது.தற்காலிக பொறுப்பில் இருந்த கடைப்பையன்களிடம் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால்,ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களையும் பிடுங்கி விடுவார்கள் என்ற பீதியில் நானே முடிந்தவரை தேடிக் கொண்டேன்.

வாங்க நினைத்திருந்த புத்தகங்கள் கிடைக்கப் பெறாமல் அலையும் அவலம் இந்த வருடமும் தொடர்கிறது.வண்ணதாசன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும்,கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸூம் எங்கு கிடைக்கும் என்றும் யாராவது தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

கிருஷ்ணபிரபு பரிந்துரைத்த சிஸ்டர் ஜெஸ்மியின் "ஆமென்" மலையாள புத்தகம் பரபரப்பான தன்வரலாறு.காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து குளச்சல் மு.யூசுப் தமிழில் கொணர்ந்திருக்கிறார்.கிறிஸ்துவ மடத்தில் நடக்கும் ஆன்மீக மீறல்கள்,குற்றங்கள்,பாலியல் வன்முறை குறித்து விரிவாக பேசுகிறது இந்நூல்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் தாங்கிய அலமாரியில் தோப்பில் முகமது மீரானின் "சாய்வு நாற்காலி"யும் அடுக்கப்பட்டிருந்தது வருத்தமளிக்கிறது.தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான இந்நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நாவல் ஒரு படிப்பினை.

தயவு செய்து பா.ராகவனின் டாலர்தேசம் புத்தகத்திருவிழாவில் வாங்கி விடாதீர்கள்.525 ரூபாய் விலை சொல்லும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.அதன் அசல் விலையான ரூபாய் 400க்கு,கிண்டி நடைபாதையில் கிடைக்கிறது.

சுஜாதா நூல்கள் படிக்க நினைப்பவர்கள் கிழக்கு பதிப்பகம் விஜயம் செய்யலாம்.எங்கு நோக்கினும் வண்ணமயமான வழவழப்பான அட்டைப் படங்களில் சுஜாதா கண்ணாடி அணிந்திருக்கிறார்.விஞ்ஞான சிறுகதைகள் உயிர்மையில் கிடைக்கிறது.

இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற, நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" தமிழினியில் கிடைக்கிறது.அவரிடமே கையெழுத்து போட்டு வாங்கி கொள்ளும் பாக்கியமும் தமிழினியில் இலவசம்.

த‌மிழினி:

சூடிய‌ பூ சூட‌ற்க‌ நாஞ்சில் நாட‌ன்
நெரிக்க‌ட்டு அழ‌கிய‌ பெரிய‌வ‌ன்

கிழக்கு:

காஷ்மீர் பா.ராக‌வ‌ன்
ரெய்னீஸ் ஐயர் தெரு வ‌ண்ண‌நில‌வ‌ன்

உயிர்மை:

க‌டிகார‌ம் அமைதியாக‌ எண்ணிக் கொண்டிருக்கிற‌து அ.முத்துலிங்க‌ம்
எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் சாரு நிவேதா
ம‌ண்பூத‌ம் வாமுகோமு

காலச்சுவடு:

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது ‍பஷீர்
பாத்துமாவின் ஆடு பஷீர்
மதில்கள் பஷீர்
ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி
ம‌காராஜாவின் ர‌யில் வ‌ண்டி அ.முத்துலிங்க‌ம்
கோப‌ல்ல‌ கிராம‌ம் கி.ரா

வ‌ம்சி:

உரையாட‌லினி அய்ய‌னார்
க‌தை நேர‌ம் பாலும‌கேந்திரா

கலீஃபாக்கள் வரலாறு
இஸ்லாமிய கேள்வி பதில்கள் ஜாகீர் நாயக்
இஸ்லாமும் பெண்களும்

********************

Wednesday, June 16, 2010

ரஹ்மத்துன்னிசா நிக்காஹ்வும்,ஒரு பிரியாணிக்கதையும்

ஆளுயர கரண்டிகளும்
வானமளவு வானலிகளும்
வெங்காய‌மும் க‌த்திரிக்காயும்
புதினா க‌ட்டும் ம‌ட்ட‌ன் ம‌லைக‌ளும்
முன்னிர‌வே டெம்போவில்
வ‌ந்திற‌ங்கி விடுகின்ற‌ன‌.

கோழி போட்டால் பேரிழிவாம்
ஆடு போட்டால் தான் அந்த‌ஸ்தாம்
ஒரு கிலோ அரிசிக்கு
ஒன்னே கால் கிலோ க‌றி.
கிலோ அரிசிக்கு எட்டு பேரு
பேய்ச்சாப்பாடு சாப்ட‌லாமென்றாலும்
ஒரு இலைக்கு ஒரு துண்டு க‌றி தான்.
தண்டலுக்கு வாங்கி ஏற்பாடு செய்த‌
ரஹ்மத்துன்னிசா வாப்பா க‌ண‌க்கு.

தெரிஞ்ச‌ முக‌மென்றால் ம‌ட்டும்
"தூணோர‌மா உக்காந்திருக்க‌
ப‌ச்ச‌ ச‌ட்ட‌ பய நம்மாளு ! பீஸூ கேக்குறாப்ள‌!"
ப‌த்தாம‌ போகுமோண்டு
ப‌ய‌த்துட‌னே ப‌ரிமாறும்
ர‌ஹ்ம‌த்துன்னிசா மாம‌ன் மாருஹ‌.

வந்த மக்க மனுசரையெல்லாம்
வாண்டு கேட்டே நா வறண்டு
ஒருவா சோறுங்காம
மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற‌
தவிப்புல தடுமாறி நிக்கிற‌
ரஹ்மத்துன்னிசா உம்மா.

இவங்க யாருக்குமே தெரியாதாம்.
கல்யாணப்பொண்ணு
நூரே ச்சஸ்மி
ரஹ்மத்துன்னிசாவுக்கு மட்டுந்தா தெரியுமாம்.
எதித்த வீட்டு முருகேசனுக்கு
பிரியாணிண்டா உசுறுண்டு !


********

Sunday, February 14, 2010

நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )


முத‌ல் பாக‌ம் ப‌டிக்க..!

---------------------------------

தீட்டுக்காயங்கள் பழுத்து,ஆறி காய்ந்து தழும்புகள் மறைந்து சமநிலைக்கு வந்தது கல்லூரியில் சகுந்தலாவின் அறிமுகத்திற்கு பிறகு தான்.பால்க‌வுச்சியும் நெய் வாடையும் கும‌ட்ட வைத்த‌ பா.ரா தெருவின் ஒரே ம‌ரிக்கொழுந்து ம‌ண‌ம் சகுந்தலாவினுடைய‌து.பெரிய‌ பெரிய‌ க‌ண்க‌ளுடைய‌ ச‌குந்த‌லாவின் மேனியெங்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ம‌ண‌ம் வீசும்.துள‌சி,ம‌ல்லிகை,பெருங்காய‌ சாம்பார்,மூல்தானி மெட்டி,சிகைக்காய்,மோர்க்குழ‌ம்பு என ஒவ்வொரு கிழமையும் திங்களும் நாழிகையும் ஒவ்வொரு மணம்.அப்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் ஒரு சுத்த ஐய‌ங்கார் வீட்டுப் பெண்,பேயன் தெரு மக்களோடு புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும்,தொட்டு அடித்து பேசுவதும் டிப‌ன் பாக்ஸை திற‌ந்து பார்ப்ப‌தும்,ஐம்ப‌து ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டி க‌ருவாட்டுத் துண்டைக் காக்காய் க‌டி க‌டித்த‌தும்,ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.

சக ந‌ண்ப‌ர்க‌ளைப் போலத் தான் என்னிடமும் பழகுகிறாள் என்று வெற்றுச்ச‌மாதான‌ம் செய்து செய்து கொள்வது பெருஞ்சிரமமாக இருந்தது.ச‌மாதான‌ம் செய்து கொள்ள‌வும் விருப்ப‌மிருக்க‌வில்லை.த‌ண்ணி சீசாவை வாய் வைத்து குடித்த‌த‌ற்கு கூட ஒன்றுமே சொல்ல‌வில்லை.இதுவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்திருந்தால் ச்சீ எச்சி என்று உத‌டு கோணியிருப்பாள்.பிசிஓ ப‌ரிம‌ள‌த்திட‌ம் பேசும் போது கூட‌,ஒருமுறை என்னைப் பார்த்து முறைத்தாள்.நான் எரிப்ப‌து போல் பார்த்தாள் என்று க‌விதை எழுதினேன்.என‌க்கு பிடித்தவாறு தான் உடைய‌ணிகிறாள்.சுதா ர‌குநாத‌னின் அலைபாயுதே குர‌ல் பிடித்திருக்கிறது என‌ கார‌ண‌மில்லாம‌லா என்னிட‌ம் ம‌ட்டும் சொல்லுவாள்.ஸ்நான‌ம் ப‌ண்ணின்ட்ருக்க‌ச்ச‌ அடிவ‌யித்துல‌ அப்ப‌டி ஒரு வ‌லிடா.அதான் மூணுநாளா காலேஜூக்கு வ‌ல்ல என்று பெண்மையின் ர‌க‌சிய முடிச்சுக‌ளை த‌னிமையில் அவிழ்க்கிறாள்.அவளின் உடல்மொழியின் அளபெடையில் நான் எத்தனை மாத்திரை என்பதை கணக்கிடுவதிலும்,நடந்தவற்றை அசை போட்டு மென்று,தற்குறிப்பேற்ற அணிகளை இயற்றுவதிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை உணர முடிந்தது.

வழக்கமான காதலின் சராசரி மூடநம்பிக்கைகள்,கெட்டப்பழக்கங்களில் எனக்கு இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.ஒருவரை விரும்பலாம் என்று அவர்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.ஆனால் காரணங்கள் அபத்தமாக இருக்கும்.வேதியல் துறை கணபதி பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தவனாம்.அதே துறையில் படிக்கும் புஷ்பவல்லியும் பிப்ரவரி 23ம் தேதி பிறந்தவள் என்பதால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம்.பிரபாவதி பிரபாகரன் பிரபா பிரபா ஒரே மாதிரி வந்தால் போதும் காதல் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி விடுவார்கள்.பக்கத்து வீடாக இருத்தல்,அம்மாக்கள் ஒரே ரேஷன் கடையில் சீனி வாங்குதல் அல்லது அப்பாக்கள் ஒரே கடையில் சவரம் செய்பவர்களாதல்,ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் நாய்க்குட்டி,தோட்டம்,சுண்டக்காய் என இப்படி குறைந்த முதலீட்டில் சம்பந்தங்களை உருவாக்கி,சந்தர்ப்பவாத காதலை நடத்துவார்கள்.

சகுந்தலாவின் மீதான ஈர்ப்பு வேலி தாண்டி அத்து மீறியதற்கு தரம் தாழ்ந்த காரணங்கள் எனக்கு அவசியப்படவில்லை.அவள் ஒரு அதிசயப்பிறவி.மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கத் தெரிந்த அதிசயப்பிறவி.சாதியும் வர்ணங்களும் எங்களை வேற்றுக்கிரகத்தில் வீசி எறிந்த போது,வானத்தைக் கிழித்து பறந்து வந்த மீன்கொத்திப் பறவையாக,நட்பு அலகில் கவர்ந்து சென்று மீட்டவள்.என் க‌ருப்பு புறங்கையில் அவ‌ளின் செக்க‌ச்சேவேல் விர‌ல்க‌ள் ப‌ட‌ரும் போது தோன்றும் அதீத‌ குற்ற‌ உண‌ர்ச்சியை,தாழ்வு ம‌ன‌ப்பான்மையை,கூச்ச‌த்தை,வெட்க‌த்தை,குறுகுறுப்பை,ப‌ர‌வ‌ச‌த்தை சலனமின்றி ஒரு வென்னிற‌ கைக்குட்டை கொண்டு துடைத்து தூர எறிந்தவள்.

வாய் நிறைய புன்னகையும்,மடிநிறைய இளைப்பாறல்களும் அவள் மீதான உடைமைத்துவத்தை அகலப்படுத்தியது.சகுந்தலா எனக்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவள் என்ற மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது.அந்த‌ர‌ங்க‌ உடைமையில் கீறல்கள் விழுவது சாட்டை அடியை ஒத்திருந்த‌து.ஒவ்வொரு வ‌லியும் வெறுப்பை விதைத்த‌து.வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.

(தொட‌ரும்...)

*****

Thursday, January 28, 2010

நானோ பிரபஞ்சத்தில் பேரிடி

இது ஒரு தொடர் பதிவு. அதிரடி பதிவர் விசாவின் யோசனைப்படி முகிலன் இதை துவக்கினார். மொத்த பதிவையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.

http://padhivarkalanjiyam.blogspot.com/

முகிலன். பலாபட்டரை, பிரபாகர், ஹாலிவுட் பாலா, வினோத் கௌதம், கிஷோர், சுபதமிழினியன்....இறுதியாக விசா.. இவர்களை தொடர்ந்து நானும்
களத்தில் இறங்க முடிவு செய்து சிறுமுயற்சி தந்திருக்கிறேன்.

சொதப்பல்,ஒன்னுமே புரியல,கதை நீளம்,ஒரே கொயப்பம்,இடியாப்பம் போன்ற பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்பதை தாழ்வன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

இக்கதையின் முன்கதை, பதிவர் விசாவின் விறுவிறுப்பான எபிசோட் வாசிக்க,

http://writervisa.blogspot.com/2010/01/8.html

---------

எங்கே செல்லும் இந்த பாதை-9

வ‌தை 1:

வீடியோவில் காண்பிக்கப்பட்ட வெற்றுடம்பு மனிதனின் குறியில் கொக்கி போட்டு இழுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த‌ ராஜேஷ் வாய் திறக்காமலா இருப்பான்.உடைந்த உண்டியலில் சில்லறைகள் சிதறுவது போல உண்மைகள் கொட்ட ஆரம்பித்தன.

லோ டெம்ப்ரேச்ச‌ர்ல‌ பாடிய‌ வைக்க‌ற‌துனால‌ செல்க‌ள‌ திரும்ப‌வும் உயிர்ப்பிக்க‌லாம்னு நினைக்க‌ற‌து திய‌ரிடிக‌லா வேணும்னா சாத்தியமாகலாம்.ஆனா இது இம்ப்ராடிக்க‌ல்.இந்த‌ கிரையோனிக்ஸ் எல்லாம் சும்மா ப‌ம்மாத்து வேல‌.."

"நோ இன்ஸ்பெக்ட‌ர்.இது எங்க‌ ட்ரீம்..எட்டு வ‌ருஷ‌ க‌னவு,தவம்,உழைப்பு.நானோ டெக்னாலஜில இதுவர யாரும் தொடாத லிமிட்ஸ்-அ நாங்க டச் பண்ணிருக்கோம்.இதுக்காக‌ எங்க‌ பாஸ்,டாக்ட‌ர் நிர்மல் எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருக்காருன்னு கூட‌ இருந்து நான் பாத்துருக்கேன்." வலி வேதனையுடன் ராஜேஷின் குரலில் அழுத்தம் இருந்தது.

இது இயற்கைக்கு புறம்பானது தான்.இது சாத்திய‌மே இல்லாத‌ ஒன்னு.அப்படியே இது வொர்க் அவுட் ஆனாலும் பின்னால ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.இத உடனே தடுத்து நிறுத்தணும்" இன்ஸ்பெக்டர் தனது விசாரணையின் அடுத்த கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

"சொல்லுங்க‌ ராஜேஷ்...உங்க‌ ரிசர்ச் சென்ட‌ர் எங்க‌ ந‌ட‌த்திட்ருக்கீங்க‌ ? எத்த‌னை பேரு இதுல‌ இன்வால்வ்ட்..?

***

வ‌தை 2:

ஸ்டான்ஃபோர்டு ஸ்டூடியோவின் அதிநவீன உபயம் போலிருந்தது ம்ருத்துவக்கூடம்.சோடியம் விளக்குகள் கூடத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தன.டாக்டர் நிர்மல் நான்கைந்து கோர்ட் சூட் வெள்ளையர்களுடன் ருஷ்ய மொழியில் மானிட்டரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சென்னையில் இப்படி ஒரு இடம் வாய்ப்பே இல்லை.

மின்னல் கடந்தது போல ஒரு ஃப்ளாஷில் பாஸ்கருக்கு விழிப்பு தட்ட ஆரம்பித்தது. ஸ்வாதி !! ஸ்வாதி !!! முனக ஆரம்பித்தான்.இமைகளைத் திறந்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் பல்லிளித்தது.அருகே இருந்தே கணினித் திரையில் அலைகள் பாய்ந்தன. பீப் சத்தம் கேட்டு டாக்டர் நிர்மல் தன் சகாக்களுடன் பாஸ்கரின் படுக்கையை நோக்கி விரைந்தார்.

"கய்ஸ்..சப்ஜெக்ட் கண் முழிச்சுடுச்சி !!! லெட்ஸ் ஸ்டார்ட் தி தெர்மல் இன்செர்ஷன்" கண் சிமிட்டினார்.

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ப‌டுக்கை திடீரென‌ ஒரு க‌சாப்புக்க‌டை ம‌ர‌க்க‌ட்டையாகி, லேச‌ர் க‌ற்றைக‌ள் அவ‌ன் உட‌லை கூறு போட‌ ஆர‌ம்பித்த‌ன.கொடூர‌ வ‌லியில் எழும்பிய‌ அவ‌ன் குர‌ல் எதிரொலிக்காம‌ல் துளைக‌ள் போட்ட‌ அட்டையால் விழுங்க‌ப்ப‌ட்ட‌து.ரத்தக்களரியாக‌ செல்க‌ள் பிரித்து மேய‌ப்ப‌ட்ட‌ன‌.ந‌ர‌ம்புக‌ளில் ஆங்காங்கே அக்குப‌ஞ்ச‌ர் முறையில் IC-க்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்ட‌ன‌.என்ன‌ ந‌ட‌க்கிற‌து ?? இங்கே..!! நான் ஏன் இங்கே இருக்கிறேன்.மாஸ்க் அணிந்த‌ ப‌ச்சைப் பேய்க‌ள் யார் இவ‌ர்க‌ள் ? இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தேவையிருக்கிற‌து ? ப‌னிக்க‌ட்டியில் வைத்த‌தைப் போல் உட‌ல் ந‌டுங்குகிற‌தே..நான் ப‌டுத்திருப்ப‌து என்ன‌ ஐஸ் கட்டியா ?

***


போலீஸ்,க‌மாண்டோ ப‌டையின‌ரின் வாக‌ன‌ங்க‌ள் 120 கீ.மீ ஐத் தாண்டி ப‌றந்து கொண்டிருந்த‌ன‌.

போரூர் செக்போஸ்ட்டை க‌ட‌ந்த‌தும் வேக‌ம் குறைய‌ ஆர‌ம்பித்த‌து. ஜீப்புக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு,க‌மாண்டோ ப‌டையின‌ர் ஒவ்வொருவ‌ராக‌ இற‌ங்கி சுற்றியிருந்த‌ வீடுக‌ளில் ப‌துங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.இன்ஸ்பெக்ட‌ர் வேர்க‌ட‌லை சிறுவ‌னை அழைத்து அந்த‌ பிர‌தான‌ சாலையின் சுர‌ங்க‌ப்பாதையில் "இயேசு அழைக்கிறார்" போஸ்ட‌ரை கிழிக்க‌ச் சொன்னார்.

எதிர்பார்த்தப‌டியே,சுவ‌ற்றில் நால‌ணா அள‌வு துளையில் ஒரு க‌ணினி மெள‌ஸின் ரோல்ல‌ர் ப‌ந்து செருகியிருந்த‌து.ஆட்காட்டி விர‌ல் கொண்டு அதை உருட்டிய‌ மறுக‌ண‌ம்,மெல்லிய‌ இசையுட‌ன் அந்த‌ அற்புத‌க்க‌த‌வு திறந்த‌து.Thats it !!!


***

எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் முத‌ல் த‌ள‌ம் சைர‌ன் ஒலியில் அதிர்ந்த‌து.மாடி அறையில் இய‌ங்கி கொண்டிருந்த‌ லின‌க்ஸ் திரைக‌ள் அபாய செய்திக‌ளை ப‌ர‌ப்பிக் கொண்டிருந்த‌ன‌.ஆப‌த்து !!!

"ந‌ம்ம‌ இட‌த்த‌ போலீஸ் க‌ண்டுபிடிச்சிடுச்சி..நம்ம கிரவுண்ட் ஃப்ளோர் 3M கதவ‌ இவ்ளோ சுல‌ப‌மா த‌மிழ்நாடு போலீஸ் ம‌ட்டுந்தான் ஓப்ப‌ன் ப‌ண்ண‌ முடியும்.

லெட்ஸ் கிக் ஆஃப் தி பேக்கிங் புரோகிராம் ! "

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ஐஸ்க‌ட்டி படுக்கை ஒரு பெட்டியாக‌ உருமாறி அவனைச் சுற்றி சுவர் எழுப்பியது.ஆக்ஸிஜ‌ன் வால்வு பொருத்த‌ப்ப‌ட்ட‌து.ரிச‌ர்ச் சென்ட‌ரின் முத‌ல்த‌ளம், Maersk பெயர் ஒட்டப்பட்ட‌ துறைமுக‌ டிர‌க் ஒன்றில் அலேக்காக‌ அம‌ர்ந்த‌து. எந்நேர‌மும் த‌ப்பிப்ப‌த‌ற்கான டாக்டர் நிர்மலின் மின்ன‌ல் வேக‌ ஏற்பாடுக‌ள் இவை.

டாக்ட‌ர் நிர்ம‌ல் அன்ட் கோ, பெட்டியில் பாஸ்க‌ர், முத‌ல் த‌ள‌ க‌ருவிக‌ள் எல்லாம் ஒரே டிர‌க்கில்.டிரக் நகரின் இஞ்சி இடுக்குகளில் நுழைந்து சீறிப்பாய்ந்தது.வேகம்.ஒளியின் வேக‌த்தை தொட‌ முடியுமா? எத்த‌னித்தார்க‌ள். பிடிப‌ட்டால் மில்லிய‌ன் டால‌ர்க‌ள் அர‌சாங்க‌த்தின் பிடியில். திட்ட‌ம்,க‌ன‌வு,த‌வ‌ம் எல்லாம் த‌விடு பொடி. ஏற்கென‌வே செய்த‌ 20 ந‌ர‌ப‌லிக‌ளுக்கு ப‌தில் சொல்லியாக‌ வேண்டுமே !!!டாக்ட‌ர் நிர்ம‌லின் இத‌ய‌ம் ப‌ட‌ப‌ட‌த்த‌து. புரோஜெக்ட்டின் உச்ச‌ப‌ச்ச‌ திருப்ப‌த்தில், இப்ப‌டியாகி விட்ட‌தே. ராஜேஷ் !! கிராதகன்.இப்ப‌டியா உள‌றி கொட்டியிருப்பான்.அவ‌ன் க‌ழுத்தில் ச‌ய‌னைடு க‌ட்டி விட்டிருக்க‌லாம்.ப‌ர‌வாயில்லை.எப்ப‌டியாவ‌து த‌ப்பித்து விட‌லாம்.பாஸ்க‌ரின் உயிர் தான் ந‌ம‌க்கு இறுதி ந‌ம்பிக்கை.பாஸ்க‌ரின் கிரையோனிக் பொருத்த‌ப்ப‌ட்ட‌ உட‌ல் தான் ந‌ம‌க்கு த‌ங்க‌ முட்டையிடும் வாத்து. எங்கே பாஸ்க‌ர் ?!?! ஓ மை காட் ?!?!

ஐஸ்க‌ட்டியின் Frozen plug-in பிடுங்க‌ப்ப‌ட்டு த‌ண்ணீர் தேங்கியிருந்த‌து. பாஸ்க‌ர் மாய‌ம்.

டிரக்கின் வேக பிடி தளர்ந்தது. புறநகர் பகுதியை அடைவதற்கு முன்பாகவே தாம்பரத்தில் Maersk டிர‌க் போலிஸ் வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

***

போலிஸ் கஸ்டடியில் சிக்கிய‌ டாக்டர் நிர்மல், பதற்றமாகாமல் அமைதியாக‌ திருவாய் மலர்ந்தார்.

"பாஸ்கரோட பாடியில இன்செர்ட் பண்ணியிருக்க Aphinil -X சிப் இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கப் போவுது. அது மட்டும் வெடிச்சா தமிழ்நாடே அமிலக் காடாகும் !!..என்ன பண்ண போறீங்க ?"


( தொடரும் )

-----------------------------------------------

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாராவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.

---

Saturday, January 23, 2010

நெப்பந்தஸ்



"நெருக்கியடித்து வளர்ந்தும் வளராத முட்புதர்களும்,செம்மண் புழுதி படிந்து காய்ந்து போயிருக்கும் கீழாநெல்லிச்செடிகளும்,சிறியதும் பெரியதுமாக கோரைப்புற்களும் சூழ்ந்த புனித மார்க் தோட்டத்தின் மண்ணறையொன்றில் மெல்வின் கிடத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."

ஆயிர‌ம் குண்டூசிக‌ள் ஒரு சேர செருகிய‌தைப் போல் வாடைக்காற்று செவிப்ப‌றையைக் கீறும் குளிர்கால‌ம்.எதிர் வீட்டு நாவ‌ல் ப‌ழ‌ ம‌ர‌ம் மட்டும் இலைகளையும் சருகுகளையும் கலைத்து பேரிரைச்ச‌லை உண்டு ப‌ண்ணாம‌லிருந்தால்,அந்த ர‌க‌சிய‌க் காற்றின் அமானுஷ்ய‌ம் விள‌ங்காம‌லே போயிருக்க‌க்கூடும்.ப‌றவைக‌ளும் மின்மினிப்பூச்சிக‌ளும் தத்தம் இணைகளோடு கூடிய நிசப்த வெளியில் தியான‌த்தில் இருக்கின்ற‌ன.புலர்காலை சூரியன் முதுகில் அறைந்து எழுப்பிய‌தும் அவைக‌ளின் த‌வ‌ம் க‌லைய‌க்கூடும்.அப்போது எல்லாம் ச‌ரியாகி விடும்.

ச‌ன்ன‌லின் திரைச்சீலை இருப்பு கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்த‌து.குளிர்சாதன‌ம் அணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌ற்காலிக‌ உஷ்ண‌த்தில் க‌டிகார‌ முள் ச‌ற்று உற்சாக‌மாக‌ ஒலியெழுப்பி ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌து.மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.வ‌ழ‌க்கமாக‌ இர‌வின் சுழற்த‌ன்மை புல‌னாவ‌த‌ற்கு முன்பே எனக்கு விடிந்து விடும்.இன்று கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ நாள்.அத‌னால் தான் என்ன‌வோ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டைத் தாண்டியும் தூக்க‌ம் பிடிக்க மறுக்கிறது.

ச‌குந்தலா இடப்பக்கம் படுத்திருக்கிறாள்.என் முக‌த்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.குழந்தைமை மாறாத க‌ண்க‌ளில் நீர்த்துளிக‌ள் சுர‌ந்து வீங்கியிருக்கிறது முக‌ம்.நிறைய அழுதிருப்பாள்.சோக‌ம் விர‌வியிருந்த அழகிய முட்டைக்க‌ண்க‌ளை விடியும் வ‌ரை பார்த்து கொண்டிருந்தாலும் பாவ‌மில்லை.பார்வை எதிர்கொள்ளும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ட‌ந்து,அவ‌ள் சிந்த‌னை கால‌ய‌ந்திர‌த்தின் ஞாப‌க‌ க‌ண்ணியை ப‌ற்றிக் கொண்டு,ஒரு வ‌ருட‌ம் பின்னோக்கி நீள்கிறது.நிச்ச‌ய‌ம் அங்கு நானிருக்க‌ப் போவ‌தில்லை.இருந்தாலும் தொந்த‌ர‌வு செய்ய‌ப்போவ‌தில்லை.அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.இது அவளுடைய அந்தரங்கம்.பிர‌த்யேக‌ தனிமை.முழுமையாய் அனுபவிக்கட்டும்.கரைந்து தீர்க்கட்டும்.

----

எங்கள் வீட்டின் வலது திண்ணையிலிருந்து சுவற்றை ஒட்டி எட்டிப்பார்த்தால்,வரதராஜ பெருமாள் கோயிலின் பின்புறமிருக்கும் பொற்றாமரைக்குளம் தெரியும்.சைக்கிள் இருந்தால் ஐந்து நிமிடங்களில் குளத்தை அடைந்து விடலாம்.குளத்தின் மறுகரையில் இருந்தது பாப்லோ ராமசாமி தெரு.குளத்தை ஒட்டியே இருந்ததால் அத்தெருவுக்கு ஒரு திவ்யமான அழகு கூடியிருந்தது.வைகறைகளில் சாணி மொழுகி,வண்ணப்பொடிகளைத் தூவி மலர்க்கோலம் இடும் இளந்தளிர்களை அலகில் வைத்து கவர்ந்து போக காகங்கள் கூட காத்திருக்குமாம்.மாமா சொல்லியிருக்கிறார்.

அக்ரஹாரத்து பெரியவாள் தெப்பக்குளத்தின் வலது கோடியில் குளிப்பது தான் வாடிக்கை என்பதால் இடது ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு பொற்றாமரைக் குளம் லேசாக கலங்கியிருந்தது.தூர்வாறப்படாத அந்த இடது ஓரத்தில் தான் நாங்கள் சர்வ ரகசியமாக குளிப்பதும் கோயில் கோபுரத்தைப் பார்த்து கை கூப்புவதும்! வரதராஜ பெருமாளை தரிசித்த கணங்களை விட,குளத்தில் ஊறியவாறே ராமசாமி தெருவின் தேவதைகளைக் கண்டு வாய் பிளந்த தருணங்கள் அதிகம்.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.

(தொடரும்..)

****