Friday, August 19, 2011

ராம்லீலாவில் ஒரு குபீர் சிரிப்பு நாடகம்


ராலேகான் கிராமத்தில் மது குடித்த‌ இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த சாந்த சொரூபியும், இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்டில் கையாடல் செய்த புண்ணியவானும்,தன்னுடைய அறப்போராட்டமும் அகிம்சையும் ஆஃப் சைடு வாங்கினாலும் பரவாயில்லை என்று ராசாவை தூக்கிலிட வேண்டும் என்ற வீரமராட்டிய சிவாஜி சிவசேனாக்களின் முழக்கங்களைப் பறை சாற்றிய இந்த உத்தமர் காந்தி தன்னுடைய உண்ணாவிரத நாடகத்தை, ஏற்கனவே பண்டார ராம்தேவ் மண்ணைக்கவ்விய ராம்லீலா மைதானத்தில்,தேசபக்தி பாடல்களுடனும் முதலாளித்துவ ஊடகங்களின் ஆசிர்வாதத்துடனும் வெகு விமரிசையாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.மேலும் அன்னா சிறையில் இருந்த போது,அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் "ராம் ராம்" என்ற முழக்கங்களும் விண்ணைத் தொட்டன. உச்சபட்ச காமெடி என்னவென்றால் டப்பாவாலாக்கள் முதற்கொண்டு, நம் நாட்டையே சுரண்டி சுண்ணாம்பாக்கிய கார்பரேட் பகற்கொள்ளையர்களான‌ CEO-க்கள் கூட அன்னாவின் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து விட்டார்களாம்.




கிரண்பேடியிடமிருந்த தேசியக் கொடியை பிடுங்கி ஆட்டி கைதட்டல்களைப் பெற்ற நமது மீடியா கதாநாயகர் இந்த காமெடி காட்சிகளை, தம்மால் கேபிள் டிவி தடை செய்யப்பட்ட ராலேகான் மக்கள் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டாரோ இல்லையோ, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் தான் மூன்று கிலோ எடை குறைந்ததைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க 3 கிலோ எடைகுறைதல் என்றால் அது எவ்வளவு பெரிய தியாகம் ?

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, 30, 7 ,15 என்று ஒரு வழியாக பேரம் பணிந்து, அரசும் அன்னாவும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ஒரு காலவரையற்ற ஆனால் 15 நாள் உண்ணாவிரதத்துக்கு ஒப்புக் கொண்டனர்.இதை முன்னாடியே காங்கிரஸ் செய்திருந்தால், "அரசு பணிந்தது",அன்னா காலடியில் அன்னை அரசு போன்ற நக்கல்களையெல்லாம் கேட்கும் அவல நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது.என்ன செய்வது ? இடுப்பு வரை மாட்டிக் கொண்ட ஊழல் சேற்றிலிருந்து அன்னாவைப் போல விரல்களைக் கூட‌ அசைக்க முடியவில்லையே.

உண்ணாவிரததுக்கு இடமளிக்காமல் அன்னாவை காங்கிரஸ் அரசு கைது செய்த போது,"ஐயகோ என்ன கொடுமை இது. ஜனநாயகம் கற்பிழந்து விட்டது.பாசிசம் தலை விரித்தாடுகிறது" என்றெல்லாம் ஆவேசத்துடன் டிவிட்டிய, ஃபேஸ்புக்கிய நமது மீடியாக்களின் செல்லக் குஞ்சுகளும் இதுவரை ஜன்லோக்பாலை ஏற்காத பிஜேபியும், தன் வீட்டு நாய்க்குட்டியை விரட்டுவது போன்ற தொனியுடன் அன்னா இந்திய அரசையும் நீதித்துறைகளையும் கேமரா முன் ஆள் காட்டி விரல் கொண்டது மிரட்டுவது மட்டும் எவ்விதத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் செயலாகும் என்பதை விளக்க வேண்டும்.

ஊழலை எதிர்க்க மாபெரும் ஆயுதம் ஜன்லோக்பால் என தொண்டைக்குள் ஸ்பீக்கர் சொருகி பிரகடனப்படுத்தும் அன்னாவின் கூட்டணியில் உள்ள அறிவு ஜீவிகள், அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தின் சாராம்சமான, அரசல்லாத துறைகளின் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர். NGO-க்களின் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அம்சம் ஜன்லோக்பால் வரைவில் சேர்க்கப்பட்டால் அந்த பொறியில் முதலில் மாட்டும் எலியாக அன்னா தான் இருப்பார் என்ற உண்மை, ரூம்போட்டு விளக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாதா என்ன ? அன்னாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்ன என்ற உண்மையைத் தான் நீதிபதி பி.பி.சாவந்த் அன்னாவின் புனிதப்பானையை பொதுவெளியில் வைத்து உடைத்து விட்டாரே.

நம் நாட்டையே கூறு போட்டு பங்கு வைக்கும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் தனியார் மயமாக்கலையும் ஏற்றுக் கொள்ளும் இந்த அன்னா ஹசாரே கும்பல், மிகப்பெரும் அன்னிய முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவுடனும், பியூட்டி பார்லர் பளபளப்போடு வலம் வரும் மீடியா மங்கைகளின் பின்னணி கொஞ்சல்களோடும், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற கார்பரேட் பண்டாரங்களின் யாவார நோக்கத்தோடும் நடாத்தி வரும் இந்த ஐடெக் குபீர் சிரிப்பு நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நம் திடீர் புரட்சியாளர்களை ஆரவாரத்தில் வைத்திருக்கப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.

புதிதாக ஒரு உணவு பதார்த்தத்தை சாப்பிட்டால் முகமெங்கும் கட்டிகள் உருவாகி அலர்ஜி வருவது போல, இந்திய வரலாற்றில் அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல்,எஸ் பேண்ட் ஊழல்,ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்,காமன்வெல்த் ஊழல் என பாரத மாதாவின் 'அழகிய' முகத்தில் கண்டு கண்டுகளாக வீங்க வைத்திருக்கும் இந்த பொற்கால காங்கிரஸ் ஆட்சி, ஒரு சராசரி இந்திய பிரஜைக்கு நிச்சயமாக வலிக்கத் தான் செய்யும்.அந்த ஆதங்கத்திற்கும் கோபத்திற்கும் வடிகாலாக, இந்த போராட்ட செய்திகளை அதிர வைக்கும் விவாதங்களுடனும் இசை பின்னணியுடனும் பார்க்கும் போது, தேசிய உணவு மெய்சிலிர்த்து வீறு கொண்டு எழும்.எப்படி டோனி கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் போது ஒரு தேசப்பற்று எழுந்ததே அதற்கு ஒப்பானது இந்த வீரம்.

ஊழலை எதிர்ப்பதற்கு முன்,அதன் ஊற்றுக் கண்ணான முதலாளித்துவ மறுகாலனியாக்க கொள்கைகளையும் சுரண்டலையும் அதற்கு வழிவகை செய்யும் இந்திய பொருளாதார அமைப்பு முறையையும் டாடா, ரிலையன்ஸ் அம்பானி,வேதாந்தா போன்ற கார்பரேட் பெருச்சாளிகளின் பகற்கொள்ளைகளையும் ஒவ்வொரு குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும். ஹசாரே கூறும் ஜன் லோக்பால் ஆனது இந்த சுரண்டல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வெறும் சில்லறை விஷயங்களையும் எலும்பு துண்டுகளைப் பொறுக்கக் காத்திருக்கும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைப்பதாக்ச் சொல்லிக் கொள்கிறது. மக்களை அரசியல் குருடர்களாக்கி இது போன்ற அடிப்படை அறிவில்லாத காமெடியன்களின் நகைச்சுவை நாடகங்களின் மூலம் ஆளும் வர்க்கம் ஒரு பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது.நம் நாட்டின் இயற்கை வளங்களையும் சொத்துக்களை அன்னிய முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் கார்ப்பரேட் கும்பல், நமது வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரத்தை எவ்வித தங்கு தடையின்றி, சட்ட்ப்பூர்வமாக சூறையாடி மகிழ்கிறது.

இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ,கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவும், வேதாந்தா என்னும் அன்னிய முதலாளி தம்முடைய வாழ்வாதாரமான நியாம்கிரி மலைப்ப்குதியை பாக்சைட் தாதுக்காக வெட்டிப் பங்கு வைப்பதை எதிர்த்து போராடி வரும் டோங்கிரியா கோந்த் மலைவாழ் மக்களும், டாடா கம்பெனியை எதிர்க்கப் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் விவசாயிகளும் நடத்தும் நிஜமான அக்மார்க போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மேட்டுக்குடி மக்களின் பார்ட் டைம் பொழுது போக்கான இந்த கூட்டுக்களவாணி நாடகங்களை ஆதரிக்கப் போகிறோமா ?


*****************